Saturday 5 December 2015

ஏரி காத்த பனைகள்....

பனைமரம் ஒரு பாவப்பட்ட மரம்! 

அதற்கு நாம் எந்த பராமரிப்பும் செய்யாமலே அது நமக்கு ஏராளமான பலன்களைக் கொடுத்தது. 

இன்றும் கொடுத்து வருகிறது. 

ஆனால் மனித இனமாகிய நாம் அதன் பயன்களை எல்லாம் மறந்து நன்றிகொன்றதனமாக அவற்றை அழித்து சூளைகளில் இட்டு எரித்து வருகிறோம்.

பனைகள் நம் ஏரிக் கரைகளிலும் குளங்கரைகளிலும்  நின்றிருந்த வரையில் ஆக்கிரமிப்பு, கரை உடைப்பு ஆகியவை நிகழவில்லை. இப்பொழுதும் பனைகள் ஏரிக்கரையில் காத்து நி்ன்றால் அவற்றின் வேர்கள் கரைகளை பலப்படுத்தி அரனாக இருந்திருக்கும்.

பனைகளை அழித்ததன் பயனை நாம் இன்று வட மாவட்டங்களில் மிக மோசமாக அனுபவித்து வருகிறோம். கண்மாய் கரையில் இருக்கும் பனைகளை அழித்து விடக்கூடாது என்பதற்காகவே பனையில் முனி இறங்கியிருப்பதாகவும், கருப்பு இருப்பதாகவும் தென் மாவட்டங்களில் கூறுவார்கள்!

கரை உடைந்து கிராமங்களும் நகரங்களும் வெள்ளக்காடாவதை பனைகள் தடுக்கும், இன்றும் இருந்திருந்தால் தடுத்திருக்கும். குளம், கண்மாய், ஏரி மட்டுமல்ல வெள்ள காலத்தில் ஆறுகளிலும் கரை உடைப்பு ஏற்பட்டு ஆறுகள் திசைமாறுவதையும் தடுக்க வல்லவை பனைகள்.

தாங்க முடியாத பஞ்ச காலத்திலும் தானும் தாக்குப்பிடித்து நம்மையும் வாழவைக்கும் திறன் கொண்டது! 

ஆனாலும் நாம் அவற்றை அழிப்பதைவிடத் தற்கொலைத் தனமான செயல் ஒன்றும் இருக்காது! 

நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் பனைமரங்கள் நிறைந்திருந்தால் எந்தப் பஞ்சமும் வறட்சியும் எதுவும் செய்யாது. 

செலவே இல்லாமல் உலக மக்கள் அனைவரையும் அனைத்து வழிகளிலும் காக்கும் திறன்கொண்ட பனைமரத்தைக் காப்போம்! 

அது பனைமரத்துக்கு நாம் செய்யும் உதவி அல்ல! நமக்கு நாமே செய்து கொள்ளும் மாபெரும் உதவியாகும்!....

அரசுகளும், தொண்டார்வ நிறுவனங்களும், கட்சிகளும், அதிகாரிகளும், ஊடகங்களும், பொதுமக்களும் விழிப்படைவார்களா?......

No comments: