Friday 8 January 2016

கடவுளை தேடி

ஒரு சின்ன பையன் கடவுளை பார்க்க வீட்டில் இருந்து கிளம்பினான். அதிக தூரம் பயணம் செய்ய வேண்டி இருக்குமே என்று தின்பண்டங்களையும் மதிய உணவையும் பையில் எடுத்து கொண்டான்.
காலையில் இருந்து நடக்க ஆரம்பித்தவன் சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம் என்று அருகில் உள்ள பூங்காவுக்குள் நுழைந்தான். அங்கு வயதான பெண்மனி ஒருவர் புறாக்கள் சாப்பிடுவதை பார்த்து கொண்டே இருந்தார்.
நடந்து வந்த களைப்பில் தாகம் எடுக்கவே தண்ணீர் பாட்டிலை திறந்து தண்ணீர் குடிக்க ஆரம்பித்தான். அந்த பாட்டி அவனையே பார்த்து கொண்டிருந்தாள். ஒரு வேளை பாட்டிக்கு தாகமாக இருக்குமோ என்றென்னி தண்ணீர் பாட்டிலை நீட்டினான். பாட்டியும் அவனை பார்த்து அழகாக புன்னகைத்துவிட்டு தண்ணீரை வாங்கி குடித்தாள்.
அந்த சிறுவன் இதுவரை அவ்வளவு அழகான புன்னகையை பார்த்ததில்லை  அதனால் திரும்பவும் அவர்கள் புன்னகையை பார்க்க தான் கொண்டு வந்து உணவு பொட்டலத்தை பிரித்து கொடுத்தான்.
அந்த பாட்டியும் மீண்டும் அவனை பார்த்து புன்னகைத்துவிட்டு அவன் கொடுத்த உணவை சாப்பிட ஆரம்பித்தாள். இரண்டு பேரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை ஆனால் அடிக்கடி ஒருவரை பார்த்து ஒருவர் புன்னகைத்து கொண்டே இருந்தனர்.
நேரம் ஆக ஆக அம்மா ஞாபகம் வந்தது சிறுவனுக்கு  அதனால் எழுந்து வீட்டிற்கு நடக்க ஆரம்பித்தான். சிறிது தூரம் நடந்தவன் சட்டென திரும்பி குடுகுடுவென்று ஓடி சென்று பாட்டியை கட்டி அணைத்தான். பாட்டி அவன் செயலை பார்த்ததும் மிகவும் பிரகாசமாக சிரித்தாள்.
சிறுவன் வீட்டிற்குள் நுழைந்ததும் அவன் மிகுந்த சந்தோஷத்தில் இருப்பதை பார்த்த அவன் அம்மா என்ன நடந்தது என்று கேட்டாள். ’நான் மதியம் கடவுளுடன் சாப்பிடேன்’ என்றான் கடவுளின் புன்னகை மாதிரி நான் இதுவரை எங்கும் பார்த்ததில்லை என்றான்.
அதே நேரம் அந்த பாட்டி அவர்கள் வீட்டில் நுழையும்போது என்ன அம்மா இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறீர்கள் என்று அவள் மகன் கேட்டான். "இன்று மதியம் நான் கடவுளுடன் சாப்பிட்டேன்’ என்றாள் அது மட்டும் இல்லை நான் நினைத்ததை விட கடவுள் மிக சிறிய வயது கொண்டவராக இருந்தார் என்றாள்.
அறிமுகம் இல்லாதவர்களிடம் ஒரு சின்ன புன்னகை, ஆறுதலான வார்த்தை, சின்ன உதவி செய்து பாருங்கள்  நீங்களும் கடவுள்தான். கடவுள் வேறெங்கும் இல்லை நம்மிடம் தான் இருக்கிறார்
படித்ததில் பிடித்தது

மணப்பாறை மாடு கட்டி.... (பாகம் 6)


இந்த பாடலின் மீது எனக்கு ஒரு பாசம் உண்டு என முதலில் கூறினேன் அல்லவா? அந்த விசயத்திற்கு இப்போதுதான் வருகிறேன். ஆம் ஒரு விருதுநகர்காரனாக விருதுநகர் வியாபாரியை பற்றி எழுதும் போது எனக்குள் ஒரு பூரிப்பு!


விருதுநகர் 9. 34’ 10” நிலநேர்கோடு (Longitude) மற்றும் 77.57’25” நிலகுறுக்கு கோட்டிலும் (Latitude ) அமைந்துள்ளது. விருதுநகரைச் சுற்றி வடக்கில் மதுரையும் (48கி.மீ) தெற்கில் சாத்தூர் (26கி.மீ) மேற்கில் சிவகாசி (26கி.மீ) மேலும் அருப்புக்கோட்டையும்(18கி.மீ) அமைந்துள்ளது. கடல் மட்டத்திற்கு மேல் 101மீட்டர் உயரம், சமவெளி பிரதேசம்,கரிசல்மண், கருங்கல் மற்றும் சுக்கான் பாறைகள் கொண்ட புவியல் அமைப்பைக் கொண்டது. வெப்பம் மிகுந்த மற்றும் நிலையற்ற மழைத்தன்மையைக் கொண்ட இடமாகும். இதனால் விருதுநகரை சுற்றிலும் சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி என அனைத்துமே கரிசல் காடுதான். இங்கு சீமைக்கருவேல் எனப்படும் வேலிக்கருவேல் புதர்களே ரொம்ப யோசித்துதான் முளைக்கும்! கந்தக பூமி எனப் படும் பூமி! மழை, தண்ணீர் பாசனம், விவசாயம் என எல்லாமே எட்டாக்கணி தான். இது எந்த பயிறும் விளைவிக்க முடியாத பூமி.


ஆனால் வாழ்ந்தாக வேண்டுமே? விவசாயம் இல்லாமல் வேலை இல்லை, விவசாயம் இல்லாமல் தொழில் இல்லை, விவசாயம் இல்லாமல் வாழ்க்கை இல்லை! ஆனால் விருதை வாசிகள் வித்தியாசமாக சிந்திக்க ஆரம்பித்தனர். ஆம் அது தான் வியாபாரம்! கி.பி 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் காசுக்காரச் செட்டியார் சமுகத்தினரும் நாடார் சமுகத்தினரும் வணிகத்தில் ஈடுபட்டு வந்தனர். 1825ஆம் ஆண்டு முதல் விருதுநகருக்கு எல்லாப் பொருட்களும் விளையும் இடங்களில் இருந்து கொணர்ந்து விற்பனை செய்யப்பட்டது.வணிகத்தில் போட்டி காரணமாக விருதுநகர் வணிகர்கள் பல ஊர்களில் தங்கள் நிறுவனங்களை நிறுவி வணிகம் செய்யத்தொடங்கினர். ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்டு இருந்த எல்லா நாடுகளுக்கும் சென்று வணிகம் செய்துள்ளனர். இன்று காபி, ஏலக்காய், பருப்பு, மிளகாய், எண்ணெய், புண்ணாக்கு என கிட்டத்தட்ட எல்லா பொருட்களுக்குமே இந்திய அளவில் விலையை நிர்ணயம் செய்யக்கூடிய இடமாக வளர்ந்திருக்கிறது. தமிழக அளவில் ஆரம்பித்தது, அகில இந்திய அளவில் வளர்ந்து, இன்று உலக அளவில் விருதுநகர் வியாபாரிகளின் ராஜ்ஜியம் விரிந்திருக்கிறது.


எந்த பயிர்களை எல்லாம் தன் மண்ணில் விளைவிக்க முடியாமல் போனதோ அவற்றுக்கு எல்லாம் இன்று அகில இந்திய அளவில் விலை நிர்னயித்து, ஏற்றுமதியும் செய்து கொண்டிருக்கிறார்கள் விருதுநகர் வியாபாரிகள். எங்கோ குடகு மலையிலும், மேற்குத் தொடர்ச்சி மலையிலும் விளைகின்ற காபிக்கும், ஏலக்காய்க்கும் விலை நிர்ணயம் செய்து, அதை ஏற்றுமதி செய்யும் இடமாக வளர்ந்திருக்கும் விருதுநகரில் எம்.எஸ்.பி. குரூப், தொடர்ந்து 20 வருடமாக காபி ஏற்றுமதியில தேசிய அளவில் முதல் இடம் பெற்று வருகின்றது. போடிநாயக்கனூரில் கூடும் ஏலக்காய் ஏலத்தை, விரல் நுனியில் வைத்து அசைப்பவர்கள் இந்த விருதுநகர் வியாபாரிகள்தான். இத்தனை வளர்ச்சிக்கான காரணம் முக்கியமான மூன்று விசயங்கள். ஆம் உண்மை, உழைப்பு, உயர்வு. யாருடைய வயிற்றிலும் அடிக்காமல் உரிய விலை குடுத்து தரமான பொருட்களை கொள்முதல் செய்து முறையாக பணமும் கொடுத்து விடுவதால் தான் விருதுநகர் வியாபாரிகளுக்கென்று தனி பெயர். இது தான் #கவிஞர்_மருதகாசி அவர்களை விருதுநகர் வியாபாரிகள் கவர்ந்த விசயமாக இருக்கக் கூடும்!


விருதுநகர் வியாபாரிகளிடம் எனக்கு பிடித்த வியாபார முறை ஒன்று உண்டு! அது கோடிக்கணக்கான ரூபாய் பரிமாற்ற வியாபாரமாய் இருந்தாலும் அலட்டிக் கொள்ளாமல், எந்த வித டென்சனும் காட்டாமல் இயல்பாய் சிரித்த முகத்துடன் அண்ணாச்சி, மச்சான் என்ற உறவு முறையுடன் அழைத்து வியாபாரம் செய்வார்கள். என்றுமே விருதுநகர் வியாபாரிகளை டென்சன் முகத்துடன் காண முடியாது!


இங்கும் சிக்கல் இல்லாமல் இல்லை! எந்த ஒரு மக்களும் வளரும் வரை அவர்களுக்குள் வெறியும், ஒற்றுமையும் இருக்கும். வளர்ந்த பிறகு அங்கே பொறாமையும் வளர ஆரம்பித்து விடும்! விருதுநகரிலும் அந்த சிக்கல் சில வருடங்களாய் இருந்து வருகிறது. இதை விட ஆபத்தான இன்னொரு விசயம் ஒன்றும் முளை விட்டிருக்கிறது! முன்பெல்லாம் படிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் என்ன படிப்பு படித்தாலும் படித்து முடித்து தொழிலுக்கு வந்து விடுவர். ஏர்ணாட்டிக்ஸ் படித்து விட்டு கமிஷண் தொழிலுக்கு வந்தவர்களையும் எனக்கு அங்கு தெரியும்! இப்போது அங்கே உள்ள இளம் தலைமுறையினர் ஒயிட் காலர் ஜாபில் மோகம் கொள்ள ஆரம்பித்து உள்ளனர். அதே போல் வெளிநாட்டு வேலை மோகமும் சமீப காலமாக அங்கு தலைவிரித்து ஆடுகிறது. நல்ல படிப்பு படித்து விட்டு அமெரிக்கா சென்று விட வேண்டும் என்றும் இன்றைய தலைமுறையினர் வெறித்தனமாக விரும்புவதாக தெரிகிறது. பல விருதுநகர் வியாபாரங்கள் அடுத்த தலைமுறையின் கவணிப்பில்லாமல் மார்வாரிகளின் கைக்கு மாறி வருகின்றன! விருதுநகரின் அடுத்த தலைமுறை தன் கவணத்தை வியாபாரத்திலிருந்து திசை திருப்பினால்......

தமிழனத்தின் மிகப்பெரிய வியாபார சாம்ராஜ்ஜியம் தமிழர்களின் கைவிட்டு போய் விடும்.....

Thursday 7 January 2016

மணப்பாறை மாடு கட்டி.... (பாகம் 5)


இன்று போல் ஷாப்பிங் மால்களும், ஹைபர் மால்களும் இல்லாத காலங்களில் மக்களுக்கு, வியாபாரிகளுக்கு, விவசாயிகளுக்கு என அனைவருக்கும் கொள்முதல் இடம் சந்தைதான். மதுரையில் ஞாயிற்றுக்கிழமை சந்தை பிரபலம், புதன் கிழமை தேனி சந்தை, வெள்ளிக்கிழமை நாகர்கோவில் கோட்டார் சந்தை, சனிக்கிழமை கமுதி அபிராமத்தில் சந்தை என ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு நாள் சந்தைகள் பிரபலம். இன்றும் மதுரையில் ஞாநிற்றுக் கிழமை சந்தையில் கிடைக்காத பொருளே இல்லையென கூறலாம். பல வருடங்களுக்கு முன்னால் மூடப்பட்ட நிறுவனங்களான மெட்டடார் மற்றும் ஸ்டாண்டர்ட் வாகணங்களுக்கே இன்னும் அங்கு உதிரி பாகங்கள் வாங்க முடியும் என கூறுவார்கள். அதே போல் எல்லாமே இன்றும் அங்கே கிடைக்கும், அதாவது வளர்ப்பு புறா, இறைச்சிக்கான புறா, கிளி, வீட்டு நாய்கள், வேட்டை நாய்கள், பழைய பீரோக்கள், சோபாக்கள் என எல்லாமே மதுரை ஞாயிற்றுக்கிழமை சந்தையில் கிடைக்கும்! இப்போது நாம் நமது பாடல் வரிகளுக்கு வருவோம்....

#பொள்ளாச்சி_சந்தை
மேலே பார்த்த ஒவ்வொரு ஊரிலும் ஒரு சந்தை ஒரு குறிப்பிட்ட நாளில் இருப்பது போல், பொள்ளாச்சி சந்தை வியாழக்கிழமை சந்தை. பொள்ளாச்சியை சுற்றி அனைத்து ஊர்களுமே விவசாயத்துக்கு பேர் போன ஊர்கள்! நான் தொழில் விசயமாக 10 வருடங்களுக்கு முன் வாராவாரம் அந்த பக்கம் செல்லும்போதே உடுமலை, பொள்ளாச்சி போன்ற பகுதிகள் அனைத்துமே ஒரு காலத்தில் முப்போகம் (வருடத்திற்கு மூன்று போகம்) விளைந்ததாக கூறுவார்கள். அது போல் பொள்ளாச்சியே அந்த இடங்களுக்கு ஒரு மையப்புள்ளியாகவும் அமைந்திருந்தது. கேரளாவில் இருந்து வரும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கும் பொள்ளாச்சி சந்தை மையப் பகுதியாக இருக்கும்! அங்கிருந்து ஒரு மணி நேரத்தில் பாலக்காடு சென்று விட முடியும். அதே போல் உடுமலை வழியாக மூனாறும் பக்கமே. பொள்ளாச்சியை சுற்றி உள்ள் பகுதிகளில் அரிசி மட்டுமின்றி, கம்பு, ராகி, சாமை போன்ற னைத்து பொட்களுமே விளைவதால் பொள்ளாச்சி சந்தை மிக பிரபலமானது. உடுமலை மற்றும் அதன் அருகே உள்ள தளி போன்ற மலை சிற்றூர்களில் அதிக காய்கறிகளும், பொள்ளாசியை சுற்றியும் மலைகளிலும் அதிகம் காய்கறிகள் விளைந்ததால் பொள்ளாச்சி சந்தையில் எல்லாமே கிடைக்கும்

அடுத்தது பொள்ளாச்சி சந்தையில் நடக்கும் மாட்டுச் சந்தை. பொள்ளாச்சி சந்தையில் அந்த காலத்தில் ஆடு, மாடு போன்ற அனைத்து கால்நடைகளையும் விற்பனைக்கு ஓட்டி வருவார்களாம். இப்போது நீங்கள் கிராமத்து சினிமாக்களில் பார்ப்பது போன்ற சந்தையை எதிர்பார்த்து போனால் ஏமாற்றமே மிஞ்சும். சினிமாவில் வருவது போல குடை ராட்டிணம், குதிரை ராட்டிணம், குருவி மிட்டாய், பஞ்சு மிட்டாய், சவ்வு மிட்டாய், புழுதி பறக்கும் கட்டாந்தரை என எதுவும் இப்போது கிடையாது!  ரெட்டை சடையும், கலர் ரிப்பனும், தாவணியும், நாலு முழ வேட்டியும் தொலைந்த போதே சந்தையும் காங்கிரீட் கட்டிடமாகி விட்டது!! பழைய பரபரப்பான சந்தையும் இப்போது கிடையாது! ஆனால் எனக்கு தெரிந்து ஐந்து ஆறு வருடங்களுக்கு முன் வரை பொள்ளாச்சியின் மாட்டு சந்தை பிரபலமாகவே இருந்தது. பொள்ளாச்சியில் இறங்கி சந்தைக்கு போகனும் என்று சொன்னாலே மாட்டு சந்தைக்கு தான் கொண்டு போய் விடுவார்கள்.ஆனால் சோகம் என்னவென்றால் இங்கு வருவது பெரும்பாலும் அடி மாடுகளே. அருகில் உள்ள கேரளாவை மனதில் கொண்டு இங்கு தமிழகத்தின் அடிமாடுகள் என்றில்லை, கர்ணாடக். ஆந்திர அடி மாடுகளும் இங்கேதான் வருகின்றன!

மாட்டு சந்தையில் மாடுகளுக்கு தேவையான மூக்கனாங்கயிறு, கழுத்தில் கட்டும் மணி, சங்கு, திருஷ்டிக்கயிறு, தார் குச்சி, சாட்டை என அனைத்து பொருட்களும் கிடைக்கும். மாட்டு சந்தை இன்றும் அடி மாடுகளால் கலகலத்துக் கொண்டிருக்க....

பாரம்பரியம் மிக்க தானிய சந்தையோ.... தள்ளாடி படுத்து விட்டது....

Wednesday 6 January 2016

மணப்பாறை மாடு கட்டி.... (பாகம் 4)


கவிஞர் மருதகாசி அவர்களின் அடுத்த வரிகள்....
நாத்த பறிச்சி நட்டுப்போடு சின்னக்கண்ணு
தண்ணிய ஏற்றம் புடிச்சு இறக்கி போடு செல்லக்கண்ணு
கருதை நல்ல வெளையச்சு #மருத_ஜில்லா_ஆளை வச்சி
அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு
நல்லா அடிச்சி கூட்டி அளந்து போடு செல்லக்கண்ணு

ஆம் மதுரை ஜில்லா ஆள்தான் இன்றைய தலைப்பு....

இப்போ மருத ஜில்லா ஆள் என்று அவர் குறிப்பிடுவதன் அர்த்தம் பார்போமா? அது ஏன் கருதறுக்க மதுரை ஆட்கள் பற்றி குறிப்பிடுகிறார்? மற்ற ஊர் ஆட்கள் என்ன மட்டமா? அன்று அவர் குறிப்பிட்டிருக்கும் மதுரை ஜில்லா என்பது இன்றைய விற்பனை பிரதிநிதிகள் குறிப்பிடும் MRT மதுரை-இராமனாதபுரம்-தேனி மாவட்டங்களை இணைத்தது. இதில் இன்றைய விருதுநகர் மாவட்டமும் சேர்ந்தே வரும். அதாவது வைகையை பாயும் மதுரை, தேனி, இராமனாதபுரம், விருதுநகரின் சில பகுதிகள், சிவகங்கை, கமுதி, போடி, கம்பம், பெரியகுளம் என பெரிய ஜில்லா அது!  அந்த காலத்தில் ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் ஆட்கள் குஸ்தி, மல்யுத்தம் போன்ற தற்காப்பு சன்டை கலைகளுக்கு பேர் போனவர்கள். இந்த ஒருங்கிணைந்த அன்றைய மதுரை ஜில்லாகாரர்களிடம் சாதிப் பெயரை போல் நிறைய பேருக்கு பெயரின் பின்னால் வாத்தியார், பயில்வான் போன்ற பட்டங்கள் இருக்கும். பெரும்பாலும் ஒவ்வொரு மதுரையின் சிறு பகுதிகலும் மல்யுத்த பள்ளிகளும், குஸ்தி வாத்தியாரும் இருப்பார்கள். இந்த வாத்தியார்களுக்கு வஸ்த்தாது என்ற பெயரும் உண்டு. இன்றும் சிலர் நீ என்ன பெரிய வஸ்த்தாதா என கேட்பதை பார்த்திருப்போம்!

நன்றாக் சாப்பிட்டு உடற்பயிற்சிகள் செய்து உடலை கிண்ணென்று வைத்திருப்பார்கள் அன்றைய ஒருங்கிணைந்த மதுரை ஜில்லாக்காரர்கள். எப்பேற்பட்ட கடின வேலைக்கும் அஞ்சாதவர்கள் அவர்கள். மழை வெயில் குளிர் பாராமல் எந்த சீதோசன நிலையிலும் வேலை பார்ப்பவர்கள் அன்றைய மதுரை ஜில்லாக்காரார்கள். எந்த பணியில் இருந்தாலும் இவர்கள் அறுவடை காலங்களில் வயல் வேலைக்கு கிளம்பி விடுவார்களாம். உள்ளூரில் பஞ்சமோ இல்லை வெள்ளமோ என்றால் சட்டென்று யோசிக்காமல் வெளியூர்களுக்கு கதிரறுக்க கூலிக்கும் செல்வார்களாம். உள்ளூரில் பணி முடிந்து வெளியூர்களில் கதிரறுக்கும் வேலை நடந்தால் இவர்களையே அழைத்து செல்வார்களாம். ஆனால் இன்று இங்கும் நிலமை தலைகீழே. முன்பு போல் இன்று கூலியாக நெல்லைக் கொடுத்தால், விளைச்சலில் பாதியைக் கொடுக்க வேண்டியிருக்கும். ஒரு ஏக்கர் கதிர் அறுப்புக்கு இருபது ஆட்கள் என நாலைந்து நாட்கள் வேலை செய்ய வேண்டி இருக்கும். நெல்லை உதறுவதற்கு பத்து ஆட்கள் என, நாலு நாட்களுக்கு மேல வேலை செய்ய வேண்டும். கணக்குப் பார்த்தால் நூற்றி ஐம்பது ஆட்கள் கூலி கணக்கு வரும் ஒரு ஏக்கருக்கு. களம் தூரமாக இருந்தால், கூலி அதிகமாக குடுக்க வேண்டி வரலாம். இவ்வளவு செலவு செய்தாலும் நெல் கிலோ ஆறு ஏழு ரூபாய்க்குதான் கொள்முதல் செய்யப்ப்டுகிறது.

இந்த லட்சனத்தில் ஆட்கள் வைத்து வேலை பார்த்தால் கடன்தான் மிஞ்சும். கதிரறுக்கும் இயந்திரம் வைத்து அறுத்தால். இரண்டு மணி நேரத்தில் ஒரு ஏக்கர் அறுக்கலாம். நெல்லாகவே வந்துவிடும். மணிக்கு 1,200 ரூபாய் இயந்திரக் கூலி. நெல்லை களத்திற்க்கு கொண்டு போக டிராக்டருக்கு ஒரு ஒரு நடைக்கு 250 ரூபாய். இதுதான் இன்றைய கணக்கு! வேலையும் இலகுவாய் முடியும், கொஞ்சம் லாபமும் மிஞ்சும்! சரி அப்போ மதுரை ஜில்லா ஆட்கள் எல்லாம் என்ன செய்கிறார்கள். பெரும்பாலானவர்கள் அரிசி ஆலை வேலைக்கு சென்று விட்டார்கள். மூடை தூக்குவது போன்ற வேலைக்கு சென்றவர்களும் உண்டு. அரிசி ஆலைகளிலும் தற்பொழுது இயந்திர மயமாகி விட்டதால், சிலர் வேறு சிறு குறு தொழிற்சாலைகளுக்கு வேலைகளுக்கு சென்று விட்டனர். அதே போல் இன்றும் கட்ட கூலி வேலை போன்ற கடினமான வேலைகளுக்கு மதுரை சுற்றுப்புற ஆட்களே வெளியூர்களுக்கும் செல்கின்றனர். கேரளாவில் கூட போய் தங்கி வேலை பார்த்து வருவதுன்டு மதுரை சிற்றாள் மற்றும் கொத்தனார்கள். ஒரு பத்து வருடங்களுக்கு முன்னர் வரையில் எங்கள் தொழிற்சாலையில் வேலை செய்தவர்கள் கூட கதிர் அறுக்கும் நாட்களில் எவ்வளவு கூலி நாங்கள் குடுக்க முன் வந்தாலும் உதறி தள்ளிவிட்டு வயல் வேலைக்கு சென்று விடுவார்கள்! அந்த காலங்களில் எங்கள் தொழிற்சாலையில் வேலைக்கு ஆட்கள் கிடைப்பது கடினமாகி விடும். ஆனால் இப்பொது முற்றிலுமாக அந்த பழக்கம் மறைந்து விட்டது என்றே கருதுகிறேன்!

மதுரை ஜில்லா ஆட்களுக்கும் வேலை இல்லாமல் போய் விட்டது கவிஞரே.....

Tuesday 5 January 2016

மணப்பாறை மாடு கட்டி.... (பாகம் 3)


அடுத்த வரி....

ஆத்தூரு கிச்சடி சம்பா பார்த்து வாங்கி விதை விதைச்சு...... 

ஆத்தூர் கிச்சடி சம்பாவை போலவே புகழ் பெற்ற மற்றொரு ரகம் நாம் அனைவரும் அறிந்ததாய் இருக்கும் என நம்புகிறேன். கர்நாடகா பொன்னி, ஆந்திரா பொன்னி என்று மாநிலத்தின் பேரை குறிப்பிடுவது போல் நம் தமிழக பொன்னியை நாம் குறிப்பிடுவது இல்லை! ஊர் பேரை சொல்லியே குறிப்பிடுகிறோம்! ஆம், #மண்ணச்சநல்லூர்_பொன்னிதான் அது! மண்ணச்சநல்லூர் என்பது திருச்சி அருகில் உள்ள சிற்றூர். ஆனால் இதுவும் கர்நாடகா பொன்னி ரகங்களால் தொலைந்து போய் கொண்டிருக்கிறது என்பது முதல் சோகம். இரண்டாவது சோகம் ஆத்தூரின் கிச்சடி சம்பா இப்போது முற்றிலும் ஆத்தூரை விட்டு துடைத்தெடுக்கப்பட்டு விட்டது என்பது!!

சேலத்திலிருந்து விழுப்புரம் செல்லும் வழியில் சேலத்திலிருந்து ஒரு மணி நேர பயணத்தில் இருக்கிறது #ஆத்தூர். அப்போதும் ஆத்தூர் விவசாயத்திலி இருந்து, விதை நெல், விதை நிறுவனங்கள் என பிரபலமாவே இருக்கிறது. சேலத்தின் பிரபலமான வசிஷ்ட நதிதான் இந்த கிச்சடி சம்பாவின் ருசிக்கு காரணம் என்கின்றனர். ஆனால் இப்போது ஆத்தூரில் கிச்சடி சம்பாவும் விளைவதில்லை, #வசிஷ்ட_நதி ஓடுவதும் இல்லை!! அன்று சேலம், தர்மபுரி, நாமக்கல் என ஒருங்கிணைந்திருந்த சேலம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக் விளங்கியிருக்கிறது ஆத்தூர். சுத்தமான வசிஷ்ட ஆற்று நீர், இயற்கை உரங்களை வைத்து அன்று கிச்சடி சம்பாவை சாகுபடி செய்திருக்கிறார்கள். இந்த கிச்சடி சம்பா ரகம் மிகவும் சன்ன ரகமாகவும், மிகவும் ருசியாகவும் இருக்குமாம். இந்த கிச்சடி சம்பா ரக்ம் இப்போது ஆத்தூரில் சுத்தமாக இல்லை என்பது தான் மிகப் பெரிய சோகம்.

இவை தற்பொழுது மாயவரம் ( அதாங்க நம் ஏர் புகழ் மாயவரம் தான்!) மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் மண்ணின் பாரமரிய நெல் வகைகள் தொலைந்து விடக் கூடாது என்ற இயற்கை ஆர்வம் மிக்க தன்னார்வலர்களால் மட்டுமே சாகுபடி செய்யப் படுகிறது.

இந்த கிச்சடி சம்பாவின் குணம் நம் மண்ணுக்கும் நம் சீதோசனத்திற்க்கு மிகவும் இணைந்து வளரக் கூடியது. ஆம் இவை வெள்ளம் வந்தாலும் சரி, கடும் வறட்சி என்றாலும் சரி மீறி வளரக் கூடியவை. வயலில் எவ்வளவு தண்ணீர் நின்றாலும் இவை அழுகாது, ஒரு மாதத்திற்கு காய்ந்தாலும் நிற்கக் கூடியவை! ஏக்கருக்கு 1.250 டண் முதல் 1.5 டண் வரை மகசூல் த்ரக்கூடியவையாம்! இது போன்ற லாபம் தரக்கூடிய பாரம்பரிய நெல் வகைகள் எப்படி காணாமல் போகின்றன என்பது என்னை போன்றவர்களுக்கு புதிரே! இதில் இன்னொன்றும் உண்டு. தற்பொழுது வரும் அரிசி ரகங்களில் வருவது போன்ற வாயுத் தொல்லையும் இந்த ரகத்தில் இருக்காதாம்!

இயற்கை விஞ்ஞாணி திரு #நம்மாழ்வார் அவர்கள் குறிப்பிட்டது போல் " நம் பாரம்பரிய விதைகளுடன் சேர்ந்து நம் பாரம்பரியத்தையும் தொலைத்து விட்டு நிற்கிறோம்"! 

மணப்பாறை மாட்டை தொலைத்தாகிவிட்டது, மாயவரம் ஏரும் தொலைந்து விட்டது, ஆத்தூரில் கிச்சடி சம்பாவே இல்லை....

ஆனால் கவிஞரின் வரிகள் மட்டுமே வலியாய் என் மனதிலும், என் பதிவிலும்...
வருத்தத்துடன்.....

Monday 4 January 2016

மணப்பாறை மாடு கட்டி.... (பாகம் 2)



கலப்பைகளுக்கு பேர் போன இன்னொரு ஊரும் உண்டு! அது மேலூர். ஆம், மதுரைக்கு அருகில் இருக்கும் மேலூரே. அதை நாம் பின்னொரு பதிவில் பார்ப்போம்! நாம் இப்போது பார்க்கப் போவது நம் பாடலில் வரும் மாயவரம் ஏர்!
பெரும்பாலான ஊர்களில் வயல் காடுகள் மணல் பூமி ஆகவும், மணலும் களிமண்ணும் கலந்த பூமியாகவுமே இருக்கும். அதிலெல்லாம் உழுவது மிகவும் சுலபமாக இருக்கும். சாதாரணமாக எல்லா ஊர்களிலும் இரும்பு கலப்பைகள் இருந்தாலே போதும். அதாவது மொத்தமும் இரும்பாலேயே செய்யப் பட்ட கலப்பைகள். ஆனால், மாயவரம் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில பெரும்பாலும் களிமண்ணாத்தான் நிலம் இருக்கும். அந்தச் சேற்றில் உழவு செய்வதற்க்கு கூர்மையான கலப்பைகள் தேவை. சேறு முழங்கால் அளவுக்கு ஆழமாக இருக்குமென்பதால், கலப்பைகள் மிகவும் கனமாவும் இருக்கக்கூடாது. அவ்வாறு கனமாக இருந்தால் மாடும் இழுக்காது, விவசாயினாலும் அதை ஓட்டமுடியாது.
இதையெல்லாம் கவனத்தில கொண்டு தான் மாயவரம் ஏர் கலப்பைகளை தயாரிக்கப் பட்டிருக்கின்றன முன்பு. மாயவரம் கலப்பைகளை கொண்டு காலையில இருந்து மாலை வரையில் கூட அசராமல் ஏர் ஓட்டலாமாம். அந்த அளவுக்கு அவை இலகுவாக இருக்குமாம். இப்படி ஆழ உழவு செய்யவும், அதிக நேரம் வேலை செய்யவும் மணப்பாறை மாடுகள்தான் லாயக்கு.அதனால் தான் கவிஞர் மருதகாசி அவர்கள் மணப்பாறை மாடுகளை குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த ஏர் கலப்பைகள் பெரும்பாலும் ‘நாட்டு கருவை’ (குறிப்பு: வேலி கருவை என்கிற சீமை கருவை கிடையாது) என்று சொல்லப்படும் கருவேலமரத்தில்தான் செய்யப்படுகிறது. அந்த மரம் ரொம்பவே உறுதியானது. ஏரின் முனையில் மட்டும் இரும்பாலான கொழு இருக்கும். எவ்வளவு நேரம் உழுதாலும் ஊறிப்போகாது. இதே மரத்தில் மண்வெட்டிக்கான பிடிகளையும் செய்வார்கள். இந்த மரங்கள் டெல்டா பகுதி முழுவதும் தோட்டம்-துரவு, காடு கரை என எல்லா இடங்களிலும் வளர்ந்து கிடப்பதை இப்போதும் பார்க்கலாம். அதிலிருந்து மரத்தை வெட்டி தச்சுக்கூடங்களில் கொடுத்து கலப்பைகள் செய்து கொள்வார்கள் உழவர்கள். இப்போது, டிராக்டர் வந்துவிட்டதால் மரத்தாலான ஏருக்கு மவுசு குறைந்துவிட்டது. என்றாலும் பாரம்பரியத்தை மறக்காமல் ஏர் பூட்டுபவர்களும் இருக்கிறார்கள்.
மயிலாடுதுறையை சுற்றியுள்ள நாஞ்சில்நாடு, வழுவூர், கொல்லுமாங்குடி, விசலூர், புலியூர், பேரளம் என்று பல ஊர்களில் இந்தக் கலப்பைகளைச் செய்யும் வண்டிப்பட்டறைகள் இருக் கின்றன. ஆனால், கலப்பைகள் குறைந்த அளவே செய்யப்படுவதால், அந்தப் பட்டறைகள் தற்போது கட்டை வண்டி, டயர் வண்டி ஆகியவற்றை செய்து கொண்டிருக்கின்றன.
சோகம்!!

மணப்பாறை மாடு கட்டி.... (பாகம் 1)

பாடலின் முதல் வரியே மணப்பாறை மாட்டுடன் தான் தொடங்குகிறது. தமிழகத்தின் புகழ் பெற்ற மாடு வகைகள் என்ற வகையில் நாம் பெரும்பாலும் கேள்விப் பட்டவை‪#‎காங்கேயம்_காளைகள்‬ தான். ‪#‎மணப்பாறை_மாடு‬ என்றொரு வகை இருக்கிறது என்பதே இந்த பாடலில் தான் நாம் கேள்விப் பட்டிருப்போம். அது போக மணப்பாறையில் ‪#‎முறுக்குதான்‬பிரபலம். முறுக்குக்கு பிரபலமான மணப்பாறையில் மாடு எங்கிருந்து வந்தது என்று தேடும் போது தான் உதவினார் முனைவர் ந.குமாரவேலு அவர்கள்.
அவரது ஆராய்ச்சி நூலான ‪#‎காங்கேயக்_காளைகள்‬(‪#‎தமிழகத்தின்_பெருமை‬) என்ற நூலில் இருந்து சுட்ட (!) தகவல் தான் இது!

இன்றைய கரூர் மாவட்டத்தின் மணப்பாறை என்ற ஊரில் நடைபெறும் வாரச்சந்தை மிகவும் பிரபலமானது. சுற்றுவட்டார விவசாயிகள் தங்களுக்கு வேண்டிய எருதுகளை விற்றும் வாங்கியும் சென்றனர். இச்சந்தையில் காங்கேயக் காளைகளும் விற்பனைக்கு வந்தன. இவ்வாறு விலைக்கு வந்த காங்கேயக் காளைகள் நல்ல விலை கிடைக்காவிட்டால் வியாபாரிகள் தங்கள் ஊரில் சில நாட்கள் வைத்து அடுத்த சந்தையில் விற்பர்… இப்படித் தங்கும் வேளையில் காளைகள் உள்ளூர் நாட்டுப் பசுக்களுடன் இனச்சேர்க்கை செய்துவிடுவதும் உண்டு. இப்படியாக உருவானதே மணப்பாறை மாடுகள் என்று சுப்பிரமணியம் 1947-ஆம் ஆண்டில் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த பதிவில் ஏர்களை ஆராய்வோம்....

மணப்பாறை மாடு கட்டி மாயாவரம் ஏரு பூட்டி....

#மக்களை_பெற்ற_மகராசி படத்தில் திரு.மருதகாசி அவர்கள் இயற்றிய இந்த பாடல் தமிழர்கள் பாரம்பரியத்தை பறை சாற்றும். இந்த பாடல் மீது எனக்கு ஒரு பாசம் உண்டு....

சிலருக்கு தெரிந்திருக்கலாம். பிறருக்கு பின்னர் தெரியவரும். இந்த பாடலில் சில ஊர்களையும் அவற்றின் சிறப்புக்களையும் குறிப்பிடிருப்பார் பாடலாசிரியர். அவற்றை கொஞ்சம் விரிவாக பார்க்க எனக்கு ஆவல்.

சில பதிவுகளை ஏற்கனவே நான் இறுதிப் படுத்தாமல் விட்டிருக்கிறேன்! ஆனாலும் இந்த பதிவை நிச்சயமாக் நல்லபடியாக நிறைவுப் படுத்துவேன் என கருதுகிறேன்...

உங்கள் ஆதரவுடன் இன்றே அடுத்த பதிவிலேயே #மணப்பாறை_மாடு_கட்டிஎன்ற பெயரில் முதல் பாகத்திலிருந்து தொடங்குகிறேன்....
வாழ்த்துங்கள் மக்களே.....