Thursday 13 November 2014

சாம்பல் துகள்களிலிருந்து ஃபீணிக்சாய் எழுந்த சான்றோர்கள்

சான்றோர் உயர்வு


1860ம் ஆண்டுகளின் சம்பவங்கள் இவை! ஒருவரின் பொருளாதாரம் என்பது அவரின் மொத்த வாழ்க்கையையும் மாற்றி விடுகின்றது. சமூகத்தில் தனியான மரியாதை முதல் தனித்துவம் வரைக்குமாய் அவரைப் பற்றிய மொத்த கருத்துக்களும் மாற்ற காரணமாக இருந்து விடுகின்றது. நேற்று அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை விட இப்போது அவனால் நமக்கு என்ன லாபம் என்பதை மட்டுமே பார்க்கக்கூடிய சமூகத்தில் இது பெரிதான ஆச்சரியமல்ல. தனி மனிதன் வாழ்க்கை மட்டுமல்ல. ஒரு நாட்டின் சரித்திரமே அந்த நாடு பெற்றுள்ள பொருளாதார வளத்தை வைத்து தான் மாற்றம் பெருகின்றது. நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் நாடார் இன மக்களின் சமூக வாழ்க்கையென்பது என்பது முற்றிலும் மாற உதவியதும் இந்த பொருளாதாரமே. இவர்கள் பெற்ற பொருளாதாரமே பலவகையிலும் உயர உதவியாய் இருந்தது.  உயரும் போது உருவான தடைகளையும் தகர்த்தெறிய காரணமாகவும் இருந்தது.



இராமநாதபுர மாவட்டத்தின் சுற்று வட்டாரத்தில் உள்ள நாடார்கள் தங்களை பொருளாதார ரீதியாக வளப்படுத்திக் கொண்டு வாழ்ந்த வாழ்க்கை  என்பது மற்ற இனமக்களுக்கு உறுத்தலாக இருந்ததை விட இவர்களை சமூகத்தில் கீழ்நிலையில் வைத்துப் பார்த்த ஆதிக்க இன மக்களுக்கு பெரும் சவாலாக இருந்ததோடு ஒருவிதமான பொறாமையை உருவாக்கியது. இதில் முக்கியமாக பிராமணர்கள், வேளாளர்கள் கடைசியாக மறவர்கள். நாம் முன்னேற முடியவில்லை என்பதை விட முன்னேறியவர்களை எப்படி தடுப்பது?  இது தானே இன்றுவரைக்கும் நடந்து வருகின்ற நிகழ்வாக இருக்கிறது.  இன்றைய தமிழ்நாடு அன்று வெள்ளையர்களின் ஆளுமையில் இருந்த போதிலும் அவர்களுக்கு விசுவாசமான பாளையக்காரர்கள், ஜமீன்தாரர்கள், குறுநில மன்னர்கள் என்று ஒரு அடிமை பட்டாளத்தை வைத்துக் கொண்டு ஆட்சி புரிய அவர்களுக்கு பெரிதான சுமைகள் இல்லை.  ஒவ்வொரு கலவரங்களும் கணக்கில்லா பிரச்சனைகள் உருவாக இருந்தாலும் கடைசியில் வெள்ளையர்கள் எடுக்கும் முடிவென்பது யாருக்குச் சாதமாக இருக்கும் என்பதை இங்கே சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஒவ்வொரு பகுதிகளிலும் பல கலவரங்கள் உருவாகத் தொடங்கியது.

அருப்புக்கோட்டை,பாளையம்பட்டி பகுதிகளில் தொடர்ச்சியாக காரணமில்லாமல் கலவரங்கள் உருவாகத் தொடங்கியது.  1874 ஆம் ஆண்டு மூக்கன் என்ற நாடார் வழக்கொன்றை தொடுத்தார்.  நான் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் வணங்கச் சென்ற போது என்னை பலவந்தப்படுத்தி கோவிலில் இருந்து வெளியே தள்ளினார்கள் என்று கோவில் ஊழியர்கள் மேல் வழக்கு தொடுத்தார்.  இதுவொரு தொடக்கமே. ஆனால் இதனைத் தொடர்ந்து மதுரையைச் சுற்றியிருந்த ஒவ்வொரு பகுதியிலும் இது போன்ற பல வழக்குக்ள வெளியே வர ஆரம்பித்தது.


1878 ல் ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட முன்சீப் பதவியில் இருந்தவர் புதிய சட்டமொன்றை இயற்றினார்.  நாடார்கள் ஆலயங்களின் நுழையக்கூடாது. தேங்காய் உடைக்கக்கூடாது என்றார்.  ஆனால் நாடார்கள் சாமி ஊர்வத்தை நடத்திக் கொள்ளலாம் என்று போனால் போகிறதென்று அனுமதி வழங்க இது அடுத்த அக்கப் போர்களை உருவாக்கத் தொடங்கியது. சாத்தூர் (1885) பகுதியில் இது போன்ற ஊர்வலத்தில் கலவரம் உருவாகத் தொடங்கியது. இதற்கென்று தனியாக ஒரு காரணத்தை சுட்டிக்காட்டினார்கள். நாடார்கள் தாங்கள் வாழும் பகுதிகளில் மட்டுமே ஊர்வலம் நடக்க வேண்டும்.  மற்ற பகுதிகளுக்கு கொண்டு வரக்கூடாது என்றனர். இவற்றைப் பார்த்த எட்டையபுரம் ஜமீன்தார் கழுகுமலை (1895) பகுதியில் தேரடித் தெருக்களில் நாடார்கள் ஊர்வலம் நடத்தக்கூடாது என்று தடையுத்தரவை முன்னமே வாங்கி வைத்துக் கொண்டார். நாடார் இனமக்கள் ஒவ்வொன்றையும் உடைத்து மேலே வந்துவிட எப்படி துடியாய் துடித்துக் கொண்டிருந்தார்களோ அதைப் போலவே வேளார்களும், மறவர்களும் சேர்ந்து நாடார்களுக்குண்டான எந்த உரிமைகளையும் கொடுத்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர்.  எட்டயபுரம் ஜமீன்தாரின் அக்கிரமங்களை பொறுக்கமுடியாத நாடார் இனமக்கள் இந்த பகுதியில் கிறிஸ்துமதத்தை (கத்தோலிக்கம்) தழுவியதோடு வழிபாடு நடத்துவதற்காக என்று தேரடி தெருவில் ஒரு கடையை வாங்கினர். 

காரணம் எட்டபுரம் ஜமீன்தார் மூலம் நடத்தப்படும் தேரோட்ட நிகழ்ச்சிகள் கடைத் தெருவின் வழியே தான் வரும் கிறிஸ்துவத்திற்கு மாறிய நாடார் இன மக்கள் தாங்கள் விலைக்கு வாங்கிய இந்த கடைக்கு முன்னால் பந்தல் போட்டு விட்டால் வரும் தேர் முன்னேறிச் செல்ல முடியாது.  இது அடுத்த கலவரத்திற்கு அச்சாரமாய் இருக்க கல்வீச்சு முதல் தொடங்கி பெரிய கலவரத்தில் கொண்டு போய் நிறுத்தியது.  உருவான கலவரம் (1899) நாடார்களின் மறக்க முடியாத ஒரு பெரிய நிகழ்வாக முடிந்து விட்டது. சிவகாசியில் முதல் முறையாக களத்தில் நின்று கொண்டு மறவர்களும் நாடார்களும் நேருக்கு நேர் மோத ஆரம்பித்தனர். இது போன்ற கலவரங்கள் ஏன் உருவானது? 1890 ஆம் ஆண்டு முதல் சிவகாசி பகுதியில் சமஸ்கிருதமயமாக்கல் சற்று விரைவாக நடந்தேறத் தொடங்கியது.  ஒவ்வொரு நாடார்களும் தங்கள் பிராமணர்கள் போலவே மாற்றிக் கொள்ளத் தொடங்கினர். பிராமணர்களைப் போல பஞ்சகஞ்ச வேட்டி முதல் தலையில் குடுமி, பூணூல் வரைக்கும் என்று தங்களை மாற்றிக் கொண்டதுடன் தங்கள் இன மக்களையும் அது போல மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தங்கள் சங்கங்களின் மூலம் அறிவுறுத்தத் தொடங்கினர். குறிப்பாக சிவகாசி நாடார் இனமக்களின் தலைவராகயிருந்த செண்பககுட்டி நாடார் இதை தீவிரமாக முன்னெடுக்கத் தொடங்கினர். 

மற்றவர் பொறாமை

இவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்த வேளார்களின் கண்ணில் கோபம் கொப்பளிக்க வாய்ப்புகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்க கிடைத்த வாய்ப்பு சிவகாசி கலவரம். ஊரடங்கு உத்திரவு போடும் வரைக்கும் கொண்டு வந்து நிறுத்தியது. இந்த கலவரங்களில் முக்கிய பங்காற்றியவர்கள் மறவர் இன மக்கள். மற்றொரு காரணம் நாடார்கள் தங்களை பல்வேறு விதமாக மாற்றிக் கொள்ள முயற்சி மேற்கொண்டதை விட ஏறக்குறைய இன போதை வந்தவர்களைப் போலவே உச்சக்கட்ட நடவடிக்கைளையும் செய்யத் தொடங்கினர். சிவகாசி என்பது நாடார்களின் பூர்விக நகரமல்ல. ஆனால் இதே காலகட்டத்தில் இந்த நகரின் மொத்த ஜனத்தொகையே 12000 பேர்கள் தான்.  ஆனால் இதே பகுதிகளில் தனியிடங்களில் வசித்த மறவர்களின் எண்ணிக்கை வெறும் 500 பேர்கள் மட்டுமே.  பொருளாதார ரீதியாக பின்தங்கியிருந்த மறவர்களுக்கு வேறென்ன செய்ய முடியும்? இவர்களை இதுபோன்ற நடவடிக்கையில் பயன்படுத்திக் கொண்டவர்கள் வேளாளர் இனமக்களே. இவர்களுக்கு பின்புலமாக இருந்தவர்கள் பிராமணர்கள். திட்டம் வகுப்பது ஒருவர். இதை கொண்டு செலுத்துவது மற்றொரு. களத்தில் இறங்குபவர்கள் மறவர்கள். நாடார்களின் பொருளாதார வாழ்க்கையைப் பார்த்து வேளார்கள் எந்த அளவிற்கு எரிச்சல் பட்டார்களோ அந்தஅளவிற்கு பிராமணர்களுக்கும் உள்ளே புகைச்சல் இருந்தாலும் அதை வெளிப்படையாக காட்டிக் கொள்ளவில்லை.


காரணம் நாடார்களின் பொருளாதார வாழ்க்கை பிராமணர்களுக்கு பல சமயங்களில் உதவியாய் இருந்ததும் உண்மை.  நாடார்கள் தாங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு நல்ல நேரம் குறிப்பது முதல் பல விசயங்களுக்கு இந்த பிராமணர்களை பயன்படுத்திக் கொண்டனர்.  இதற்கு மேலாக தங்கள் நிகழ்ச்சிகளில் பல்லாக்கு தூக்குவதற்கு மறவர்களை பயன்படுத்திக் கொண்டனர்.  இதே மற்வர்களைத்தான் வேளாளர்கள் அடிதடிக்கும் பயன்படுத்திக் கொண்டனர்.  தொடர்ந்து வந்த ஒவ்வொரு கலவரத்தின் மூலம் நாடார்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்ட போதிலும் ஒவ்வொரு இனமும் இதே நாடார்களிடம் பலவிதங்களிலும் கடன்பட்டிருப்பது புரிய ஆரம்பித்தது. சமூகத்தின் பொருளாதார வாழ்வில் தங்களை விட நாடார்கள் எல்லா நிலையிலும் உயர்ந்த நிலையில் இருந்த போதிலும் வேளார்களால் ஒரு அளவிற்கு மேல் நாடார்களை பணிய வைக்கமுடியாமல் தோற்க தோற்க மனதில் வெஞ்சினம் உருவாகத் தொடங்கியது. ஒவ்வொரு கலவரமும் உருவாவதும் அதுவே மேலும் மேலும் வளர்வதற்கும் இந்த கோவில்களே முக்கிய காரணமாக இருந்தது.  சிவகாசியில் நடுநாயமாக இருந்த சிவன் கோவிலில் நாடார்கள் நுழைய அனுமதியில்லை.  இதற்கென்று நாடார்கள் உருவாக்கியிருந்த பத்ரகாளி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில் மூலமே தங்களை நிலைநாட்டிக் கொள்வதும், தங்களின் கூட்டங்களை இதே கோவிலில் நடத்திக் கொண்டிருந்த போதிலும் நாடார்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.  

ஆலயங்களில் நுழைய எங்களுக்கும் உரிமை இருக்கிறது என்று அடுத்தடுத்த ஒவ்வொன்றையும் உருவாக்கிக காட்ட நாடார்களின் ஒவ்வொரு செயல்பாடுகளும் தீராத பகையை, கலவரத்தை உருவாக்கத் தொடங்கியது.  கோவில் திருவிழாக்கள் நிறுத்தப்பட்டு ஊரடங்கு உத்திரவு போடும் அளவிற்கு பெரிய பிரச்சனைகளை கொண்டு வந்து சேர்த்தது. இதுவே நாடார்களை பழிதீர்க்க, அடக்கி வைக்க சரியான தருணமென்று ஒரு பெரும் கூட்டணி உருவானது.  இந்த கூட்டணியில் முக்கியமாக இருந்தவர்கள் மறவர் குல ஜமீன்தாரர்கள், பிராமணர்கள், வேளார்கள் தலைமை வகித்தனர். இதற்காகவே இவர்கள் மேற்கு இராமநாதபுரம், வடக்கு திருநெல்வேலி, தெற்கு மதுரைப் பகுதிகளில் வேலைவெட்டி இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்த மறவர்கள், கள்ளர்கள், பள்ளர்களை கொண்டு வந்து இறக்கினர். சிவகாசி மற்றும் சுற்றிலும் உள்ள நாடார் வீடுகளை சூறையாடி கொள்ளையடிக்கத் தொடங்கினர். ஒவ்வொரு பகுதிகளாக முடித்து சிவகாசிக்குள் நுழைந்த போது வேளார்களும் மற்ற சமூகத்தினர்களும் சொல்லிவைத்தாற் போல ஊரில் இருந்து வெளியேறி விட நாடார் சமூகத்தினர் மட்டும் தனித்து விடப்பட்டனர்.

1899 ஜுன் 6 கலவர பூமி

திட்டமிட்டபடி மறவர்கள் அதிகாலை வேலையில் சிவகாசியின் நான்கு புறமும் சூழந்து கொண்டனர். இப்படி ஒரு பெரிய கலவரம் நடக்கப் போகின்றது என்பதை எதிர்பார்த்து நாடார்களும் தயாராகவே இருந்தனர். முந்தைய நாட்களில் வெளிப்புறங்களிலிருந்து படுக்கை விரிப்புக்குள் சுற்றி முடிந்தவரைக்கும் பலவிதமான ஆயுதங்களை கடத்தி வந்திருந்தனர். அத்துடன் அதிக அளவில் துப்பாக்கிகளையும் கொண்டு வந்திருந்தனர். மறவர்கள் வரும் பாதையில் மரங்களை வெட்டி பல தடுப்புகளை உருவாக்கி வைத்திருந்தனர். சில இடங்களில் வருபவர்கள் தங்கள் கூட்டத்திற்குள் மாட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே வெறுமனே விட்டு வைத்திருந்தனர். வசதியாய் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் முன்னேற்பாடாக தங்கள் பணம், நகை போன்றவற்றை வெவ்வேறு இடங்களில் கொண்டு போய் பதுக்கி வைத்தனர். ஏழை மக்களை, வயதானவர்களை நகரின் மத்திம பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு பாதுகாப்பான வீடுகளில் தங்க வைக்கப்பட்டனர். ஒரு வாரத்திற்கு முன்பாகவே பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாப்பான் வெவ்வேறு இடத்திற்கு அனுப்பி வைத்தனர். உள்ளேயிருக்கும் மற்ற பெண்களுக்கு பாதுகாப்பாக தெற்கு ரத வீதியில் அரண் போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அரண் போன்ற பகுதியில் உயரத்திலிருந்து கீழே பார்க்கும் மறவர்கள் மேல் வீசி எறிய வேண்டி மிளகாய்ப் பொடி, கற்கள், கொதிக்கும் எண்ணெய் போன்றவற்றையும் தயார் நிலையில் வைத்திருந்தனர். மறவர்கள் வருவதை தெரியப்படுத்த உயரமான பகுதிகளில் சிறுவர்களை அமர வைத்திருந்தனர். தொலைவில் இருந்து வருபவர்களை கண்காணிக்க தொலைநோக்கி கருவிகளும் வழங்கப்பட்டு இருந்தது. 

இது போன்ற ஒரு சம்பவம் நடக்கப் போகின்றது என்பதாக ஏராளமான புகார் மனுக்கள் அப்போது நெல்லை மாவட்ட ஆட்சியாளராகவும், மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டாகவும் செயல்பட்டுக் கொண்டிருந்த வெள்ளையர் ஸ்காட் அவர்களிடம் போய்ச் சேர்ந்தது.  அவரோ தேவைப்படும் அத்தனை முன்னேற்பாடுகளை செய்து வைத்துள்ளோம் என்று சொல்லிவிட்டு ஒதுங்கி விட்டார். இந்த இடத்தில் குறிப்பிடத்தக்க ஆச்சரியம் என்னவென்றால் திருநெல்வேலியைச் சுற்றிலும் இருந்த ஒவ்வொரு கிராமத்து தலைவர்களும் நாடார்களுக்கு எதிராகவே இருந்தனர். இவர்களைப் போலவே அதிகாரியாக இருந்த ஸ்காட் கூட நாடார்களின் கோரிக்கைகளை செவிமடுக்கவில்லை. நாடார்களை எதிர்த்த அத்தனை பேர்களும் ஆதிக்க சாதியாளராக இருக்க வெள்ளையர்கள் இவர்களிடம் பெயருக்கென்று உறுதிமொழி வாங்கிக் கொண்டு நகர்ந்து விட்டனர்.  மறவர்களின் ஆட்டம் மே மாதம் 23ந் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து தொடங்கியது. அங்கிருந்த நாடார்களின் சொத்துக்களை கொள்ளையடித்து அவர்களை ஊரில் இருந்து வெளியேற்றியதோடு சிவகாசியை நோக்கி முன்னேறிச் சென்றனர். இப்போது நமக்கு ஒரு கேள்வி எழவேண்டும்.  ஏன் மறவர்களுக்கு இத்தனை ஆத்திரமும் கோபமும் நாடார்கள் மேல்? அதற்கு வெள்ளைச்சாமி தேவரைப் பற்றி இந்த இடத்தில் சுருக்கமாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இப்போது நாம் அடுத்து இராமநாதபுர மாவட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் முக்குலத்தோர் பிரிவில் வருகின்றவர்கள் இந்த இடத்தில் பார்க்க வேண்டும். இந்த நேரத்தில் இவர்கள் அறிமுகம் ஆகின்றார்கள். காரணம் இருக்கிறது.  இப்போது அரசியல்வாதிகள் மத்தியில், குறிப்பிட்ட அரசியல் கட்சியில் இவர்களின் ஆதிக்கம் அதிகம்.  இவர்களைப் பற்றிய தகவல்கள் வரலாற்றில் ஏராளமாய் கொட்டிக் கிடக்கின்றது.  வேகமும், வீரமும், கோபமுமாய் வாழ்ந்த இவர்களின் வாழ்க்கை தற்போது ஓரளவுக்கு சகஜநிலைக்கு மாறியுள்ளது என்பதை எடுத்துக் கொள்ளலாமே தவிர இன்றும் கிராமப்புறங்களில் இவர்களின் ஆதிக்கம் தான் அதிகம்.  முக்குலத்தோர் என்பது மூன்று பிரிவுகளைக் கொண்டது.  கள்ளர், மறவர், அகமுடையார் என்பதாகும்.  விலாவாரியாக பிறகு பார்ப்போம்.  இப்போது நாம் தேவரிடம் செல்வோம். 

வெள்ளைச்சாமி தேவரின் பொறாமைத் தீ

இப்போது ஜாதி அரசியல் வைத்து விளையாட்டு காட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு இவரை தெரிந்து இருக்குமா என்பது சந்தேகமே? இவர் தான் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் தாத்தாவின் பெயர் தான்  வெள்ளைச்சாமி தேவர். வெள்ளைச்சாமி தேவிரின் அப்பா பெயரும் முத்துராமலிங்கமே.  கமுதியில் உள்ள பசும்பொன் கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருந்தவர்.  தனது தந்தை முத்துராமலிங்கத் தேவர் உருவாக்கி வைத்திருந்த மிகப் பெரிய சொத்துக்கு சொந்தகாரர். மொத்தில் இந்த சுற்றுவட்டார பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருந்த மறவர் இன மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கிக் கொண்டிருந்தார். மறவர் இன மக்களைப் போலவே மற்ற இன மக்களும் தன்னை மதிக்க வேண்டும் என்ற வெள்ளைச்சாமி தேவரின் கொள்கையில் தான் நாடார்களும் மறவர்களுக்கும் உண்டான விரிசலின் தொடக்க அத்தியாயம் உருவானது.  

இதே காலகட்டத்தில் இவரைப் பார்க்கும் மற்ற இன மக்கள் தங்கள் தோள் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு அல்லது கீழே இறக்கி மரியாதை செய்வது வழக்கம். ஆனால் நாடார் இன மக்கள் இது போன்ற விசயங்களை கடைபிடிப்பதில்லை. இதன் காரணமாகவே நாடார் இனமக்களுக்கு வேலை செய்து கொண்டிருந்த வண்ணார் இன மக்களை நாடார்களுக்கு வேலை செய்யக்கூடாது என்று மறைமுக கட்டளை பிறபித்து இருந்தார். இதன் தொடர்ச்சியாக சுற்றியுள்ள கிராமத்து மக்கள் நாடார்களுடன் எந்த வரவு செலவும் வைத்துக் கொள்ளக்கூடாது என்பதிலிருந்து தொடங்கி பல நாடார்களுக்குண்டான எதிர்ப்பு சமாச்சாரங்களை உருவாக்கிக் கொண்டிருந்தார். உச்சகட்டமாக மறவர்கள் தாங்கள் தெருவில் பார்க்கும் நாடார்கள் அணிந்திருந்த பூணூலை அறுத்து அவற்றை இறந்தவர்களுக்கு கைவிரல்கள், கால் கட்டைவிரல்களில் கட்டுவதைப் போல கட்டி பழித்துக் காட்டினர். ஏறக்குறைய 16 மாதங்கள் இதுபோலவே நடக்க இறுதியில் எதிர்ப்பு வலுக்க வெள்ளைச்சாமி தேவர் கைது செய்யப்பட்டு ஐந்து வருடங்கள் சிறைத்தண்டனை பெற்ற பிறகே இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது.. இவற்றைப்பற்றி மேற்கொண்டு பல விபரங்களை தொடர்ந்து வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்.  

ஆனால் இப்போது நடக்கப் போகும் கலவரத்திற்கு காரணகர்த்தாவாக இருக்கும் மறவர்களை அடக்க வெள்ளைச்சாமி தேவருக்கு நாடார் சங்கத்திலிருந்து ஒரு வித்யாசமான கடிதம் அனுப்பப்பட்டது.

"4000 பேர்களுக்கு தலைவராக இருக்கும் வெள்ளைச்சாமி தேவர் உண்மையிலேயே மறவராக இருந்தால் நாடார்களை தாக்குவதற்கு மறவர் கூட்டம் பகலில் வர வேண்டும்.  எந்த இடம் என்பதையும் தெரிவிக்கவும். நாங்கள் தயாராக இருக்கின்றோம்" என்று கடிதம் எழுதி அனுப்பி வைத்தனர்.

ராஜா எம். பாஸ்கர சேதுபதி


இராமநாதபுரம் ராஜாவின் பெயர் ராஜா எம். பாஸ்கர சேதுபதி. இவர் ஆளுமைக்குள் இருந்த பகுதிகளில் கமுதியும் ஒன்று. இவரும் மறவர் இனத்தை சேர்ந்தவரே. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்த ஊரில் வாழ்ந்தவர்கள் ஏழாயிரத்திற்கும் குறைவான பேர்களே இருந்தனர். கமுதியைச் சுற்றிலும் இருந்த கிராமங்களில் மறவர்களே அதிகமானோர் வாழ்ந்து வந்தனர். இந்த பகுதியில் செயல்பட்டு வந்த வியாபாரங்கள் பெரும்பாலும் முஸ்லீம் மற்றும் நாடார்களையே சார்ந்து இருந்தது. நாம் ஏற்கனவே சொன்ன மாதிரி இந்த கால கட்டத்தில் நாடார்கள் தங்களை பிராமணர்கள் போலவே மாற்றிக் கொண்டு செழிப்பான முறையில் வாழ்ந்து வந்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ராஜாவின அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வந்தது. நாடார்கள் திருவிழா காலங்களில் வழிபாடு சம்மந்தமான விருந்தொன்றை கமுதி பகுதியில் வைக்க ராஜாவின் அறக்கட்டளைக்கு அனுமதி கேட்டு எழுதியிருந்தனர். 

நாடார்கள் ஆலய பிரவேசம் செய்யாமல் குறிப்பிட்ட விசயங்களுக்கு மட்டும் அனுமதி கிடைத்தது. ஆனால் இது போன்று ஒவ்வொன்றாக எல்லை மீறிக் கொண்டிருந்த நாடார்களின் பழக்கவழக்கங்களினால் வெள்ளைச்சாமி தேவர் நாடார்களுக்கு எதிர்ப்பு அணி ஒன்றை மெதுவாக உருவாக்கிக் கொண்டிருந்தார். காரணம் பொருளாதார ரீதியாக வளத்துடன் வாழ்ந்து கொண்டிருந்த நாடார் இன மக்கள் தனி ஆவர்த்தனம் செய்து கொண்டிருந்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார் என்பதே உண்மையாகும். இதே வாய்ப்பு சிவகாசி கலவரம் மூலம் லட்டாக வந்து சேர்ந்தது.  நாடார்கள் அனுப்பி கடிதமும் வந்த சேர எறிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல கலவரத்தீ கொளுந்து விட்டு எறியத் தொடங்கியது. சிவகாசியில் நடந்த கலவரம் சுமார் இரண்டு மணி நேரம் மட்டுமே நடந்தது.  கொள்ளையிட்ட பொருட்களை எடுத்துச் செல்வதற்காக மறவர்கள் தங்களுடன் 12 மாட்டு வண்டிகளையும் கொண்டு வந்து இருந்தனர். 886 நாடார்களின் வீடு அழிக்கப்பட்டது. சுமார் 21 நாடார்கள் கொல்லப்பட்டு இருந்தனர்.  கலவரம் முடிந்த பிறகே சொல்லிவைத்தாற் போல் வெள்ளையர் ஸ்காட் வந்து இறங்கினர். இந்த கலவரம் மேற்கொண்டு நகர்ந்து மறவர்களின் அடுத்த இலக்கு விருதுநகராக இருக்கக்கூடும் என்பதற்காக 50 சிப்பாய்களை அங்கு அனுப்பி வைத்தார். இதே ஸ்காட் தன்னுடைய பொறுப்புகளை தனக்கு கீழேயிருந்த அதிகாரியிடம் ஒப்படைத்துவிட்டு, சென்னை அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டு இருந்த விசாரனை கமிஷன் அதிகாரியிடம் மற்ற பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு ஆளை விட்டால் போதுமென்று ஆஸ்திரேலியாவுக்கு சென்றுவிட்டார். காரணம் மறுபடியும் மறவர்கள் சிவகாசியை மற்ற பகுதிகளை மீண்டும் வந்து தாக்குவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களின் நம்பிக்கை பொய்த்துப் போகும் வண்ணம் தென்காசியில் தொடங்கி செங்கோட்டைப் பகுதியில் நுழைந்து தாக்கத் தொடங்கினர்.  ஒவ்வொரு தாக்குதல்களும் மிருகத் தனமாக இருந்தது.

கல்வியே சிறந்த ஆயுதம்

  ஜுலை மாதம் கலவரம் முடிவுக்கு வந்த போது 150 கிராமங்கள் கலவரத்தினால் பாதிக்கப்பட்டு இருந்தது. சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்ட இராணுவம் கட்டுக்குள் கொண்டு வந்தது.  கலவரம் நடந்த ஆறு வார காலத்தில் 2000 பேர்கள் கைது செய்யப்பட்டனர். விசாரிக்க தனியாக ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. 500க்கும் மேற்பட்டவர்கள் குற்றவாளி என்று தண்டிக்கப்பட்டனர்.  ஏழு பேர்களுககு மரண தண்டனை அளிக்கப்பட்டது.  குற்றவாளிகளில் ஒருவர் கூட நாடார்களின் பெயர் இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக் விசயமாகும். இவர்கள் வைத்திருந்த பொருளாதாரம் காப்பாற்றியதா இல்லை தெளிவான திட்டமிடுதலா போன்ற குறிப்புகள் தென்படவில்லை. ஏறக்குறைய 19 ஆம் ஆண்டு பிற்பகுதிகளில் அல்லாடிக் கொண்டிருந்த நாடார்களின் சமூக வாழ்க்கை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு முடிவுக்கு வந்தது போலிருந்தது.  காரணம் அரசாங்கத்தில் பின்தங்கிய வகுப்பினர் பெறக்கூடிய சலுகைகளை அனுபவித்து வந்தபோதிலும் மதம் மாறிய நாடார் இன மக்கள் பெற்றுக் கொண்டிருந்த கல்வி வசதிகளைப் பார்த்த நாடார் இன மக்கள் முதல் முறையாக தங்கள் இனமக்களின் கல்விக்கான விசயங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினர். கிறிஸ்துவ மதபோதகர்களின் சார்பாக பாளையங்கோட்டையில் உள்ள புனித யோவான் கல்லூரி போன்று பல இடங்களிலும் தொடங்க வேண்டும் என்று ஆரம்ப கட்ட ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினர்.

ஆனால் இராமநாதபுரத்தில் ஆறு நகர நாடார்கள் வியாபாரத்தில் முன்னேறிய பிறகு உறவின் மூலம் கிடைத்த மகமையின் மூலம் முதன் முதலாக திறந்தது தான் விருதுநகர் ஷத்திரிய வித்யாசாலை (1885) உயர்நிலை பள்ளியாகும். இதுவே தொடர்ந்து 1910 ஆம் ஆண்டு நாடார் மகாஜன சங்கம் உருவாக்கப்பட்டு கல்வி கூடங்களில் அணைத்து இடங்களிலும் நிறுவவதில் முழுமூச்சாக இறங்கி அடுத்தடுத்த முன்னேற்ங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட ஆரம்பித்தனர்.

No comments: