Monday 26 October 2015

ஒரு முகநூலனாக சுய பரிசோதனை! மூன்றாம் பாகம்....

முகநூலுக்கு வந்த முதலில் முகநூல் எனக்கு புது மனைவி போலத்தான் இருந்தது... உற்சாகம், பரவசம், ஆனந்தம், தினம் ஒரு ஆச்சர்யம், தினம் ஒரு புதுமை, தினம் ஒரு அறிமுகம் என ஆஹா ஆஹா ஆஹாஹாதான்.... அடேடே டேய் உன்னை பார்த்து எத்தனை வருடங்களாக ஆகிவிட்டது? எத்தனை பசங்கடா? எங்கே இருக்கிறாய்? என தோழர்களிடமும், ஏன்மா உன்னை கடைசியாய் கல்லூரி பிரிவு உபச்சார விழாவில் சந்தித்தது! உனக்கு அவ்வளவு பெரிய பசங்க இருக்காங்களா? உன் கணவர் என்ன செய்கிறார் என தோழிகளிடமும் ஒரே பரவசம் தான்! கையோடு பள்ளி நண்பர்கள் மற்றும் கல்லூரி நண்பர்கள் என தனித்தனியாக சந்திப்பை மதுரையில் ஏற்படுத்தினோம். மிக அருமையாக இருந்தது. நல்ல பொழுதுகளை மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்து அசை போட்டோம். பின்னர் அடுத்தே சூட்டோடு சூடாக குடும்ப சந்திப்புக்கும் ஏற்பாடு செய்தோம். மிக மிக பிரமாதமாக் இருந்தது. அனைவரது பிள்ளைகளும் ரசித்தனர். அவரவரது கணவர், மற்றும் மனைவிமார்களும் பரவசப்பட்டனர். பழைய புகைப்படங்களை பகிர்ந்து கொண்டோம். புதிய சந்திப்புகளின் போது எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்தோம்! நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது!

முதன் முதலில் ஒரு குண்டு விழுந்தது... ஒரு நெடுங்கால, பள்ளிகால நண்பர் கைபேசியில் அழைத்தார். "கும்ஸ்.... (இப்படித்தான் அவர் என்னை அழைப்பது!) என்னடா உன் ஃபேஸ்புக் பேஜ்ல ஒரே கலீஜா இருக்கு... பூரா அசிங்க அசிங்கமான படமா இருக்குடா...! யாரும் சொல்லலையா உனக்கு?" என்றார்! எனக்கு தூக்கி வாரி போட்டது! எனது நட்பு வட்டத்தில் அப்போது வேறு புது நண்பர்கள் யாரும் அறிமுகம் இல்லாத நேரம். ஆனால் எனது உடன் படித்த பள்ளி, கல்லூரி தோழிகள், என் சகோதரிகள் என பலர் என் நட்பு வட்டத்தில் இருந்தனர். யாரும் பார்த்து விட்டு என்னைப் பற்றி தவறாக எண்ணப் போவதில்லை. எல்லோருக்கும் என்னை சிறு வயதிலிருந்தே தெரியும்! ஆனால் ஒருவரது அந்தரங்கம் மாறுபட்டதாய் இருக்கலாம் என அவர்கள் கருதினால்??! அதுவும் உண்மைதானே! நாம் நமது வெளித்தோற்றத்தில் காண்பிப்பது எல்லாமே நமது நகல்தானே. உண்மை வேறாக அல்லவா இருக்கிறது! அப்போதெல்லாம் கைபேசியில் 2ஜி மட்டும்தான். 3ஜி அறிமுகம் இல்லாத காலகட்டம். அதனால் வேகமாக அலுவலகம் வந்து கணினியில் பார்த்த பொழுது, அவர் சொன்னது உண்மைதான் என தெரிந்தது. முதலில் கடவுச்சொல்லை (பாஸ்வோர்ட்) மாற்றினேன். பின்னர் சிலரிடம் கேட்ட பொழுது ஹாக் ஆகியிருக்கலாம் என கூறினர். ஆனால் எனக்கு நம்பிக்கையில்லை! எனக்கோ இது தெர்ந்தவர்கள் செய்த சதிவேலையாகத்தான் இருக்கும் என சந்தேகம்!

ஏனென்றால் அப்பொழுதெல்லாம் எனது முகநூல் பதிவுகள் ஹாக் செய்து பழிவாங்கும் அளவுக்கு தகுதி இல்லாதவை! (இப்பொழுதும் அப்படித்தான்! ஆனால் இதை விட அப்பொழுது ரொம்ப கேவலம்! வெறும் சுவருதான்!!) ரொம்ப யோசித்த பிறகுதான் தெரிந்தது, இதை செய்தவர் எனக்கு கைபேசியில் தகவல் குடுத்த அதே நல்ல மனிதர்தான் என்று! ஆம் அதற்கு முந்தைய நாள்தான் அவர் மற்றும் வேறு சில பள்ளி கால நண்பர்களுடன் இரவு உணவகம் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். ஏதோ ஒரு விடயத்துக்காக அவர் கேட்டதற்கிணங்க அவரது 2ஜி அலைபேசியில் முகநூலை இயக்கியவன், LOG OUT செய்யாமல் குடுத்திருக்கிறேன்! நெடுநாள் நண்பரல்லவா? அவரால் முடிந்த நல்ல காரியத்தை கமுக்கமாக செய்துவிட்டார். நான் வெளிப்படையாக கேட்ட பொழுது சிரித்து மழுப்பிக் கொண்டே மறுத்தார். ஒப்புக்கொள்ளவில்லையே தவிர உறுதியாக் மறுக்கவில்லை! எப்படி குற்றம் சாட்டுகிறாய் என்று கேள்வி மட்டுமே கேட்டார்?! அதே நண்பர் பின்னாளில் நான் முகநூலில் போடும் பதிவுகளில் எனக்கு பிடித்த நடிகைகளின் படங்களை பதிவதால் தனக்கு கவுரவ குறைச்சல் ஏற்படுவதாக் என்னை குற்றம் சாட்டினார்!! "தம்பி என் நட்பு வட்டத்தில் நம்முடன் படித்த தோழிகள் மட்டுமல்ல, எனது அக்கா, தங்கை, அண்ணி, சிற்றன்னை, பெரியம்மா என பெரும் பெண்கள் பட்டாளமே இருக்கிறது! நான் பகிரும் படங்கள் கண்டிப்பாக குறை கூறும் அளவுக்கு கிடையாது" என கூறினேன்! ஆனால் ஓரிரு நாட்களில் என்னை தனது நட்பு வட்டத்திலிருந்து நீக்கிக் கொண்டார்! இது வரை ஏன் என்று நானும் கேட்கவில்லை, அவரும் கூறவில்லை!

நமக்கு எப்போதுமே "ஐ டோன்ட் கேர் பாலிசிதான்!!" என்னை அறிந்தவர்கள் என்னுடன் இருந்தால் போதும்! நான் அப்படித்தான்!! பிறவியிலேயே எனது மேக் அப்படித்தான்....
மீண்டும் மற்றொரு பதிவில் வேறொரு சோதனையை பார்ப்போம்.....
(உங்களையும் சோதிக்காமல் விடப் போவதில்லை!!)

Saturday 24 October 2015

பெருந்தலைவரும் சீமைக்கருவேலும்!!

சீமைக்கருவேல் மரங்கள் பெருந்தலைவர ஆட்சி் காலத்தில் ஏதோ தவறான நோக்கோடு கொண்டு வரப்பட்டதாக பதிவுகளில் சிலர் பின்னூட்டமிடுவது வேதனை அளிக்கிறது! நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் எத்தனையோ தியாகங்களையும், நன்மைகளையும் செய்த பச்சை தமிழரா இந்த விசயத்தில் தீமை நினைத்திருக்க போகிறார்...?? பின்னூட்டமிடுபவர்களின் அறியாமையாய் இருக்கலாம்!!

காமராஜர் காலத்தில், உணவு பஞ்சம் போல், விறகு பஞ்சம் ஏற்பட்டது. உணவு சமைப்பதறகாக வெளி நாட்டில் இருந்து கருவேல மரத்தை இறக்குமதி செய்ததால், இந்த கருவேல மரத்திற்கு "சீமை கருவேலம்' என்ற பெயர் உண்டு. மெக்சிகோ, கரீபியன் தீவுகள் மற்றும் தென் அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட இவை, பயிர்களுக்கு வேலியாகவும், விறகாகவும் பயன்படும் எனக் கருதி, 1950ல் ஆஸ்திரேலியாவிலிருந்து, இந்தியாவுக்கு விதையாக கொண்டுவரப்பட்டது. நலம் பயக்கும் என கருதி, விதைக்கப்பட்டவை இவை!

15 வருடங்களுக்கு முன் வரை இவை கிராமப்புறங்களிலும், நாட்டுப்புறங்களிலும் இவை பெருவரியாக பயன்படுத்தப் பட்டு வந்தன என்பது மறுக்க முடியாத உண்மை! தற்பொழுது விறகுகளின் பயன்பாடு மிகவும் அரிதாகி விட்ட சூழலில், இவை மிகவும் நச்சுத் தனமை வாயந்தவை என்றும் மிக சமீப காலத்தில் கண்டு கொண்ட நிலையில், பெருந்தலைவர் மீது பழி சுமத்துவது முறையல்ல!! நன்றி மறவாதீர் மக்களே....

Friday 23 October 2015

இயற்கையா? விதியா?

நம் முன்னோர்கள் இயற்கையை வழிபட்டு இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழ்ந்ததாக நமக்கு நிறைய சான்றுகளும் பண்டிகைகளும் உள்ளன. தமிழர்கள் பிற்போக்குவாதிகள் என்றும் திராவிட இயக்கங்களே தமிழர்கள் வாழ்வில் வெளிச்சம் ஏற்றி வைத்ததாகவும் பீற்றிக் கொண்டிருக்கின்றன! ஆனால் நிதர்சனம் என்ன என்பதை சிறிது ஆராயலாம்... என் ஆய்வுகள் தவறாய் இருக்கலாம், இதுதான் சரி என நான் வாதாட வரவில்லை... ஆனால் எம் முன்னோர் காட்டுமிராண்டிகள் என்றும் தமிழ் மொழி காட்டு மிராண்டிகளின் மொழி என்றும் திராவிடர்கள் கதைத்துக் கொண்டு திரிவதை ஏற்றுக் கொள்ள முடியாது!

இயற்கையை ஏன் வழிபட்டார்கள் நம் முன்னோர்கள்? இயற்கை நமக்கு எல்லா வளங்களையும் வழங்கியதாலா? அப்படியா? இயற்கை மனிதருக்கு நன்மை மட்டுமே செய்து வருகிறதா? அப்படியானால் பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் எல்லாம் ஏன் வருகின்றன? மனிதரின் தவறான செயலினால் என சிலர் வாதிடுகிறார்கள்! முதலில் இயற்கை என்ன செய்கிறது என்பதை கொஞ்சம் ஆய்வோம். இயற்கையின் வேலை அது தன்னை நிலைப்படுத்திக் கொள்ளுவதும் (STABILIZE), சமநிலையை (BALANCING) பாதுக்காப்பதும் ஆகும்.

இதற்கு உதாரணம் ஆப்பிரிக்க சிங்கங்கள். ஆப்பிரிக்க காடுகளில் பெண் சிங்கங்கள் மட்டுமே கூட்டமாய் வாழும் (LION PRIDE). பெண் சிங்கங்களின் வேலை குட்டி போடுவது, குட்டிகளை பராமரித்து அவைகளை வளர்ப்பது, அவைகளுக்கு வேட்டையாட கற்றுக் குடுப்பது, பின்னர் முக்கியமாக் வேட்டையாடி கூட்டத்தின் பசி போக்குவது! அப்போ ஆண் சிங்களின் வேலை பெண் சிங்கங்களோடு கூடி இனப்பெருக்கம் செய்வது, ஓட்டகச்சிவிங்கி காட்டெருமை போன்ற பெரிய விலங்குகளை வேட்டையாடும் போது மட்டும் உதவுவது, பிற மாமிச பட்சினிகளால் (கழுதைப் புலி போன்ற) தங்கள் குட்டிகளுக்கு ஆபத்து வராமல் பாதுகாப்பது, முக்கியமாக அந்த கூட்டத்தின் எல்லையை பாதுகாப்பது. காட்டில் வாழும் ஆண்சிங்கங்களின் சராசரி ஆயுட்காலம் 12 -18 வருடங்கள்தான். ஆனால் மிருகக்காட்சி சாலைகள் போன்றவற்றில் வளர்க்கப்படும் சிங்கங்கள் 20-25 வருடங்கள் உயிர் வாழும். ஏன் இவ்வளவு வித்தியாசம்?

அங்கேதான் இருக்கிறது இயற்கையின் சூட்ச்சுமமும் குரூரமும்! ஆண் சிங்கக் குட்டிகள் பொதுவாக பருவத்துக்கு வரும் முன்னரே அந்த கூட்டத்தின் ஆண் சிங்கத்தால் அடித்து விரட்டப்படும்! பின்னர் அவை காட்டில் சில காலங்கள் வேட்டையாட பழகி பிற ஆண் சிங்களாலோ அல்லது கழுதை புலிகள் போன்றவற்றாலோ வேட்டையாடப் படாமலோ உயிர் வாழ  வேண்டும். நல்ல சரியான எடையும், உயரமும் அடைந்த பின்னர் மற்றொரு ஆண் சிங்கத்தின் கூட்டத்தை அபகரிக்கும். எப்படி? போர்!! பெரும்பாலும் சண்டை தவிர்க்கப்பட்டு மிரட்டியே காரியம் சாதிக்க நினைக்கும் இரு சிங்கங்களுமே! வேறு வழி இல்லாமல் சண்டை நடந்தால் கூட முடிந்த வரை சாவு தவிர்க்கப்ப்டும். ஆனால் சண்டை ஏற்பட்டு தோற்ற ஆண் சிங்கம் பெரும்பாலும் உயிர் வாழ்வது கடினமே! படுகாயமடைந்த சிங்கத்தினால் வேட்டையாடவும் முடியாது, வேட்டையாடி குடுக்க சிங்கக் கூட்டமும் இருக்காது! ஆம் தோற்ற சிங்கம் கூட்டத்தை விட்டு விரட்டப்படும்! இந்த நிலையில் சிங்க ராஜாவை பார்க்க நேரக்கூடாது. ஆம் அவ்வளவு பரிதாபகரமாக எலும்பும் தோலுமாக அலையும்!  அது படு காயத்துடன், காட்டில் பரிதாபமாக கடும் பசியுடன் அலைந்து திரிந்து கொடுமையாக சாகும்! இல்லாவிட்டால் கழுதை புலிகளாலோ, காட்டெருமைகளாலோ கொல்லப்படும்! மிக கொடூரமாக இருக்கிறதா? இதை தான் நாம் நாட்டில் விதி என்கிறோம். இது இயற்கை!! இன்னும் முடியவில்லை!

சரி இந்த சிங்கத்தை அடித்து விரட்டிவிட்டு கூட்டத்தை அபகரித்த ஆண் சிங்கம் என்ன செய்கின்றது என்று பார்ப்போம். முதல் வேலையாக அந்த கூட்டத்தின் சிறிது பெரிய ஆண் சிங்கங்கள் விரட்டி அடிக்கப்படும். ஆண் பெண் குட்டிகள் அனைத்துமே அந்த புதிய ஆண் சிங்கத்தினால் கொல்லப்படும். கண் திறக்காத குட்டிகளும் விதிவிலக்கல்ல! ஏன் இது? பெண் சிங்கங்கள் குட்டிகளுக்கு பால் குடுக்கும் வரை அடுத்த இனப்பெருக்கத்திற்கு தயாராகாது, சம்மதிக்கவும் செய்யாது, ஆண் சிங்கங்களை பக்கத்திலேயே விடாது. குட்டிகள் இறந்த உடன் அதன் உடலில் வெப்பம் ஏற்பட்டு மீண்டும் இனபெருக்கத்துக்கு தயாராகும்!! இது பார்க்க மிக குரூரமாக இருந்தாலும் சிங்கங்கள் தங்கள் குலத்தை விருத்தி செய்ய (PASS THEIR GENES) இது ஒன்றுதான் வழி! இதுவே சிஙக்ங்களை அழிய விடாமலும் பாதுகாக்கிறது! அது எப்படிங்க? குட்டிய கொன்று விட்டால் சிங்க இனம் அழியத்தானே செய்யும் எப்படி பாதுகாக்கும்என்று கேட்கிறீர்களா??

அதுதாங்க அடுத்த சூட்சுமம்! ஆம் வேறு ஆண் சிங்கம் வரவில்லையென்றால், அந்த கூட்டத்தில் வளரும் ஆண் சிங்கங்கள் தங்கள் சகோதரிகளுடனே இனப் பெருக்கம் செய்து சத்தில்லாத குட்டிகளை ஈன வழி செய்து விடும்! அதே போல் தலைமை ஆன் சிங்கம் மாற்றப்படா விட்டால். அது சில காலங்களில் தான் ஈன்ற பெண் சிங்க குட்டிகளுடுனேயே இனப்பெருக்கம் செய்து சத்தில்லாத குட்டிகளை ஈன வழிவகை செய்து விடும்! இது தான் இய்ற்கை தன்னை நிலைப்படுத்திக் கொள்வது!! மேலும் அடுத்த படிவில் பார்ப்போம்.....

Thursday 22 October 2015

பெருந்தலைவர் - விந்தை அரசியல்வாதி!

பிறந்து நாம் விவரம் தெரிந்த குழந்தையாயிருக்கும் காலம் தொட்டு, சாகும் வரை நாம் ஒவ்வொரு தடவை பார்க்கும் போதும் ஆர்வமாய் பார்க்கும் அலுக்காத விசயங்கள் சில உண்டு. அவை ரயில், யானை மற்றும் கடலாகும். அது போலவே எனக்கும் ஒரே விசயத்தை மீண்டும், மீண்டும் எழுதவோ, படிக்கவோ அலுக்காது என்றால் அது பெருந்தலைவர், சே மற்றும் நெப்போலியன் குறித்து! அதிலும் பெருந்தலைவர் பற்றி நான் ஏற்கனவே பதிந்த விசயங்களையே வேறு கோணங்களில் பல முறை எழுதவோ, படிக்கவோ எனக்கு அலுப்பதில்லை!! எத்தனை முறையானாலும் படிக்கவும், எழுதவும் அசராது பெருந்தலைவர் பற்றி!

எல்லாருக்கும் கல்வி. அதன் மூலம் எல்லோருக்கும் வேலை வாய்ப்பு. அதன் மூலம் எல்லோர்க்கும் உணவு. ரதன் மூலம் எல்லோருக்கும் சமத்துவம் காண வேண்டுமென்பதே காமராஜரின் லட்சியம்.
இந்த லட்சியத்துக்காகவே இறுதிவரை வாழ்ந்த உயர்ந்த மனிதர் அவர்.
கர்ணன் கொடுப்பதையே குறியாகக் கொண்டவன். அதுவே அவனது உயிராக இருந்தது. அதனால்தான் அம்புபட்டு தேர்ச் சக்கரத்தில் சாயந்தபோதும் உயிர் போகவில்லை. தர்மதேவதை தடுத்தாள்.
கண்ணன் உண்மை நிலைய உடனே உணர்ந்தான். இந்த சூழலில் கர்ணனின் உயிர் போகாது. அவனது உயிர் போகவேண்டுமானால் அவனிடம் எஞ்சியுள்ள தர்ம பலனையும் பெற்றுவிட வேண்டும்.
எனவே கண்ணன் ஓர் அந்தண வடிவம் கொண்டு உயிருக்கு போராடும் கர்ணனிடம் புண்ணியத்தை யாசகமாகப் பெற்றுக்கொண்டதும் அவன் இறந்தான்.
எனவே, இலட்சியத்தில் உயிரை வைத்திருப்பவர்கள் அந்த இலட்சியத்துக்கு இழுக்கு ஏற்படுமானால் உயிரை இழந்துவிடுவர்.
கர்ணனை போன்றவர்தான் காமராஜரும்.
உயிரும் இலட்சியமும் ஒன்றாக இருப்பவர்கள்தான் உயர்ந்தவர்கள். அவர்களின் உள்ளம்தான் இனைவனின் உறைவிடம்.
காமராஜர் எப்போதுமே ஒரு கடவுள் பக்தராக இருந்ததில்லை. ஆனால் அரசியல் பக்தர்கள் லட்சக்கணக்கில் அவரைஏ வணங்கினார்கள்.
என்ன காரணம்?
தொண்டராக வாழ்வை தொடங்கி அரசியலில் தலைவராக உயர்ந்த போதும் தொண்டராகவே வாழ்ந்து தொண்டராகவே மறைந்ததால் இனறவனே இத் தொண்டர் தம் உள்ளத்தில் ஒடுங்கிவிட்டார்.
ஏழைகளுக்காக இரங்கி, அவர்களின் துயர்நீக்க எல்லோருக்கும் கல்வியை இலவசமாக்கிய ஏழைப்பங்களான். உயர்ந்த உள்ளம் உடையவர் அவர்தான்.
எனவே,
உயர்ந்த உள்ளம் ஒவ்வொருவருக்கும் இருந்தால் வாழ்வில் உயரவும் புகழில் உயரவும் முடியும் என்பதை பெருந்தலைவரின் வாழ்க்கை உணர்த்துகிறது.
இது படிக்காத மேதையிடம் படிக்க வேண்டிய முதல் பாடமாகும்.
அரசியல் நாகரிகத்தை அவரிடமிருந்து கற்க வேண்டும்.
திட்டமிடுதலும், செயல்படுத்தலும், செய்து முடித்தலும் அவர் செயல் வீரர் என்று காட்டின. ஆனால் அவர் செய்யும் முன்பும் கூறியதில்லை; செய்து முடித்த பின்பும் பேசியதில்லை.
அரசுப் பணிகள் அரசின் பணியே தவிர அரசியல்வாதியின் பணியல்ல என்பதை நன்கே உணர்திருந்தார். அது போல் அரசுப் பணியாளர்களையும் மதிக்கும் பண்புடையவர்.
அரசுப் பணியாளர்களை முக்கிவிடும் பணியைச் செய்யக் கூடாது. இந்த உயர்ந்த அரசியல் நாகிகத்தை கர்மவீரர் காமராஜரிடமிருந்து கற்க வேண்டும்.
அரசு ஒரு இயந்திரம், அது இயக்குபவர்களைப் பொறுத்து இயங்கும் என்பதை நாம் இன்று உணர்வதற்குக் காரடமாயிருந்தது அவரது அரசியல் நாகரிகம்தான்.
நேர்மையும், தூய்மையும் சேர்ந்துவிட்டால் அரசியல் தெளிவாகவே இருக்கும் என்பதை உலகுக்குக் காட்டியவர் அவர். கடமைஆனது பேச்சில் இருந்து எதற்கு? செயலில் வேண்டும். அப்படி கடமையைச் செய்யும் அதிகாரிகளைக் கண்ணியப்படுத்த வேண்டும்.
பெருந்தலைவர் அரசியல் பிரவேசத்தின் பிற்பகுதியை விட்டு விட்டு, அவர் முதலமைச்சராய இருந்த காலத்தை மீள்பார்வை செய்து பார்ப்போமானால் அரசியல் நடத்தும் அரிச்சுவடி தொடங்கி அத்ததனை அந்தரங்களையும் அவரிடம் கற்கலாம்.
அப்போது-பெருந்தலைவர்தான் முதலமைச்சர் பல்வேறு அலுவல்களை முடித்து விட்டு காலதாமதமாக வந்தாலும் காமராஜர் மறுநாள் பணிளை ஒழுங்கு படுத்திவிட்டுத்தான் தூங்குவார்..
இத்தகைய பணிக்காக ஒரு நாள் தனது தனி அலுவலரை அழைத்து ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரைத் தொலைபேசியில் அழைக்கச் சொன்னார். காமராஜரின் தனி அலுவலர் உடனே போன் செய்து அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியை அழைத்தார். மறுமுனையில் பேசியதோ ஐ.ஏ.எஸ். அதிகாரி அல்ல; அவரது செயலாளர் (P.A).
உடனே, முதலமைசைசரின் தனி அலுவலர் என்ற தோரணையில் ஐ.ஏ.எஸ். அதிகாரியை காமராஜரோடு பேசச் சொன்னார். அந்தச் செயலாரோ ஒரே வரியில் முடித்து விட்டார். ஐ.ஏ.எஸ். அதிகாரி தூங்குகிறார் இப்போதைக்கு எழுப்பமுடியாது.
இவருக்கோ கோபம். ”நான் முதலமைச்சரின் தனி அலுவலர் பேசுகிறேன் என்று கடுகடுத்தார்.மறுமுனையில் அவரும் விடவில்லை. ‘நான் ஐ.ஏ.எஸ்ஸின் செயலாளர் பேசுகிறேன்’ என்றார்.
இருவருக்குள்ளும் வாதம் தொடர்ந்ததே தவிர, ஐ.ஏ.எஸ். அதிகாரி முதலமைச்சரிடம் பேச வரவே இல்லை.
”நான் நாலரை கோடி மக்களின் நாயகனுடைய பி.ஏ. பேசுகிறேன். அவர் அழைக்கிறார் ஐ.ஏ.எஸ்ஸை எழுப்புங்கள். மறுமுனையிலிருந்து பதில் இப்படி வந்தது. – நல்லது. நீங்கள் நாலரை கோடி நாயகரின் பி.எ. பேசலாம்… நான் ஐ.ஏ.எஸ்ஸின் பி.ஏ. பேசுகிறேன்…-அவர் எக்காரணம் கொண்டும் தன்னைத் தூக்த்திலிருந்து எஉப்ப லேண்தாம் என்று கூறிவிட்டுத்தான் தூங்கச் சென்றார். எனவே எனது கடமையைத்தான் செய்கிறேன்”.
முதலமைச்சரின் பி.ஏ. கோபத்தோடு பெருந்தலைவரிடம் சென்று, ”தாங்கள் அழைப்பதாக் கூறியும் தொலைப்பேசிக்கருகே காத்திருப்பதாக கூறியும் அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பி.ஏ. அவரை எழுப்ப மறுத்துவிட்டார். அவர் தூங்கப்போகும்போது யார் அழைத்தாலும் எழுப்ப வேண்டாம் என்று கூறினராம்” என்று கூறினார்.
இது போன்றதொரு சம்பவம் இந்தியாவின் எந்த மாநிலத்தில் நடந்தாலும் சரி, என்ன நடக்கும் என்று எண்ணிப்பாருங்கள். மறுநாள் காலையே எங்கோ ஒரு காட்டுக் கிராமத்திற்கு மாற்றப்படுவார். ஐ.ஏ.எஸ். அதிகாகியோ ஏதோ ஒரு சுமாரான ஒரு வாரிஅத்தின் மேலாளராக்கித் தண்டிக்கப்படுவார். ஆனால் மக்கள் தலைவர் காமராஜர் என்ன செய்தார் தெரியுமா? மறு நாள் விடிந்ததும் தானே அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியை அழைத்தார். அவரோ காலையில் விஷயத்தை கேள்விப்பட்டு ஆடிக் கொண்டிருந்தார். தனக்கு என்னாகுமோ தனது பி.ஏ.வுக்கு என்னாகுமோ?” என்று வருந்தினார்.
காமராஜரோ, அந்த ஐ.ஏ.எஸ்.ஸிடம் அந்த பி.ஏ.வைப் பற்றிய முழு விபரங்களையும் கேட்டறிந்தார். ஐ.ஏ.எஸ் வருந்தியவாறே என்ன நடக்குமோ என்ற கவலையில் பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.
பெருந்தலைவர் திடீரென ”உங்க பி.ஏ.வை எனக்குப் பி.ஏ வாக அனுப்பித் தாங்க” என்று கூறி அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டார்.
அப்போதும் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்குப் புரியவில்லை. தலைவர் விபரமாகவே கூறினார். ‘யார் அழைத்தாலும் எழுப்ப மறுத்த கடமை உணர்ச்சிமிக்கவர்தான் பி.ஏ. வாக இருக்கவேண்டும். அதனால்தான் அவரை எனக்குப் பி.ஏ.வாக அனுப்பி வையுங்கள் என்றார்.
ஒரு சாதாரண அரசுப் பணியாளரின் கடமை உணர்வு முதலமைச்சருக்கு எதிராக நடந்த பின்பும் அதே முதலமைச்சர் பாராட்டினார் என்றால் இதுதான் அரசியல் நாகரிகம். இத்தகைய அரசியல் நாகரிகத்தை நாம் அவரிடம் இருந்துதான்படிக்க வேண்டும்.
இப்படி கடமையை பாராட்ட முற்பட்டால் எல்லோருக்குமே கடமை செய்யும் மனநிலை தானாக ஏற்படும் என்பதை நாம் உணரவேண்டும்.
எதிர்கட்சிக்காரர்களை எதிரிகளாக நினையாமல் அரசுப் பணியாளரை அடிமைகளாகக் கருதாமல் கடமையாற்றும் நாகரிக அரசியலை நாம் படிக்காத மேதையிடமிருந்துதான் படிக்கவேண்டும்.
கல்விக் கண்ணைத் திறந்து கற்றவர் மலியக் காரணமானார் காமராஜர்.
திட்டமிட்டு ஒரு சமூகத்தைக் கூர்மைபடுத்தியவர் பெருந்தலைவர்.
தலைமை ஏற்பவருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் பல.
தன்னலமின்மை, பதவி ஆசையின்மை, தியாகம், நேர்மை, நாணயம், நம்பிக்கை, திட்டமிடல், தீர்மானித்தலை, வழி காட்டல், வி நடத்தல் இவை போன்று பல பண்புகள் இருக்கவேண்டும்.
எல்லாம் இருந்தாலும் தியாகம் மட்டுமே மிக முக்கியமான பண்பாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஏனெனில் தியாக உணர்வு இருப்பரிடம்தான் விட்டுக் கொடுத்தல், தோலவியை ஏற்றுக் கொள்ளுதல், பதவியை விட பதவியளித்தவர்களை மதித்தல, பதவியைத் துறக்கும் துணிவு ஆகியவை இருக்கும்.
இந்திய அரசியலைப் பொறுத்தவரை ஏணிகளாக இருந்தவர்கள் இருவர்தான். பலர் பதவிகளை அடையத் தங்களை படிக்கட்டுக்ளாக்கிக் கொண்டவர்களுள் முதலாமவர் காந்தி, இரண்டாமவர் பெருந்தலைவர். காந்தியும், கருப்புக் காந்தியம் தங்களை ஏணிகளாக்கித் தலைவர் பதவியடைய விரும்புவோர் ஏறிச் செல்ல ஏதுவாயிருந்தனர்.
அரசராக இருப்பதற்கு ஆளும் தலைமை என்கின்ற தகுதி போதும். அரசர்களை உருவாக்குவதற்கோ பெருந்தலைமை எனும் தகுதி வேண்டும்.
அத்தகுதி பெற்றதால்தான் காமராஜர், பெருந்தலைவர் என்னும் பெருமை பெற்றார்.
தாமே பெரும் பதவிகளை அடைய வேண்டுமென்று துடிப்பவர்கள்தாமே அதிகம். அதிகார வெறிபிடித்து அலைபர்க்ள்தானே அதிகம். ஏறிய நாற்காலியை விட்டு இறங்க மறுப்பவர்கள்தானே அதிகம். இறங்கினாலும் மறுபடியும் ஏறத் துடிப்பதுதானே இப்போது காணப்படும் இயற்கை.
ஆனால் முதலமைச்சர் பதவியை உதறிவிட்டு இறங்கியதால்தான் பிரதமர் பதவி பின்னால் வந்தது. எந்த எதிர்ப்பும் இன்றித்தானே ஏற்றுக் கொள்ளும் நிலை இருந்தபோதும் அதை ஏற்க மறுத்தார், காமராஜர் அதற்குக் காரணங்கள் உண்டு.
‘முதியோர்கள் இளைஞர்களுக்கு வழிவிட்டு பதவி விலக வேண்டும்’ என்று முதல்வர் பதவியையே விட்டுவிட்டவர் பெருந்தலைவர்.
அதேநேரம், பிரதமர் பதவி தயாராக இருந்தபோது தானே ஏறி அமர்ந்து கொண்டால் அது கொள்கைக்கு விரோதமல்லவா? எனவே ஏணியாக மாறினார்.
லால் பகதூர் சாஸ்திரி அவர்களும், இந்திரா காந்தியும் பிரதமர்களானார்கள் என்றால் அந்த அரசர்களை உருவாக்கிய அரசர் காமராஜர்தான்.

ஒரு முகநூலனாக சுய பரிசோதனை! தொடர்ச்சி....

முகநூல் இல்லாவிட்டால் என்ன ஆகியிருக்கும் எனக்கு.....?

தனிப்பட்ட வாழ்வில் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்பட்டிருக்காது....
ஆனால் என் நட்பு வட்டமும், சொந்தமும் மிகவும் சுருங்கி போயிருக்கும் என்பதில் ஐயமில்லை.....!
அதுமட்டுமல்ல என் தேடலும், பொது அறிவும் கூட விரிவடைந்து இருக்காது....
புத்தகம், கேள்வி ஞானம் என பல விசயங்களில் என் தேடல் விரிந்ததற்கு முகநூல் ஒரு மிகப்பெரிய காரணி....

நேரில் பார்க்கும் மனிதர்களுக்கும் அவர்கள் உள் மனதுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசமும், இடைவெளியும் இருக்கும்....
அவர்களை தள்ளி நின்று பார்க்கும் போது அழகாகவும், அருகில் வந்து பார்க்கும் போது குணம் கேவலமாகவும் இருக்கும்......!
நானும் அப்படித்தான்... எனது தோற்றத்தையும், பேச்சையும், ஏன் கையெழுத்தையும் விட என் நிஜம் கேவலமே....
 எனக்கு நடிக்க தெரியாது என எவரும் கூற முடியாது! ஒருவர் மனதில் நினைப்பதை மொழி பெயர்க்கும் கருவி என்று கண்டு பிடிக்கப்படுகிறதோ.... அன்றே நட்பு, காதல், பாசம், நேசம் என்ற எல்லா வார்த்தைகளுமே அர்த்தமற்றவைகளாகிவிடும்!!

முகநூல் மனிதர்களும் அதற்கு விதிவிலக்கல்ல! உன் நன்பர்கள் யாரென்று சொல் நான் உன்னை பற்றி சொல்கிறேன் என ஒரு ஆங்கில பழமொழி உண்டு! அதே போல் ஒருவரின் கெட்ட பக்கத்தை பற்றி தெரிய வேண்டுமென்றால் அவரது குப்பையை கிளறுங்கள் என்பார்கள்! முகநூலில் ஒருவரின் சுயம் தெரிய வேண்டுமா?? அவரது உள்டப்பியை (அதாங்க இன்பாக்ஸ்!) கிளறினால் போதும்! எல்லா குப்பையும் அங்கே இருக்கும்!!

முகநூல் மிக அழகாக தெரிவது போல். மிக மோசமாகவும் இருக்கும்! மிக நெருங்கிய கல்லூரி நன்பனே, நம் வட்டத்துக்குளேயே அசிங்கமாய் நடந்து கொள்ளும் கொடுமையையும் கண்டேன். ஆண் பெண் ஈர்ப்பு என்பது ஆண் பெண்ணுக்குள் சகஜம் தான். எனக்கும் உண்டு! அது இல்லையெனில் ஒருவர் ஆணாகவோ இல்லை பெண்ணாகவோ இருக்க முடியாது. அழகு என்பது இரு பாலரையும் ஈர்க்கும் விசயம் தான். அழகான எதிர்பாலரை பார்க்கும் திருமணமான ஆணோ அல்லது பெண்ணோ டக்கென ஒரு நிமிடம் சஞ்சலப்படுவது இயற்கை! பெண்கள் மிகவும் கட்டுப்பாடோடு நடந்து கொள்வர், ஆண்கள் மனைவி அருகில் இல்லாத பொழுது ஒருமுறை திரும்ப பார்ப்பதும் உண்டு!

 ஆனால் வரைமுறை என்ற ஒன்று இல்லை என்றால் நாமும், குஷ்பு கமல்ஹாசன் போல் ஆகிவிடுவோம் அல்லவா?? வரைமுறை இல்லாத வாழ்க்கை கூத்தாடிகளுக்கு வேண்டுமானால் சரியாய் இருக்கலாம் ஆனால் நமக்கு?! எவ்வளவு அழகான பெண்களை கண்டிருந்தாலும் நம் பொறுப்புக்கள் அவற்றை அடுத்த நிமிடமே மறக்கடித்து விடும். மனைவியின் பாசம் நமக்குள் குற்ற உணர்ச்சியை கிளறிவிட்டு விடும். பிள்ளைகளை கண்ட பின் பெரும்பாலும் உலகமே மறந்து விடும். அதையும் மீறி சிலர் முகநூலில் நடந்து கொண்ட முறை என்னை பல முறை முகநூலை விட்டு போய்விடும் எண்ணத்தையும் தூண்டியிருக்கிறது! ஆனால் இது போன்றவர்களுக்கு மேல் தொடர்பில் உள்ள நல்லவர்களால் தான் இன்னும் முகநூல் வாசம்!

தெரிவிக்க வேண்டும் என நினைக்கும் வில்லங்கமான விசயங்களை நாம் நேரில் தெரிவிக்க தைரியம் பத்தாது ஆனால் அதையே கடிதம் மூலமாக தெரிவிக்க தயக்கம் இருக்காது. அதேதான் முகநூலும். நல்ல வாய்ப்புகளை தேடி அலையும் பல்ருக்கு எப்படி முகநூல் வரப்பிரசாதமோ... அதே போல் சில மோசமான வாய்ப்புகள் தேடி அலைபவர்களுக்கு முகநூல் நல்ல குப்பைக்கிடங்கே!! இவர்களில் சிலர் இழவு வீட்டிலும் வாய்ப்புக்கு அலைபவர்கள்! ஆக மொத்தம் பெண்களுக்கு முகநூல் மிகவும் ரிஸ்க்கான சமாச்சாரம்தான்! மிகுந்த கவணம் தேவை என்பதை என்  அனுபவத்தில் பல முறை கண்டிருக்கிறேன்!

முகநூலில் இது மட்டுமா என் மோசமான அனுபவங்கள்.... அடுத்த பதிவில் இன்னும் தொடரும்...

Wednesday 21 October 2015

நாயின் வாலா,கரடியின் வாலா??!

ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இக்கரையில் இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப் போவது? இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது. அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும். ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. அப்படியே ஆற்றில் பாய்ந்தது... நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்த இரண்டு பேரில் ஒருத்தன் குபீர் என்று ஆற்றில் குதித்தான். அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.

காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச் சென்று அக்கரையில் சேர்த்துவிட்டது.

அடுத்தவன் பார்த்தான்.

நமக்கு ஒரு ‘வால்’ கிடைக்காதா என்று எதிர்பார்த்தான்.

இந்த நேரம் ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது. இதுதான் நேரம் என்று இவனும் ஆற்றில் விழுந்து அந்த நாயின் வாலைப் பிடித்துக் கொண்டான். இந்த மனிதனையும் இழுத்துக் கொண்டு நாயால் ஆற்றில் நீந்த முடியவில்லை. திணறியது. ஒரு கட்டத்தில் நாய், ‘வாள்... வாள்’ என்று கத்த ஆரம்பித்து விட்டது. விளைவு _ இருவருமே ஆற்று நீர் போகும் திசையிலேயே மிதந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் போக வேண்டிய திசை வேறு.

போய்க் கொண்டிருக்கிற திசை வேறு. 
கரை சேர நினைக்கிற மனிதர்களின் கதை இது. சிலர் கரையிலேயே நின்று விடுகிறார்கள். சிலர் காளையின் வாலைப் பிடித்துக் கொள்கிறார்கள். சிலர் நாயின் வாலைப் பற்றிக் கொள்கிறார்கள்.

ஆற்றின் நடுவே கம்பளி மூட்டை ஒன்று மிதந்து செல்கிறது. உள்ளே ஏதாவது பொருள் இருக்கும் என்கிற ஆசையில் ஒருத்தன் நீந்திச் சென்று அதைப் பற்றுகிறான். நீண்ட நேரம் ஆகியும் கரை திரும்பவில்லை. நடு ஆற்றில் போராடிக் கொண்டிருக்கிறான். கரையில் நின்று கொண்டிருக்கிற நண்பர்கள் கத்துகிறார்கள்...

‘‘நண்பா... கம்பளி மூட்டையை இழுத்துக் கொண்டு உன்னால் வர முடியவில்லை என்றால் பரவாயில்லை... அதை விட்டுவிடு!’’

ஆற்றின் நடுவே இருந்து அவன் அலறுகிறான்: ‘‘நான் இதை எப்பவோ விட்டுட்டேன்... இப்ப இதுதான் என்னை விடமாட்டேங்குது. ஏன்னா, இது கம்பளி மூட்டை இல்லே. கரடிக் குட்டி!’’

கரடியை பற்றுகிறவர்கள்
காணாமல் போகிறார்கள்

தவறாகப் பற்றுகிறவர்கள் தடுமாறிப் போகி றார்கள்.

சரியாகப் பற்றுகிறவர்கள் கரையேறி விடுகிறார்கள்.

இந்த கதையை சொன்னவர் மறைந்த பிரபல பேச்சாளர் "இன்று ஒரு தகவல்" புகழ் தென்கச்சி கோ சுவாமிநாதன் அவர்கள்.

இதில் நான் சொல்ல வரும் கருத்து என்னவென்றால்....

ஒவ்வொரு தேர்தலிலும் நாயின் வாலை பற்றிக் கொண்டிருந்த நாம், இந்த முறை கரடியின் வாலை பற்றியாகிவிட்டது! முடிவு கரடியின் கையில்!!

Tuesday 20 October 2015

ஒரு முகநூலனாக சுய பரிசோதனை!

என்னடா நீ என்ன பெரிய அறிஞனா, சமூக சிந்தனையாளனா, இல்லை போராளியா சுய பரிசோதனை செய்து கொள்ள, என திட்ட ஆரம்பித்து விடாதீர்கள்! எனக்கும் என்னை திரும்பி பார்க்க வேன்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டதால் நிகழும் விபரீதமிது! வேறு வழியில்லை என் நட்பு வட்டத்திலிருப்பவர்கள் அனுபத்தே தீரவேண்டும்!! முகநூல் என்னை என்னவாக்கியிருக்கிறது, முகநூல் மூலமாக நான் மற்றவர்களை எந்த அளவிற்கு துன்பத்தில் ஆழ்த்தியிருக்கிறேன் என்பது குறித்த ஆய்வு இது!

 2010ல் முதன்முதலில் முகநூலுக்கு நான் வந்த பொழுது தொடர்பற்று போயிருந்த என் பள்ளி, கல்லுரி நண்பர்களை ஒருங்கிணைக்கலாமே என்ற எண்ணத்துடன் தான் வந்தேன். அதில் கிட்ட தட்ட நானும் என் நன்பர்களும் வெற்றி பெற்றுவிட்டோம். பின்னர் உறவினர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள ஆரம்பித்தேன். பின்பு வெளிநாடு வாழ் நன்பர்கள், உறவினர்கள் என நட்பு வட்டம் விரிய ஆரம்பித்தது. அதுவரை முகநூலையும் தொழிலையும் பிரித்து வைத்திருந்த காலக்கட்டத்தில் 2012ல் தொழில் ரீதியான நண்பர்களும் தொடர்பில் இணைய ஆரம்பித்தார்கள் (இப்போது முடிந்த வரை தொழில் ரீதியான நண்பர்களை இணைப்பதில்லை!). பின்னர் இவர்கள் மூலமாகவே மனமொத்த முகமறியா நண்பர்கள் இணைய ஆரம்பித்தார்கள்.

2013 வாக்கில் என் சமுதாயம் சம்பந்தமான தேடல்களை தொடங்கினேன்.... அது என் முகநூலிலும் சரி... என் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி... ஒரு திருப்புமுனையாகவே அமைந்தது. நான் படித்த மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி ஆகியவை என் சமுதாய பள்ளி என்பதால், என்னை அறியாமலேயே என் சமுதாயம் சார்ந்த சிந்தனை எனக்குள் இருந்தது. மதுரையில் என் கல்லூரி காலகட்டத்தில் என் சமுதாயம் சார்ந்த இளம் தலைவர் மீது இருந்த ஈர்ப்பு காரணமாக சமுதாய பணிகளில் ஈடுபட்டிருந்த காரணமாகவும் இருக்கலாம்! முகநூலின் சமுதாய குழுக்களில் இணைய ஆரம்பித்த பிறகு என் நட்பு வட்டம் விரிய ஆரம்பித்தது. இணைந்த நன்பர்கள் அனைவரும் மிகவும் அருமையான நண்பர்களே. புதிய தொடர்புகள் மனதளவில் நல்ல மாற்றத்தை குடுத்தன. கொஞ்சம் கொஞ்சமாக 2014 வருட முடிவுக்குள் பல நல்ல சகோதரர்களையும், நல்ல சகோதரிகளையும் அடையாளம் கண்டு கொண்டேன். பலரை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் ஏற்பட்டது. நண்பர்கள் பலர் நல்ல உறவுகளாக மாறிய அருமையான காலக்ட்டம் அது.

பின்னர் தமிழார்வலர்கள், மொழி ஆய்வர்கள், சமூக சிந்தனையாளர்கள் என பல அறிஞர்களது நட்பு கிடைக்க ஆரம்பித்த பின் எனது சமூகம் மற்றும் சமுதாயம் குறித்த சிந்தனைகளும் மாறத் தொடங்கின. என்னை நானே ஆய்வுக்கு உட்படுத்த தொடங்கிய காலக்கட்டம் இது. அது வரை தற்குறி போல் பதிவு போட்டுக் கொண்டிருந்த நான் சிறிது மாற ஆரம்பித்தேன். எனக்கு பெருந்தலைவர் மீதுள்ள பக்தி காரணமாக அவர் குறித்தும், என் சிறு வயது அனுபவங்கள், என் ஊர் பற்றிய தகவல்கள் போன்றவற்றையும் பதிவிட ஆரம்பித்தேன். அதற்கு முன்னரே என் ஒன்று விட்ட அண்ண்ன் ஒருவர் எங்கள் பங்காளிகள் வட்டத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் கற்றவர்கள் மூலமாக எங்கள் மூதாதையர் மற்றும் குலதெய்வ வரலாறுகளை ஆய்வு செய்து புத்தகமாக வெளியிட்டிருந்தார். அதையும் எனக்கு ஓரு உந்துதல் என கூறலாம். பெருந்தலைவர், ஈழத்தமிழர்கள், தமிழர்கள், தமிழ், என் சமுதாயம், சமூகம் என என் களம் விரிவடைந்தது. 

நான் போட்ட பதிவுகள் அனைத்துமே என் சுயமாய் திரட்டியவை என கூறி தம்பட்டம் அடித்துக் கொண்டால் நான் மனிதனே அல்ல! என் செவியும், கண்ணும் எப்போதும் திறந்தே இருக்கும். அவை எனக்கு அளித்த தீனியை நான் இங்கே பகிர்ந்தேன். எனக்கு வாய் கொஞ்சம் நீளம் தான் ஆனால் அதை விட என் கேட்கும் சக்தி கொஞ்சம் அதிகம் என்பேன்.

நாளை மீண்டும் சுய பரிசோதனை தொடரும்......

ஆறுமுகநேரி தாலுகா தந்தை தங்கவேல் நாடார்

தகவல்கள் திரட்டி அளித்த: காமராஜர் இரத்ததான கழகத்திற்கு என் மனமார்ந்த நன்றி.

இவர் தென்காசி ஆண்ட ஸ்ரீவல்லபமாற நாடான்
குடும்பத்தைச்சேர்ந்தவர்.
இவர்கள் குடும்பத்திற்கென்று ஸ்ரீவல்லபமாறன் மற்றும் உடையார் கதைப்பாடல் சுவடிகள் உள்ளன.


இரா.தவசிமுத்து நாடாரின் மகனாக தியாகி த.தங்கவேல் நாடார் 1903 இல் பிறந்தார். ஆறுமுகநேரி இந்து நடுநிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்புவரை பயின்ற இவர் இளமையில் கொழும்பில் இருந்த போது தென்னந் தோட்டத்தில் பணிபுரிந்த “வாடி“ எனப்பட்ட தொழிலாளர்களுக்காகத் தொழிற்சங்கம் அமைத்து தலைவரானார்.

ஆந்திரா ,சென்னை போன்ற பெரு நகரங்களில் வணிகம் செய்தார். பின்பு பிறந்த ஊருக்குத் திரும்பி வந்து நகை செய்துவிற்கும் ”காசுக் கடை” நடத்தி வந்தார். அந்நேரம் 1941-42 நகர காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக்கப்பட்டார். சுதந்திரப் போராட்டக் காலத்தில் மணம் ஆகி குழந்தைகளுடன் இருந்தவர். பிற போராட்ட வீரர்கள் அனைவரும் இவரைவிட மிக வயது குறைந்தவர்களாக இருந்தனர். எனவே சுதந்திரப் போராட்ட காலத்தில் வீரர்களுக்கு ஆலோசனை கூறுபவராகவும் பொருளுதவி செய்பவராகவும் இருந்தார்.

குலசேகரப்பட்டினம் லோன் துரை தாக்குதலின் போது தூக்கு மேடை இராஜகோபாலன் அவர்கள் வைத்திருந்த ரிவால்வர் இவர் வீட்டிலிருந்து பரிசோதித்து கொண்டு செல்லப்பட்டதாகும்.

சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதால் 3 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். நாடு விடுதலை ஆன பின்னரே விடுதலை செய்யப்பட்டார்.

உப்பு சத்தியாகிரகம், மெஞ்ஞானபுரம் தபால் அலுவலகத்தை தீவைத்து கொழுத்திய வழக்கு ஆகியவற்றில் பாதுகாப்பு கைதியாக திருச்செந்தூர்,
ஸ்ரீவைகுண்டம், கொக்கிரக்குளம் சிறைகளிலும், தஞ்சாவூர் கேம்ப் ஜெயில் மற்றும் வேலூர் சிறையிலும் தண்டணை அனுபவித்தார். அச்சமயம் பெருந்தலைவர் காமராஜரோடு சிறையிலிருந்தவர்களில் இவரும் ஒருவர்.

ஆறுமுகநேரியின் வளர்ச்சிகாக அனைத்துப் பணிகளிலும் தலைவர்களோடு தலைவராக இருந்து செயல்பட்டார். கா.ஆ.மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைபள்ளி, அரசு மருத்துவமனை ஆகியவை ஆறுமுகநேரியில் உருவாகப் பாடுபட்டவர்.

சுதந்திரப் போராட்டத்தால் தன்னுடைய வசதியான வாழ்க்கை, தொழில், ஆகியவற்றை இழந்தவர். ஆறுமுகநேரி தாலுகாவில் முதலாவதாக அனைத்து கிராமங்களுக்கும் சென்று காங்கிரஸ் கட்சியை அமைத்துத் தொண்டாற்றியதால்”தாலுகாவின் தந்தை” என்றும் சுருக்கமாக ”தானாத்தானா” என்றும் அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டார்.




ஆத்தூர் சோமநாதசுவாமி கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்ட தங்கவேல் நாடார் 17.10.1983 இல் காலமானார் .


இவர் வகித்த பொதுநலப் பொறுப்புகளுள் சில-

கிராம காங்கிரஸ் தலைவர் .
20 வருடக் காலம் தாலுகா காங்கிரஸ் கமிட்டித் தலைவர்.
தாலுகா விவசாயிகள் சங்கத் தலைவர்.
தாலுகா மகாத்மா நூற்பு இயக்கத் தலைவர் .
தாலுகா பூமிதான இயக்கம் முதல் தலைவர்.
காங்கிரஸ் தொழிற்சங்கம் டிசிடபுள்யூ தலைவர்.
திருச்செந்தூர் தாலுகா சுதந்திரப் போராட்டத் தியாகிகள் சங்கத் தலைவர்.
தாலுகா அரிசன சேவாச் சங்கம் செயலாளர் .


Thursday 15 October 2015

பெரியார் வழியா பெருந்தலைவர் வழி?!

ஐயா காமராஜரைப் பற்றிப் புகழ்ந்து பேசும்போது ஈ.வே.ரா வையும் ஏதோ நாட்டிற்கும் தமிழகத்துக்கும் தமிழ் மொழிக்கும் தொண்டு செய்தவரைப் போல ஆங்காங்கே பதிவிடுகிறார்கள். இந்த தமிழ்நாடு ஊழலுக்கும் லஞ்சத்துக்கும் அடிமையாகி போனதர்க்குக் காரணமே இவரது திராவிட இயக்கமே. இதன் வாரிசு தி மு க தான் வெற்றுக் கோசத்தை மக்களிடம் பேசி அவர்களைக் கவர்ந்து பெருந்தலைவரை கவிழ்த்து ஆட்சியைப் பிடித்து உலக மகா ஊழல்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஈ.வே.ரா வுக்கு எப்போதுமே தமிழர்கள் மீது நல்ல மரியாதை இருந்ததில்லை. பிராமனீயத்தை எதிர்ப்பதாகக் கதை அளந்துகொண்டு ராஜகோபால ஆச்சாரியுடன் கொஞ்சிக்குலவிக்கொண்டு காமராஜரை பதவியில் இருந்து இறக்க அடித்தலமிட்டவரே இந்த ஈ.வே.ரா தான். தயவு செய்து காமராஜரைப் புகழும்போது அவருடன் சேர்ந்து ஈ.வே.ராவையும் சேர்த்துப் புகழுவதை நிறுத்துங்கள்.

அதுமட்டுமல்ல இப்போது இருக்கும் காங்கிரஸ் கட்சி காமராஜரின் காங்கிரசல்ல. இது காமராஜரைக் கழட்டிவிட்ட இந்திரா கட்சி. இந்தக் கட்சிதான் காமராஜரை இழிவு படுத்திய தி மு க வோடு ஓரிரு சீட்டுக் ஒத்தூதும் கட்சி.

காமராஜர் அன்றைய சூழ்நிலையில் எவ்வளவு முன்னேற்றங்களைத் தமிழ் நாட்டில் ஏற்படுத்த முடியுமோ அவ்வளவையும் செய்தவர். "அரசியல் தொண்டால் தனது வாழ் நாளில் வெற்றி காண்பது அரிது, சிறைச் சாலையே பரிசு" என்று காங்கிரஸ் இருந்த நாட்களில் காங்கிரசில் சேர்ந்தவருள் ஒருவர் அவர். அது போன்றவரை இன்று எதிர்பார்க்க முடியாது. கருத்து, கொள்கை ரீதியாக உங்களுக்குப் பிடித்தவர்களுக்குள், லஞ்சம் வாங்காமல், குடும்பம்-சாதி நலன்களுக்காகப் பாடுபடாமல் அனைத்து மக்களுக்காகவும் உழைப்பவர்களைத் தேர்ந்து எடுக்க வேண்டும். சிலைகள் எழுப்புவது, மாலைகள் போடுவதால் பலனில்லை.

பனைவெல்லம், கருப்புகட்டி, கருப்பட்டி, உடன்குடி.... (பகுதி-2)

சென்ற பகுதியில் உடன்குடி என்னும் ஊரை பற்றியும், பனை மரத்தினை பற்றியும், கள் பற்றியும் மிக விரிவாக பார்த்து இருந்தோம், இந்த பகுதியில் அதை எப்படி கருப்பட்டி ஆக்குகின்றனர் என்று பார்ப்போம். கருப்பட்டி தயாரிப்பவர்கள் இன்று கிராமத்தில்தான் இருக்கின்றார்கள் என்று நமக்கு தெரியும், ஆனால் அந்த கிராமத்திலேயே மிக மிக தொலைவில்தான் இது செய்யப்படுகிறது என்றால் அது எப்படிப்பட்ட முள் காடாக இருக்க வேண்டும் என்று நினைத்து பாருங்கள்..... 


நாம் பெரிய குடங்களில் மட்டுமே பதநீரை பார்த்து இருப்போம், பொதுவாக கிராமத்திலும் நகரத்தில் எப்போதாவதும் பதநீர் பதநீர் என்று கூவிக்கொண்டு வருபவர்களை காணும்போது பதநீர் என்பது இவ்வளவுதான் என்று தோன்றும், ஆனால் கருப்பட்டி செய்யுமிடத்தில் பதநீரை தொட்டி தொட்டியாக காணலாம். ஒரு பனை மரத்தில் நாள் ஒன்றுக்கு 6 லிட்டர் வரை பதநீர் கிடைக்கும். 18 லிட்டர் பனை பதநீரை காய்ச்சினால் தான் 10 கிலோ கருப்பட்டி வெல்லம் கிடைக்கும். அதிகாலையிலேயே மரத்தில் ஏறி பதநீரை சட்டி சட்டியாக இறக்கி அதை கொண்டு வந்து இங்கு கொடுத்து காசு வாங்கி கொள்கின்றனர். பதநீரை காய்ச்சும் அந்த அடுப்பு என்பது மிகவும் வித்யாசயமாக இருக்கும், நின்று கொண்டு காய்ச்சும் வண்ணம் இந்த அடுப்பு தரையில் இருந்து பள்ளம் தோண்டி வைத்து இருப்பர், அதனில் இருந்து ஒரு சுரங்கம் போன்று அமைத்து தூரத்தில் முடியும், அங்கு இருந்துதான் விறகும், தேங்காய் மட்டைகளும், பனைமர இலைகளும் கொண்டு நெருப்பு மூட்டுவார்கள். பதநீரை ஒரு சிறிய டம்பளரில் மட்டுமே குடித்து பழகிய நமக்கு அங்கு குடம் குடமாய் அள்ளி ஒரு பெரிய வாணலியில் ஊற்றுவது கண்டால் ஆச்சர்யமாகவே இருக்கும்!


ஒரு பெரிய கரண்டி கொண்டு அந்த வாணலியில் கிண்ட, அந்த பதநீர் பிரவுன் நிறமாக மாறி பின்னர் கெட்டியாக ஆக ஆரம்பிக்கும். அதை சரியான பதம் பார்த்து ஒரு கட்டத்தில் தீயை அணைப்பாரகள். பி்ன்னர் தரையில் தண்ணீர் தெளித்து, அதன் மீது இப்போது ஒரு பருத்தி சேலையினை தண்ணீரில் பிழிந்து விரிப்பார்கள். பின்னர் வரிசையாக கொட்டாங்குச்சியை அடுக்கி வைப்பார்கள். இப்போது ஒரு சிறிய ஜக்கில் சிறிது ஆறி இருந்த காய்ச்சிய பதநீரை எடுத்து வந்து இந்த கொட்டாங்குச்சிகளில் ஊற்றுவார்கள். கொஞ்சம் கூட கூடுதல் குறைச்சல் இல்லாமல் ஒரே அளவில் அந்த கொட்டாங்குச்சிகளில் ஊற்ற வேண்டும்! இப்படி ஊற்றப்பட்ட பதநீரை சுமார் மூன்று மணி நேரம் வரை காய வைத்து, அந்த கொட்டாங்குச்சியை எடுத்து டக்கென்று தட்டினால் கருப்பட்டி ரெடி !!


புகையிலையை பதப்படுத்தி காய வைக்க பனைக் கருப்பட்டி அவசியம். மேலும் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்து தயாரிப்புக்காக அதிகளவில் கருப்பட்டி அனுப்பப்படுகிறது. இவ்வளவு சிரமம் கொண்டு கருப்பட்டியின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்ளுவோமே...


கருப்பட்டியில் சுண்ணாம்பைக் கலந்து சாப்பிட்டால் உடல் சுத்தம் அடையும்.கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும். மேனி பளபளப்பு பெறும். கரும்பு சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டியைப் பயன்படுத்தினால் பற்களும், எலும்புகளும் உறுதியாகும்.குழந்தைகள் முதல் பெரியவர் வரை இதைச் சாப்பிடலாம். நமக்குத் தேவையான கால்சியம் இதில் கிடைக்கிறது. சுக்கு கருப்பட்டி பெண்களின் கர்ப்பப்பைக்கு மிகவும் ஏற்றது. சுக்கு, மிளகு கலந்து கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும். 


அடுத்த முறை உடன்குடி வழியாக சென்றால் இந்த ஊரின் சிறப்புமிக்க கருப்பட்டியை வாங்கி வாருங்கள், அப்படியே இந்த ஊரின் ஸ்பெஷல் கருப்பட்டி காபியையும் குடித்து வாருங்கள் !!

Wednesday 14 October 2015

பனைவெல்லம், கருப்புக்கட்டி, கருப்பட்டி, உடன்குடி....

இன்றைய காலகட்டங்களில் கருப்பட்டி என்று சொன்னாலே ஐயே என்று முகம் சுளிக்கும்படி ஆகிவிட்டது எனலாம்! ஆனால் இன்றும் தென்மாவட்டங்களில் கருப்பட்டி என்பதை ஒரு மருத்துவ பொருளாகவும், சர்க்கரைக்கு மாற்றாகவும் பயன்படுத்துகின்றனர் என்பதை காண முடிந்தது. நகரத்தில் பிறந்து வளர்ந்து பனை மரம் பார்க்காமல் வளர்ந்த இந்த தலைமுறைக்கு பனை மரம் என்பதன் ஒவ்வொரு அங்குலமும் பயன் கொடுக்ககூடியது என்பது தெரியுமா ? கருப்பட்டிஊ்பதின் மருத்துவ குணங்கள் தெரியுமா ? ஒரு பனை மரம் சுனாமியையும் தாங்ககூடிய வலிமை உடையது என்பது தெரியுமா ? நமது தமிழ் எழுத்துக்களும், காப்பியங்களும் பனை ஓலையில் எழுதப்பட்டது என்பது தெரியுமா ? கருப்பட்டி உடம்புக்கு எவ்வளவு நல்லது என்பது தெரியுமா ? ஒவ்வொரு விஷயமும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்...... கருப்பட்டியில் பிரபலமான ஊர் ஒன்று உண்டே...... ஆங்...... உடன்குடி!

உடன்குடி 
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில்அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒருபேரூராட்சி ஆகும். உடன்குடி என்ற சொல் இரண்டு தமிழ் வார்த்தைகளில் இருந்து உருவானது.'உடை'என்பது இந்த ஊரைச் சுற்றி உடை மரங்கள் இருந்தன. 'குடி' என்பது கிராமம் அல்லது மக்கள் கூட்டம்.இந்த இரண்டு வார்த்தைகளும் சேர்ந்து 'உடன்குடி' என்றானது. தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும்கருப்பட்டிகளில் உடன்குடி பகுதிக் கருப்பட்டி சுத்தம் மற்றும் சுவைக்குச் சிறப்புப் பெயர் பெற்றதாகும். இது திருசெந்தூரில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு கிராமம். திருசெந்தூரில் இருந்து இரு பக்கமும் பனை மரங்கள் அடர்ந்த ரோட்டில் பயணம் செய்தால் வரும் இந்த ஊர், மிகவும் அமைதியான ஊர் எனலாம் !

நம் தமிழ் நாட்டின் மாநில மரம் எது தெரியுமா ? பனை! பனை (Palmyra Palm),புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப்பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதைப் போரசசு (borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப்பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன.

பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்க படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையா. இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 - 40 வரையான விசிறி வடிவ ஓலைகள்வட்டமாக அமைந்திருக்கும். பொது வழக்கில் மரம் என்று தமிழில்வழங்கப்படினும், இது மர வகையைச் சார்ந்தது அல்ல. தற்காலத் தாவரவியல் அடிப்படையில் மட்டுமன்றித் தமிழ் இலக்கண மரபுகளின்படியும் பனையை மரம் என்பது தவறு. கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமம் (Kadhi and Village Industry Commission) எடுத்த கணக்கெடுக்கின்படி 10.2 கோடி பனை மரங்கள் இந்தியாவில் உள்ளன. தமிழ் நாட்டில் மட்டும் 5 கோடி பனை மரங்கள் உள்ளன. இவற்றுள் 50 விழுக்காடு மரங்கள் நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் அடர்ந்துள்ளன. சேலம், சென்னை, செங்கற்பட்டு, சிவகங்கை மாவட்டங்களில் அதிகமான அளவு நிறைந்துள்ளன. பிற மாவட்டங்களில் உள்ள மரங்களின் எண்ணிக்கை 30 லட்சத்திற்கும் குறைவானதே. பனந்தும்பு, தூரிகைகள், கழிகள், பனையோலைப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள், மரம், மரப் பொருள்கள் ஆகியன பனையிலிருந்து பெறப்படும் உணவிலிப் பொருள்களாகும். கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமக் கணக்கின்படி ஒரு பனை மரமானது ஓராண்டில் 150 லிட்டர் பதநீர், 1 கிலோ தும்பு, 1.5 கிலோ ஈர்க்கு, 8 ஓலைகள், 16 நார் முடிகள் ஆகியவற்றை நல்கும் வளவாய்ப்புடையது. மேலும் ஒரு பனை மரத்திலிருந்து 24 கிலோ பனை வெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்கள் ஆகியவற்றைப் பெறமுடியும் எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது.

சர்க்கரை பல தாவரங்களில் இருந்து எடுக்கப்படுகிறது அதில் கரும்பு, பனை, தென்னை முக்கியமானவை.  சர்க்கரையை கரும்பினால் செய்கின்றோம், வெல்லம் என்பதில் இரு வகை உண்டு..... கரும்பு வெல்லம், பனை வெல்லம் ! கருப்பட்டி என்பது பனையில் செய்யப்படும் ஒரு இனிப்பு. இதில் பனை வெல்லம் என்பதை கருப்பட்டி என்கிறோம் ! கருப்பக்கட்டி அல்லது கருப்பட்டி, பனை அட்டு என்பதால்பனாட்டு என்றும் வழங்கப்பட்டது. கருப்புக்கட்டி என்றால் கரும்பில் இருந்து எடுக்கப்பட்டது என்றும் பொருள்படும்.கரும்பஞ்சாறு எப்படி கருப்பஞ்சாறுஆனதோ, அது போல. இன்றுகருப்புக்கட்டி அல்லது கருப்பட்டி என்பது பனங் கருப்பட்டி, தென்னங் கருப்பட்டி மற்றும் ஈச்சங் கருப்பட்டியைக் குறிக்கிறது. 

பனைமரம் உணவு மற்றும் உணவிலிப் பொருள்களை நல்குகிறது. உணவுப் பொருள்களில் பதநீர் முதன்மையானது. இதுவே கருப்பட்டி, வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனம் மிட்டாய், பனங்கூழ் எனப் பல்வேறு உணவுப் பொருள்களாக வடிவம் பெறுகிறது. பனை மரத்துல நுங்கு பிஞ்சு உருவானதும், அதை நாறைக் கட்டி, வளர்ச்சியை கட்டுப்படுத்துவாக. பிஞ்சு ஓரத்தில் லேசாக கீறிவிட்டு, தினமும் மூன்று முறை மரம் ஏறி, அந்த பிஞ்சை அழுத்த, சொட்டுச் சொட்டாக மண்பானையில் பால்(கள்) இறங்கும். இப்படி ஒரு மரத்துல மூன்று மாதம் வரை பால் எடுக்கலாம். அந்த பாலில் சுண்ணாம்பு சேர்த்தால் பதநீர் ரெடி. சில இடங்களில் மண்பானை அடியில் சுண்ணாம்பை தடவி கட்டிவிட்டுடுவாங்க. இதனால மரத்திலிருந்து பானையை இருக்கும்போதே பதநீர் தயார். இதை லிட்டர் 10 ரூபாய்க்கு வாங்கி, 20 ரூபாய் வரை விற்கிறேன். இந்த பனைமர பதநீரைவிட, தென்னைமர பதநீர் போதை அதிகம் தரும். ஆனால் சுவையில் பனைமர பதநீரை மிஞ்சமுடியாது.இந்த பதநீரில் சோறு சமைக்கலாம்; பொங்கல் வைக்கலாம்; கொழுக்கட்டை தயாரிக்கலாம்; அவியல் அரிசி படைக்கலாம். யானை இறந்தால் ஆயிரம் பொன்னுனு சொல்லுவாங்க. பனை இருந்தாலும் ஆயிரம் பொன்தான். பிஞ்சிலிருந்து மரமாகி, கீழே விழும் வரை எல்லா வகையிலும் பயன்தரும் என்பது நிதர்சனம்.

இப்படி எடுக்கப்பட்ட பதநீரைதான் காய்ச்சி கருப்பட்டி செய்கின்றனர். அதில் என்னவெல்லாம் அடங்கி இருக்கிறது, எப்படி அப்படி ஒரு வடிவத்தில் செய்கிறார்கள், அதை எப்படி அனுப்புகின்றனர் என்றெல்லாம் அடுத்த பதிவில் பார்ப்போமா ?!