Sunday 30 November 2014

பெருந்தலைவர்-சாதிக்கு பலியாகி விடாதீர்கள்!

பெருந்தலைவர் காமராஜர் பேச்சிலிருந்து தொகுத்தது


1. ஏழைகள் மானம் மரியாதையுடன் வாழ்வதைப் பணத் திமிங்கிலங்கள் விரும்பவில்லை. ஏழைகள் என்றும் அமைகளாகவேதான் இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறவர்கள். ஏழை மக்கள் இந்தப் பணக்காரர்களைப் பற்றி கவலைப்படக் கூடாது.
2. நம்மை சாதிச் சண்டையில் திருப்பிவிடுகிறார்கள். என் ஜாதிக்காரர்களுக்கு மந்திரி பதவி வேண்டும் என்கிறார்கள். யார் மந்திரியாக இருப்பது என்பது பிரச்சினையல்ல. மக்களுக்கு யார் நல்லது செய்கிறார்கள் என்பதுதான் பிரச்சினை.
3. நான் கூட பத்தாண்டுகளாகப் பெரிய மந்திரியாக இருந்தேன். நான் மந்திரியாக இருந்ததற்காக நாடார்கள் எல்லாம், ‘நாடார் மந்திரியாக இருக்கிறார்; நாங்கள் எல்லாம் உழைக்கமாட்டோம்; உட்கார்ந்து கொண்டே சாப்பிடுவோம்’ என்று சொன்னால் முடியுமாண்ணேன்…
4. நான் மந்திரியாக இருந்தேன். எனக்கு அரசாங்கத்தில் வீடும் காரும் கொடுத்தார்கள். இதனால் மற்ற நாடார்களுக்கு என்ன லாபம்? ஆகையால் ஜாதியைச் சொல்லி ஏமாற்றுகிறவர்களிடம் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், பலியாகிவிடக் கூடாது.
5. “நான் தேர்தலில் தோல்வியடைந்தவன். என் மக்களை மீண்டும் சந்திக்கிறேன்? யார் தயவும் எனக்குத் தேவையில்லை. நான் மக்கள் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன். இதனால்தான் பணக்காரர்கள் என்னைத் தோற்கடித்தார்கள்.
6. யார் தாழ்த்தப்பட்டவர்?
அரிஜனங்கள் ஏன் தாழ்த்தப்பட்டவர் என்று புரியவில்லை!
தாழ்த்தப்பட்டவர்கள், உயர்ந்தோர்கள் என்று சமுதாயத்தில் இருக்கக் கூடாது என்றெண்ணித்தான் 21 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஓட்டுரிமை கொடுத்துள்ளோம்.
முன்பு ராஜா மகன்தான் ராஜா ஆக முடியும். அப்படிப்பட்ட ராஜாக்களை நாம் போகச் சொல்லிவிட்டோம். மக்களிடம் யாருக்கு செல்வாக்கு இருக்கிறதோ, அவர் மந்திரியாக வரத் தற்போது வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நான் மந்திரியாவது உங்கள் கையில்தான் இருக்கிறது.
7. ஏன் சமுதாயத்தில் சிலர் தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்படுகிறார்கள்? காரணம், அவர்கள் பொருளாதாரத் துறையில் பின்னடைந்திருப்பதுதான்.
பொருளாதாரத் துறையில் முன்னேற்றமடைந்த ஒருவர், தாழ்த்தப்பட்டவராக இருந்தபோதிலும் அவரிடம் வேலை செய்ய உயர்ந்தவர் என்று கூறிக் கொள்பவரும் தானாகவே வருகிறார்.
ஆகவே பொருளாதார முன்னேற்றம் அடைந்தால் தாழ்த்தப்பட்டவர் என்ற வார்த்தை தன்னாலேயே மறைந்து உயர்ந்தவர் என்றாகிவிடும்.
8. கல்வி வளர்ச்சி ஏற்பட்டுவிட்டால் ஜாதி வித்தியாசம் தன்னாலேயே அகன்றுவிடும். தாழ்த்தப்பட்ட ஒருவர் கலெக்டர் ஆகிவிட்டால் ‘நான் உயர்ந்த ஜாதி, ஆகையால் அவர் கீழ் வேலை செய்ய மாட்டேன்’ என்று யாரும் கூற முடியாது.
உயர்ந்த ஜாதி என்று கூறிக் கொள்பவன் தானாகவே கலெக்டர் உத்தரவுக்கு வேலை செய்கிறான். ஆகவே கல்வியே இந்த ஜாதிய கொடுமையைப் போக்க வழி வகுக்கும்.”

Saturday 29 November 2014

பெருந்தலைவர்-பள்ளிக்கூடம் திறந்தால் போதாது, பள்ளிக்கூடத்திற்கு நிலையான சொத்துக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

பள்ளிக்கூடம் திறந்தால் போதாது, பள்ளிக்கூடத்திற்கு நிலையான சொத்துக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். அதுதான் பள்ளிக்கூடம் தொடர்ந்து எவ்வித சிக்கலும் இல்லாமல் செயல்பட வழிவகுக்கும் என்பதை காமராஜர் உணர்ந்தார். இதனால் காமராஜர், சமுதாய பங்கேற்பை ஊக்குவிக்கும் மாநாடுகளை தமிழ்நாடு எங்கும் நடைபெற்றிட ஆணையிட்டார். அதன்பேரில் பள்ளிக்கூடங்களின் அடிப்படைத் தேவைகள் எவையென்று பட்டியல்கள் தயாரிக்கப்பட்டன. தொடக்கப் பள்ளிகளுக்கு ஒரு பட்டியல், உயர் தொடக்கப் பள்ளிகளுக்கு ஒரு பட்டியல், உயர்நிலைப் பள்ளிக்கூடங்களுக்கு ஒரு பட்டியல் என்று மூன்று பட்டியல்கள் உருவாயின. 

தொடக்கப் பள்ளிக்கூடங்களுக்கு, என்னென்ன வசதிகள் இல்லை என்பது கிராம மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. தேவைப்படும் வசதிகளை அளிக்குமாறு கிராம மக்கள் கேட்டுக் கொண்டார்கள். கரும்பலகைகள், மேஜைகள், நாற்காலிகள், கடிகாரங்கள் முதலியவற்றை கிராம மக்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கூடங்களுக்கு அளித்தார்கள். பல இடங்களில் பள்ளிக்கூடக் கட்டிடங்களை விரிவுபடுத்திப் புதியதாக அறைகளை அமைக்கவும் மக்கள் தயாராக முன்வந்தனர். இந்த அனுபவத்தின் அடிப்படையில் பள்ளிக்கூடங்களின் மேம்பாட்டிற்காக விரிவான மக்கள் இயக்கமாக ஆக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. 


பள்ளிக்கூட வளர்ச்சி மாநாடு
பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்களின் கூட்டம் நடத்தப்பட்ட போது, யாராவது ஒரு கிராமப் பிரமுகர் கூட்டத்திற்கு தலைமை வகிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். மாவட்ட அளவில் பள்ளிக்கூட வளர்ச்சி மாநாடுகள் நடத்தப்பெற்றன. அவற்றில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு கரும்பலகைகள், மேஜைகள், நாற்காலிகள் மற்றும் மதிய உணவுத் திட்டத்திற்குத் தேவையான பொருள்கள் முதலியவற்றை நன்கொடையாக அளித்தார்கள். பள்ளிக்கூடக் கட்டிடங்களுக்கு புதியதாக வெள்ளையடிக்கவும், கட்டிடங்களை பராமரிக்கும் பணியை மேற்கொள்ளவும் சிலர் முன்வந்தார்கள். இந்த இயக்கம் தொடக்கப்பள்ளிக் கூடங்களுக்கு மட்டுமின்றி, உயர்நிலைப் பள்ளிக்கூடங்களுக்காகவும் நடத்தப்பட்டது. கோடிக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள நன்கொடைகள் இந்த இயக்கத்தின் மூலம் குவிந்தன. பள்ளி மாணவர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது சாத்தியமாயிற்று.'' 28.07.1958 அன்று திசையன்விளை மாநாட்டில் முதல் அமைச்சர் கலந்து கொண்டார். 



பிரதமர் வியந்த திட்டங்கள்


இந்த மாநாட்டில் 102 பள்ளிகள் பங்கேற்றன. மாநாட்டில் முன் வைக்கப்பட்ட திட்டங்களின் மதிப்பு ரூபாய் 1,38,000 ஆகும். மாநாடு மூலம் பெறப்பட்ட பொருட்கள் நிதிகளின் மொத்த மதிப்பு ரூபாய் 1,36,000 ஆகும். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு முதலமைச்சர் காமராஜர் கூறினார். `இவற்றையெல்லாம் மக்கள் வெற்றிகரமாக நடத்துவதற்கு காரணமென்ன? இது பொது மக்கள் சக்திக்கு உட்பட்டது. இவை, அவர்களுக்கு சுமை அல்ல!'' இத்தகைய ஒரு மாநாடு 22.11.1958 அன்று செங்கல்பட்டு நகரத்தில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் இந்திய கல்வி அமைச்சர் திரு.கே.சி.பந்த் கலந்து கொண்டார். 826 பள்ளிகள் பங்கேற்ற இம்மாநாட்டில் ரூபாய் 23 லட்சத்துக்கு திட்டங்கள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. அம்மாநாட்டில் திரு.கே.சி.பந்த் உரையாற்றும் போது, ``பிற மாநிலங்களில் முளைக்காத, நல்ல மேம்பாட்டுத் திட்டங்கள், சென்னை மாகாணத்தில் மட்டும் பயிராவது வியப்பானது என்று கூறினார். கூறியது மட்டுமல்ல, டெல்லி சென்றவுடன், பிரதமர் நேருவிடம் இம்மாநாடுகளைப் பற்றி வியந்து கூறியுள்ளார். அதன் பயனாக, 15.01.1959 அன்று காரைக்குடிக்கு அருகில் உள்ள ஆ.தெக்கூரில் நடைபெற்ற பள்ளி சீரமைப்பு மாநாட்டில் பிரதமர் நேரு கலந்து கொண்டார். 

கல்விக் கண் திறந்தவர்

அடுத்த நாள் திருநெல்வேலி கல்வி மாவட்டத்தை சேர்ந்த பள்ளிகள் பங்கேற்ற அடைக்கலாம்புர மாநாட்டிலும் பிரதமர் நேரு கலந்து கொண்டார். பிரதமர் நேரு, பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் இரண்டில் கலந்து கொண்டது இத்தகைய மாநாடுகள் மீது நாட்டு மக்கள் கவனத்தை ஈர்த்தது. 

இதனைத் தொடர்ந்து, கல்வி மேம்பாட்டு திட்டங்களில் தமிழகத்தின் வழியில் செயல்படுமாறு அனைத்து மாநில முதல் அமைச்சர்களுக்கும் பிரதமர் நேரு கடிதம் எழுதினார். மொத்தமாக 167 பள்ளி சீரமைப்பு மாநாடுகள் 1963ஆம் ஆண்டு வரை நடைபெற்றன. இந்த மாநாடுகள் மூலமாக 7 லட்சம் மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன. 


பெரியார் ஆதரித்தது காமராஜர் ஆட்சியை மட்டுமே.


இந்த நாடு உருப்பட வேண்டுமானால் இன்னும் 10 ஆண்டுகளுக்காவது காமராஜரை விட்டுவிடாமல் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். அவரது ஆட்சி மூலம் சுகமடையுங்கள். 
காமராஜரை நாம் பயன்படுத்திக்கொள்ளத்தவறிவிட்டால் தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே, சிக்காது'' (18-7-1961 தேவகோட்டையில் பெரியார் பேச்சு) பின்னாலே ஆட்சி பீடத்தைக் கைப்பற்றிய அண்ணாதுரை படியேறி வந்தபோது பெரியார் பண்பின் காரணமாக வாழ்த்துக் கூறி அனுப்பினாரே தவிர ஆதரிக்கவில்லை. 

Friday 28 November 2014

பெருந்தலைவர் "நகரமைப்புக்காக வெளிநாட்டு பயணம் தேவையில்லை"

சின்ன வாய்ப்பு கிடைத்தால் போதும் சிங்கார நகரமாக்க வெளிநாட்டு பயணம் செல்ல பொழுதெல்லாம் ஒரு பயணப் பெட்டி தயாராய் வைத்திருப்பர் அரசியல்வாதிகள் இன்று. பிரதமர் ஆகி இன்னும் உள்நாட்டிலேயே சுற்றுப்பயணம் செய்ய நேரமில்லாமல் வெளிநாடு செல்லும் பிரதமர்களையும் பார்க்கின்றோம் நாம். பெண் ஜனாதிபதி ஒருவரோ பொழுதெல்லாம் வெளிநாட்டு பயணத்தில் இருந்துவிட்டு அவ்வப்பொழுது நம் நாட்டுக்கு வந்து சென்ற கூத்தையும் கண்டிருக்கிறோம் நாம். ஆனால் வெளிநாடு செல்ல மடியில் விழுந்த பழம் போல் வாய்ப்பு கிடைத்தும் பிழைக்கத் தெரியாத எங்கள் கல்விக் கண் திறந்த ஐயனை என்னவென்று சொல்வேன்!!


காமராஜர் முதல்வராக இருந்த போது, சென்னையின் புறநகர்ப் பகுதிகளில், மேல்நாடுகளைப் போல் குட்டி நகரங்களை (சாட்டிலைட் சிட்டி) அமைக்க, நகர அபிவிருத்திக் கழக அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக ஒரு குழுவினர் வெளிநாடு சென்று, அங்குள்ள நகரமைப்பு முறைகளை பார்த்து வரலாம் என முடிவானது. இதற்கு துறை அமைச்சரும் ஒப்புதல் கொடுத்துவிட்டார்.
அடுத்ததாய், முதல்வர் காமராஜர் ஒப்புதல் கொடுத்தால், விமானப் பயணம் போக அதிகாரிகள் தயாராய் இருந்தனர்.




 இந்த நிலையில், ஒப்புதலுக்காக முதல்வர் காமராஜரிடம், கோப்பு சென்றது. அதைப் படித்துப் பார்த்தார் காமராஜர். "மக்கள் கொடுத்த வரிப் பணத்தில் இந்த உலகச் சுற்றுலா தேவை தானா' என்று அவருக்குள் கேள்வி எழுந்தது.இந்த சிந்தனையின் போது, அவரது மனதில் மதுரை நகரத்தின் வடிவமைப்பு தோன்றியது. மதுரையின் மையப் பகுதியில் மீனாட்சியம்மன் கோவில்; சுற்றிலும் தேரோடும் ரத வீதிகள்; அடுத்த சுற்றில் அளவெடுத்து வைத்தார் போல், நான்கு மாட வீதிகள்; அதற்கடுத்து வீதிகள்; இடையில் இவைகளை இணைக்கும் சாலைகள்.



"அந்தக் காலத்திலேயே, எவ்வளவு தொலைநோக்கோடு நம் முன்னோர் நகரை வடிவமைத்திருக்கின்றனர். இந்த அமைப்புக்கு மேல், நகரமைப்பு திட்டமிட என்ன இருக்கிறது' என்று நினைத்த காமராஜர், அதையே, கோப்பில் குறிப்பாக எழுதினார்."நகரமைப்புக்காக வெளிநாட்டு பயணம் தேவையில்லை. எக்காலத்திற்கும் ஏற்றார்போல் அமைக்கப்பட்டிருக்கும், நம் மதுரை நகருக்குச் சென்று, ஆய்வு செய்து வாருங்கள்' என்று குறிப்பெழுதி, வெளிநாட்டு பயணத்துக்கு தடைபோட்டு, மக்கள் வரிப்பணத்தை காத்தார் காமராஜர்.

பெருந்தலைவரின் பெருந்தண்மை எளிமை கோபம் துடிப்பு செல்வாக்கு சாதனை


அன்று அரசு நடந்த முறையையும், இன்று அரசுகள் நடக்கும் முறையையும் ஒப்பிட்டுப் பார்க்க ஓர் உதாரணம். சென்னையில், ரிசர்வ் வங்கி கட்டடத்தின் எதிரில், சுரங்கப்பாதை கட்டியிருக்கிறார்களே, அது பற்றிய செய்தி இது. அந்த, "சப்வே' கட்டுவதன் செலவின் ஒரு பகுதியை மத்திய அரசும், ஒரு பகுதியை மாநில அரசும் ஏற்க வேண்டும் என்று ஏற்பாடு.


அந்த, "சப்வே'யை எப்படி கட்டுவது, அதன் செலவுகள் என்ன, மத்திய, மாநில அரசுகள் அதை எப்படி பங்கீடு செய்து கொள்வது, "சப்வே' கட்டுவதில் என்ன விதமான இன்னல்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கக்கூடும், அவற்றை எப்படி தவிர்ப்பது போன்ற பல பிரச்னைகளைப் பேசித் தீர்ப்பதற்காக, சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.


கூட்டத்தில், மத்திய அரசின் சார்பாக, ரயில்வே அமைச்சர் கலந்து கொண்டார். தமிழக அரசின் சார்பில் காமராஜர் கலந்து கொண்டார். மத்திய - மாநில அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். "சப்வே' திட்டத்தின், "டெக்னிக்கல்' விவரங்களை எடுத்துச் சொல்வது என் சித்தப்பாவின் பொறுப்பாகிறது.
அவர் பேச ஆரம்பித்தார். காமராஜருக்கு ஆங்கிலம், புரியுமோ, புரியாதோ என்ற சந்தேகத்தில் அவர் தமிழில் பேச ஆரம்பித்து, "டெக்னிக்கல்' விவரங்களைத் தமிழில் சரியாக விளக்க முடியாமல் திணற ஆரம்பித்தார்.
அவரைப் பார்த்து, "எனக்கு புரியுமோ, புரியாதோன்னு தானே தமிழில் பேச முயற்சி பண்றீங்க? பரவாயில்லை. இங்கிலீஷிலேயே பேசுங்க. எங்கேயாவது ஒண்ணு, ரெண்டு பாயின்ட் புரியலேன்னா, நான் உங்களைக் கேட்டுக்கிறேன்...' என்று கூறியிருக்கிறார் காமராஜர். அதன் பிறகு என்னுடைய சித்தப்பா, "சப்வே' திட்டத்தை விவரித்துள்ளார்.


ஏதோ ஓரிடத்தில் அவரது பேச்சை நிறுத்தி, விளக்கம் கேட்டிருக்கிறார் காமராஜர். இதன் பிறகு விவாதம் ஆரம்பித்திருக்கிறது.
மத்திய அரசின் பிரதிநிதியாக வந்திருந்த மந்திரி, "இந்த, "சப்வே' கட்டுவதற்கு செலவு அதிகமாகும். எனவே, இதை இப்போது கட்ட முடியாது...' என்று பேசியிருக்கிறார். காமராஜருக்கு மிகுந்த கோபம் வந்துவிட்டது. எழுந்தார்.
மத்திய மந்திரியை வெறித்துப் பார்த்து, "உட்காருய்யா; கட்ட முடியாதுன்னு சொல்லவா கான்பிரன்ஸ் போட்டோம்? எப்படி கட்டி முடிக்கிறதுன்னு தீர்மானம் செய்யத் தான் இந்த மீட்டிங்; ஏன் கட்ட முடியாதுன்னு காரணம் காட்டற மீட்டிங் இல்லை இது. "முடியாது, முடியாது'ன்னு சொல்லவா மந்திரியானீங்க, நீங்க? மந்திரின்னா, எப்படி செய்து முடிக்க முடியும்ன்னு வழி தேடறவன்; முடியாதுன்னு சொல்றவன் இல்லை. "முடியாதுன்னு சொல்லவா டில்லியிலேருந்து இங்கே வந்தீங்க? அங்கேயிருந்தே சொல்லியிருக்கலாமே! முடியாதாம்... முடியாது! இதுக்கா ஜனங்க ஓட்டுப் போட்டாங்க. நீ பேசாம உட்காரு; நான் பிரைம் மினிஸ்ட்டர்கிட்டே பேசிக்கிறேன்; "சப்வே' கட்டறோம்; அதான் முடிவு. எப்படின்னு டிஸ்கஸ் பண்ணி, விவரங்களை எடுத்துக்கிட்டு என்னை வந்து பாருங்க...' என்று கூறிச் சென்றார் காமராஜர். "சப்வே' கட்டப்பட்டது.


பெருந்தன்மை.
இந்த நிகழ்ச்சியைப் பற்றி அறிந்த நான், காமராஜரின் செயல் ஆர்வத்தைக் கண்டு வியந்தேன். அவருக்கு ஆங்கிலம் தெரியாது என்று நினைத்துப் பேச ஆரம்பித்த அதிகாரியைக் கோபிக்கவில்லை. அவருக்கு நம்பிக்கை அளித்து, பேச ஊக்குவித்தார் - அது ஐயாவின் பெருந்தன்மை.



போலித்தனம் கலக்காத எளிமை 
தனக்குப் புரியாத இடத்தில் புரிந்தது போல நடிக்கவில்லை. அர்த்தமும், விளக்கமும் கேட்டுப் புரிந்து கொண்டிருக்கிறார். அது அவரது போலித்தனம் கலக்காத எளிமை.



செயல் ஆர்வம் அற்றவர்கள் மீது பீறிட்டெழும் கோபம்.
முட்டுக்கட்டை போட முனைந்த மத்திய மந்திரியைத் தூக்கி எறிந்து பேசியிருக்கிறார் . செயலார்வம் அற்றவர் மீது அவருக்கு இருந்த கோபம்.


திட்டங்களை நிறைவேற்றுவதில் துடிப்பு.
"சப்வே கட்டுகிறோம். தீர்மானம் செய்து திட்டங்களை முடித்து வைக்கத்தான் ஜனங்க ஓட்டுப் போட்டிருக்கின்றனர்!' என்று ஆவேசமாகப் பேசியிருக்கிறார் - மக்களுக்குப் பயன்படும் திட்டங்களை நிறைவேற்றுவதில் துடிப்பு.


தன்னம்பிக்கை, அரசியல் செல்வாக்கு
"பிரைம் மினிஸ்டரிடம் நான் பேசிக்கிறேன்!' என்று கூறியிருக்கிறார் - அது அவரது தன்னம்பிக்கை, அரசியல் செல்வாக்கு.


சாதனை.
"சப்வே' கட்டி முடிக்கப்பட்டது - அது அவரது சாதனை. 

இப்படி இந்த ஒரு நிகழ்ச்சியில் அவரது பல குணாதிசயங்கள், பல கோணங்களில் வெளிப்பட்டு, அவர் எவ்வளவு மதிப்புக்குரியவர் என்று நினைத்துப் பார்த்து உணர்ந்து கொள்ள எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு மனிதன் எவ்வளவு காலம் வாழ்ந்தான் என்பது முக்கியமல்ல; எப்படி வாழ்ந்தான் என்பது தான் முக்கியம். காமராஜர் வாழ்ந்த விதத்தை ஆழ்ந்து நினைத்துப் பார்க்க நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

"துக்ளக்' இதழில் (1976), "சோ' எழுதியது: என் சித்தப்பா தென்னிந்திய ரயில்வேயில் ஓர் உயர்ந்த பதவியில் இருந்தார். அவர் விவரித்த நிகழ்ச்சி இது:

Wednesday 26 November 2014

காமராஜர் போன்ற வெகு சில ஆட்சியாளர்களை மட்டுமே மக்கள் எளிதில் சந்திக்க முடிந்தது.

எளிமையான முதல்வர்
தெக்கன் திருவிதாங்கூர் என்னும் இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் கேரளத்திலிருந்து பிரிந்து தமிழகத்துடன் இணைந்த புதிது. காமராஜர்தான் அப்போது தமிழக முதலமைச்சர். புதிய மாவட்டத்தின் மக்களிடம் நேரடியாகச் சென்று குறைகள் கேட்டார். காமராஜரை யார் வேண்டுமானாலும் நேரடியாகச் சந்திக்கலாம் என்ற செய்திகூட நாளிதழில் வந்தது. திருவிதாங்கூர் அரசருக்குக் கீழே பணியாற்றிய அதிகாரிகளுக்கு இது புதிய அனுபவம்.
காமராஜர் கரடுமுரடான சாலைகளில் செல்லத் தோதான வருவாய்த் துறை ஜீப்பில் வந்தார். முக்கிய சாலையில் ஜீப்பை நிறுத்திவிட்டு நடந்துவந்த சமயம்தான் எங்கள் ஆரம்பப் பள்ளிக்கூடத்தைப் பார்த்தார். 19-ம் நூற்றாண்டுக் கட்டிடம். ஆசிரியர்கள் முன்னே நிற்க, மாணவர்கள் கூடி நின்றோம். திட்டமிடப்படாத வரவேற்பு. யாரும் தடுக்கவில்லை. போலீஸ் கெடுபிடி இல்லை.
எங்களைப் பார்த்ததும் முதலமைச்சர் நின்றார். அவருடன் மிகக் குறைவான போலீஸார்; இரண்டோ மூன்றோ அதிகாரிகள்; அமைச்சர் கக்கனும் மாவட்ட ஆட்சியர் அம்பா சங்கரும் இருந்தனர். யாரும் யாரையும் விலக்கவில்லை. போலீஸ் அதிகாரிகூட அவருக்குப் பாதுகாப்பாக முன்னே வரவில்லை. மூத்த ஆசிரியர் கதர் நூல் மாலையைக் காமராஜர் கழுத்தில் போட்டார். அவர் அதற்கு வாகாகத் தலையைத் தாழ்த்திக்கொடுத்தார். ஆஜானு பாகுவான உருவம்; முழங்கால் வரை எட்டும் தொளதொள சட்டை; சாதாரண செருப்பு; பாதங்கள் தெரியும்படி கட்டப்பட்ட வேட்டி.



நல்லாப் படிக்கணும்
காமராஜர் எங்கள் அருகில் வந்தார். சுற்றிலும் பார்த்தார். நாங்கள் இரண்டு கைகளைக் கூப்பியபடி நின்றோம். கூட்டத்தில் கிழிந்த சட்டையுடன் கூடிய மாணவர்கள் நாலைந்து பேர் இருந்தனர். காமராஜர் ஒருவன் தலையைத் தடவிவிட்டார். “என்ன படிக்கிறே” என்றார். அவன் “மூணாப்பு” என்றான்.
எங்களைப் பார்த்துப் பொதுவாகச் சொன்னார்: “நல்லாப் படிக்கணும்; அப்பா, அம்மா சொன்னா கேக்கணும்; நல்ல பேரு வாங்கணும்; உழைச்சு முன்னுக்கு வரணும்.” ஒரு ஆசிரியர், காமராஜர் முன்னே தயங்கித் தயங்கி வந்து நின்றார். “என்ன விஷயம்?” என்று காமராஜர் கேட்டார். “இப்போ 30 குழந்தைகளுக்கு உச்ச நேரம் (நண்பகல்) கஞ்சி ஊத்துறோம். அது பத்தல்ல. 50 பேருக்குக் கஞ்சி ஊத்த திருமனசு தயவு பண்ணணும்” என்றார். பழக்கதோஷம்; ஆசிரியர் திருவிதாங்கூர் அரசரின் ஆட்சியிலும் இருந்தவர்; திவான் பேஷ்காரிடம் விண்ணப்பம் செய்யும் பாணியில் பேசினார். காம ராஜருக்கு அவரது பேச்சு முழுவதும் புரியவில்லை. என்றாலும் ஆசிரியருடன் பேசினார்; பக்கத்தில் நின்ற அதிகாரிகளுடன் பேசினார்.
இந்த நிகழ்ச்சி நடந்து 30 ஆண்டுகள் கழிந்து வகுப்பில் என் மாணவர்களிடம் அதைப் பற்றிச் சொன்னேன். மாணவர்கள் நம்பவில்லை; மாணவிகள் நமட்டுச் சிரிப்புடன் பார்த்தார்கள். ஒரு மாணவி “கேட்க நல்லா இருக்கு சார். உண்மையா நடந்ததா?” என்று கேட்டாள். இதுபோன்ற செய்திகள் இன்றைய தலைமுறையினருக்குக் கற்பனைதான்!

- அ.கா. பெருமாள், நாட்டுப்புறவியலாளர், 
‘சடங்கில் கரைந்த கலைகள்', ‘சிவாலய ஓட்டம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். 

Tuesday 25 November 2014

திரு.இதயம்’’V.R.முத்து நாடார்.

‘’இதயம்’’ தமிழர் அனைவருக்கும் துடிக்கும் மனித இதயத்திற்கு அடுத்து ஞாபகம் வருவது இதயம் நல்லெண்ணெய் என்றால் அதுவே நமது மண்ணின் மைந்தர் V.R.முத்து அவர்களின் வியாபார வெற்றி.
தொழில்அதிபராக, இலக்கியவாதியாக, தலை சிறந்த பேச்சாளராக, ரோட்டரி சங்க தன்னார்வ தொண்டராக, சமூக அக்கறை கொண்ட மனிதராக அறியப்படும் திரு.முத்து அவர்களின் வெற்றி சரித்திரத்தை விருதுநகர் டைம்சில் இருந்து உங்கள் பார்வைக்கு பரிமாறுகிறேன்.




பிறப்பும்,படிப்பும்.
விருதுநகர் பிரபல வணிகர் உயர்திரு . வி.வி.வி.ராஜேந்திரன் - ஜெகதாம்பாள் தம்பதியினருக்கு 1953 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி பிறந்தவர் .திரு. முத்து அவர்கள் தனது பள்ளிக்கல்வியை KVS பள்ளியிலும் , பட்ட படிப்பை திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பயின்றார். மும்பை எம்.எம்.கே வணிகக் கல்லூரியில் பி.காம் ஹானர்ஸ் படித்தார். பின் சென்னை பிரபல ஆடிட்டர் கே.வி. ராமசாமி அவர்களிடம் பயிற்சி பெற்றார் .
குடும்பம் .
1978 ஆம் ஆண்டு டாக்டர் திரு..எஸ். காசிராஜன்-மனோன்மணி தம்பதிகளின் புதல்வி மலர்விழி அவர்களை திருமணம் செய்து கொண்டார். திரு.முத்து -மலர்விழி தம்பதியினருக்கு திருமதி.பூவிதழ் B .E ,டாக்டர் .திருமதி .இளந்தளிர் MBBS .,D .Diab ஆகிய இரு மகள்களும் திரு.ராஜா விக்னேஷ் முத்து B .TECH ., M .BA ., ஆகிய மகனும் உள்ளனர். இவர் மீது எத்தகைய அன்பும் ,பாசமும் கொண்டிருந்தால் சமீபத்தில் இவரது அறுபதாம் கல்யாணத்தை விருதுநகர் பெருமக்கள் தாங்களே முன்வந்து பெருவிழாவாக கொண்டாடினார்கள் .முத்து அண்ணாச்சின் தமிழ் பற்றை இவர் பிள்ளைகளின் பெயரை கொண்டே நாம் அறியலாம்.



இதயம் உருவான வரலாறு.
1978 ஆம் ஆண்டு தங்கள் குடும்ப வணிக நிறுவனமான' ஆனந்தம் நல்லெண்ணெய்' வணிகத்தில் சேர்ந்தார்..1980 ஆம் ஆண்டு ஆனந்தம் நல்லெண்ணெய் ராமநாத புரம், மதுரை , திருநெல்வேலி ஆகிய மூன்று மாவட்டங்களிலும் சென்னை நகரிலும் மட்டுமே விற்பனை செய்து வந்தது .திரு. முத்து அவர்கள் தமிழகம் முழுவதும் தம் விற்ப்பனையை சந்தைப் படுத்த வேண்டும் என்ற முனைப்புடன் செயலாற்றி ஆறு ஆண்டுகளில் ஆனந்தம் நல்லெண்ணெய் விற்ப்பனையை ஆறு மடங்காக மாற்றினார்.1980 ல் இரண்டு கோடிக்கு ரூபாய்க்கு விற்பனை ஆன ஆனந்தம் நல்லெண்ணெய் 1986 ல் ரூபாய் பன்னிரண்டு கோடிக்கு விற்ப்பனையை எட்டியது.
குடும்ப வியாபார பகிர்வின் காரணமாக 1986 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி 'இதயம்' என்ற புதிய பிராண்ட் நல்லெண்ணெய் உதயமானது .முதலில் இவர்கள் தேர்தெடுத்தது “சக்தி நல்லெண்ணெய்’’ ஆனால் ஏற்கனவே இந்த பெயரில் ஒரு நிறுவனம் இயங்கிவந்த காரணத்தால் “இதயம்” என்று பெயர் இடப்பட்டது.முதன் முதலில் எண்ணைக்கு டி.வியில் விளம்பரம் செய்தது, ஜோதிகாவை இட்லியில் அரை லிட்டர் ஊற்றி சாப்பிட வைத்தது. சித்தர்கள் அருளிய ஆயில் புல்லிங் கான்செப்டை மீட்டு அதை சந்தை படுத்தியது என விளம்பரத்தின் மூலம் இதயத்தை எல்லோர் இதயங்களிலும் இடம் பெற வைத்தும் , ஆறு கோடி ரூபாய் விற்பனையில் ஆரம்பித்த இதயம் நிறுவனம் 27 ஆண்டுகளில் பல தயாரிப்புகளை நிர்வகித்து ஆண்டுக்கு 360 கோடி ரூபாய் விற்பனையை தொட்டதும் .
இதற்க்கு காரணமாக திரு. முத்து அவர்கள் கூறுவது,
இதயம் நல்லெண்ணெய்க்கு பின்னால் தன்னுடைய வெற்றிக்கு பின் மாறுபட்ட எண்ணம் மற்றும் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர். அவர்களின் பரிபூரண இதய நாட்டம் உள்ளது. எமது தொழில் தாரக மந்திரம்.
"நான் ஒரு வியாபாரி,
வியாபாரம் எனது மதம்;
நான் பணிபுரியும் இடம்
என் கோயில் - வாடிக்கையாளர்களே
என் கடவுள் ,கடவுளுக்கு
நான் செய்யும் பூஜைதான்
சேவை, கடவுளின்
மன மகிழ்ச்சியே
எனக்கு பிரசாதம்" என்பதாகும்
இன்று உலக அளவில் 'இதயம் நல்லெண்ணெய் மற்றும் இதயம் குழுமப் பொருட்கள் சந்தைப் படுத்தப் படுகின்றன .வெகு விரைவில் 500 கோடி ரூபாய் விற்பனை இலக்கை எட்ட வேண்டும் என்ற உற்சாகத்துடன் இதயம் குழுமம் வீரநடை போடுகிறது.



விருதுகள்,
• இந்திய ஜேய்செஸ் இயக்கம் - சிறந்த தொழில் சாதனையாளருக்கான "கமல் பத்ரா'விருது.,
• ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் (JCI) TOBIP".
• பாரதத்தின் தலை சிறந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமி நாதன் பெயரால் மத்திய அரசு ஏற்ப்படுத்தியுள்ள ஆராய்ச்சி அறக்கட்டளை என்னும் அமைப்பால் 'எள் விவசாயிகளின் பாது காவலர் 'என்னும் பட்டம் .
• ரோட்டரி சங்கத்தின் கொடையாளர் விருது. என இன்னும் பல பல விருதுகளை பெற்றுள்ளார் “”நல்லெண்ணம்”” கொண்ட “”நல்லெண்ணெய் முத்து””.
விருதுநகரில் முத்து அவர்களின் பெயர் இல்லாத பள்ளிகளோ ,திருகோவில்களோ இல்லை என்னும் அளவிற்கு கல்விக்கும் ஆன்மீகத்திற்கும் நன்கொடைகளை கொடுத்து உதவி வருகிறார். வருடம்தோறும் விருதுநகரில் சாதனை செய்யும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வண்ணம் தனது நிறுவத்தின் மூலம் பரிசுகளை வழங்கி வருகிறார்.
தன் வியாபார வெற்றியின் மூலம் மண்ணின் பெருமையை உலகுக்கு உணர்த்திய ‘’முத்து அவர்கள் நம் நாடார் இனத்தின் பெருமை” என்றால் மிகையில்லை.
நன்றி

கல்விக் கொடை தந்த மகான் - காமராஜர்

கர்ம வீரர்

தன் பணியை பிறரிடம் பணி செய்யச் சொல்வது, தன் சுமைகளை அடுத்தவரிடம் சுமத்துவது, தன் பொறுப்பை பிறரிடம் ஒப்படைப்பது என என்றுமே இருந்ததில்லை பெருந்தலைவர்!! ஹலோ எஃப்.எம்மில் ஒரு முறை காமராஜர் பற்றி திரு.குமரி ஆணந்தன் அவர்கள் சொல்லியது:

காமராஜர் இரவு தூங்கும்முன்பு தனது உதவியாளர்களிடம் பேசிவிட்டு, அவர்களை வழி அனுப்பும்போது அனைவரும் சென்ற பின்னர் தானே மின்விளக்கு, மின்விசிறி ஆகியவற்றை அணைத்து விட்டு செல்வது வழக்கம். குமரி அனந்தன் தினமும் இதை கவனித்து விட்டு “ஐயா, உங்களிடம் ஒரு ஐந்து நிமிடம் பேச மாட்டோமா என்று பல முதலமைச்சர்கள் காத்துக்கொண்டிருக்க, நீங்கள் நாங்கள் செல்லும் வரை காத்திருந்து, இந்த மின்விளக்கு, மின்விசிறி ஆகியவற்றை அணைத்து விட்டு தான் செல்லவேண்டுமா? நாங்களே இதை செய்ய மாட்டோமா?” என்று கேட்டார். அதற்கு அவர் “நீங்க மறந்துட்டு போயிட்டீங்கன்னா, இரவு முழுதும் மின்சாரம் வீணாகும். அந்த மின்சாரத்தை ஒரு விவசாயிக்கு கொடுத்தால் அவனாவது பயன்படுத்திக்கொள்வான் அல்லவா?” என்று திருப்பி கேட்டார்.




                                      ----------------------------------------------------------------------------------------

கல்விக் கண் திறந்தவர்

ஐயா இல்லாமல் தமிழகம் மட்டுமல்ல ஒட்டு மொத்த உலக தமிழ் சமூகமே பல அறிஞர்களை இழந்திருக்கும். அறிஞர்களையும், விஞ்ஞானிகளையும், மேதைகளையும் கல்வி மூலம் உலகிற்கு அருளியவர் கல்விக் கண் திறந்த காமராசர். காமராஜர் ஐயா பற்றி இணையத்தில் பிராண்ஸ் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனத்தலைவர் "பாரீஸ் ஜமால்" அவர்கள்:

வறுமையின் காரணமாக கர்ம வீரர் காமராசர் அவர்களிடம் ஒரு சிபாரிசு கடிதத்துடன் போய் 10 ஆம் வகுப்பு பாஸ் ஆகி விட்டு வேலைகேட்டேன். அரசு, மற்றும் உறவினர் உதவியில்
மேற்கொண்டு படின்னேன். என்று சொல்லி என்னை அனுப்பி விட்டார். அவர் ஆசியோடு அவர் சொல் படி பலர் உதவியோடு படித்து பாரிஸ் பல்கலை கழகத்தில் முப்பது ஆண்டுகள் பணி யாற்றி பிரான்ஸ் தமிழ் சங்கம் அமைத்து நல்ல நிலையில் வாழ்கிறேன், என் வாழ்வில் யாரை மறந்தாலும் கர்ம வீரரை மறக்க இயலாது




Monday 24 November 2014

கல்விக் கண் திறந்த-கர்ம வீரர்

காமராஜர் "கல்வி வள்ளல்" என்றும், "கல்விக்கண் திறந்தவர்" என்றும் புகழப்படுவதற்குக் காரணம், 1956-ம் ஆண்டு அவர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டமாகும். 1955-ம் ஆண்டு மார்ச் 27-ந்தேதி சென்னை பூங்கா நகர் மெமோரியல் மண்டபத்தில், "சென்னை மாகாண தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மாநாடு நடந்தது. 

அந்த மாநாட்டைத் தொடங்கி வைக்க முதல்_அமைச்சர் காமராஜர் வந்திருந்தார். அவர் அருகில் கல்வி இலாகா டைரக்டர் நெ.து.சுந்தரவடி வேலு அமர்ந்திருந்தார். தொடக்கப்பள்ளிக் கூடங்களில், ஏழைக்குழந்தைகள் அனைவருக்கும் இலவச மதிய உணவு வழங்கினால் எவ்வளவு செலவாகும் என்று, சுந்தர வடிவேலுவிடம் காமராஜர் விசாரித்தார். "தொடக்கப்பள்ளிகளில் 16 லட்சம் பேர் படிக்கிறார்கள். அவர்களில் ஐந்து லட்சம் பேருக்கு மதிய உணவு கொடுக்க குறைந்த பட்சம் ஒரு கோடி ரூபாய் செலவாகும்" என்று சுந்தரவடிவேலு கூறினார். 




மாநாட்டில் காமராஜர் பேசுகையில், மதிய உணவு திட்டத்தை கொண்டு வரப்போவதாக அறிவித்தார். அவர் கூறியதாவது:_ 

"தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் தொடக்கப்பள்ளி அமைக்கவேண்டும். பள்ளிக்கூடம் இருக்கிற ஊர்களில் கூட, எல்லாக் குழந்தைகளும் படிக்கப்போவது இல்லை. ஏழைப்பையன்களுக்கும், பெண்களுக்கும் வயிற்றுப்பாடு பெரும்பாடாக இருக்கிறது. ஒருவேளை கஞ்சி கிடைத்தால் போதும் என்று, ஆடு, மாடு மேய்க்கப்போய், தங்கள் எதிர்காலத்தைப் பாழாக்கிக் கொள்கிறார்கள். அவர்களைப் பள்ளிக்கூடங்களுக்கு வரச்செய்வது முக்கியம். அதற்கு, ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கவேண்டும். இதற்கு, தொடக்கத்தில் ஒரு கோடி செலவாகும். சில ஆண்டுகளில் மூன்று கோடி, நான்கு கோடி கூட ஆகும். நம் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு இது பெரிய பணம் அல்ல. தேவைப்பட்டால் அதற்காக தனி வரி கூட போடலாம்." 

இவ்வாறு காமராஜர் கூறினார். 

மதிய உணவு திட்டம் பற்றி, அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. வருவாய்த்துறை செயலாளர் பல ஆட்சேபனைகளையும், சந்தேகங்களையும் எழுப்பினார். அதற்கெல்லாம் காமராஜர் பொறுமையாக பதிலளித்தார். 

முடிவில் சத்துணவு திட்டத்தை அமுல் நடத்துவது என்றும், முதலில் எட்டைய புரத்தில் தொடங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பாரதியார் பிறந்த எட்டையபுரத்தில், முதன் முதலாக மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசுகையில் காமராஜர் கூறியதாவது:- 

"அன்னதானம் நமக்குப் புதிதல்ல. இதுவரை வீட்டுக்கு வந்தவர்களுக்கு உணவு அளித் தோம். இப்போது பள்ளிக் கூடத்தைத் தேடிச்சென்று சோறு போடுகிறோம். இதன் மூலம் உயிர் காத்த புண்ணியம், படிப்பு கொடுத்த புண்ணியம் இரண்டும் சேரும். எல்லோருக்கும் கல்விக் கண்ணைத் திறப்பதை விட, எனக்கு முக்கியமான வேலை வேறு இல்லை. எனவே, மற்ற எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ஊர்வலமாக வந்து பகல் உணவு திட்டத்திற்கு பிச்சை எடுக்க சித்தமாக இருக்கிறேன். 

இவ்வாறு காமராஜர் கூறியபோது, கூட்டத்தினர் பலமாக கைதட்டி ஆரவாரம் செய்தனர். 1956-ல் தொடங்கப்பட்ட மதிய உணவுத்திட்டத்தின் மூலம் 29,017 பள்ளிகளில் மதிய உணவு அளிக்கப்பட்டது. 15 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்தார்கள். பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் நடத்தி, அதன் மூலம் ரூ.6 கோடி வசூலிக்கப்பட்டது. 

இந்த பணத்தைக் கொண்டு, மாணவர்களுக்கு கரும்பலகை, சீருடை ஆகியவை வழங்கப்பட்டன. மதிய உணவு திட்டத்துடன் காமராஜர் நிற்கவில்லை. கிராமம் தோறும் பள்ளிகள் தொடங்கினார். பள்ளிக்கூடம் இல்லாத ஊரே இல்லை என்ற நிலைமை ஏற்பட்டது. 1954-ல் இருந்த தொடக்கப்பள்ளிகள் எண்ணிக்கை 21 ஆயிரம். இது 1962_ல் 30 ஆயிரமாக உயர்ந்தது. 

மாணவர்கள் எண்ணிக்கை 29 லட்சத்தில் இருந்து 42 லட்சமாக உயர்ந்தது. இதேபோல் 1954-ல் இருந்த உயர்நிலைப்பள்ளிகள் 2,012. இது 1964-ல் 2,163 ஆக உயர்ந்தது. மாணவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 98 ஆயிரத்தில் இருந்து 10 லட்சத்து 98 ஆயிரமாக அதிகரித்தது. எஸ்.எஸ்.எல்.சி. வரை இலவச கல்வித் திட்டத்தை 1960-ல் காமராஜர் கொண்டு வந்தார். ஆண்டு ஒன்றுக்கு ரூ.1,200-க்கு குறைவாக வரு மானம் உள்ள குடும்பத்தின் மாணவனுக்கு இலவச கல்வி அளிக்கப்பட்டது. 

இந்த வருமான உச்ச வரம்பு பின்னர் ரூ.1,500 ஆக உயர்த்தப்பட்டது. 1962-ம் ஆண்டில், "வருமான உச்ச வரம்பு இன்றி எல்லோருக்கும் இலவச கல்வி" என்று காமராஜர் அறிவித்தார். 1963-ம் ஆண்டு, அரசாங்கத்தின் ஒரு ஆண்டு மொத்த செலவே ரூ.127 கோடியே 19 லட்சம்தான். அதில் கல்விக்கு ரூ.27 கோடியே 58 லட்சம் ஒதுக்கப்பட்டது

Sunday 23 November 2014

பெருந்தலைவர்-இப்படியும் ஒரு வரலாறு !

பெருந்தலைவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியோ, பொதுகூட்டமோ. மக்களோ , தொண்டர்களோ. காலணா அரையணா, ஒரு அணா என்று கொடுப்பார்கள். அதை வாங்கி பையில் போட்டுக்கொள்வார் காமராஜர். சென்னை வந்ததும் பார்ப்பார். ஐந்து ரூபாய், எட்டு ரூபாய் என்று சேர்ந்திருக்கும். அப்படியே கொண்டுபோய் தன் நண்பரான ‘இந்து’ பத்திரிகை முதலாளி கஸ்தூரி ரங்கனிடம் கொடுத்து விடுவார். நீண்ட காலம் அப்படி நீடித்தது. ஒரு முறை ‘இந்து’ கஸ்தூரிரங்கன் அவர்களுக்கு உடல்நிலை மோசமாகிவிட்டது. பிழைப்போமா என்பதில் அவருக்கே சந்தேகம். காமராஜரை அழைத்தார். “சாகும்போது கடன்காரனாக சாக விரும்பபவில்லை. உம் பணத்தை உம்மிடமே ஒப்படைத்துவிடத்தான் அழைத்தேன்” என்றார்/ பெருந்தலைவர் காமராஜருக்கு கண் கலங்கிப்போனது. ‘அப்படி ஏதும் நடக்காது. நீங்கள் நல்லபடியாக எழுந்து நிற்பீர்கள். கவலைப்பட வேண்டாம். இந்த பணத்திற்காகதான் வரச்சொன்னீர் எனத் தெரிந்திருந்தால் வந்திருக்க மாட்டேன்’ என்றார் .

சரி எத்தனை வருடம் எவ்வளவு தொகையை கொடுத்துவந்தீர் என்பதாவது ஞாபகம் இருக்கா? கணக்கு வைத்துள்ளீரா? என்றார். அதெல்லாம் எனக்கு தெரியாது என்றார் காமராஜர். வீட்டில் உள்ளவர்களை அந்த நோட்டுபுத்தகத்தை எடுத்துவரச் சொன்னார். தேதிவாரியாக எழுதி வைத்திருந்ததை காட்டி, இத்தனை ஆண்டுகள் இவ்வளவு தொகை இருக்கிறது என்று கூறியதோடு, ‘எனக்கு ஏதாவது ஒன்று நடந்துவிட்டால் பணத்தை காமராஜரிடம் ஒப்படைத்துவிடுங்கள்’ என்றும் வீட்டில் உள்ளவர்களிடம் கூறினார்.

பிறகு காமராஜர் நினைப்பை போலவே கஸ்தூரிரங்கன் குணமாகி நல்லபடியாக எழுந்தார். வழக்கம் போலவே ஒருமுறை இருவரும் சந்தித்து பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது ‘ஒரு நல்ல தொகை இருக்கிறது. வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். ஏதாவது செய்துகொள்ளுங்கள்’ என்றார் கஸ்தூரி ரங்கன். பதிலளித்த பெருந்தலைவர் ‘அந்த பணத்தை வைத்துகொண்டு நான் என்ன செய்யப் போகிறேன். சாப்பிடறது ரெண்டு இட்லி. அது எப்படியாவது எனக்கு கிடைச்சுடும். எனக்கெதற்கு பணம்’ என்று யோசித்தவர் ‘ஒன்று செய்யுங்கள் ஐயரே. உங்கள் கையாலேயே ஒரு இடத்தை வாங்கிகொடுங்கள்’ என்றார். கஸ்தூரிரங்கனுக்கு மகிழ்ச்சி. இடத்தையாவது கேட்டாரே என்று. அலைந்து பிடித்து ஒரு பெரிய நிலத்தை பார்த்தார். விலை பேசினார். காமராஜர் கொடுத்து வைத்திருந்ததைவிட கூடுதல் விலை. அந்த கூடுதல் பணத்தை ஐய்யரே போட்டு நிலத்தை பேசிமுடித்தார். பத்திரபதிவுக்கு பெருந்தலைவரை அழைத்தார். யார் பெயரில் என்று கேட்கிறார். உம் பெயரில்தான் என்ற பதிலை கேட்டு அலறிய காமராஜர் ‘எனக்கு எதற்கு காசு பணம், சொத்து எல்லாம். நானா சம்பாதிச்சேன். மக்கள் கொடுத்த காசு. என் பெயரில் வேண்டாம் என்கிறார். எவ்வளவு கூறியும் கேட்கவில்லை. கடைசியில் காமராஜர் சொன்னபடியே கட்சியின் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது.

அந்த இடம்தான் இன்று அண்ணா சாலையில் உள்ள ‘தேனாம்பேட்டை காங்கிரஸ் கட்சி மைதானமும், பெரிய காமராஜர் அரங்கமும்‘. கோடி கோடியான மதிப்பில் சொத்து. யார் யாரோ, எப்படியெல்லாமோ அனுபவிக்கிறார்கள். அந்த பெருந்தலைவர் இறந்தபோதுகூட அவர் வாங்கிய இடத்தில் அடக்கம் செய்யப்படவில்லை. கிண்டியில் பொது இடத்தில், பொதுசொத்தாகவே அடக்கம் செய்யப்பட்டார்.

Friday 21 November 2014

மாத்தூர் தொட்டி பாலம்-படிக்காத பொறியாளர் பெருந்தலைவர்

படிக்காத மேதை எனப் போற்றப்படும் காமராஜர் போன்ற நாட்டு நலனில் அக்கறையுள்ள பெருந் தலைவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் இருந்தால், உலக நாடுகள் யாவும் இன்று ஒரே நிலையில் இருந்திருக்கும்.

படிக்காத பொறியாளர் பெருந்தலைவர்

தெற்கு ஆசியாவிலேயே மிக உயரமான  தொட்டி பாலம், குமரி மாவட்டத்திலுள்ளது. அங்குள்ள  திருவெட்டார் நகரில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில்,  மாத்தூர் என்ற இடத்தில் 1962-ம் ஆண்டு காமராஜர் முதல் அமைச்சராக இருந்த காலத்தில்,  இந்த பாலம் கட்டப்பட்டது. பரளியாற்று தண்ணீரை விவசாயத்துக்கு எடு்த்துச் செல்ல  எந்த வழியும்  இல்லை என்று  பொதுப்பணித்துறை பொறியாளர்கள் கையை விரித்து விட்ட நிலையில், காமராஜர் அந்த இடத்தை நேரடியாக பார்வையிட்டு, இரு மலைகளுக்கு இடையே  பாலம் கட்ட உத்தரவிட்டார்.  அன்றைய கால கட்டத்தில் வெறும் 13 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த பாலம், இன்றளவும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.பெருந்தலைவர் காமராஜரின் முயற்சியால் உருவானதே இந்த மாத்தூர் தொட்டிப் பாலமாகும் மாத்தூர் தொட்டிப் பாலம் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆசியாவிலேயே மிகப்பெரிய தொட்டிப் பாலமாகும். இது மலைப்பாங்கான காடுகளாக இருந்த மாத்தூர் பகுதியில் உள்ள கணியான் பாறை என்ற மலையையும், கூட்டுவாயுப்பாறை என்ற மலையையும் இணைத்து பறளியாற்றுத் தண்ணீரைக் கொண்டு செல்வதற்காக இரண்டு மலைகளுக்கும் நடுவில் கட்டப்பட்டுள்ளது.

மாத்தூர் என்னும் கிராமம் திருவட்டாற்றிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலையிலும், இந்தியாவின் தென்முனையாகிய கன்னியாகுமரியிலிருந்து 60 கி.மீ. தொலையிலும் நாகர்கோவிலில் இருந்து 45 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. இவ்வூர் குழித்துறை இரயில் நிலையத்திலிருந்து 15 கி.மீ. தொலையிலும், திருவனந்தபுரம் வானூர்தி நிலையத்திலிருந்து 70 கி.மீ. தொலையிலும் அமைந்திருக்கிறது.நம் நாட்டின் இருக்கும் மாத்தூர் தொட்டிப் பாலம்!! ஆசியாவிலே மிகவும் உயரம் ஆனதும் நீளமானதுமான மாத்தூர் தொட்டிப்பாலம், பார்க்குமிடங்களெல்லாம் நெருக்கமாகக் காணப்படும் தென்னை மரங்கள்.... கோடைக் காலத்திலும் வற்றாத ஆறுகளென, கேரளத்தின் சாயலோடு காணப்படும் மலைப் பாங்கான பிரதேசம் மாத்தூராகும். தென் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோயிலுக்கு அருகில் மாத்தூர் அமைந்திருக்கிறது.

ஒரு காலத்தில் மலைப்பாங்கான காடுகளாகவிருந்த கணியான் பாறையென்ற மலையையும் கூட்டு வாயுப் பாறையென்ற மலையையும் இணைத்து, பறளியாற்று நீரைக் கொண்டு செல்வதற்காக அவ்விரு மலைகளுக்கும் நடுவே இப்பாலம் அமைந்துள்ளது.அப்பகுதிகளுக்கான நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்தினால் விவசாயம் செழித்து வளங்கொழிக்கும் பிரதேசங்களாக அப்பிரதேசங்கள் மாறுமென எண்ணிய பெருந்தலைவர் காமராஜரின் முயற்சியால் உருவானதே இந்த மாத்தூர் தொட்டிப் பாலமாகும். படிக்காத மேதை எனப் போற்றப்படும் காமராஜர் போன்ற நாட்டு நலனில் அக்கறையுள்ள பெருந் தலைவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் இருந்தால், உலக நாடுகள் யாவும் இன்று ஒரே நிலையில் இருந்திருக்கும்.


சக்கர நாற்காலியொன்று செல்லக்கூடிய அகலத்தை மட்டுமேயுடைய ஒடுங்கிய மேற்பகுதியினூடாக பாலத்தின் ஒரு அந்தத்திலிருந்து மறு அந்தத்திற்குச் செல்லமுடியும். இரு மலைகளுக்குமிடையே அடர்ந்து காணப்படும் தென்னை, இறப்பர் மரங்கள், நீல வானம், சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் ஆறு என இயற்கை அன்னையின் அருட்கொடைகள் யாவும் ஒருங்கே தெரியும் காட்சியை விபரிக்க எவரிடமும் வார்த்தைகளிருக்காது. பாலத்தின் மேற்பகுதியில் நடப்போரின் பாதுகாப்புக் கருதி, நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டாலும் நில மட்டத்திலிருந்து நாம் நிற்கும் உயரத்தைக் கற்பனை செய்தால், எமது கட்டுப்பாடின்றியே கால்கள் உதறத் தொடங்குவதைத் தடுக்க முடியாமல் போவதையும் கையிலிருக்கும் பொருட்கள் விழுந்துவிடுமோ என கை தன்பாட்டிலேயே அவற்றை இறுகப் பற்றிப் பிடிப்பதையும் உணரலாம். அனுபவித்த எவரும் அதை மறுக்கமாட்டார்கள்.
அமைப்பதற்கான காரணம்
இந்த பாலமானது வறட்சியை தீர்பதற்காக அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த கு.காமராசு அவர்களால் 1962ம் ஆண்டு கட்டத்தொடங்கப்பட்டு 1969ல் முடிக்கப்பட்டது. இந்த பாலம் ஒரு மலையில் இருந்து இன்னொரு மலைக்கு நீரை எடுத்துச் செல்கிறது.
பாலத்தின் சிறப்பியல்புகள்
இரண்டு மலைகளை இணைக்கும் இந்தப் பாலம் நீளவாக்கில் 1204 அடியாகவும், தரைமட்டத்திலுருந்து 104 அடி உயரத்திலும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்தைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு தூணின் சுற்றளவும் 32 அடியாகும். இவ்வாறு மொத்தம் 28 தூண்கள் உள்ளன. பெரிய பெரிய தொட்டிகளாக தொகுக்கப்பட்டு தண்ணீர் செல்லும் பகுதிகள் ஏழு அடி அகலமாகவும், ஏழு அடி உயரமும் உயரமாகவும் காணப்படுகிறது.
பெயர் காரணம்
தொட்டி வடிவில் கட்டப்பட்டிருப்பதால் தொட்டிப்பாலம் எனவும் இரு மலைகளுக்கு நடுவே தொட்டில் போன்ற அமைப்பில் இருப்பதால் தொட்டில்பாலம் எனவும் அழைக்கப்படுகிறது. இப்பாலத்தின் நடுப்பகுதிக்கு சென்று கீழே பார்த்தால் ஆற்று நீரும் அதனைக் கடக்க ஒரு சாலையும் அழகாகக் காட்சியளிக்கிறது. அணையிலிருந்து வரும் நீர் முதலில் மாத்தூர் பாலத்திற்கும் அதன்பின் செங்கோடி மற்றும் வடக்குநாட்டுப் பாலங்கள் வழியாக தேங்காய்ப்பட்டணம் கிராமத்திற்கும் செல்கின்றது.
மாத்தூர் தொட்டிப் பாலம் வழியாகக் கொண்டுசெல்லப்படும் நீர் கன்னியாகுமரி மாவட்டத்தின் கல்குளம், விளவங்கோடு ஆகிய இரு வட்டங்களில் உள்ள ஊர்களின் நீர்ப்பாசனத்திற்குப் பயன்படுகிறது.
அமைவிடம்

1962 ம் ஆண்டு தமிழ்நாடு முதல்வராக இருந்த காமராஜரால் தொடங்கப்பட்ட இப்பாலம் 1969ல் முழுமையாக கட்டப்பட்டு நிறைவுபெற்றது இந்தப்பாலம் நாகர்கோவிலில் இருந்து 45 (கி.மீ.) தூரத்திலும் திருவட்டாறிலிருந்து 3 (கி.மீ.) தூரத்திலும் அமைந்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து பேருந்து மூலம் இங்கு செல்லலாம்.

பன்மொழிப் புலவர் திரு. சாத்தூர் சேகரன் அவர்கள்

நமது திரு.சாத்தூர் சேகரன் அவர்கள் 120 மொழிகளை அறிந்தவர்; 200 மொழிகளை ஆய்வு செய்தவர். அவரது பட்டங்கள் எம்.ஏ. (தமிழ்), எம்.ஏ. (ஆங்), எம்.ஏ. (வரலாறு), எம்.ஏ. (சமூகம்), எம்.ஏ. (அரசியல்), எம்.ஏ. (வரலாறு), எம்.பில். (வரலாறு), எம்.ஏ. (பொருளாதாரம்), எம்.ஏ. (மொழி) ஆகியன. அவருடைய "எம்மொழியும் எம் மொழி" என முழங்கும் 'அகிலமொழி' அமைப்பைத் தொடர்பு 
கொள்ள : திரு.கோ, கைப்பேசி எண் : +91 94436 94745, மின்னஞ்சல் முகவரி :ahilamolhi@gmail. 

இது மட்டுமில்லாமல் உலகமெங்கும் பயணம் செய்து அந்தந்த நாடுகளில் தங்கியிருந்து அங்கு வாழும் மக்களிடம் பேசி, பழகி, ஆய்வு செய்திருப்பதால் உலக மொழிகள் 120 தெரியும். மேலும் இலக்கணப் பூர்வமாகவும், விதிமுறைப்படியும் 200 மொழிகளில் ஆய்வு செய்து வரும் சாத்தூர் சேகரன் அய்யா 200 மொழி நூல்களும் எழுதியிருக்கிறார். பல நூறு ஆய்வுக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்".


"உலக அரங்கங்களிலும். பல்கலைக்கழகங்களிலும், மொழி ஆய்வுக் கூடங்களிலும், புதிய மொழி கொள்கைகளை முழங்குகின்ற தமிழ் மொழி ஆய்வாளர் சாத்தூர் சேகரன் இதுவரை 10,000 பாடல்கள், 400 நவீனங்கள், 40 காப்பியங்கள், 200 சிறுகதைகள் எழுதியிருப்பதோடு, 50 நாடகங்களையும் இவரே எழுதி இயக்கியும் இருக்கிறார். பல்வேறு இதழ்களிலும் இவரது கதைகள், கட்டுரைகள், கவிதைகள் வெளியாகியுள்ளன. இன்னும் இவரது எழுத்துக்களில் 40 நூல்கள் வெளிவர இருக்கிறது.


தமிழ்மொழி அறிஞர் சாத்தூர் சேகரன் மதுரைக்கு வரும்போதெல்லாம் இவரது குரல்  //அகிலமொழி// பயலிரங்கத்தில் ஒலிக்கிறது.

தமிழ்மொழியைப் பற்றி, தமிழ் மொழியின் ஆதி, அந்தம், ஆச்சர்யங்களையும் சொல்லும்போது பிரமிடுகளை தாண்டிய பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

தமிழ் மொழிக்காகவே தன் உடல், பொருள், ஆவி, அனைத்தையும் அர்ப்பணித்திருக்கும் தமிழ்மொழி ஆய்வாளர் சாத்தூர் சேகரன், தான் அடுத்தடுத்து தமிழ்ச்சங்கங்கள், பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் என்று அழைத்தவர்களின் இடம் நோக்கி... தன் கையோடு கொண்டு செல்லும் தமிழ் மொழியைப் போல கணத்த சூட்கேஸ்-உடன் தமிழோடு தானும் சேர்ந்தே பயணிக்கிறார்.


""தமிழ்தான் என் மூச்சு, தமிழர்களுக்காக என் உயிரையும் கொடுப்பேன்"" என்று உரக்க பேசுகின்ற எத்தனையோ தலைவர்களுக்குக்கிடையில் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம், பண்பாடு, குறித்த முழு பார்வையை வளரும் இளம் தலைமுறையினர்க்கு வாரி வழங்குவதற்காக ஒரு சப்தமில்லா சாம்ராஜயத்தையே நடத்தி வருகிறார்.


அதே நேரத்தில் சாத்தூர் சேகரன் அய்யாவின் 40 வருட உழைப்பைச் சிந்தாமல் சிதறாமல் மாணவ - மாணவியர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவும், அவர்களைச் சாத்தூர் சேகரனின் தமிழ் வாரிசுகளாகவும் உருவாக்கி, அவர்கள் பல்வேறு இடங்களுக்கும் சென்று பேசக்கூடிய ஊக்கத்தையும் தந்து உலக நாடுகளில் போய்ப் பேசுகின்ற தனித்தன்மையை எம்மொழியும் எம் மொழி என்ற கொள்கை முழக்கத்துடன் //அகிலமொழி// எனும் அமைப்பை தமிழ்நாட்டில் மாநகர் மதுரையில் துவங்கி அதற்கு வேராகவும் நீராகவும் விளங்குகின்ற  அவருக்கு உறுதுணையாய் இருக்கும் தமிழ் நெஞ்சங்களையும் பாராட்டியே ஆகவேண்டும்.

உலகின் பல்வேறு நாடுகளில் இயங்கும் தமிழ்ச் சங்கங்கள் தமிழ்மொழி ஆய்வாளர் சாத்தூர் சேகரன் அய்யாவையும் அகிலமொழி-யின் மாணவர்களையும் உற்று நோக்க வேண்டும். தமிழைச் செழிக்கச் செய்ய நாமனைவரும் அரும்பாடு படவேண்டும்.                                                          

உலக அறிஞர்கள் இவரை பற்றி சிலாகிக்கும் விசயங்கள்:
"தமிழைப் பற்றமிது காறும் இத்தனை விரிவாக ஐரோப்பாவில் கூறப்படவில்லை. எனவே சமஸ்கிருதம்தான் இந்தியாவின் தாய்  மொழி என்ற ஐரோப்பியர்களின் பார்வை இன்றளவும் மாறவில்லை. உங்கள் உரையாடல் எங்களுக்கு அதிர்ச்சி அளித்த போதிலும் தமிழே உலக மொழிகளின் தாய் மொழி என்ற தங்களின் கருத்தை நம்பத் தூண்டுகிறது"
-சமஸ்கிருத துறைத்த் தலைவர்,லன்டன் பல்கலை கழகம், லன்டன்

"பிரமிட் கட்டியவர்களான எங்கள் முன்னோர்கள் தமிழர்களா??! தமிழர்கள்தான் உலகம் முழுக்க பரவி இருந்தார்களா??! வியப்புக்குரிய செய்திகளை சொல்கிறீர்கள்!!"
-தலைவர், கெய்ரோ அருங்காட்ச்சியகம், கெய்ரோ.

"இந்திய மொழிகளை மட்டுமல்ல உலக மொழிகளை எல்லாம் அறிந்திருப்பதுடன், அவற்றின் வெர்ச்சொற்களை எல்லாம் கட கடவென கூறுவதை வியக்கிறேன்!! நான் சீன மொழி அறிந்தவன். ஆனால் நீங்கள் சீன மொழி தமிழ் மொழி உறவு பற்றி கூறியது கேட்டு மலைத்து நிற்கின்றேன்!!"
-முனைவர். அருனாபாரதி, வாரனாசி பல்கலைக்கழகம், காசி

அன்னாரை தமிழ் சமூகம் 2015 சனவரி 2ம் தியதி இழந்து தவிக்கிறது!!

தமிழ் நாகரிகம் நிலை பெற... : திரு. சாத்தூர் சேகரன்

இந்த பதிவில் திரு.சாத்தூர் சேகரன் அவர்களது கட்டுரை இடம் பெறுகிறது

தமிழைக் கன்னித் தமிழ் என்கிறோம் ஏன்? உலகின் முதன் மொழி தோன்றி இரண்டு இலட்சம் ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும் என்கிறார் அமெரிக்க மொழி அறிஞர் சுவாடேசு. உலகின் தாய்மொழிக்கான வாய்ப்பு தமிழுக்கு உள்ளது என்றும் உறுதி கூறுகிறார். பாவாணர் போன்றோரும் இதனை அறுதியிடுகின்றனர். எனது கள ஆய்வும் இதனையே உறுதி செய்கிறது. இதனால்தான் எனது நூல்களில் தமிழ்ச் சொற்களின் வழித்தோன்றலாக உலகின் பெரிய 400 மொழிகளில் ஒப்புமையைக் காட்டமுடிகிறது. தமிழின் இத்தகைய வீச்சிற்கும், வீழாத தன்மைக்கும் காரணங்கள் யாவை? 

இன்ன எழுத்தில்தான் தொடங்க வேண்டும், இன்ன எழுத்தில்தான் சொற்கள் முடிவடைய வேண்டும். உச்சரிக்கக் கடினமான சொற்கள் இருத்தல் கூடாது. என்றெல்லாம் நமது முன்னோர்கள் வரையறை செய்து வைத்திருந்தனர். மேலும் மொழி என்பது பாமரர் சொத்து என்பதை ஒரு சட்டமாகவே வைத்திருந்தனர். சிறுவர் எளிதில் கற்றுணர மொழிச்சட்டம் அல்லது இலக்கணம் ஒரு தடையாக இருத்தல் ஆகாது என்று திட்டமிட்டிருந்தனர். எனவே மறபு மீறலை ஒரு மரபாகவும் வைத்திருந்தனர். 

தமிழ் நாகரிகம் என்ற வரையறை ஒரு பரந்து பட்ட பொருளில்தான் இயங்குமே தவிர, ஒரு சிறு எல்லைக்குள் நிலைபெறவில்லை. 

கன்னித்தமிழ் எங்ஙனம் அவ்வப்போது தோன்றிய இறுக்கமான சூழ்நிலைகளையும் எதிர்ப்பான சூழ்நிலைகளையும் தகர்த்தெறிந்து மீண்டும் மீண்டும் தன்னை இளமைப்படுத்திக் கொண்டு வருகிறதோ அவ்வாறே தமிழ் நாகரிகம் என்பதுவும் அழிக்கப்பட முடியாத ஒன்று என்று தன்னை அடிக்கடி நிலைநாட்டி வந்திருக்கிறது. 


தமிழ் நாகரிகத்தின் உச்சங்கள் 

1. உலகின் முதன் முதலில் சித்திர எழுத்தைக் கண்டவன் தமிழன். அதிலிருந்து வட்ட எழுத்து, கோட்டு எழுத்து, நகர்ப்புற நகரி எழுத்து என்று பல்வேறு காலச்சூழலில் பல்வேறு எழுத்துகளைப் படைத்தவனும் தமிழன். படைத்ததோடு மட்டுமின்றி உலகெங்கும் அவற்றைப் பரப்பியவனும் தமிழன். 

2. சங்கங்கள் அமைத்து, மொழியை வளர்த்தவனும் தமிழன்தான். ஏறத்தாழ 10,000 ஆண்டுகளாய் இந்நிலை இருந்து வந்தது. 

3. சாதி, சமயம் சிற்சில விதிவிலக்குகளைத் தவிர - சங்க இலக்கியங்களில் இல்லை, இல்லவே இல்லை. ஆனால் உரோமபுரி, கிரேக்கம், சீனம், எபிரேயம்(பிப்ரு) போன்ற எந்த மொழியின் தொடக்க கால இலக்கியங்கள் யாவும் சமயம் சார்பாகவும், மந்திர தந்திர வித்தைகளைக் கொண்டுள்ளதாகவும் இருக்கக் காண்கிறோம். 

4. தத்துவங்கள், வேதாந்தங்கள் யாவுமே தமிழனுக்கு மட்டும் சொந்தமாய் இருந்தன. தமிழன் இவற்றைக் காப்பாற்றாததால், பிறர் பிற எழுத்துகளில் பொதிந்து வைத்திருக்கின்றனர். 

5. அறநூல்களிலும் வாழ்க்கை வாழ்வதற்கே என்ற கோட்பாட்டிலும் முன்னோடியாகத் திகழ்ந்தவன் தமிழன். திருக்குறளைக் காட்டிலும் வேறு என்ன வாழ்வியல் நூல் வேண்டும்? 

6. 10,000 ஆண்டுகளுக்கு முன்பே சிந்துவெளி - ஹரப்பா நாகரிகங்களை உருவாக்கியவன் தமிழன். அதன் தொடர்ச்சியாக லோத்தல் முதல் ஆந்திர பொட்டி புரலுவரை கொண்டு சென்றவன் தமிழன். இம்மட்டோ? பத்தாயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள ஈஸ்டர் தீவில் குடியேறி அங்கும் அவ்வெழுத்துகளைப் பொறித்தவன் தமிழன். 

7. பிற நாடுகளில் கற்கால நாகரிகமும் செம்பு நாகரிகமும் நிறைவேறாத காலத்திலேயே இரும்பை வடிக்கவும் வார்க்கவும், உருக்கு செய்யவும் கற்றுக் கொண்டவன் தமிழன். ரோமாபுரி வீதிகளிலும், கிரேக்க நாட்டுச் சிற்றூர்களிலும் தமிழன் வடித்த வேலும், வாளும், ஈட்டியுமே நிறைந்திருந்தன. 

8. மருத்துவத் துறையிலும், அறுவை மருத்துவத்திலும் தமிழர்கள் தன்னிகரற்று விளங்கினர். மருத்துவ சேவைக்குச் சென்றனர். முன்னாளில் உலகப் பெரும் விஞ்ஞானியராகத் தமிழரே திகழ்ந்தனர். இயற்கை வளமும், மூலிகைத் தளமும் இதற்கு உதவின. 

9. கல்வி கற்பதிலும், தமிழர்கள் திகழ்ந்தனர். சீனமொழி எழுத்தைத் திருத்தியவர்கள் தமிழர்கள். கொரிய மொழிக்கு தமிழை ஒட்டிய எழுத்து முறையைத் தந்தவர்கள் தமிழர்கள். சப்பான் மொழியையும் எழுத்தையும் செப்பம் செய்தவர்கள் தமிழர்கள். 

10. உலகில் அதிக அளவில் பருத்தி விளைவித்து ஆடையாக ஆக்கியவர்கள் தமிழர்கள். சாயமிடக் கற்றுக் கொண்டவர்களும் தமிழர்களே. 

11. கடல் கடந்து பெரும் படையுடன் உலகை வலம் வந்தவர் தமிழரே. 1000, 1500, ஆண்டுகளுக்குப் பின்னரே பிறநாட்டினர் கடலை எட்டிப் பார்த்தனர். 2000, 3000 கிலோ மீட்டர் தொலைவுக்கப்பால் ஆட்சியை அமைத்தவர்களுள் தமிழரே முதல்வர். 

12. பழந்தமிழர் குடியேறாத நாடில்லை. தீவில்லை. இட்சிங் என்ற சீனத்துறவி கி.பி. 2 ஆம் நூற்றாண்டினர். இவரது கூற்றுப்படி, சீனாவில் 50,000 தமிழ்க் குடியிருப்புகள் (50,000 காலனிகளா) இருந்தன. 

13. தமிழரின் வணிகக் கப்பல்கள் செல்லாத நாடு இல்லை. தீவுகள் இல்லை. பழந்தமிழருக்குக் கடல் ஒரு விளையாட்டுத் திடல். உலக நதிகள், மலைகள், கடல்கள், ஊர்கள் யாவற்றிற்கும் தமிழனே பெயரிட்டான். மக்கட் பெயர்களும் தமிழாகவே உள்ளன. 

14. ஆழ்கடலில் அச்சமின்றி முத்தெடுத்தான். அவற்றை இலங்கையில் இரத்தினத்திற்கு மாற்றினான். சாவகம் சென்று பவளத்திற்கும் வாசனைப் பொருளுக்கும் மாற்றினான். இவற்றைச் சீனாவில் விற்று பட்டு வாங்கினான். ரோமாபுரி வரை சென்று பட்டிற்குத் தங்கம் பெற்றான். தமிழ் வணிகனின் கதை அஞ்சா நெஞ்சுரத்தின் விதை. அவனியில் அவன் கல்வியையும், சமயத்தையும் தத்துவத்தையும் பரப்பியவன். வாளெடுக்காமலும், வேல் எறியாமலும் தமிழ் நாகரிகத்தை உலகெங்கும் விதைத்தவன். இன்றும் உலகில் நிலைத்துள்ள நாகரிகம் தமிழன் நாகரிகமே. அற்பத் தமிழன் இந்த அரிய உண்மையை உணராமல் இருப்பதுவும் பறர்க்கு உணர்த்தாமல் இருப்பதுவுமே இன்றைய சாபக்கேடு.

15. அறநூலகத்திற்குப் பின், சமயத்தை ஒரு நிறுவனமாக ஏற்றுச் செயல்பட்டதில் தமிழனே முன்னோடியாக நிலை பெற்றான். புத்த சமயத்தைப் பரப்பியதிலும் சமண சமயத்தைப் பரப்பியதிலும் தமிழனே முன் நிற்கிறான். இன்று உலகெங்கும் இருப்பது தமிழன் பரப்பிய புத்த மகாயானமே (பெருவழி) சீனாவில், சப்பானில், கொரியாவில், இந்தோ சீனநாடுகளில், பர்மாவில், இருப்பன மகாயானமே. புத்தர் பரப்பிய சிறு வழி (ஹீனயானம்) அழிந்துவிட்டது. 

16. பக்தி இயக்கம் தமிழகத்தில் உருவாகி ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பின்னரே வட இந்தியாவில் (கி.பி 1200- 1500) பரவியது. இதன் எதிரொலி கிறித்துவத்தில் கி.பி.1700 க்குப் பின்னரே வெளிப்பட்டது. இசுலாமில் கி.பி.1200 க்குப் பின் (சரியாகச் சொல்வதானால் கி.பி. 1400 க்குப் பின்னரே) மதநெறியாகியது. சோமபானத்தையும், சுராபானத்தையும் மாந்தி மாந்தி - ஐயோ எங்களைக் காப்பாற்று, சோமா, தமிழரிடமிருந்து எங்களைக் காப்பாற்று - என்று அறியாமையின் உச்சத்தை, பேதமையின் பிதற்றலை, தமிழ் நாகரிகம் எஞ்ஞான்றும் அரங்கேற்றியதில்லை. இசுலாம், கிறித்தவம் படைத்த தீவிரவாதங்களையும் உலகப் போர்களையும் தமிழ் நாகரிகம் ஏற்கவே இல்லை. 

17. குதிரைக்கறி முதல் எல்லாக்கறி வகைகளையும் தின்று வந்த ஆரிய அநாகரிகரை சைவநெறியில் ஈடுபடுத்தி நாகரிகப்படுத்தியது தமிழ் நாகரிகமே. தோலாடை கட்டியும், மரவுரி தரித்தும் அரை நிர்வாணமாகத் திரிந்த ஆரியருக்கு ஆடை கொடுத்து நாகரிகப்படுத்தியது தமிழர் நாகரிகம். இல்லாத கடவுளான சோமன், சுரா, உசா, இந்திரன் போன்ற கற்பனைக் கடவுளை ஆரியர் கைவிட்டனர். தமிழரின் சமயங்களை சிவன், சக்தி, மயிலவன் ஆகியோரை வழிபட வைத்தது தமிழ் நாகரிகமே. வட இந்தியாவில் அம்மணமாகத் திரிந்து பனியிலும், குளிரிலும் வாடி வதங்கிய ஆரியருக்கு இருப்பிடம் தந்து வாழ வைத்தது தமிழ் நாகரிகமே. 

18. இந்தியாவில் உள்ள கல்வெட்டுகளில் 75 விழுக்காடு தென்னிந்தியாவில் உள்ளன. இதில் பாதிக்கு மேல் 40 விழுக்காடு தமிழகத்தில் உள்ளன. இதில் பாதி 20 விழுக்காடு ஆரியருக்குத் தானமளித்த ஈனச் செய்திகள்தான் உள்ளன. நன்றி என்பதற்கு அர்த்தம் தெரியாத ஆரிய அறிவிலிகள், தமிழரது படைப்புகளைத் தமது என்று உரிமை கொண்டாம் அற்பத்தனத்தை இனியும் சகிக்கத்தான் வேண்டுமா? சிதம்பரம் கோவில் கட்டியவன் சோழ அரசன். கட்டியோர் தமிழகக் குடிபடைகள். இன்று, உள்ளிருந்து கொட்டம் அடிப்பது மட்டுமின்றி, தமிழ்ப் பாடல்களைப் பாடக்கூடாது என்று சொல்வது, தமிழ் நாகரிகத்தையே அவமதிப்பது அல்லவா? கைநீட்டிப் பிச்சை எடுத்த பரம்பரை, கொடையாளித் தமிழனுக்கு நாகரிகம் கற்றுக் கொடுத்தேன் - என்று கூறுவது எத்தனை பெரிய பொய். 

19. ஆரியக் கூட்டத்தினரை நாம் தாம் நாகரிகப் படுத்தினோம். ஆனால் இந்த நெறியற்ற கூட்டம், வெள்ளைத் துரைமாரை ஏமாற்றி, வரலாற்றுப் புரட்டாக, தமிழரை - இந்தியரை சமஸ்கிருதமாக்கியுள்ளோம் - என்று கூறுவது பொய்மையிலும் கடைந்தெடுத்த பொய்மையாகும். இக்கயவரை இன்னும் அனுமதிப்பது தமிழ் நாகரிகம் அன்றோ? 

20. தமிழகம் தென்கோடியில் உள்ளது. ஆனால் வடகோடி இமயத்தை வென்று 10 க்கும் மேற்பட்ட முறை இமயத்தில் கொடியேற்றியவர் தமிழரே. நேபால், நிருபத் வழியே ஒரு பல்லவ அரசன் சீனா மீது படையெடுத்த செய்தி, மறைக்கப்பட்ட பலநூறு தமிழ்ச் சாதனைகளில் ஒன்றாகும். சோழர் கணவாய், சேரர் கணவாய் என்று இன்னும் நேபாளத்தில் உள்ளன. மலேசியாவில் கடாரம் கொண்டான் பகுதியில் மலேசிய அரசு ஒரு அருங்காட்சியகம் நிறுவியுள்ளது. எத்தனை வையாபுரியர்களும், அறவாணர்களும், எஸ்.ஆர்.ராவ்களும், மாக்கமுல்லார்களும் தமிழ் நாகரிகச் சிறப்பை ஒழிக்க முற்பட்டாலும் இயற்கை நமக்கு என்றென்றும் கைகொடுக்கிறதே? 


எழுச்சிக்குச் சில காரணங்கள் 

ஒருநாடு எழுச்சியுற்று, தனிநாகரிகம் பெற்ற நாடாகத் திகழ வேண்டுமானால்... 

1) கல்வியில் சிறந்தோங்கியிருக்க வேண்டும். 

2) பெண்கல்வி, பெண்ணுரிமை பேணப்பட வேண்டும். 

3) சிறந்த அரசர்கள் அல்லது அமைச்சர்கள், தானைத் தலைவர்கள் மிகுந்திருக்க வேண்டும். 

4) ஏற்றுமதிப் பொருட்கள் இருத்தல் வேண்டும். 

5) உலக நாடுகளின் நடுநாயகமாக இருத்தல் வேண்டும். 

6) திரைகடல் ஓடி ஒடிச் சம்பாதிக்கும் வணிகர் குழு இருத்தல் வேண்டும். 

7) அஞ்சா நெஞ்சம் படைத்த வீரர்கள் பல்கிப் பெருகி இருக்க வேண்டும். 

முற்காலத்தில் மிளகாய் கிடையாது. மிளகுதான் உறைப்புச் சுவையைத் தரக்கூடியது. ஒரு மூடை மிளகு ஒரு சில நேரங்களில் ஒரு சிறு மூடை தங்கத்திற்கு ஈடாக விளங்கியது. மிளகின் மருத்துவக் குணங்கள் மிளகின் விலையை எப்போதுமே உச்சத்தில் இருக்க வைத்தன. அன்று ரோமாபுரி அவையின் பிளினி அலறிய அலறல் இன்றும் நம் செவியில் விழுகின்றதே. - ஐயோ எங்கள் நாட்டுப் பொன்னும் பொருளும் தமிழகத்திற்குப் பெருவாரியாகச் செல்கின்றதே - தமிழகத்திலிருந்து அறுசுவைப் பொருள்கள் பல நாடுகளுக்குச் சென்றன. மருந்து, மருந்துப் பொருள்கள், ஆடைகள், சாயமிடப்பட்ட ஆடைகள், உருக்காலான வாளும், வேலும், மிளகும் பிற வாசனைப் பொருள்கள், யானைத்தந்தம் இன்ன பிற பொருள்கள் உலகெங்கும் சென்றன. இதனால் தமிழன் வளம் பெற்றான். தமிழ் நாகரிகம் வளம் பெற்றது. நிலை பெற்றது. உலக நாகரிகங்களின் தாய் நாகரிகம் தமிழ் நாகரிகம் அல்லவா? மற்ற நாகரிகங்கள் கட்டுச் சோற்று நாகரிகங்கள். எனவே 300 - 400 ஆண்டுகளில் நிலை குலைந்தன. தமிழ் நாகரிகம் மட்டுமே 5000 ஆண்டுகள் நின்று நிலைத்தது. 

வீழ்ச்சிக்குச் சில காரணங்கள். 

1) தமிழ் உணர்வு அற்றுப் போயிற்று. 

2) கலப்பு மன்னர்கள் ஆட்சியும் (குலோத்துங்கன்) வேற்று மன்னர்கள் ஆட்சியும் (விசயநகர மன்னர்கள்) தோன்றின. 

3) வேற்று மத மன்னர்கள் ஆட்சி (மதுரை சுல்தான்கள், ஆற்காட்டு நவாப்புகள், ஆங்கிலேயர் ஆட்சி) தோன்றியதால் தமிழன் உணர்வற்றுப் போனான். 

4) ஆரியக் கூத்தாடிகளையும், அவர்களது அபத்தக் கருத்துகளையும் ஏற்றமை. 

5) தமிழ் மன்னர்களைத் தமிழ் மன்னர்களே காட்டிக் கொடுத்தல் (மாலிக்கபூரை வரவேற்றல், மதுரை வீரபாண்டியன்- சுந்தர பாண்டியன் போராட்டம்) 

6) குறிப்பிட்ட சிலரை வீர வழிபாடு செய்தல், அடிமைப்புத்தி ஏற்பட்டதன் விளைவு இது. திரைப்பட நடிகனையும், நடிகையையும் வழிபட நேர்ந்தது. 

7) சாதி சமயப் பிணக்குகள், வலங்கை - இடங்கை போராட்டம் இன்னபிற தமிழனைத் தமிழனாகக் காட்டாமல், சாதி சமயப் பிரிவினை உடையவனாகக் காட்டுதல். 

8) அரபியக் கொள்ளைக் காரர்களால் தமிழரது கடல் வாணிகமும் கடல் ஆதிக்கமும் குன்றத் தொடங்கல். 

9) இடைத் தரகராக மாறிய அரேபியரும், ஐரோப்பியரும் தமிழர் வணிகத்தைச் சீரழித்தல். 

10) கல்விக் கூடங்கள் பாமரருக்கு இல்லை. 

11) மேற்கல்வி பூணுால் பார்ப்பனனுக்கு மட்டுமே.(ராமப்பையனின் குளறுபடிகள்) 

12) போர் முறையில் துப்பாக்கியும், பீரங்கியும் ஆங்கிலேயரின் திறமையை உயர்த்தியது. தமிழர் வீரத்தின் தரத்தைத் தாழ்த்தியது. 

13) மிளகாய் மலிவாக வந்தது. மிளகின் ஆதிக்கம் குன்றியது. 

14) ஐரோப்பியர் இயந்திரங்கள் மூலம் துணிகளை நெய்து இந்தியத் துணிவணிகத்தை வீழ்த்தினர். 

15) இரும்பு உற்பத்தி, கப்பல் கட்டுதல், போன்ற பல முயற்சிகளுக்கு ஆங்கிலேய கும்பினியர்களும் அதன்பின் வந்த ஆங்கிலேயரும் பல்வேறு தடைகள் விதித்தனர். எந்தெந்த காரணங்களால் தமிழ் நாகரிகம் உச்சம் பெற்றதோ, அதற்கு மாறான காரணங்களால் தமிழ் நாகரிகம் வீழ்ச்சியுற்றது. 

சுழலும் இயற்கையின் விதி. 

இயற்கை எப்பொழுதும் முடங்கிக் கிடப்பதில்லை. அஃது ஒரு சுழற்சியின் பாற்பட்டது. சுழல் விதிப்படி கீழிருப்பது மேலே வரும். மேலே இருப்பது கீழே செல்லும். தற்காலிகமாகத் தாழ்ந்திருக்கும் தமிழ் நாகரிகம் மேலே வரவேண்டிய காலம் வந்து கொண்டிருக்கிறது. 

அன்று மிளகும் பிற வாசனைப் பொருட்களும் தமிழனின் வணிகக் களத்தைப் பெருக்கியது. இன்று.. கணிணியும் மென்பொருள் ஏற்றுமதியும் தமிழகத்திற்குப் பல்லாயிரம் கோடி ரூபாயை அள்ளித் தருகிறது. 20 ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு மாநாட்டில் பேசியதை இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். - கணினி இயற்கைக்கு ஒரு வரம். இன்னும் 50 ஆண்டுகளில் தமிழனின் வறுமை முற்றிலும் ஒழிந்துவிடும். மீண்டும் தமழ் நாகரிகம் உலகில் அரங்கேறும். தமிழ் உணர்வு இப்போது 2 விழுக்காடு மட்டுமே உள்ளது. இதனை 5 விழுக்காடு ஆக்கிவிட்டால் தமிழ் நாகரிகம் மீண்டும் உச்சம் பெறும். கணினி தமிழகத்திலலும் இந்தியாவிலும் பொற்காலத்தை உருவாக்கி உள்ளது. இதை மறுக்க முடியுமா? ஏன் மாற்றிவிடத்தான் முடியுமா? இன்னும் 50 ஆண்டுகளில் கணினி கை கொடுக்கும். அதன்பின் உயிரியல், உயிரி வேதியல், போன்றன மேலும் ஒரு 50 ஆண்டுகளுக்குத தமிழனுக்கு வரமளிக்கும். இலங்கைப் பிரச்சனையால் தமிழ் உணர்வு இன்னும் பல்கிப் பெருகும். மனநெருக்கம் மிகுதியாகும். கல்வி, மேலாண்மை, தத்துவம், மருத்துவம், மொழியியல் போன்ற சில துறைகள் தமிழ் நாகரிகத்திற்கு மேலும் சில ஐம்பது ஆண்டுகளுக்கு உதவி புரியும். 

சில சுருக்கு வழிகள். 

 தமிழின உணர்வு மேலோங்கிட கவிஞர்களும், எழுத்தாளர்களும், ஆவண செய்ய வேண்டும. அரசியலில் கன்னடப் பார்ப்பனப் பெண்களும், மலையாளத் தெலுங்குத் திரைப்பட நடிகர்களும் வருவதை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். பரம்பரைத் தமிழனே தமிழகத்தை ஆள வேண்டும். இதனைக் கட்டாயமாக்க வேண்டும். மாநில சுயாட்சியைக் காட்டிலும் அதிகப்படியான சுயாட்சியைக் கோரிப் பெற வேண்டும். மைய அளவில் கூட்டாட்சி, இராணுவம், அயல்நாட்டுத்துறை, நிதி நிர்வாகம், போன்ற ஒரு சில துறைகளே மைய அரசிடம் இருத்தல் வேண்டும். மாநில தமிழ் அரசு, பிற நாடுகளில் வாழும் தமிழருக்கு தமிழ்க் கல்வி, பொறியியல், மருத்துவ மேற்கல்வி போன்ற துறைகளில் பயிற்சியை மலிவாகக் கொடுக்க வேண்டும். அவர் தம் ஆற்றலையும், அறிவையும், பயன்படுத்த வேண்டும், தமிழக அரசு தமிழ் நாகரிகத்தை உலகெங்கும் பரப்பிட தனிப்பட்ட அறிஞர் குழுக்களை உருவாக்க வேண்டும். இவர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் தமிழ் நாகரிகத்தைப் பரப்பிட வேண்டும். 

தன்னப்பிக்கையே நன்னம்பிக்கை முனை 

சோர்ந்து கிடக்கும் தமிழனுக்கு இன்று தேவை பணமல்ல. வீரவுரைகள், எழுச்சியுரைகள், இவையே போதும். தன்னம்பிக்கையை ஊட்டிவிட்டால், எளிதில் கிடைப்பது வெற்றியாகும். பெரு வெற்றியாகும்.