Sunday 9 November 2014

சேவல்கட்டு - சூதாடிகளால் மறையும் நிலையில் தமிழர்பாரம்பர்யம்

சேவல்கட்டு


மன்னர் காலத்தில் தொடங்கிய இந்த சேவல்சண்டை தமிழரின் கலாச்சாரமாக இன்றளவும் பொங்கல் நாட்களில் தொடந்து  நடைப்பெற்று வருகிறது. தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி,  கரூர், அரவக்குறிச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இந்த சேவல் சண்டை போட்டி பிரபலம். கத்தி கட்டி சேவல்களை மோதவிடுவதால் சேவல்கள் அதிகம் இறக்க நேரிடுவதோடு, ரத்தகோரத்தோடு சண்டை நடத்தப்படுவதால் அதற்கு மிருக வதை எதிர்ப்பு எழும்பவே கத்தி கட்டி சண்டையிடும் முறைக்கு அரசாங்கம் தடைவிதித்தது. நீதிமன்ற அனுமதியுடன் அந்தந்த  மாவட்ட ஆட்சியரின் அறிவுரையின்படி தற்போது சேவல் சண்டை போட்டி கத்திகட்டப்படாத  வெற்றுக்கால் சேவல் சண்டைபோட்டியாக நடத்தப்பட்டு வருகிறது.சேவற்சண்டை உலகெங்கும் நடைபெறுகிறது. நீண்ட பராம்பரியம் கொண்டது. இந்தியா சீனா பெர்சியா நாடுகளில் பலநூற்றாண்டுகாலமாக சேவற்சண்டைகள் தொடர்ந்து நடந்து வந்திருக்கின்றன. லத்தீன் அமெரிக்க நாடுகளில் சேவற்சண்டைகள் மிக பிரலமானவை. நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் சண்டை சேவல் பற்றி எழுதியிருக்கிறார். இன்றும் பெரு மற்றும்  மெக்சிகோவில் சேவற்சண்டைக்கு மிகுந்த வரவேற்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இந்த சண்டை சென்றிருக்க கூடும் என்று சொல்கிறார்கள். இன்றும் இந்தோனேஷியாவில் சேவற்சண்டை ஆரவாரமாக நடைபெறுகிறது.சமீபத்திய வருசங்களில் நான் சேவற்போரை காண சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. நகர வாழ்வில் சேவல் கண்ணில் படுவதுமில்லை. சேவற்சண்டைகள் சூதாட்டம் போலாகிவிட்டது என்று வெள்ளைக்காரர்கள் அதற்கு தடை விதித்தார்கள். இன்றும் அந்த தடை இருக்கிறது. அன்றும் இன்றும்  தடையை மீறி ரகசியமாக சேவற்சண்டைகள் நடத்தபடுகின்றன. மதுரையில் ஆற்றில் அழகர் இறங்கும் திருவிழா காலங்களில் அருகாமை கிராமங்களில் இன்றும் சேவற்சண்டை நடக்கிறது. மதுரையை அடுத்த வீரபாண்டி கோவில் திருவிழாவில் சேவற்சண்டை நடப்பதை நானே பல ஆண்டுகள் பார்த்திருக்கிறேன்ஒவ்வொரு வருசமும்  தைமாசம் முதல் சித்திரை மாதம் வரை ஐந்து மாதங்களே சேவல்போர் சீசன். ஜமீன்தார்கள். பண்ணையார்கள் வீடுகளில் போர்சேவல்களுக்கு என்றறே தனியான வளைகள் இருக்கின்றன.  சேத்தூர் ஜமீன் குடும்பத்தினர் இதில் மிகவும் ஈடுபாடு கொண்டவர்கள்

சண்டை சேவல்

சண்டைசேவலை பெட்டைகோழியுடன் இணையவைத்து முட்டையிலிருந்து வெளிவரும் போதே குஞ்சுபருவத்திலேயே சண்டைசேவலை பிரித்தெடுத்து மற்ற கோழிகளுடன் சேரவிடாமல் எப்போதும் தனியாக கூண்டில் வைத்து பராமரித்து வருகின்றனர். நூரி, ஜாவா, சீத்தா, யாகூத்து, ஜகரியாகூத்து, தும்மரியாகுத்து, ஜரிதியாபிகா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட சண்டைச்சேவல் வகைகள் உள்ளன. போட்டிக்கு 21 நாட்களுக்கு முன்பு எந்தசேவலுடன் எந்த சேவலை மோதவிடுவது என்பது தீர்மானிக்கப்படுகிறது. 

அப்போதிருந்தே சண்டைசேவல்களுக்கு காலை, மாலை என இருவேளைகளில் பாதாம் பருப்பு உணவாக கொடுக்கப்படுகிறது. மேலும் பிஸ்தா, பேரீச்சம்பழம், தேன் ஆகியவற்றை கலந்து உருண்டையாகப் பிடித்தும் தினந்தோறும் உணவாக வழங்கப்பட்டு வருகிறது. கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட நவதானியங்களும் அரைத்து தோசைக்களில் வைத்து சுட்டுகொடுக்கிறார்கள். சேவல்களுக்கு சுடு ஒத்தடம் செய்து பராமரிக்கிறார்கள். இரண்டு வயதாகும்வரை சேவலுக்குப் பயிற்சி தருகிறார்கள். குறிப்பாக சண்டைக்குப் பழக்கும் சேவலைத் தண்ணீரில் நீந்தவிட்டு மூச்சு பயிற்சி தருகிறார்கள். சேவல் அதிகம் எடை வைத்துவிடக்கூடாது என்பதோடு அது பாய்ந்து சண்டை போட  வேண்டும் என்பதிலும் அவர்களுக்கு தனி கவனமிருக்கிறது. சேவலுக்கு போடப்படும் தீனிக்கு தான் அதிகம் செலவாகும் ஆட்டு ஈரல், முந்திரி, வேகவைத்த இறைச்சி என்று அந்த சேவலை ருதுவான பெண்ணைப் போல பார்த்து பார்த்து வளர்க்க வேண்டும் . இந்த பயிற்சிக்குப் பிறகு சேவல்கள் சண்டைக்கு விடப்படுகின்றன. எந்தச் சேவலை எந்தச் சேவலுடன் சண்டைக்கு விட வேண்டும் என்பதில் விதி இருக்கிறது விளையாட்டு வீரன் தயார் ஆவது போல தான் சேவல் தயார் ஆகிறது.

கால் கத்தி




சேவலின் காலில் கட்டப்படும் கத்தி மிகச் சிறியது. இரண்டு அல்லது மூன்று இஞ்ச் அளவில் இருக்கும். அதை சேவலின் வலதுகாலில் கட்டிவிடுவார்கள். கத்தி வெளியே நீட்டிக் கொண்டிருக்கும். சேவல் பாய்ந்து காலை அடித்தால் போதும் கத்தி கூராக வெட்டிவிடும். குத்துச் சண்டை போட்டியைப் போன்றதே சேவற்சண்டையும். குத்து சண்டையில் ஒரு ரவுண்ட் என்பதை சேவற்சண்டையில் ஒரு தண்ணி என்கிறார்கள். அதாவது ஒரு சேவல் மற்ற சேவலை எந்த இடத்தில் தாக்குகிறது எப்படி தாக்குகிறது என்பதை முன்வைத்தது. சேவலின் தரத்திற்கு ஏற்ப அவை எத்தனை தண்ணி விளையாட முடியும் என்று தீர்மானிக்கபடுகிறது. சில சேவல்கள் பத்து தண்ணி நின்று ஆடக்கூடியதாக இருந்தன. இந்த முறை மட்டுமின்றி ஒரு ரவுண்ட் என்பது பதினைந்து நிமிசம் முதல் இருபது நிமிசம் கொண்டதாக உள்ள சண்டையிடும் முறையும் இருந்தது. அதில் மூன்று ரவுண்டுகளில் சேவல்சண்டையிடும்.
சேவலின் உடல்வாகு, குறிப்பாக கால்கள் மற்றும்  இடுப்பு தான் அதன் சண்டை போடும் வலுவிற்காக முக்கிய அம்சம். அது நிற்கும் வாகிலிருந்தே அதன் வலிமையை கண்டறிந்துவிடலாம். அது போலவே சிலிர்த்து சலம்பும் சேவல்கள் அதிகம் நின்று சண்டையிடுவதில்லை. குரைக்கிற நாய் கடிக்காது என்பது போன்றதே அவை. மாறாக சண்டைக்கு பழகிய சேவல்கள் கண்ணில் அடிக்க போகும் வன்மம் தெரிகிறது. அத்துடன் அவை தன் முழு ஆவேசம் பீறிடும் வரை அடிவாங்குகின்றன. சீற்றம் கொண்டுவிட்டால் சேவலின் ஆகிருதி அப்படியே மாறிவிடுகிறது. அது மிகுந்த வன்மத்துடன் பாய்கிறது. 

தேர்ந்த சண்டைச் சேவல் காலை உபயோகிக்கும் முறை அற்புதமானது. அது கத்தியைச் சுழற்றும் சாமுராய் போல தேர்ந்த துல்லியத்துடன் எதிரியைத் தாக்குகிறது.  ஒரு வேளை அடி தப்பிவிட்டால் உடனே தன் அடுத்த அடியை இன்னொரு விதத்தில் தருகிறது. ஒவ்வொரு பாய்ச்சலில் ஒரு வேகமிருக்கிறது. சேவலின் கண்கள் அலைந்து கொண்டேயிருக்கின்றன. புழுதியும் கூக்குரலும் ஆவேசமுமாக சேவல்கள் பொருந்தும் தருணத்தில் அவை நம் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சேவல்கள் தானா என்று சந்தேகமாக இருக்கிறது

ஒலிம்பிக்சை விட கெடுபிடி



சேவல் சண்டைக்கென்று பொது விதிகள் இருக்கின்றன. குறிப்பிட்ட எடை, குறிப்பிட்ட உயரம் உள்ள சேவல்களோடு தான் எதிர் சேவலை சண்டைக்கு நிறுத்த முடியும். சேவல்களுக்கு ஊக்க மருந்தோ, மதுபானமோ கொடுக்கப்பட்டது தெரிந்தால், போட்டியிலிருந்து நீக்கப்படும். இதே போல் தொடர்ந்து செய்யப்படுவதாக தெரிந்தால், சேவலும், சேவலின் உரிமையாளரும் போட்டியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள். சேவலின் காலில் கட்டி விடப்படுகின்ற கத்தி, இரண்டு அல்லது மூன்று இஞ்சு மட்டுமே இருக்க வேண்டும். சண்டை நடக்கும் பொழுது, சேவல்களை ஆசுவாசசப்படுத்துவதற்கு எடுத்துக் கொள்கிற நேரத்தை, " தண்ணிக்கு விடுவது ' என்பர். ஆசுவாசத்தின் பொழுது, சேசவலுக்கு தண்ணீர் கொடுத்து, மேலும் உற்சாகப்படுத்துவர். தென்மாவட்டங்களில் ஆறு கட்டங்களாக நடைபெறும் சேவல் சண்டை, 20-20 கிரிக்கெட் போல் சென்னையில் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. ஒவ்வொரு கட்டமும், "இருபது நிமிடம்' நடைபெறும்.

சேவலின் (அலகு) மூக்கு மண்ணில் பட்டுவிட்டால் எதிர் சேவல் போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு 5,000 ரூபாய் பரிசு வழங்கப்படும். இப்படி ஐந்தாறு போட்டிகளில் வெற்றி பெற்ற சேவல், ஒரு லட்சம் ரூபாய்க்கு குறையில்லாமல் விலை போகும். வெற்றி பெற்ற சேவல், போர் வீரனைப் போல் கொண்டாடப்படும்.

சேவல் சண்டையில் இருவகை உண்டு 

1. வெப்போர், வெத்தடி அல்லது வெற்றுகால் சேவல் சண்டை.. 2. கத்திகால், கத்தி கட்டு சேவல் சண்டை இவ் இரண்டு வகை சண்டைக்கும் இரண்டு வெவ்வேறு வகை சேவல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ் இரண்டு வகை சண்டை சேவல்களுக்கும் உள்ள வித்தியாசம் ஒரு சாமானியனுக்கு தெரியாது ஆனால் சேவல் சண்டை காரர்களுக்கு எளிதாகவே தெரிந்துவிடும். 

வெற்றுகால் சேவல் சண்டை: 


 சென்னை, தஞ்சாவூர், பெரம்பலூர், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, புதுக்கோட்டை, பாண்டிச்சேரி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் வெற்று கால் அல்லது வெப்போர் சேவல் சண்டை நிகழ்த்தப்படுகிறது. போனவருடம் வெளியான “ஆடுகளம்” படத்தில் வந்த சேவல்கள் அணைத்து வெப்போர் சேவல்கள் ஆகும். அந்தபடத்தை பார்த்தாலே பல விஷயங்கள் நமக்கு புரியும். வெப்போர் சேவல்கள் மிகவும் கட்டு மஸ்தான உடல்வாகுடன் இருக்கும். சில சேவல்கள் இரும்பை போன்ற கழுத்துடன் இருக்கும். வெப்போர் சேவல்களை அசில்(Asil அல்லது Aseel) என்று அலைகின்றனர் காரணம் “அசில்” என்ற சொல் “அசல்” என்ற சொல்லின் திரிபே ஆகும். அதற்க்கு “சுத்தமான” அல்லது “கலப்படம் இல்லாத” என்று அர்த்தம். இதில் சுத்தமான வகையாக இருந்தால் மட்டும்தான் சண்டை சரியாக செய்யும். வெப்போர் சேவல்களை பொருத்தமட்டில் வேகம் மட்டும் அல்ல விவேகமும் முக்கியம். பெரும்பாலும் இச் சேவல்கள் பிறக்கும் போதே சண்டைபோடும் குணாதிசயத்துடன் பிறக்கின்றன. இவற்றிற்கு சண்டை பயற்சியளிக்கும்போது அந்த குணம் மேலும் மெருகெற்றப்படுகின்றது. எந்த எதிரியை எப்படி அடிக்கவேண்டும் என்று அவற்றிற்கு தெரியும். இவ்வகை சேவல்களுக்கு உடம்பே ஆயுதம். காலில் உள்ள நெகங்கல் மட்டும் அல்லது கட்டை விரலுக்கு மேல் மாட்டு கொம்பினை ஒத்த நேகமும் வளர்கிறது. இதனை “முள்” என்று கூறுகின்றனர். இந்த “முள்” அம்பின் முனைபோன்று கூர்ப்பாக்க படுகின்றது. சிறந்த சேவல்கள் அந்த முல்லை பயன்படுத்தி எதிரி சேவலை ஒரே அடியில் கூட வீழ்த்தி விட முடியும். அடி தலையில் பட்டால் மூளை சிதறிவிடும். கழுத்தில் உள்ள எலும்புகள் கூட உடைத்து சேவல்கள் இறப்பது உண்டு. வெப்போர் சேவல்கள் கழுத்து மற்றும் தலையினை மட்டுமே பெரும்பாலும் தாக்கும். மற்ற இடங்களில் அடித்தால் எதிரியை வெல்லவோ கொல்லவோ முடியாது. சண்டைக்கு பலமாதங்களுக்கு முன்னரே சேவல்கள் தயார்செய்யப்படும். பிறந்ததில இருந்தே பேணி பாதுகாத்து வளர்க்கப்படுகின்றன. 6 மாதத்தில் இருந்தே சண்டை ஒத்திகை பார்க்கப்படும். . இதை “டப்னி” என்று கூறுவர். இதில் நல்ல சேவல்களை மட்டும் விட்டுவிட்டு மற்றவற்றை விற்காமல் கொன்று விடுகின்றனர். இதற்க்கு காரணம் அவர்கள் வேண்டாம் என்று விட்டசேவல்களின் அடுத்த தலைமுறையில் எதிர்பார்த்த பண்புகள் வரலாம். அப் பண்புகள் எதிராளியின் கைகளுக்கு போககூடாது என்று அதனை கொன்றுவிடுவர். சண்டைக்கு தயார்படுத்தும் வகையில் சேவல்களுக்கு கம்பு, கேழ்வரகு, கோதுமை, சோளம், நிலக்கடலை, கொண்டைக்கடலை, கொள்ளு போன்ற தானியங்களை அரைத்து அதை சுட வைத்து பின்னர் பிசைந்து சிறு, சிறு உருண்டைகளாக உருட்டி அதன் உரிமையாளர்கள் கொடுக்கின்றனர். இது தவிர பாதாம், பிஸ்தா, பழங்கள், சாரப்பருப்பு, முந்திரி, திராட்சை, பேரிச்சம்பழம் போன்றவற்றையும் சேவல்களுக்கு கொடுக்கின்றனர். சேவலுக்கு சண்டைக்கு 21 நாட்கள் முன் சிறப்பு தயார் நடக்கும். அப்போது மிகவும் சத்தான உணவுகளுடன் நீச்சல், ஓடுதல், உயரம் தாண்டுதல் போன்ற பயிற்சியளிக்கப்படுகின்றது. பின்பு சண்டைக்கு களம் இறக்கப்படுகின்றது. போட்டிகளில் பங்கேற்பதற்காக பதிவு செய்யப்பட்ட சேவல்கள் உயரம் முதலில் பார்க்கப்படுகின்றன. உயரத்திற்கு ஏற்ப சேவல்கள் சண்டைக்கு விடப்படுகின்றன. ஒரு வெப்போர் சேவல் சுமார் ஒன்றேமுக்கால் மணிநேரம் சண்டை போடா வேண்டி இருக்கும். 15 நிமிடங்கள் போர் செய்தபிறகு 15 நிமிடங்களுக்கு இடைவேளை இருக்கும். இவற்றை தண்ணிக்கு எடுப்பது என்று கூறுகின்றனர். அப்போது காயங்கள் சரிசெய்யப்பட்டு, வலி ஒத்தடம் கொடுக்கப்படுகின்றது. பின்னர் க்ளுகோஸ் போன்றவை தரப்பட்டு சண்டைக்கு மீண்டும் புதுதேம்புடன் வந்து நிருதப்படுகின்றது. சண்டை நேரம்: 15நி(சண்டை)+15நி(1 தண்ணி)+15நி(சண்டை)+15நி(2 தண்ணி)+15நி(சண்டை)+15நி(3 தண்ணி)+15நி(சண்டை)= மொத்தம் 1.45 மணி (முழு சண்டை நேரம்)நேரம் ஒரு சண்டை நடைபெறுகின்றது. நல்ல தரமான சேவல் வகைகள் எதிர் சேவலை 3 நிமிடங்களில் கூட கொல்லமுடியும். இரு சேவலில் ஒன்று களத்தில் இறந்துவிட்டாலோ, களத்தைவிட்டு ஓடிவிட்டாலோ, களத்தில் மயங்கி விழுந்துவிட்டாலோ எஞ்சி நிற்கும் சேவல் வெற்றியடைந்ததாகிறது. சேவலின் (அலகு) மூக்கு மண்ணில் பட்டுவிட்டால் எதிர் சேவல் போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட் பரிசு வழங்கப்படும். இப்படி ஐந்தாறு போட்டிகளில் வெற்றி பெற்ற சேவல், ஒரு லட்சம் ரூபாய்க்கு குறையில்லாமல் விலை போகும். வெற்றி பெற்ற சேவல், போர் வீரனைப் போல் கொண்டாடப்படும். வெற்றி பெற்ற சேவல்களுக்கு தங்க நாணயம், பணம், கேடையம், மெடல் போன்றவை பரிசாக வழங்கப்படும். ஆடுகளம் படத்திற்கு பிறகு இவ்வகை சேவல்களுக்கு மவுசு கூடிவிட்டன.

இவ்வகை சேவல்கள் பலவகைகள் உண்டு..

 அவை பொதுவாக ரேஜா(குள்ளமான சேவல்கள்), கல்கத்தா அசில், மதராஸ் அசில் என்று பிரிக்கப்பட்டாலும். அவைகள் அவற்றின் சிறகின் வனங்களை பொறுத்தே அழைக்கபடுகின்றன. ஜாவா – பச்சை வெள்ளை வண்ணம் மற்றும் கருப்பு வால். யாகுத் – சிவப்பு பீலா – மஞ்சள் தும்மர்- சாம்பல் சீதா – வண்ண புள்ளிகள் நூரி – வெள்ளை கதிர்/காதர் – கருப்பு இவை மட்டுமின்றி “பேட்டை மாதிரி(பேட்டை போன்று காட்சியளிக்கும்)” “கல்வா(தாடியுடன் இருக்கும்)” ஆகிய வகைகளும் உள்ளன. வெப்போர் சேவல்களுடன் கத்திகால் சேவல்களை சண்டைக்கு விடமுடியாது காரணம் கத்திகால் சேவல்களால் வெப்போர் சேவல்களுக்கு நிகராக சண்டை போடமுடியாது. சிறிது நேரத்தில் ஒய்ந்து விடும். இதில் கத்தி இல்லாமல் சண்டை நடப்பதால் இதனை ஒலிம்பிக்ஸ விட கெடுபிடி உள்ளது.  

கத்தி சேவல் சண்டை:

 
ஈரோடு, திருப்பூர், கரூர், கோயம்புத்தூர் மாவட்டங்களில் மட்டும் இரத்தம் தோய்ந்த கத்தி சண்டை நடத்தப்படுகிறது. சேவலின் வலதுகாலில் இதற்காக சிறு கத்தி கட்டப்படுகிறது. பிறகு சேவல்களை ஜாக்கிகள் பிடித்துக்கொண்டு இரு சேவல்களையும் அருகே நெருங்கவிட்டு உசுப்பேற்றியபின் (ஆக்ரோஷம் கொள்ள) சேவல்களை மோதவிடுகின்றனர். இதில் ஆவேசம் அடையும் சேவல்கள் ஆக்ரோஷமாக மோதுகின்றன. மோதலில் காயமடையும் சேவல்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் அளித்து, தண்ணீர் தெளிப்பான் (ஸ்பிரேயர்) மூலம் அல்லது ஜாக்கிகள் வாயில் தண்ணீரை வைத்து சேவல் முகத்தில் ஸ்ரேபியர் போல தண்ணீரை ஊதியும் அதன் முகத்தில் வாயால் ஊதியும் மீண்டும் மோதவிடுகின்றனர். போட்டியில் வெற்றிபெறும் சேவல்கள் மீண்டும், மீண்டும் மோதவிடப்படுகின்றன. தோல்வியடைந்த சேவல்களில் சில பலத்த காயமுற்று இறந்து விடுவதும் உண்டு. கத்தி கட்டிற்கு பயன்படும் சேவல் கட்டு சேவல்கள் என்று அழைக்கபடுகின்றன.. கத்தி சேவல்களுக்கு வால் நீளமாக இருக்கும். இவற்றில் பச்சை மற்றும் கருங்கால் சேவல்கள் சிறந்த வகைகளாக கருதப்படுகின்றது. நிறத்தை பொருத்தமட்டில் பலவகைகள் உண்டு அவை…கோழி வள்ளுவர், காக வள்ளுவர், கீரி வள்ளுவர், பூத வள்ளுவர், பொன்ற வள்ளுவர், பொன்றக் காகம், செங்காகம், கருங்காகம், வெண்காகம், செங்கீரி, காகக் கீரி, பொன்றக் கீரி, வள்ளுவர்க் கீரி, பூதிக் கீரி, காக பூதி, பொன்ற பூதி, செம்பூதி, பொன்ற வெள்ளை, புள்ளி வெள்ளை, காகக் கருப்பு, பேய்க்கருப்பு, சேவப்பேடு, கோழிப்பேடு, கரும்பேடு, வெண்பேடு, பொன்றப்பேடு, பூதப்பேடு, காகப்பேடு,சித்திரப்புள்ளி, நூலாவள்ளுவர், ஆந்தை, மயில் ஆகும். கழுத்து மற்றும் இறகுகளில், நீண்ட வண்ணக் கீற்றுகள் கொண்டவை வள்ளுவர்ச் சேவல் என அழைக்கப்படுகின்றன. கோழியின் தோற்றத்தில் இருக்கும் சேவல்கள் பேடுகள் எனப்படுகின்றன. கருமையும் சிவப்பும் கலந்த இறகுகளைக் கொண்டவை காகச் சேவல்கள். கட்டுக் கட்டாக வண்ணத் திட்டுகளை உடையன கீரிச் சேவல்கள். வெண்ணிறத்தைப் பிரதானமாகக் கொண்டவை, வெள்ளைச் சேவல்கள். கருப்பு நிறத்தைப் பிரதானமாகக் கொண்டவை பேய்க்கருப்பு என அழைக்கப்படுகின்றன. பழுப்பு நிறத்தை உடையவை பொன்(நி)றம் என்பனவாகும். சாம்பல் நிறத்தைப் பிரதானமாகக் கொண்டவை, பூதிகள் என அழைக்கப்படுகின்றன. கொண்டை அல்லது தலையில் இருக்கும் பூவைப் பொறுத்து, குருவிப்பூச் சேவல், மத்திப்பூச் சேவல், தவக்களைப் பூச் சேவல், கத்திப்பூச் சேவல், ஊசிப்பூச் சேவல் எனப் பல இரகம்.அதேபோலக் கால்களைப் பொறுத்தும், பல வகைகளாகச் சேவல்களை இனம் பிரிக்கின்றனர். வெள்ளைக்கால், பேய்க்கருப்பு, பொன்றம், பூதக்கால், பசுபுக்கால், காரவெள்ளை, முகைச்சக்கால், கருங்கால் எனப் பட்டியல் இடபடுகிறது.களத்தில் போட்டி தொடங்குவதற்கு முன்பு இரு அணியினரில் யாராவது ஒருவர் செவ்வக வடிவ களத்தின் மையத்தில் தமது சேவலைக் கொண்டு நிறுத்தி, பின் கையில் எடுத்துக்கொள்வர். இதற்கு நடவு போடுதல் என்று பெயர். நடவு போடுதல் செய்த பின்பு எதிரணியினர் நடவு போட்ட சேவலுக்கு இணையான, அதே நிற, இன, அளவுள்ள சேவலைச் சண்டைக்கு விடுவர். இந்நிலையில் இரு சேவலுக்கும் காலில் கத்தி வைத்துக் கட்டப்படுகிறது. சேவல் விடுபவர்கள் களத்தின் உள்ளே சென்று இரு சேவலுக்கும் இடையில் சுமார் 10 அடி இடைவெளியில் நிறுத்துவர். அப்பொழுது இரு சேவலும் ஒன்றையொன்று பார்க்கும் படி இருக்கும். இதற்கு “முகைய விடுதல்” என்று பெயர். அது தான் உன் எதிரி என்று அடையாளம் காட்டுவது போல் இது இருக்கும். இந்நிலையில் இரு சேவல்களும் ஒன்றையொன்று நோக்கி ஓடி வந்தும், பறந்தும் காலில் கட்டியுள்ள கத்தியால் மற்றதன் உடல் பகுதியில் குத்தியும் பல காயங்களை ஏற்படுத்துகின்றன. அப்போது தொடர்ந்து சண்டையிடாமல் சேவல் விடுவோர் தம்தம் சேவல்களைக் கையில் பிடித்துக்கொள்வர். அதற்கு தண்ணீர் தந்து களைப்பை நீக்குவர். ஈரத்துணியால் காயங்களைத் துடைத்து மருந்திடுவர். மீண்டும் சேவலின் முதுகில் தட்டிக் கொடுத்து களத்தில் விடுவர். கத்திகால் சேவல்கள் பெரும்பாலும் எதிர் சேவலின் நெஞ்சுபகுதியை தாக்கும்.. சில நேரங்களில் எதிர் சேவலின் குடல் சரிந்து இறக்கும் அளவுக்கு தாக்குதல் இருக்கும். முதலில் வேகமாக நொடிபொழுதில் எதிர் சேவலின் நெஞ்சில் கத்தியை பாய்ச்சும் சேவலே பெரும்பாலும் ஜெயிகின்றது. போரிட்டுக் கொள்ளும் இரு சேவல்களின் போர்ச்செயல்முடிவே இவ்விளையாட்டின் வெற்றி தோல்வியை முடிவு செய்கிறது. இரு சேவலில் ஒன்று களத்தில் இறந்துவிட்டாலோ, களத்தைவிட்டு ஓடிவிட்டாலோ, களத்தில் மயங்கி விழுந்துவிட்டாலோ எஞ்சி நிற்கும் சேவல் வெற்றியடைந்ததாகிறது. தோற்ற சேவல் உயிருடனோ, இறந்த நிலையிலோ வெற்றியடைந்த சேவலின் உரிமையாளருக்கு கிடைக்கிறது. இதற்கு “கோச்சை” என்று பெயர். சேவல் சண்டை போட்டியில் சேவல் காலில் கட்டிய கத்தி குத்தி பலர் பலியாவதும் உண்டு. ஆதலால் மிகவும் பாதுகாப்புடன் சண்டை விடுவது அவசியம். இன்றுதிருச்சி, கோயம்புத்தூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் கத்திகட்டு வெப்போர் இரண்டுமே நடை பெறுகின்றது. திருவிழா காலங்களில் அதிகமாக சண்டைகள் நடைபெறுவது உண்டு . பெண்கள் பொதுவாக பங்கு பெறுவதில்லை இருப்பினும் விதிவிலக்குகளும் உண்டு . பல அரிய இன சேவல்கள் இந்த சேவல் போராளிகள் மூலம் பாதுகாக்கப்படுகின்றன. இச் சேவல்களை வளர்பதே ஒரு பெரிய கவ்ரவமாக கருதப்படுகின்றது. இன்று உலக மக்களுக்கு புரத பற்றாக்குறையினை சரி செய்யும் “ப்ரைலெர் கோழிகள்” இந்த “சண்டை கோழி” இனத்தையும் “பிற கோழி” இனத்தையும் கலவை செய்ததால் கிடைத்தன. உலகமே இச்சேவல்களை ஒரு அறிய பொக்கிசமாக பார்கின்றனர். இதன் மூலமாக பல பயனுள்ள கோழி வகைகள்(ரோட் ஐலண்ட், கார்னிஷ், ப்ரைலெர் etc) ஆராய்ச்சி முலமாக நமக்கு கிடைத்துள்ளன. “சேவல் சண்டை உலகம் முழுக்க நடக்கிறது. லத்தின் அமெரிக்கா நாடுகளில் இன்றும் சேவல் சண்டையை முழு வாழ்நாள் தொழிலாக வைத்திருக்கிறார்கள். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இப்பொழுதும் சேவல் சண்டைகள் நடக்கிறது. கிராமங்களில் பொழுது போக்குக்காக இருக்கிற சேவல் சண்டை, நகரங்களில் சூதாக மாறி விடுகிறது. நோபல் பரிசு பெற்ற காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் சேவல் சண்டையை மையமாக வைத்து நாவல் ஒன்றை எழுதி இருக்கிறார், அதில் சேவல் சண்டையில் ஜெயித்தவன் மட்டுமே ஆண்மை உள்ளவன் என்றும், தோற்றவன் ஆண்மையற்றவன் என்றும் கருதப்படுவார்கள் என்று, மக்கள் நினைப்பதை வெளிப்படுத்தி இருக்கிறார்’ என்கிறார் சேவல் சண்டைகள் குறித்து ஆய்வு செய்து வரும் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்.பாரம்பரியம் சேவல் சண்டை தமிழ்நாட்டின் தனி அடையாளம் இந்த கோழிகள் தமிழனின் வீரத்தையும், பாரம்பரியத்தை, பெருமையையும் , வரலாற்றையும் பறைசாற்றுகின்றன. சேவல் சண்டையை பற்றியா குறிப்பு சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றது. தமிழ்நாடு சேவல் சண்டை 2,000 ஆண்டுகள் பழமையானது . மனு நீதி சாஸ்திரம் , காட்டு சேவல் சாஸ்திரம், மற்றும் பிற சங்க வயது இலக்கியம், போன்ற பண்டைய இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பண்டைய காலத்தில் மறவர்களால் ஓய்வுநேரத்தில் விளையாடப்பட்டது என குறிப்பிடப்படுகிறது. இது “64 கலைகளுள்” ஒன்று என ஒப்பு கொள்ளப்பட்டுள்ளது. இவ்வளவு அறிய விஷயமான சண்டை சேவல்களையும், இக்கலையையும் போற்றி பாதுகாப்பது ஒவ்வொரு தமிழ்மகனின் கடமை.  
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்று சேவல் சண்டை. மூவேந்தர்கள் ஆட்சி புரிந்த இந்த தமிழ்மண்ணில் 16ஆம் நூற்றாண்டில் இந்த சேவல் சண்டை மிகவும் பிரபலம் அடைந்தது. போர் இல்லாத நேரங்களில் வீரர்கள் சோர்ந்து போகாமல் இருக்க இந்த சேவல் சண்டை நடத்தப்பட்டுள்ளது. சேவல்சண்டையின் போது சேவல்களின் கால்களில் கத்தியை கட்டிவிட்டு அவற்றை மோதவிட்டு போர் வீரர்கள் பொழுதுபோக்கினர். இவ்வாறு சேவல்சண்டையிடும் களம் ‘சாவக்கட்டு’ என்று இன்றளவும் தமிழகத்தின் பல ஊர்களில் மருவி  அழைக்கப்படுகிறது.                 

No comments: