Monday 10 November 2014

ஈழத் தமிழர்களுடைய கல்வியின் சிறப்பை உலகிற்கு பறைசாட்டிய யாழ் பொது நூலகம்........!!


ஈழத் தமிழர்களுடைய கல்வியின் சிறப்பை உலகிற்கு பறைசாட்டிய யாழ் பொது நூலகம்........!!  பதிவாள்ர்-Manuel Asir


யாழ்ப்பாணப் பொது நூலகம் கே. எம். செல்லப்பா என்னும் தமிழ் ஆர்வலர் ஒருவரால் உருவாக்கப்பட்டது. நவம்பர் 11, 1933 ம் ஆண்டில் தனது வீட்டில், சில நூல்களுடன் இவர் நடத்தி வந்த நூல் நிலையமே இது. இதனைப் பலருக்கும் பயன்படும் வகையில் விரிவுபடுத்தும் நோக்கில், செல்லப்பா அவர்களும் வேறு சில பிரமுகர்களும் இணைந்து செயல்பட்டு, இந்த நூல் நிலையத்தை யாழ் நகரின் மத்தியில் யாழ் ஆஸ்பத்திரி வீதியில் இதற்கென வாடகைக்குப் பெறப்பட்ட ஒரு சிறிய அறையொன்றுக்கு மாற்றினார்கள். அக்காலத்தில் சில நூறு நூல்களே இங்கிருந்தன.
1936க்குப் பின்னர், நூலகம் யாழ் நகர சபையிடம் கையளிக்கப்பட்டு, யாழ்ப்பாணக் கோட்டைக்கு அருகே, புதிதாகக் கட்டப்பட்ட நகர மண்டபத்துக்கு அண்மையிலுள்ள இடமொன்றுக்கு மாற்றப்பட்டது. யாழ்ப்பாண மாநகரசபை அந்தஸ்துக்குத் தரமுயர்த்தப்பட்டுப் புதிய சபை பதவியேற்றபின், இந்த நூலகத்துக்கான புதிய கட்டிடம் ஒன்றை அமைக்கும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. பல்வேறு வழிகள் மூலம் இதற்கான நிதியைத் திரட்டுவதற்கு எடுத்த முயற்சிகள் பெரும் வெற்றி பெற்றதாகச் சொல்லப்படுகிறது.



நிறுவனத்துக்கான அடிப்படைகளைத் தீர்மானித்து வழி நடத்தும் நோக்கில், அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்த பல கல்வியாளர்களையும், பிரமுகர்களையும் உள்ளடக்கிய குழுவொன்று 1953 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இக்குழு இது தொடர்பில் இந்திய நிபுணர்களினதும் உதவிகளைப் பெற்றுக்கொண்டது. இதற்கான கட்டிடத்தை வடிமைக்கும் பணியும் தமிழகத்தைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் நரசிமனன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. திராவிடக் கட்டிடக்கலைப் பாணியைத் தழுவி இரண்டு தளங்கள் கொண்ட அழகிய கட்டிடம் ஒன்றை இவர் வடிவமைத்தார்.
கட்டிடத்தை இரண்டு கட்டங்களில் கட்டி முடிக்கத் தீர்மானித்து, முதற்கட்டமாக கட்டிடத்தின் முன்பகுதிக்கான அடிக்கல் 1953 மார்ச் மாதத்தில் நாட்டப்பட்டது. 1959 இல் கட்டிடவேலைகள் முற்றாக முடிய முன்னரே, அப்போது யாழ்ப்பாண மேயராக இருந்த அல்பிரட் துரையப்பா அவர்கள் நூலகத்தின் திறப்பு விழாவை நடத்தினார்.
1980 இன் முற்பகுதியில் 97,000 திற்கும் அதிகமான புத்தகங்களையும், பல்லாயிரம் கணக்கான மருத்துவ, சமய, வரலாற்று ஏடுகளையும் கொண்டிருந்த யாழ் பொது நூலகம் ஆசியாவின் மிகப் பெரிய நூலகமாக விளங்கியது.


1950 களில் யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியின் அதிபராகப் பணிப்புரிந்தவரும், சிறந்த ஒரு கல்விமானாகத் திகழ்ந்தவருமான அருட் பிதா திமோத்தி லோங் அடிகளார் (பிரித்தானியப் பிரஜை) இந்நூலகத்தின் வளர்சிக்கு பெரும் பங்காற்றினார்.
20 ஆம் நூற்றாண்டின் முப்பதுகளின் ஆரம்பத்தில் பல ஆர்வலர்களுடைய அயராத உழைப்பினாலும், பொது மக்களினதும், பல உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களினதும் தாராளமான ஆதரவினாலும் வளர்ச்சி பெற்றிருந்த இந்த நிறுவனம் அதன் அரை நூற்றாண்டு நிறைவை அண்மித்துக் கொண்டிருந்தப் போது மே 31, 1981 இல் திட்டமிட்டு எரிக்கப்பட்டுச் சாம்பலானது.
இன்று இதன் கட்டிடம் மீளமைக்கப்பட்டுப் புதிய நூல்கள் சேர்க்கப்பட்டிருப்பினும், எரிந்துபோன பல்லாயிரம் நூல்களும், பழமை வாய்ந்த கையெழுத்துப் பிரதிகளும், வேறு பல ஆவணங்களும் திரும்பப் பெற முடியாத சோக வரலாறாகியது.

No comments: