Wednesday 31 December 2014

முல்லை பெரியாறின் வரலாறும் வடுகரும்

முல்லை பெரியாறு அணையின் அவசியத்தையும், அதன் வரலாற்றையும் ஒவ்வொரு தமிழரும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். தமிழ்நாட்டு விவசாயிகளின் பால் அயல்நாட்டினருக்கு இருந்த பச்சாதாபம் கூட நம் மக்களுக்கு இல்லை என்பதே நித்ர்சனம். வீணாய் போகும் நீரை கடலில் கலக்க விட்டாலும் விடுவோம் தமிழனுக்கு தரமாட்டோம் என்பதே அவர்கள் நிலைப்பாடு அன்றும் இன்றும் என்றும்! தமிழர்களுக்கு வடுகர்கள் என்றுமே நன்மை செய்ததில்லை செய்யப் போவதுமில்லை என்பதும் உண்மை! உண்மை நிலவரம் படியுங்கள் லிங்கா ரசிகர்களே....

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின் போது வறட்சியின் காரணமாக மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அடிக்கடி கடுமையான பஞ்சம் ஏற்பட்டு மக்கள் பட்டினியால் இறந்தனர். இதற்கு முக்கிய காரணம் ஆண்டுதோறும் வரும் தென்மேற்கு பருவமழை மேற்குத் தொடர்ச்சி மலையால் தடுக்கப்பட்டு, மலையிலேயே பெய்துவிடுகின்றது. மலையின் மறைவு பிரதேசமான தமிழகத்தில் மழை பெய்வதில்லை. வெறும் காற்றுதான் வருகிறது. அதேசமயம் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நதியாக உருவாகி, அரபிக் கடலில் கலந்துவிடுகிறது. மேற்கு நோக்கி பாய்ந்து, நீரை கடலில் கலந்து வீணாகும் பெரியாறு நதியை அணையிட்டு தடுத்து நிலத்தடி குழாய்கள் வழியாக கிழக்கு நோக்கி பாய வைக்க திட்டமிடப்பட்டது. இப்படி கடலில் கலக்கும் பெரியாறு நதியை கிழக்கு முகமாக திருப்பி, வைகையுடன் இணைக்கும் எண்ணம் முதன்முதலில் அப்போதைய மதுரை கலெக்டருக்குத்தான் உதித்தது. வீணாக கடலில் சேரும் பெரியாறு நதியை வைகையுடன் இணைத்தால், வறட்சியான மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பாசன வசதியை மேம்படுத்தலாம் என்ற செய்தியை அன்றைய சென்னை மாகாணத்திற்கு தெரியப்படுத்தினார்.

முல்லை பெரியாறு கட்டப்பட்டபோது 1895 டிசம்பர் 7

பெரியாறுத் திட்டத்திற்கான துவக்கம் உருவானது. அப்போதைய முதன்மை பொறியாளராக இருந்த கேப்டன் ஜே.எல்.கால்டுவேலிடம் இத்திட்டத்தைப் பற்றி கேட்கப்பட்டது. பெரியாறுத் திட்டத்தை பற்றி ஆராய்ந்த கால்டுவேல், "இதற்கு 100 அடி ஆழம் கொண்ட சுரங்கம் அமைக்க வேண்டும் எனவும், இத்திட்டம் ஆதாரமற்று உள்ளதாகவும்' தெரிவித்தார்.
பின்பு 1867-இல் பொறியாளர் மேஜர் ஆர்.பி. ரைவ்ஸ் பெரியாறு அணைத் திட்டம் பற்றிய அறிக்கையை ஆங்கில நிர்வாகத்திடம் சமர்பித்தார். இதையடுத்து அணை கட்ட ஆகும் செலவு மற்றும் சுகாதாரமற்ற சூழல் பற்றி கூறினார். அடுத்து 1872-இல் ஆர்.இ.ஸ்மித் இத்திட்டத்திற் கான அறிக்கையை சமர்பித்தார். அதிலும் திருப்தி ஏற்படாமல் 1876-ஆம் ஆண்டு ஸ்மித் மற்றும் கேப்டன் பென்னிகுயிக் இணைந்து கூட்டு அறிக்கை ஒன்றை அளித்தனர். அப்போது தான் முதன் முதலாக மண்ணால் பிணைக்கப்பட்ட அணை கட்டுமானத்திற்கான முறையான திட்டமும், செலவு மதிப்பீடும் கொண்ட அறிக்கை தயாரானது. இருந்தபோதிலும் 1882 வரை கட்டுமானம் துவக்கப்படவில்லை. அதற்கு காரணம் திருவிதாங்கூர் மகாராஜா விசாகம் திருநாள் ராமவர்மா.
திருவிதாங்கூர் என்பது தற்போதைய கேரள மாநிலத்தில் தென் பகுதிகளையும், தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டத்தையும் உள்ளடக்கியிருந்த ஒரு சமஸ்தானம். திருவனந்தபுரம் இதன் தலைநகரம். ஆட்சி செய்த மன்னர்கள் அனைவரும் ஆங்கிலேயரின் விசுவாசிகள். தமிழ் மக்களுக்கு பல துன்பங்களை கொடுத்து, தமிழினத்தின் பொருளாதாரத்தை சுரண்டியவர்கள். இதற்கு பத்மநாபசாமி கோயில் பொக்கிஷங்களே சாட்சி. இவர்களது ஆட்சி முழுவதும் மனுஸ்மிருதி கொள்கையை அடிப்படையாக கொண்டும், பார்ப்பனியர்களின் அமைச்சரவையோடும் நடைபெற்றது.

முல்லை பெரியாறு கட்டப்பட்டபோது 1895 டிசம்பர் 7

இவர்களது ஆட்சி காலத்தில் சாதியக் கொடுமைகள் ஏராளம். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், தோள்சீலைப் போராட்டம். தமிழினத்தின் 18 சாதியை சேர்ந்த பெண்கள் மேலாடை அணியக் கூடாதன சட்டம் இருந்தது. இந்த கொடுமையான சாதிய ஒடுக்குமுறையை எதிர்த்து தமிழின மக்களும் அன்றைய கிருத்துவ பாதிரியார்களும் போராடினர். அதன்பிறகே பெண்கள் மேலாடை அணிய அனுமதிக்கப்பட்டனர். இந்த வரலாற்று கொடுமைகளைப் பற்றி ஆங்கிலேயர்கள் எழுதியுள்ள நூல்கள் மற்றும் அவர்கள் எடுத்த புகைப்படங்களே ஆதாரம். நாகரீகம் கருதி அப்புகைப் படங்களை வெளியிட இயலவில்லை.
இப்படி தமிழின விரோதியான திருவிதாங்கூர் சமஸ்தானம் ஆங்கிலேயரின் பெரியாறு அணைத் திட்டத்தை அவர்களது ஆட்சி பகுதியில் உருவாவதை அனுமதிக்கவில்லை. ஆங்கில அதிகாரிகள் பெரியாறுத் திட்டத்தினை பற்றிய பல ஆலோசனைக் கூட்டம் நடத்தியும் திருவிதாங்கூர் சமஸ்தான மன்னரும் அவர்களது அமைச்சர்களும் ஒப்புக்கொள்ளவில்லை.
பின்னர்தான் ஆங்கிலேயர் தனது மிரட்டல் பாணியை கையிலெடுத்தனர். இதற்காக ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்திக் கொள்ளலாம் எனவும் அதன் மூலம் ஆங்கில அரசு ஆண்டு தோறும் கப்பம் கட்டும் எனவும் கூறப்பட்டது. மீறினால் சென்னை மாகாண அரசின் நடவடிக்கை கடுமையாக இருக்குமென கூறப்பட்டது. அதனால் ஆங்கிலேயருடன் பகைத்து கொள்ள விரும்பாத திருவிதாங்கூர் மகாராஜா அணைத் திட்டத்திற்கு சம்மதித்தார்.
முல்லைப் பெரியாறு நதிநீர் ஒப்பந்தம் 1886-ஆம் ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி திருவிதாங்கூர் மகாராஜா விசாகம் திருநாள் ராமவர்மாவுக்கும் மெட்ராஸ் மாகாண பிரிட்டிஷ் செயலாளருக்குமிடையே கையெழுத் தானது. பெரியாறு நீரை வறண்ட தென் தமிழக பகுதிகளுக்கு உபயோகப்படுத்த ஏற்பட்ட இவ்வொப்பந்தம் 999 வருட ஒப்பந்தமாகும். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவானான வி.ராம அய்யங்காரும் மெட்ராஸ் மாகாண அப்போதைய செயலாளர் ஜே.சி. ஹானிங்டனும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
ஒப்பந்தத்தின் மூலம் புதிய அணையை கட்டி பெரியாறு நீரை தேக்கி வைக்கவும், அணையிலிருந்து பாசன வசதிக் காக கொண்டுச் செல்லவும் முழு அதிகாரம் மற்றும் உரிமம் மெட்ராஸ் மாகாண செயலருக்கு வந்தடைந்தது. மேலும் இந்த ஒப்பந்தம் நீரை தேக்குவதற்கு 8000 ஏக்கர் நிலத்தையும் அணை கட்டிக் கொள்ள 100 ஏக்கர் நிலத்தை யும்; வழிவகை செய்தது. இதற்காக ஏக்கர் ஒன்றுக்கு ஐந்து ரூபாய் வாடகையாக நிர்ணயிக்கப்பட்டது. இதனால் பிரிட்டிஷ் அரசாங்கம் முல்லைப் பெரியாறு நீர்பிடிப்பு பகுதிகளில் வரும் அனைத்து நீர்நிலைகளுக்குமாக ரூ.40,000 வாடகையாக கொடுப்பது என நிர்ணயிக்கப்பட்டது.
திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் உடன்பாடு ஏற்பட்ட பின்னர் பென்னிகுயிக் மீண்டும் தனது அறிக்கை மற்றும் மதிப்பீட்டை புதுப்பித்தார். அப்போதைய திட்ட மதிப்பீடு 641/2 இலட்ச ரூபாய். ஆனால் அணை கட்டிமுடிக்கப் படும்போது 87 இலட்சம் ரூபாய் செலவானது குறிப்பிடத் தக்கது.
1884-ஆம் ஆண்டு ஆங்கில அரசு திட்டத்திற்கு அனுமதி அளித்தது. 1888-இல் அணையின் கட்டுமானம் துவக்கப்பட்டது. அணை கட்டப்படும் இடம் மனிதர்கள் வசிக்காத அடர்ந்த மலை மற்றும் வனம். போக்குவரத்துவசதி துளியும் கிடையாது. கட்டுமானப் பொருட்களை பெரியாறு நதிக்கரைக்கு கொண்டுவர எவ்வித சாலைவசதியும் இல்லை. 100 கிலோ மீட்டருக்கு அப்பால் ரயில்வே பாதை இருந்ததால் கட்டுமானப் பொருட்கள் கொண்டு வருவது பெரும் பிரச்சனை. இரண்டாவது பெரிய சவால் பருவநிலை. சுகாதாரமற்ற சூழலில் தங்கி வேலைசெய்ய மிக கடினம். அடுத்து பெரும் சவாலானது மலேரியா. பணியாளர்களுக்கு பரவிய மலேரியா காய்ச்சலால் 483 தமிழர்கள் இறந்து போனார்கள். அவர்களது உடல்கள் அங்கேயே புதைக்கப் பட்டது. (ஆதாரம்: (ARôWm: The Military Engineer in India, Vol III. Chatham: The Institution of Royal Engineers/ Page 28-29) அணை கட்டுமான பணியை கவனிக்க மெட்ராஸ் பட்டாலியன் 1 மற்றும் 4 பிரிவு பட்டாலியன்கள் பயன் படுத்தப்பட்டனர்.
அணையின் அடிப்பகுதியை கட்டுவதற்கு வசதியாக தடுப்பணைகள் போர்ச்சுகீசிய கைவினைஞர்களை கொண்டு கட்டப்பட்டது. மழைக் காலங்களில் வரும் ஆற்று வெள்ளத்தை வழிந்தோட செய்தனர். அணைக் கட்டுமானப் பணிகளுக்கு இடையே அடிக்கடி தடுப்பணைகள் உடைந்து போனதால் இடையில் கட்டுமான பணி நிறுத்தப் பட்டது. மெட்ராஸ் மாகாண செயலர் பென்னிகுயிக்கை கடிந்து கொண்டார். காரணம் ஏற்கனவே கொடுக்கப்பட்ட மதிப்பீட்டின் அளவைவிட செலவு அதிகமானது. மீண்டும் இங்கிலாந்தின் ஒப்புதல் பெற காலதாமதம் ஆனது. அணை கட்டுமான பணி இடையில் நிற்க கூடாதெனவும் தனது இலட்சியமான பெரியாறு அணையை கட்டியே தீர வேண்டும் என்ற வைராக்கியத்தினால் பென்னிகுயிக் இங்கிலாந்தில் உள்ள தனது சொத்து, தன் மனைவியின் நகைகளை விற்றும் அணையை வெற்றிகரமாக (1888-97)கட்டி முடித்தார். பென்னிகுயிக் என்ற சிறந்த மனிதர் மட்டும் இல்லாமல் இருந்தால் பெரியாறு அணை கட்டப்பட்டிருக்காது. இதற்காகவே பென்னிகுயிக் தியாகத்தை மதிக்கும் விதமாக தமிழக அரசு அவரது உருவசிலையை நிறுவியுள்ளது. மேலும் அவரது பேரனை அழைத்துவந்து மதுரையில் பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது
முல்லை பெரியாறு அணையின் கட்டுமானம்
முல்லை பெரியாறு அணை ஒரு புவிஈர்ப்பு அணை (Gravity Dam). அதாவது தன்னுடைய முழு எடை மூலம் அனைத்து விசைகளையும் (நீரின்) தாங்கிக் கொள்ளக் கூடிய ஆற்றல் கொண்டது. அணையின் மொத்த எடை புவியின் மீது அமர்ந்திருப்பதால் நீரின் அழுத்தம், அலை களால் ஏற்படும் அழுத்தம், நில அதிர்வினால் ஏற்படும் விசை போன்றவற்றை தன்னுடைய சுய பளுவினால் தாங்கிக் கொள்ளும் சக்தி கொண்டது. அணையானது சுண்ணாம்பு மற்றும் சுர்க்கி கலவையில் கருங்கல்லில் கட்டப்பட்டதாகும். சுர்க்கி (Surkhi) கலவை என்பது, தமிழகத்தில் காரை என அழைக்கப்படுகிறது. சுட்ட சுண்ணாம்பானது கால்சியம் ஆக்சைடாகும். இதனுடன் நீர் சேர்க்கும் போது நீருடன் வினைபட்டு கால்சியம் ஹைட்ராக்ஸைடை கொடுக்கும் வினை வெப்ப உமிழ்பினையாகும். இவ்வாறு கால்சியம் ஆக்சைடுடன் நீர் மற்றும் சர்க்கரை, மணல் ஆகியவற்றை சேர்த்து பெரிய ஆட்டுக்கல்லில் (உரல்) அரைக்கும் போது, சுண்ணாம்பிலிருந்து வெளியிடப்படும் வெப்பத்தினால் சர்க்கரை உருகி, செங்கல் பொடியுடன் இணைந்து ஒரு உறுதியான பிணைப்பை ஏற்படுத்த வல்லது. இது 19-ஆம் நூற்றாண்டின் கட்டுமான தொழில்நுட்பம் ஆகும். மேலும் சிமெண்ட் தயாரிப்பில் கால்சியம் ஆக்ஸைடு ஒரு முக்கிய பகுதிப் பொருள். எனவே அன்றைய ஆங்கில பொறியாளர்கள் சிறந்த கட்டுமானத்துடன் முல்லை பெரியாறு அணையை கட்டி முடித்தனர்

முகநூலில் பதிந்தவர்:

தமிழன் இராஜா முத்து

பெருந்தலைவரும் கவிப்பேரரசும்

காமராஜருக்கும் கண்ணதாசனுக்கும் இருந்த உறவு அற்புதமானது. இது குறித்து கண்ணதாசன், ""காமராஜரை நான் தாயாகப் பார்த்தேன். தந்தையாகப் பார்த்தேன். தெய்வமாகப் பார்த்தேன். அதன்பிறகுதான் தலைவனாகப் பார்த்தேன் என்று மனமாரச் சொன்னவர், காமராஜரைப் பற்றி வியந்து வியந்து பாடல் எழுதியவர். அவர் எழுதிய இந்தப் பாடல் காமராஜரின் வாழ்க்கையின் சுருக்கம் என்றே சொல்லலாம்.
தங்கமே! தன்பொதிகைச் சாரலே! தண்ணிலமே!
சிங்கமே! என்றழைத்துச் சீராட்டுத் தாய் தவிரச்
சொந்தம் என்று ஏதுமில்லை!
துணையிருக்க மங்கையில்லை!
தூய மணி மண்டபங்கள், தோட்டங்கள் ஏதுமில்லை!
ஆண்டி கையில் ஓடிருக்கும்,
அதுவும் உனக்கில்லையே!
கண்ணதாசன் வீட்டில் அசைவம் சமைக்கப்பட்டால் காமராஜர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும். இரவு நேரங்களில் இருவரும் சந்தித்தால் நேரம் போவதே தெரி யாமல் பேசுவார்கள். நாகர்கோவில் தேர்தல் பிரசாரத்தை முன்னின்று நடத்தி வெற்றி தேடிக் கொடுத்தவர் கண்ண தாசன். கண்ணதாசன் மது அருந்துவார் என்பது அனை வருக்குமே தெரியும். ஆனால் "மது அருந்துபவர்கள் காங் கிரஸ் உறுப்பினர்களாக இருக்கக்கூடாது என்று காங்கிரஸ் கட்சி நிபந்தனை விதித்தது. அப்போது கண்ண தாசனை அழைத்துப் பேசினார் காமராஜர்.
""கண்ணதாசா, இந்த சனியன் மதுவை விட்டுத் தொலை. இதனால உன்னைப் பத்தி தப்பாப் பேசுறாங்க. பார் என்று கேட்டுக் கொண்டார். உடனே, கண்ணதாசன் எல்லோரும் சொல்வதுபோல, சினிமா உலக அவசரம், சிக்கல், வீட்டுப்பிரச்னை போன்ற வற்றைச் சொல்லி, "அதுக்காத்தானே குடிக்கிறேன். அதுவும் பெர்மிட் வாங்கித் தானே குடிக்கிறேன் என்று சமாதானம் சொல்லிப் பார்த்தார். ஆனாலும் காமராஜர் விடுவதாக இல்லை. "அட.. விட்ருப்பா என்றார். யோசித்த கண்ண தாசன், ""சரி விட்டுர்றேன்... குடிக்கிறதை இல்லை. காங் கிரஸ் கட்சியை என்றபடி கிளம்பினார். காமராஜர் பெரிதாகச் சிரித்து தலை அசைத்தார்.



காமராஜர் மீது திடீரென கோபம் கொள்வது, அப்புறம் சேர்ந்து கொள்வது என்று பிள்ளை விளையாட்டு போலவே இருவருக்கும் உறவு இருந்தது. காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி இருந்த கண்ணதாசன் மீண்டும் காமராஜர் அருகே வர ஆசைப்பட்டார். அந்த ஆசையைத் தான் தன் சொந்தத் தயாரிப்பில் வெளிவந்த "பட்டணத்தில் பூதம் திரைப்படத் தில் பாடலாக வடித்தார்.
"அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி... என்னைச் சேரும் நாள் பார்க்கச் சொல்லடி என்று எழுதினார். இந்தப் பாடலைக் கேட்டதும் காமராஜர், ""கவிஞரை வரச் சொல் லுங்க என்று அழைப்பு விடுத்தார். இதைப்போலவே "பட்டிக்காடா பட்டணமா? , "கர்ணன் போன்ற படங் களிலும் காமராஜரைக் குறித்து அர்த்தம் பொதிந்த பாடல்கள் எழுதி இருக்கிறார். காமராஜர் மரணம் அடைந்த நேரத்தில் கண்ணதாசன் இந்தியாவில் இல்லாததால் உடனே வர இயலவில்லை. அதற்குப் அவருடைய சமாதிக்குச் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
காமராஜரின் நினைவாக நடந்த ஒரு கூட்டத்தில் பேசினார் கண்ணதாசன்: "லட்சக்கணக்கானவர்கள், பேராசிரியர்கள், கலைஞர்கள், அரசியல்வாதிகள் என்னைப் பாராட்டி இருக்கிறார்கள். அவர்கள் எப்படிப்பட்ட வார்த்தைகளால் என்னை அலங்கரித்தார்கள் என்பதை நான் மறந்துவிட்டேன். ஆனால், "காட்டு ராஜா சிங்கம்! கவிதைக்கு ராஜா கண்ணதாசன்! என என் தலைவர் காமராஜர் புகழ்ந்து கூறிய அந்த மொழிகள் ஒரு கல்வெட்டாக என் நெஞ்சம் ஏற்றுக் கொண்டு இருக்கிறது.
என் பிறந்த நாளை அவரும், அவர் பிறந்த நாளை நானும் என்றென்றும் நினைவில் வைத்திருப்போம். ஜூன 24ம் தேதி முதல் டெலிபோன் அவரிடம் இருந்து எனக்கு வரும். அதைப்போல ஜூலை 15 அவருக்குச் செல்லும் முதல் போன் என்னுடையதாக இருக்கும்.
நான் ஒரு முறை பெத்தடின் ஊசிக்கு அடிமையாக இருந்தேன்.அப்போது காமராஜர், "அந்த ஊசி எத்தனை மோசமானது. தெரிஞ்சும் இப்படிப் பண்றானே... இந்தப் பாவிக்கு யார் புத்தி சொல்றது? என்று பதறியதை நான் அறிவேன். ஆன்மீகத்தில் எனக்கு கண்ணபிரான் பிடித்த மானவர். அரசியலில் காமராஜர். தமிழ்நாட்டின் தேசிய பாரம்பரியத்தின் அந்தக் கடைசி மணி மண்டபமும் உடைந்துவிட்டது. இதுவரை என் துயரங்களை எல்லாம் அவரிடம் சொல்லி அழுதிருக்கிறேன். இனி யாரிடம் சொல்லி அழுவது? என்று கதறினார்.
காமராஜர் பிறந்த தின விழாவை சிறப்பாகக் கொண் டாட விரும்புவார் கண்ணதாசன். அதன்ஒரு பிரதிபலிப் பாகத்தான் தொடர்ந்து 36 கூட்டங்கள் நடத்தி காமராஜர் புகழ் பாடினார். காமராஜர் பிறந்தநாளுக்காக அவர் எழுதி யிருக்கும் பாடல்கள் காலத்தால் அழியாதவை. அவர்கள் இருவருடைய நட்பு போல, என்றென்றும் நிலைத்திருக்கக் கூடியது.

"விகடன் பிரசுரம் வெளியிட்ட "பெருந்தலைவர் காமராஜர் எனும் நூலிலிருந்து...

பெருந்தலைவரின் மேடைப் பேச்சு

அய்யா காமராஜரின் ஒரு மேடைப்பேச்சில் - நவசக்தி 13.7.68
" ஏழைகள் மானம் மரியாதையுடன் வாழ்வதைப் பணத் திமிங்கிலங்கள் விரும்பவில்லை. எழைகள் என்றும் அடிமைகளாகவே தான் இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றார்கள். ஏழை மக்கள் இந்தப் பணக்காரர்களை பற்றிக் கவலைப்படக்கூடாது.




நம்மைச் சாதிச் சண்டையில் திருப்பி விடுகிறார்கள். என் ஜாதிக்காரர்களுக்கு மந்திரி பதவி வேண்டும் என்க்றார்கள். யார் மந்திரியாக இருப்பது பிரச்சனையல்ல. மக்களுக்கு யார் நன்மைகள் செய்கிறார்கள் என்பதுதான் பிரச்சனை.
நான் கூடப் பத்து ஆண்டுகளாகப் பெரிய மந்திரியாக இருந்தேன். நான் மந்திரியாக இருந்தேன் என்பதற்காக நாடார்களெல்லாம் "நாடார் மந்திரியாக இருக்கிறார், நாங்கள் எல்லாம் உழைக்க மாட்டோம், உட்கார்ந்து கொண்டே சாப்பிடுவோம் என்று சொன்னால் முடியுமா என்ன"?
நான் மந்திரியாக் இருந்தேன், எனக்கு அரசாங்கத்தில் வீடும், காரும் கொடுத்தார்கள். இதனால் மற்ற நாடார்களுக்கு என்ன லாபம்? ஆகையால் ஜாதியை சொல்லி ஏமாற்றுகிறவர்களிடம் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், பலியாகி விடக்கூடாது.
நான் தேர்தலில் தோல்வி அடைந்தவன், ஏன் மீண்டும் மக்களை சந்திக்கிறேன்? யார் தயவும் எனக்குத் தேவையில்லை. நான் மக்கள் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன். இதனால்தான் பணக்காரர்கள் என்னைத் தோற்கடித்தார்கள்.
நான் இனித் தூங்கப் போவதில்லை. மக்கள் இப்போது விழித்துக் கொண்டார்கள். நான் எத்தனை தடவை தேர்தலில் தோல்வி அடைந்தாலும் மக்களை சந்திக்க தவறமாட்டேன். வெற்றி, தோல்வியைக் கண்டு கவலைப்படாதவன் நான்."
- நவசக்தி 13.7.68

Tuesday 30 December 2014

நூற்றாண்டு கடந்தாலும் தீராத தீட்டு

முகநூலில் பதிந்தவர்: Sumi Sumaa

அப்பார்ட்மெண்ட் பிராமணர்கள் 
_________________________

(ஒரு பெண்ணின் கடிதம்.....) 

கணவருக்கு சிறுசேரி ஐ.டி நிறுவனமொன்றில் வேலை. எனக்கு தி.நகர் தனியார் பள்ளியில் ஆசிரியர் வேலை. அப்போது எங்கள் குழந்தைக்கு வயது நான்கு. அடுத்த வருடம் அவனை ஒரு பள்ளியில் சேர்க்கணும். இதெல்லாம் யோசித்து ஒரு ஏரியாவில் வாடகை வீடு பார்த்து குடி போனோம்.

அது பார்க்க ரொம்ப அழகான அப்பார்ட்மெண்ட். சிங்கிள் பெட் ரூம் என்றாலும் வெளியே டு வீலர் பார்க்கிங், குழந்தைகள் விளையாட வசதி, காற்றோட்டமான குடியிருப்பு, எங்க பட்ஜெட்டுக்கு ஏத்த வாடகைன்னு எல்லாம் பொருந்தி வந்தது...




அப்பார்ட்மெண்டுல 20 வீடுகள்ள பிராமிண்ஸ் இருந்தாங்க. ஐஞ்சு வீடு நான்-பிராமின்ஸ், மூன்று வீடுகள்ள கத்தோலிக்ஸ், இரண்டுல நார்த் இன்டியன்ஸ் இருந்தாங்க.

பிராமின்ஸ் வீடுகள்ள இருக்கும் குழந்தைங்க எங்க வீட்டுக்கு எப்பவாச்சும் வருவாங்க, சாக்லேட், பாக்கட் சிப்ஸ் கொடுத்தா சாப்பிடுவாங்க. பரவாயில்லயே நல்லாத்தானே பழகுறாங்கன்னு ஆரம்பத்துல நினைச்சேன். பிறகு பார்த்தா அவங்க பேக்டு ( உறை போட்ட) உணவு மட்டும்தான் சாப்பிடுவாங்க, வடை, பணியாரம்முனு இதர பதார்த்தங்கள கொடுத்தா நாசுக்கா தவிர்ப்பாங்க. ஒருநாள் ஏன் என்னென்னு கேட்டப்பிறகுதான் சொன்னாங்க. நம்ம கைபட்ட பதார்த்தம் அவங்களுக்கு தீட்டாம். அதே மாதிரி தண்ணியும் குடிக்க மாட்டாங்க. இதெல்லாம் அந்த குழந்தைங்க சரளமா செய்யுறதப் பாத்து எனக்கு இன்னும் அதிர்ச்சி. எப்படியெல்லாம் டிரெயினிங் கொடுத்துருக்காங்க!

மாசத்துக்கு ரெண்டு நாளாவாது முழு அப்பார்ட்மெண்டையும் கழுவி ஊத்துவாங்க. ஏதோ பிரதோஷம், இன்னும் வாய்க்குள் நுழையாத சடங்கு சாஸ்திரமுன்னு சொல்லி தண்ணி இல்லாத ஊருல வெள்ளமா ஊத்துவாங்க. காலைல ஸ்கூலுக்கு கிளம்பும் போது இவங்க ஊத்துண தண்ணியல விழாம கவனமாக பாத்துப் போகணும். மற்றவர்களுக்கு இப்படி இடையூறு செய்யுறமேன்னு கொஞ்சம் கூட நினைக்கமாட்டாங்க.

இவங்க வீட்டுல வேலை செய்யுற பெண்கள் 50, அறுபது வயசானாலும் ஏன்டி, போடின்னுதான் கூப்பிடுவாங்க. கொடுமை என்னண்ணா அவங்க பசங்களும் அப்படித்தான் கூப்பிடுவாங்க. காலையில் வேலைக்கு வந்தா அப்பார்ட்மெண்ட் வெளி கேட்டுக்கு பக்கத்துல செருப்பை கழட்டிவிட்டுத்தான் இந்த பெண்கள் வரணும். இவங்க சமையலறையில அந்த பெண்கள் நுழைய கூடாது. பாத்திரங்களையெல்லாம் குளியலறையில்தான் கழுவணும். பழையது, மிஞ்சனதெல்லாம் யூஸ் அண்ட் த்ரோ டப்பாக்களில்தான் கொடுப்பாங்க.

அந்த பிராமின் வீடுகள்ள ஒருத்தரு ஏதோ சில கோவில்கள்ல ஐயரா இருக்காரம். அவரு செல்போன், பைக்குனு அல்ட்ரா மாடர்னா இருந்தாலும் வீட்டு பெண்கள் பீரியட்ஸ்னா அபார்ட்மென்ட் தரை தளத்துல ஒரு சேரைப் போட்டு உக்காருவாங்க. ஒரு பெண்ணா எனக்கு அது பயங்கர கூச்சமாவும், வெறுப்பாவும் இருக்கும். மூணு வேளையும் ஓட்டல் சாப்பாடு வாங்கி கொடுப்பாங்க. வீட்டுல எதாவது துணிமணி கேட்டாங்கன்னா கொடியில இருந்து கம்பு வைச்சு எடுத்துக் கொடுப்பாங்க. இதெல்லாம் 21-ம் நூற்றாண்டுல சென்னையில ஒரு நவீன குடியிருப்புல நடக்குது!

அதே மாதிரி வெளிய போனா உடுப்பி, கிராண்ட் ஸ்வீட்ஸ், கிருஷ்ணா ஸ்வீட்ஸ்ன்னு ரொம்ப ஆச்சாரமான சைவக் கடையா பாத்துத்தான் சாப்பிடுவாங்க!

இதன் மறுபுறமும் உண்டு. தள்ளு வண்டியில் வரும் கடைக்காரர்களிடம் இவர்கள் பேரம் பேசும் சித்ரவதைய தனியா சொல்லணும். பத்து ரூபாய்க்கு ஐந்து விதமான காய் வாங்கி அதில் ஐம்பது காசு மிச்சம் பிடிக்க பிளான் பண்ணுவாங்க. காய்க்காரரிடம் வத்தலும், தொத்தலுமாய் இருக்கே, என்னா இவளோ ரேட்டு என்று ஆரம்பித்து நாலணா, எட்டணாவுக்க்கு உலக அரசியலே பேசுவாங்க. மற்றவர்களிடம் சாதாரணமாக பேசும் அந்த வியாபாரிகள் இவர்களை மட்டும் ஜன்ம எதிரி போல நடத்துவாங்க. ஆனால் அவர்களுக்கிடையே தினமும் வியாபாரம் நடந்துதான் வருகிறது.

எங்கள் அப்பார்ட்மெண்ட் பிராமணர்கள் மின்வாரியம், தலைமைச் செயலகம், இன்சூரன்சுன்னு பல அரசு, தனியார் துறைகளில் நல்ல சம்பளத்துடன் வாழ்றவங்கதான். ஆனா பாத்தீங்கன்னா ரேசன் பொருட்கள் ஒன்று விடாமல் வாங்கி வருவாங்க. அதில் பொங்கல் இலவச வேட்டி, சேலை, மளிகை பொருட்கள் கூட அடக்கம். நாங்களெல்லாம் ரேசன் கடைகளில்தான் கால்வயிற்று கஞ்சியுடன் வளர்ந்து ஆளானவங்கதான். ஆனா இன்னைக்கு ஒரு நடுத்தர வர்க்க வாழ்வு கிடைத்ததும், வறுமைக் கோடுக்கு கீழே இருக்கும் மக்களின் பங்கை நாம எடுக்க கூடாதுங்கிறதெல்லாம் யோசிக்காமலே செய்கிறோம். அவங்களோ எந்த குற்ற உணர்வும் அடையறதில்லை.

இவங்களோட ஆச்சார அனுஷ்டாங்களாவது உண்மையான்னு பார்த்தால் அது இன்னும் போலியா இருக்கும். ஒரு வீட்டில் கையில் ஏதோ ஜபமாலை வைத்துக் கொண்டு எதிரில் குட்டி ஹோமம் மாதிரி ஒன்றில் (நெருப்பு கிடையாது) ஏதோ எடுத்து போட்டு கொண்டிருப்பார் ஒருவர். எதிரில் ஷேர் மார்கெட் சானல் ஓடிக் கொண்டிருக்கும். அதுல ஷேர் விலைகளை பாத்துகிட்டு இங்கே மந்திரம் ஓதிகிட்டு………எப்படி இது?

எங்களைப் போன்ற பின்தங்கிய சமூகத்தின் முதல் தலைமுறை அறியாத பங்கு மார்கெட்டெல்லாம் அவர்களுக்கு அத்துப்பிடி. இதர வருமானங்களை இதற்கென்றே ஒதுக்கி பணம் சேர்க்கிறார்கள். அதில் கோவில் பூசாரியாக இருக்கும் ஐயரும் உண்டு. பிராமண வீட்டு பெண்கள் பகலில் எல்லா சேனலிலும் சீரியல் பாப்பாங்க. கைகளில் இருக்கும் நோட்டுக்களில் ராம மந்திரமோ ஏதோ ஒன்றோ எழுதிக் கொண்டே இருப்பார்கள். இதுல எது உண்மை?

அந்த அப்பார்ட்மெண்ட் அசோசியேசன் தலைவர், செயலர், பொருளாளர் எல்லாம் இவங்கதான். அனேகமா பிரமாணரல்லாதோரிடம் மட்டும்தான் அவங்க அதிக பணம் வசூலிக்கிறாங்க. அதை வைத்து அப்பார்ட்மெண்ட் கிளீனிங் இதர செலவு என்று அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்களை இலவசமாக வேலை செய்ய வைக்கிறாங்க. இந்த டெக்னிக்கெல்லாம் எங்கேயும் பாக்கவே முடியாது.

முக்கியமான ஒன்று உண்டு. இந்த குடியிருப்பில் பிராமண உரிமையாளர்கள் வீடு விற்றாலோ, வாடகைக்கு விட்டாலோ அது பிராமணர்களுக்கு மட்டும்தான். ஏழெட்டு பிராமணரல்லாதோருக்கு சொந்தமான வீடுகளில் மட்டும் எங்களைப் போன்றோரை குடி வைக்கிறாங்க.

உங்கள் கட்டுரையில் கிழக்கு புத்தக பத்ரி, எழுத்தாளர் ஜெயமோகன் கட்டுரைகளை சேர்த்திருந்தீர்கள். அதையும் படித்தேன். என்ன தோணுதுன்னா இவங்களெல்லாம் எங்கேயாச்சும் ஒரு பிராமண குடும்பத்தையாவது நேரில் பார்த்தோ இல்லை பழகியோ பாத்திருப்பாங்களோன்னு சந்தேகமா இருக்கு.

எங்க அப்பார்ட்மெண்ட விடுங்க. கணவர் வேலைபார்க்கும் சிறுசேரி ஐடி கம்பெனிய எடுத்துக்கங்க. இங்க மேனேஜர் லெவலில் இருக்கிறவங்கள்ல 90 சதவீதம் பிராமணருங்கதான். இதெல்லாம் எப்படி மத்தவங்களுக்கு தெரியும்?

பிரதமரா மோடி ஜெயிச்சதோ, முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைச்சதோ இந்த ஐ.டி துறை பிராமணர்கள் பகிரங்கமாக ஆபிசுல கூடி கொண்டாடியிருக்காங்க.

எங்க மாவட்டங்கள்ல் இருக்கும் அரிவாளத் தூக்குறவங்க ஒரு கணம்தான் மிருகமாக இருக்காங்க. இவங்களோ அரிவாளையும் தூக்குறதில்ல, ஆனா ஆயுசு பூராவும் ஏதோ ஒரு சாஃப்ட் வேரை வச்சு மத்தவங்களை துன்புறுத்துறாங்க. அது என்ன, எப்படின்னெல்லாம் என்னால விரிச்சு சொல்ல முடியல.

இவங்க கிட்ட நாடோ, அதிகாரமோ இருந்தா எப்படி இருக்குமுணு என் கணவர் அடிக்கடி சொல்வார்! அத நினைக்கவே பீதியா இருக்கு.


Courtesy:- @
 Vinavu.com

கட்டடம் கட்டும் சாரமாக நாகேஷ்

வானொலி: நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?


நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார். ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள். கட்டடம் முடிந்து கிருகப் பிரவேசத்தன்று எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிருகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும். இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடுமாடுகள் மேயும். குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும். மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை. அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.!!!
- வானொலிப் பேட்டியொன்றில் நாகேஷ்

குரு-சிஷ்யன்

மதுரையில் தீரர் சத்தியமூர்த்தி கலந்து கொண்ட ஒரு பொதுக்கூட்டத்தில் 15 வயது ஒரு சிறுவன் துடிப்புடன், சுறுசுறுப்புடன் செயல்பட்டு கூட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தான். அந்த சிறுவன் சத்தியமூர்த்தி அவர்களின் கவனத்தை மிகவும் கவர்ந்து விட்டான். அவனை மேடைக்கு அழைத்த அவர் உனது பெயர் என்ன என்று கேட்க, அச்சிறுவன் தனது பெயர் காமராஜர் என்று பணிவுடன் கூறினான். அதற்கு சத்தியமூர்த்தி அவர்கள் அப்பா நீ என்னை சென்னையில் வந்து பார் என்று கூறி விட்டு பின்னர் மதுரையிலிருந்து புறப்பட்டு வந்துவிட்டார்.
சில காலம் கழித்து சென்னை வந்த காமராஜரை தீரருக்கு மிகவும் பிடித்துவிட்டது. காமராஜரின் பணிவு சத்தியமூர்த்தியை வெகுவாக கவர்ந்தது. காமராஜர் அவரை குருநாதராகவும், தன்னை சீடராகவும் நினைத்து பழகி வந்தார். அவருடைய செயல்பாடுகள் தீரருக்கு மிகவும் பிடித்ததால் அவரது நம்பிக்கைக்கு உரியவராக காமராஜர் தேர்வானார்.
1940-ம் ஆண்டு காங்கிரசில் ராஜாஜி ஆதரவாளர்கள் என்றும், சத்தியமூர்த்தி ஆதரவாளர்கள் என்றும் இரு பிரிவினர் செயல்பட்டார்கள். மாநில காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ராஜாஜி தன்னுடைய ஆதரவாளரான கோவை சுப்பையாவை போட்டியிட செய்தார். தீரர் தன்னுடைய சீடரான காமராஜரை நிறுத்த முடிவு செய்தார்.
இதை காமராஜரிடம் சொன்னபோது அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. உங்கள் தொண்டன் நான். நான் தலைவராவதா? என்று காமராஜர் உருக்கமாக தீரரிடம் கேட்டார். உடனே தீரர் அவரிடம், நாட்டின் நன்மையை கருதி நீங்கள் தான் தலைவர் ஆக வேண்டும். தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று காமராஜரிடம் திட்டவட்டமாக கூறினார்.



தீரர் கூறியதை தட்ட முடியாத காமராஜர் தேர்தலில் போட்டியிட்டார். தியாகராய நகரில் உள்ள இந்தி பிரசார சபாவில் தேர்தல் நடந்தது. இந்தி பிரசார சபா வெளிவாசல் அருகில் தீரர் நின்று கொண்டு ஓட்டு போட வந்தவர்களை கைகூப்பி வணங்கியபடி, "நாட்டின் நலனை கருத்தில் கொண்டு காமராஜருக்கு ஓட்டு போடுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்.
தலைவர் தேர்தலில் 2 ஓட்டுகள் வித்தியாசத்தில் காமராஜர் வெற்றி பெற்று மாநில காங்கிரஸ் தலைவர் ஆனார். தீரர் காங்கிரஸ் மாநில செயலாளர் ஆனார். தன்னை குருவாக நினைத்த காமராஜரை தலைவர் ஆக்கி அவருக்கு கீழ் செயலாளர் பதவி வகித்த தீரரின் தியாகத்தை அரசியல் வரலாற்றில் இது வரை யாரும் செய்ததில்லை.
காமராஜர் எப்போதும் நாடு, நாட்டு மக்களை பற்றிதான் சிந்தித்துக் கொண்டிருப்பார். சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த தீரர் சுதந்திரம் அடைவதற்கு முன்பே தனது 55-வது வயதில் இறந்து விட்டார். தீரரின் மரண செய்தியை கேட்ட காமராஜர் துடியாய் துடித்தார். துக்கம் தாங்காமல் கதறி அழுதார்.

Monday 29 December 2014

தடைக்கல்லும் சிற்பமும்

ஓர் அற்புதமான சிற்பி, ஒருநாள் தெருவில் போய் கொண்டிருந்தவர் ஒரு கடையருகே கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார்.


ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி, அதன் பின் அந்தக் கடைக்காரரிடம், 'ஐயா, இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா அல்லது இதை நான் எடுத்துச் செல்லலாமா?' என்று கேட்டார்.
'தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள். இது இந்த இடத்தில் பெரிய இடையூறாய்க் கிடக்கிறது. போவோர் வருவோரெல்லாம் இடறி விழுகின்றனர்! என்றார் கடைக்காரர்.
பாறாங்கல்லை உருட்டிச் சென்ற அந்த சிற்பி, அதை நுட்பமாகச் செதுக்கி அற்புதமான கடவுள் சிலை ஒன்றை உருவாக்கினார்.
அந்தச் சிலை கடைத்தெருவில் விலைக்கு வந்தது. போட்டி போட்டுக் கொண்டு மக்கள் அதை விலைக்குக் கேட்டார். அப்படிக் கேட்டவர்களுள் கல்லைக் கொடுத்த கடைக்காரரும் ஒருவர்.
முடிவில் அந்தக் கடைக்காரரே அதிக விலை கொடுத்து அந்தச் சிலையைப் பெற்றுக் கொண்டார்.
அந்த சிற்பியை மறந்துவிட்ட அந்தக் கடைக்காரர், 'இந்த அற்புதமான சிலைக்குரிய கல்லை எந்த மலையிலிருந்து எடுத்து வந்தீர்கள்?'… என்று கேட்டார்.


அதற்கு சிற்பி, 'வேறு எங்கிருந்தும் இல்லை. தங்கள் கடை வாசலில் தான் இதைக் கண்டெடுத்தேன். என்னை நினைவில்லையா தங்களுக்கு? ஆறு மாதங்களுக்கு முன் இடையூறாய்க் கிடக்கிறது என்று சொல்லி என்னிடம் நீங்கள் கொடுத்த கல் தான் இது என்றார்.
கடைக்காரர் வியந்தார்.
ஆம். தங்கள் பார்வையில் இது தடைக் கல்லாய்த் தெரிந்தது. என் பார்வையில் கடவுளை பொதிந்து வைத்திருக்கும் சிற்பக் கல்லாய்த் தெரிந்தது. வேண்டாத பகுதியையெல்லாம் செதுக்கி எடுத்தேன். உள்ளே இருந்த கடவுளின் உருவம் வெளிப்பட்டது!' என்றார்.

தேவையற்ற எண்ணங்களையும், வார்த்தைகளை வாழ்வில் நீக்கினால் நாமும் விலைமதிப்பற்ற மனிதனாய், ஒவ்வொருவரும் நம்மை போற்றும் வகையில் வாழ்ந்து காண்பிக்கலாம்.

Saturday 27 December 2014

47 வகை நீர்நிலைகள்::



ஒரு சின்ன குழாயில் நீர் பிடிக்கும் காலத்தில் நாம் இருக்கிறோம். ஆனால், நமது இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் நீர் நிலைகள் மொத்தம் 47..எங்கே மறைந்து போனது ? மறைந்து போகவில்லை மறைக்கப்பட்டுவிட்டது .. விடக்கூடாது மீண்டும் எடுக்க வேண்டும் நம் வருங்கால சந்ததிகளுக்காக. இன்றே அதற்கான முனைப்பில் ஈடுபடுவோம் .முடிந்தவரை இதை பகிர்வு செய்யுங்கள் அதுவே நாம் செய்யும் முதல் முயற்சி.


01. அகழி - (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்
02. அருவி - (Water fall)மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது
03. ஆழிக்கிணறு -(Well in Sea-shore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு
04. ஆறு -(River) - பெருகி ஓடும் நதி
05. இலஞ்சி -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்
06. உறை கிணறு -(Ring Well)மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு
07. ஊருணி -(Drinking water tank)மக்கள் பருகும் நீர் நிலை
08. ஊற்று - (Spring) பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது
09. ஏரி -( Irrigation Tank) வேளாண்மை பாசன நீர் தேக்கம்
10. ஓடை -(Brook)அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்
11. கட்டுந் கிணக்கிணறு(Built-in -well) - சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு
12. கடல் -(Sea) சமுத்திரம்
13. கம்வாய்(கம்மாய்)-(Irrigation Tank) பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்
14. கலிங்கு -(Sluice with many Venturis)ஏரி முதலிய பாச்ன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்ட பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.
15. கால் - (Channel) நீரோடும வழி
16. கால்வாய் -(Suppy channel to a tank )ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி
17. குட்டம் - (Large Pond) பெருங் குட்டை
18. குட்டை- (Small Pond) சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை
19. குண்டம் -(Small Pool) சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை
20. குண்டு - (Pool) குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.
21. குமிழி - (Rock cut Well) நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு
22. குமிழி ஊற்று - (Artesian fountain)-அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று
23 . குளம் -(Bathing tank) ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப்பயன்படும் நீர் நிலை.
24. கூவம் - (Abnormal well) ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு
25 . கூவல் - (Hollow) ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்
26. வாளி (stream) ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.
27. கேணி--( large well) அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங் கிணறு
28. சிறை -(Reservoir) தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை
29. சுனை -(Mountain Pool ) மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை
30. சேங்கை - (Tank with duck weed) பாசிக்கொடி மண்டிய குளம்
31. தடம் -(Beautifully constructed bathing tank)அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்
32 . தளிக்குளம் -(tank surrounding a temple) கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற் நீர் நிலை.
33. தாங்கல் - (Irrigation tank) இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்
34. திருக்குளம் - (Temple tank) கோயிலின் அணித்தே அமைந்த நீராடும் குளம். இது புட்கரணி எனவும் பெயர் பெறும்
35. தெப்பக்குளம் -(Temple tank with inside pathway along parapet wall)ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்
36. தொடு கிணறு -(Dig well) ஆற்றில் அவ்வொப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்
37. நடை கேணி - (Large well with steps on one side) இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங் கிணறு
38. நீராவி -(Bigger tank with center Mantapam) மைய மண்டபத்துடன் கூடிய பெருங் குளம். ஆவி என்றும் கூறப்படும்
39. பிள்ளைக்கிணறு -(Well in middle of a tank) குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.
40. பொங்கு கிணறு -(Well with bubbling spring) ஊற்றுக்கால் கொப்பளித்துக்கொண்டே இருக்கும் கிணறு
41. பொய்கை -(Lake) தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை
42. மடு -(Deep place in a river) ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்
43. மடை -(Small sluice with single venturi) ஒரு கண்ணே உள்ள சிறு மதகு
44. மதகு -(Sluice with many venturis) பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ளது
45. மறு கால் -(Surplus water channel) அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்
46. வலயம் -(Round tank) வட்டமாய் அமைந்த குளம்
47. வாய்ககால் -(Small water course) ஏரி முதலிய நீர் நிலைகள்

Friday 26 December 2014

வியட்நாமில் முதலைப் பண்ணையாம்...??!!


கோழிப் பண்ணையும், இறால் பண்ணையும், ஈமு கோழிப் பண்ணையுமே இங்க படாத பாடு படுது!! வியட்நாமில் முதலைப் பண்ணையாம்...??!!

முதலைப்பண்ணைகள் இப்போது வியட்நாமில் பெரும் பிரச்சினையாக தலை எடுத்துள்ளது. முதலைகள் நல்ல பணம் கொழிக்கும் விசயமாக படுவதால் இந்த் முதலைப்பண்ணை பிரச்சினை வியட்நாமில் தலைவிரித்தாடுகிறது!!




அங்கு 150 குடும்பங்களுக்கு மேல் குடும்பத்துக்கு 50லிருந்து 1000ம் வரை முதலைகளை பண்ணைகளில் வளர்க்கிறார்களாம். தோறாயமாக பண்ணைகளில் வளர்க்கப்படும் முதலைகளின் எண்ணிக்கை 94,000 தான்டலாம் என்கிறார்கள். இது போல் பண்ணைகளில் வளர்க்கப்படும் முதலைகள் பண்ணைகளிலிருந்து தப்பித்து வெளியே குட்டைகளுக்கும் சதுப்புகளுக்கும் சென்று விடுவதே பிரச்சினையாக உள்ளதாம்.

இந்த படத்தில் உள்ள முதலை 32 கிலோ எடையும் 2 மீட்டர் நீளமும் (உத்தேசமாக 7 அடி) கொண்டது. இது ஒரு விவசாயியின் வீட்டின் அருகின் இருந்த குட்டையில் அவரால் பிடிக்கப்பட்டது. இது ஏதாவது அருகில் உள்ள பண்ணையில் இருந்து தப்பித்திருக்கலாம் என்கிறார் அவர். சில பண்ணைகளில் 500 சதுர மீட்டர் பரப்பளவில் 300 முதலைகள் வளர்க்கப் படுகின்றன என்கிறார்கள். முதலை பண்ணையின் உரிமையாளர்கள் த்ங்கள் விலை மிகுந்த முதலைகளை தப்பிக்க விடமாட்டார்கள் என்றாலும் சமீபத்தில் வியட்நாமில் முதலைகளின் நடமாட்டம் குடியிருப்பு பகுதிகளில் அதிகரித்து விட்டதாக மக்கள் தெரிவிக்கன்றனர். இதற்கு காரணம் எல்லாம் முதலைக் கறியின் விலையேற்றம்தான்.

வியட்நாமில் நம்மூர் கோழிக்கறி ஆட்டுக்கறி போல் முதலைக்கறியும் ஒரு முக்கிய உணவாகிவிட்டது!! சமீப காலங்களில் வியட்நாமிய விவசாயிகள் பெரும்பாலும் முதலை வளர்ப்பில் கவணம் செலுத்த ஆரம்பித்து விட்டனர். அதற்கு காரணம் முதலைக்கறியின் விலையேற்றம் தான். இந்திய ரூபாயின் மதிப்பில் ஒரு கிலோ கறி கிட்டதட்ட 390 ரூபாய் இருந்தது தற்பொழுது 650 ரூபாய் ஆகிவிட்டது!! பண்ணைகளில் இருந்த வரை பிரச்சினை இல்லாத விசயம் வெளியில் வந்ததால்தான் பிரச்சினை ஆகிறது. வெளிநாட்டு உல்லாச பயணிகளுக்கு ஆபத்தாகிவிடக்கூடாது என்பதுதான் இப்போது பெரும் தலைவலியாகி உள்ளது வியட்நாமிற்கு!! 

வியட்நாமை பொருத்தவரை முதலைகள் அருகி வரும் பாதுகாக்கப்படும் மிருகங்களின் பட்டியலில்தான் உள்ளது. அவைகளை வெளிநாட்டுக்கு கொண்டு செல்லவோ, தோலையோ அல்லது கறியையோ ஏற்றுமதி செய்யவோ தடை உள்ளது. ஆனால் உள்நாட்டில் பண்ணைகளில் வளர்க்கவோ, மாமிசங்களை விற்கவோ தடைச் சட்டம் ஏதும் இல்லை என்கின்றனர் வன பாதுகாவலர்கள்.
தகவல்: Environmental News and Media

பெருந்தலைவர்-நெற்றிக் கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே

1940_ல் த.நா. காங் கிரஸ் கமிட்டியின் தலைவராக காமராசர் இருந்தார். அவரது குரு சத்தியமூர்த்தி த.நா.காங்கிர சின் செயலாளர்.


வெள்ளைக்கார அதிகாரிகள் கலந்து கொள்ளும் விழாக்களில் காங்கிரஸ்காரர்கள் கலந்து கொள்ளக்கூடாது என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றி இருந்த காலம் அது.
சென்னை மாநகர மேயராக இருந்த சத்தியமூர்த்தி சென்னை மாநகரின் குடிநீர் பிரச்சினைக் காகப் பெரிய பெரிய திட்டங் களை எல்லாம் கொண்டு வந் தார். பூண்டி நீர்த்தேக்கத் திட்டம் அப்போது உருவானதுதான்.
மாநில அரசு அந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டது. எனவே அப்போது சென்னை கவர்ன ராக இருந்த ஆர்தர் ஹோம் பூண்டி நீர்த்தேக்கத் திட்டத்துக்கு அஸ்திவாரக் கல் நாட்டினார். மேயர் என்ற முறையில் சத்திய மூர்த்தியும் விழாவில் கலந்து கொண்டார்.
சத்தியமூர்த்தி மீது காமராஜுக்கு வருத்தம் ஏற்பட்டது. சத்தியமூர்த்தியைப் போய் சந்தித்தார். “வெள்ளைக்கார கவர்னர் பங்கேற்ற நிகழ்ச்சியில் நீங்கள் கலந்துகொண்டது ஏன்?'’ என்று கேட்டார்.
தண்ணீர் பிரச்சினை மிக முக்கியமானது. மேலும் நான் மேயர் என்ற முறையில்தானே கவர்னர் விழாவில் கலந்து கொண்டேன்'’ என்று சத்திய மூர்த்தி பதில் சொன்னார்.
“மேயராக இருந்தாலும் காங்கிரஸ்காரர்தானே. காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாடுதான் எனக்கு முக்கியம்'’ என்றார் காமராஜ்.
“நீ என்னப்பா சொல்ற? நடந்தது நடந்து போச்சு இப்போது என்னை என்ன செய்யச்சொல்ற'’ பதறினார் சத்தியமூர்த்தி.
“நீங்கள் செய்தது தவறு என்பதை ஒப்புக்கொண்டு த.நா. காங்கிரஸ் கமிட்டிக்கு உங்கள் கைப்பட எழுதிகொடுங்கள் மன்னிப்புக்கேட்டும் நீங்கள் எழுத வேண்டும்'’ காமராஜ் குரலில் உறுதி இருந்தது.
சற்று நேர அமைதிக்குப் பின் காமராஜ் கேட்டது போலவே ஒரு கடிதம் எழுதி சத்தியமூர்த்தி காமராஜ் கையில் கொடுத்தார். அதை காமராஜ் வாங்கி பத்திரப்படுத்திக்கொண்டார்.
சில நாட்களில் டெல்லியில் இருந்து காமராஜருக்கு ஒரு தபால் வந்தது. காங்கிரசின் மேலிடத் தபால். சத்தியமூர்த்தி கவர்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகத் தெரிகிறது அது பற்றி எழுதவும்'’ என்பதுதான் சாராம்சம்.
“உண்மைதான்! ஆனால் மேயர் சத்தியமூர்த்தி மன்னிப்பு கேட்டு கடிதம் கொடுத்திருக் கிறார் என்று த.நா.கா.க. தலைவர் என்ற முறையில் காமராசர் பதில் எழுதினார்.
அந்தப் பதிலோடு அந்த விஷயம் அப்படியே அமுங்கிப் போய் விட்டது.

ம.பொ.சி - தலைநகரை மீட்ட தலைவர்

சென்னை ஆயிரம் விளக்கின் சால்வான் குப்பத்தில், எளிய குடியில் பிறந்தாலும், அயராத உழைப்பால், ஆற்றலால் ஏற்றம் பெறலாம் என்பதை உணர்த்தியவர் ம.பொ.சி. என்றழைக்கப்படும் மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம்.



சித்தாள்
நெசவுத் தொழிலாளி
அச்சுத் தொழிலாளி

என வாழ்வியல் நிமித்தம் பல்வேறு தொழில்களைச் செய்தார்.
காந்தியத்தின்பால் ஈர்க்கப்பட்டு 1927ம் ஆண்டு காங்கிரசில் இணைந்த ம.பொ.சி.

உப்புச் சத்தியாக்கிரகம்
சட்ட மறுப்பு இயக்கம்
ஆகிய போராட்டங்களில் ஈடுபட்டார்.
கள் இறக்கும் தொழில் செய்யும் குடும்பத்தில் பிறந்தாலும், சென்னைப் பெருநகர மதுவிலக்கு குழுச் செயலராகப் பொறுப்பேற்றுத் தீவிரப் பிரசாரம் செய்த காரணத்தால் தன் ஜாதி மக்களின் பகையைத் தேடிக்கொண்டார்.

ஆகஸ்ட் கிளர்ச்சி தொடங்கி, "வெள்ளையனே வெளியேறு" என்ற முழக்கம் நாடு முழுவதும் ஒலிக்கத் தொடங்கிய காலம்.

ம.பொ.சி.யும் போராட்டத்தில் ஈடுபட்டு, 1942ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் நாள் கைதாகி, இரண்டாண்டு கடுங்காவல் தண்டனை பெற்று, வேலூர் சிறையில் வைக்கப்பட்டு,
பின்னர் ஆகஸ்ட் 30ம் நாள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள அமராவதி சிறையில்
வி.வி.கிரி
கு. காமராஜ்
முத்துரங்க முதலியார்
சத்தியமூர்த்தி ஐயர்
சஞ்சீவ ரெட்டி
போன்ற தலைவர்களுடன் அடைக்கப்பட்டார்.

சிறை வாழ்க்கையில் இலக்கியம் பயின்று, அதன் வழி தன் அரசியல் சிந்தனைகளைச் செம்மையாக வளர்த்தெடுத்தவரின் உள்ளம் இந்திய விடுதலையோடு இன உணர்வையும் இணைத்துப் பார்த்தது.

சங்க இலக்கியங்களும், சிலப்பதிகாரமும், பாரதி பாடல்களும் அவருக்குத் துணை நின்றன.

புதிய தமிழகம் படைக்கும் எழுச்சியுடன் 1946ம் ஆண்டு நவம்பர் 21ம் நாள் தமிழரசுக் கழகத்தைக் காங்கிரசுக்குள் இருந்தபடியே ஒரு கலாசார இயக்கமாகத் தோற்றுவித்தார்.

1947ம் ஆண்டு இந்திய விடுதலைக்குப் பிறகு இந்தியா முழுவதும் பல்வேறு தேசிய இனங்களும் கிளர்ந்தெழுந்த காலகட்டத்தில், இந்தியாவில் இருந்த பிறமொழி வழி இனத் தலைவர்கள், தங்களுக்கென இன,மொழி வளர்ச்சிக்காகத் தனி மாநிலக் கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டங்களைத் தொடங்கினர்.

ஆனால், தமிழகத்தில் மொழிவாரி தனியரசு கோர ஓர் இயக்கமில்லை.எல்லைப் பகுதிகளைக் காக்கவும்,மீட்கவும் எந்தத் தலைவரும் முயற்சிக்கவில்லை.

திராவிடத் தனிநாடு கோரியவர்களும்கூட அதற்கென எந்த முயற்சிகளையும் முன்னெடுக்காத வேளையில், தமிழ் இன உணர்வாளர்களும்,தேசிய வாதிகளும் பிளவுபட்டிருந்த நேரத்தில்,
தமிழின உணர்வும், உரிமையும், தேச ஒருமைப்பாடும் வேறுவேறல்ல என்பதைத் தேசியத் தலைவர்களுக்கும் பிரிவினைச் சக்திகளுக்கும் உணர்த்தும் வகையில்"உரிமைக்கு எல்லை வேங்கடம்; உறவுக்கு எல்லை இமயம்"என்று முழங்கித் தேச உணர்ச்சி, மொழி உணர்ச்சி என்ற இரண்டையும் வளர்த்தெடுத்தார் ம.பொ.சி.

அவரின் இந்த முழக்க எல்லைப் போர், மொழியுரிமைப் போர், மாநில சுயாட்சிப் போர் என்ற எல்லாவற்றுக்குமான சூத்திரம்,இதையே, "சுயாட்சித் தமிழகம்" படைக்கும் தேவைக்கான கொள்கையாகவும் எடுத்துரைத்தார்.

1956ம் ஆண்டு நவம்பர் முதல் நாள் தமிழகம் தனி மாநிலம் ஆனது.

முன்னதாக பொட்டி ஸ்ரீராமுலு என்கிற ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர் உண்ணாவிரதம் இருந்து ஆந்திரப் பிரிவினையைக் கோரினார்.சென்னையில் இராயப்பேட்டை நெடுஞ்சாலையில் இருந்த புலுசு சாம்பமூர்த்தி என்ற ஆந்திரத் தலைவரின் இல்லத்தில் தனது உண்ணாவிரதத்தை 1952ம் ஆண்டு அக்டோபர் 14ம் நாள் தொடங்கினார். ஆந்திரத் தலைவர்களான பிரகாசம், புலுசு சாம்பமூர்த்தி போன்றோர் அவரை தரித்தனர்.சென்னையைத் தலைநகராகக் கொண்ட ஆந்திர மாநிலம் அமைய வேண்டும் என்பதே அவர்தம் கோரிக்கை.

"மதராஸ் மனதே"என்ற முழக்கத்தோடு பட்டினி கிடந்த ஸ்ரீராமுலுவைக் காணச்சென்ற ம.பொ.சியிடம் பிரகாசம், ஸ்ரீராமுலுவின் உயிரைக் காப்பாற்ற உதவி செய்ய வேண்டும் என்று கோர, அதற்கு ம.பொ.சி., "சென்னை நகர் மீது உரிமை கொண்டாடுவதை விட்டு ஆந்திர மாநிலம் கோரினால், தமிழரசுக் கழகம் ஆந்திரர்களுடன் பூரணமாக ஒத்துழைக்கும்" என்று பதிலிறுத்தார்.

பிரகாசம் விடாமல், "ஆந்திர அரசு தாற்காலிகமாகவேனும் சென்னையிலிருக்க அனுமதித்தாலும் போதும்.விசால ஆந்திரம் அமையும் போது எங்களுக்கு ஹைதராபாத் கிடைத்துவிட்டால் நாங்கள் போய்விடுவோம்.இதற்கு நீங்கள் இசைந்துவிட்டால், மற்றவர்கள் எதிர்க்க மாட்டார்கள்" என்று கூறியபோதும், கொடாக் கண்டராய்,"ஆந்திர அரசுக்குத் தாற்காலிகமாகச் சென்னையில் இடமளிக்க மற்றவர்கள் இசைந்தாலும், நான் இசைய மாட்டேன்" என்று உறுதியாகக் கூறிவிட்டுத் திரும்பினார்.

1952ம் ஆண்டு டிசம்பர் 15ம் நாள் பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்த நிலையிலேயே உயிர் துறந்தார்.அப்போது ஆந்திரத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்ந்து மூன்று நாள்கள் நீடித்தது.நிலைமை மேலும் மோசமாகக் கூடுமென்ற அச்சத்தால், ஆந்திர மாநிலம் 2-10-1953 அன்று பிரிக்கப்படுமென்று நாடாளுமன்றத்தில் நேரு அவசரமாக அறிக்கை வெளியிட்டார்.

"சென்னை நகரம் அல்லாத தகராறுக்கு இடமில்லாத - தெலுங்கு வழங்கும் மாவட்டங்களைக் கொண்டு - சித்தூர் மாவட்டம் முழுவதையும் சேர்த்து ஆந்திர மாநிலம் அமையும் என்றும்,
தலைநகர் பின்னர் அறிவிக்கப்படும் என்றும், நேரு தம் அறிவிப்பில் விளக்கியிருந்தார்.

சித்தூர் மாவட்டத்தின் தெற்கேயுள்ள பகுதிகள் தமிழகத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று ஏற்கெனவே தமிழரசுக் கழகம் கோரிவந்த நிலையில், சித்தூர் ஆந்திரத்தில் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதும், பிரகாசம் மீண்டும், "சென்னையை இரு பகுதியாகப் பிரித்துக் கூவத்தை நடுவில் வைத்து, வட சென்னையை ஆந்திரத்துக்கும் - தென் சென்னையைத் தமிழ்நாட்டுக்குமாகப் பங்குபோட வேண்டும் அல்லது சென்னை நகரம் ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களுக்கும் பொது நகராகச் செய்ய வேண்டும்" என்று அறிக்கை விட்டதும் தமிழகத்தின் நிலை கேள்விக்குள்ளாக்கியது.

அப்போது சென்னை மாநகராட்சியின் ஆல்டெர்மேனாக (Alderman) இருந்த ம.பொ.சி., "தன் தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" என்ற முழக்கத்துடன் போராட்டத்தைத் தொடங்கினார்.

அப்போதைய சென்னை மேயர் செங்கல்வராயனின் உதவியுடனும், தமிழக முதல்வர் இராஜாஜியின் ஆதரவுடனும் திருவல்லிக்கேணி கடற்கரையில் கட்சி சார்பற்ற நிலையில்,

இராஜாஜி
பெரியார்
எஸ்.எஸ். கரையாளர்
பக்தவத்சலம்

போன்ற தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தை நடத்தினார்.

அத்துடன் உள்துறை அமைச்சர் இலால் பகதூர் சாஸ்திரிக்குத் தமிழ்நாடு முழுவதுமிருந்து தந்திகள் அனுப்பவும் ஏற்பாடு செய்தார்.மேலும் மாநகராட்சியின் சிறப்புக்கூட்டத்தைக் கூட்டச் செய்து "தலைநகரம் தமிழருக்கே" என்பது பற்றிய தீர்மானத்தையும் கொண்டு வந்தார்.நீண்ட விவாதத்துக்குப் பின்னர், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தந்தி வடிவில்

குடியரசுத் தலைவர்
பிரதமர்
உள்துறை அமைச்சர்
சென்னை மாநில முதல்வர்

ஆகியோருக்கு மேயரால் அனுப்பப்பட்டது.

கடைசியாக 25-3-1953 அன்று தில்லி நாடாளுமன்றத்தில் நேரு, மத்திய அரசின் சார்பில் அதிகாரப்பூர்வமான பிரகடனம் ஒன்றை வெளியிடுகையில்,"ஆந்திர அரசின் தலைநகரம் ஆந்திர நாட்டின் எல்லைக்குள்ளேயே இருக்கும்" என்று அறிவித்தார்.

தலைநகரைக் காப்பாற்ற உறுதுணையாய் நின்ற தலைவர்கள்கூடத் தமிழ்நாட்டின் எல்லைப் பிரச்னையில் ம.பொ.சி.க்கு கை கொடுக்கவில்லை.ஆனால், தமிழகத்தின் வடக்கெல்லை, தெற்கெல்லை மீட்பில் ம.பொ.சி.யின் பங்களிப்பை வரலாறு உணர்த்தும்."தமிழ்நாடு" என்ற பெயர் சூட்டவும் பயிற்சி மொழியாகத் தாய் மொழியாம் தமிழ் மொழியே இருக்க வேண்டும் என்றும் அறப்போர் நடத்தினார்.அவர்ஆல்டெர்மேனாக இருந்தபோதுதான் ஆங்கிலேயர் வடிவமைத்திருந்த சென்னை மாநகராட்சியின் கொடியை மாற்றி, சேர,சோழ,பாண்டியரின் வில், புலி, மீன் ஆகியவற்றைப் பொறித்தார்.

மாநகராட்சியின் வரவு - செலவுக் கணக்கை முதன்முதலாகத் தமிழிலே தாக்கல் செய்தார்.

வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
தமிழகத்தில் பிற மொழியினர்
தமிழ் இலக்கியத்தில் இனவுணர்ச்சி
விடுதலைப் போரில் தமிழகம்
சிலப்பதிகாரத் திறனாய்வு

போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் அவருடைய இலக்கியப் பங்களிப்பை நமக்கு உணர்த்தி நிற்கும்.

2006ல் ம.பொ.சி.யின் நூற்றாண்டு விழா நடைபெற்றபோது, தமிழக முதல்வர் கருணாநிதியால் ம.பொ.சி.யின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவரது சந்ததியினருக்கு 20 இலட்ச ரூபாய் வழங்கப்பட்டது.

மேலும் 2006 ஆகஸ்ட் 15 அன்று ம.பொ.சி.யின் உருவம் பொறித்த அஞ்சல் தலை ஒன்றும் முதல்வரால் தலைமைச் செயலகத்தில் வெளியிடப்பட்டது.நூற்றாண்டு விழா மேடையில் முதல்வர் அறிவித்த "சென்னையில் ம.பொ.சி.யின் சிலை அறிவிப்பு" மட்டும் ஏனோ இன்றுவரையிலும் நிறைவேற்றப்படவில்லை.இதே போராட்டத்தில் ஈடுபட்டுத் தம் நோக்கத்தில் வெற்றி அடையாத பொட்டி ஸ்ரீராமுலு, "அமரர் ஜீவா" என்று இன்றளவும் ஆந்திர மக்களால் போற்றப்படுகிறார்.

அவர் உண்ணாவிரதம் இருந்த இராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள புலுசு சாம்பமூர்த்தியின் இல்லம் ஆந்திர அரசால் நினைவிடமாகப் பாதுகாக்கப்படுகிறது.2000ம் ஆண்டு மார்ச் 16ம் நாள் அவர் நினைவாக அஞ்சல்தலை வெளியிடப்பட்டுள்ளது."பொட்டி ஸ்ரீராமுலு தெலுங்கு பல்கலைக்கழகம்" ஹைதராபாதில் நிறுவப்பட்டுள்ளது. நெல்லூர் மாவட்டத்தை 2008 ஜூன் மாதம் "ஸ்ரீபொட்டி ஸ்ரீராமுலு நெல்லூர் மாவட்டம்" என்று பெயர் மாற்றம் செய்துள்ளனர்.

இப்போராட்டத்தில் அவருக்கு ஆதரவாக நின்ற பிரகாசம் பெயராலும் ஆந்திரத்தில் தனி மாவட்டம் உள்ளது.

நாடாளுமன்றத்திலும் சிலை அமைத்துள்ளனர்.

சென்னையின் முக்கியமான பகுதியிலே பிரகாசம் சாலை என்று அவர் பெயரால் சாலை அமைக்கப்பட்டுள்ளதுடன், பொட்டி ஸ்ரீராமுலு, பிரகாசம் இருவருக்கும் சென்னையிலேயே சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

ஆனால், சென்னை தமிழகத்தில் நிலைத்திருப்பதற்குப் பெரும்பங்காற்றிய ம.பொ.சி.க்குச் சென்னையில் சிலை இல்லை.

முதல்வர், தாம் அறிவித்தபடி சென்னையின் முக்கியமான சாலை ஒன்றில் ம.பொ.சி.யின் சிலையை நிறுவுவதுடன் "ரிப்பன் மாளிகை"க்கும் ம.பொ.சி. மாளிகை என்று பெயர் சூட்ட வேண்டும் என்பதே தமிழார்வலர்களின் கோரிக்கை.

பெருந்தலைவர்-மக்கள் தலைவர்

மக்கள் தங்கள் மனங்களில் பத்திரப்படுத்திக் கொண்ட மகத்தான மக்கள் தலைவர் காமராஜர்.

இந்தியாவில் இன்று வரை உள்ள எண்ணற்ற அரசியல்வாதிகளுள் மண்ணில் எந்த மூலையிலும் ‘பத்திரம்’ பதியாத அரசியல்வாதியாக காமராஜர் வாழ்ந்ததால்தான், மக்கள் அவரைத் தங்கள் மனங்களில் பத்திரப்படுத்திக் கொண்டார்கள்.

யாருக்கு எது தேவை என்று தேடித் தேடி ஒசையின்றி உதவி செய்யும் உத்தமர் காமராஜர்.




மக்களுக்காகவே கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்த பொதுவுடமைவாதி, மானுடம் பாட வந்த உயர்மானுடன் ஜீவா மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்ந்துவந்தார்.

அப்போது முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் ஜீவாவுக்கு உதவ நினைத்தார். அதையும் துணைவியாருக்கு அரசுப் பணி அளித்தார். இதன் மூலம் ஜீவாவின் மீது கர்ம வீரருக்கு இருந்த மரியாதையையும் பொதுவுடமை மீது தலைவர் வைத்திருந்த மதிப்பையும் உணரலாம்.

மக்களின் அன்றாடப் பிரச்சனைகளோடு, மக்கள் தலைவர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும் பெருந்தலைவர் ஈடுபட்டார் என்பதை அதுபோல் பல நிகழ்ச்சிகள் மூலம் அறியலாம்.

மீண்டும் ஜீவா அவர்களின் இறுதிக் காலத்தில் அரசு சார்பில் அவருக்கு வீடு தருகிறோம் என்றபோதும் அதை ஜீவா மறுத்துவிட்டார். இது ஜீவாவின் பெருமையை உணர்த்துகிறது. மக்கள் தொண்டர்கள் மகிழ்வோடு வாழ வேண்டும் என நினைத்த மக்கள் தலைவரின் செயல் மறத்தற்குரியதல்ல.

அரசு ஊழியர்களின் பணி ஓய்வுக்குப் பின் அளப்பரிய சோகம் வரவேற்பதை அறிந்து செயல்பட்டவர் பெருந்தலைவர். பணி ஓய்வுக்குப்பின் மனைவியும் காப்பாற்ற மாட்டாள் மகனும் காப்பாற்ற மாட்டாள் என்பதால் காமராஜர் பென்சன் காப்பாற்றுமென்று ஓய்வூதியத் (பென்சன்) திட்டத்தைக் கொண்டு வந்தார்.

பிறந்த குழந்தைகளுக்குப் பராமரிப்பு அதிகம். பிறந்து அவதிப்படாமல் இருக்கக் குடும்பக் கட்டுப்பாடு, வளரும் போது அவர்களுக்கு இலவசக் கல்வி, மதிய உணவு, மனம் கோணாது ஏற்றத்தாழ்வு தெரியாமல் வாழ பள்ளிச் சீருடை, கலைக்கல்வி, பின் தொழிற்கல்வி, கற்க முடியாதவர்க்கு சுய தொழில் கடன்கள், சுற்றுப்புறச் சுகாதாரத் திட்டங்கள், பாதுகாத்த குடிநீர் வசதி, சாலைகள், சீரான போக்குவரத்து வசதிகள் என்று எண்ணற்ற வழிகளில் எண்ணி மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்த்தால்தான் மக்கள் தலைவர் என மக்களால் பாராட்டப்படுகிறார்.

மக்ககள்மீது காமராஜர் வைத்திருந்த பற்றைப் போலவே மக்களும் காமராஜர்மீது பற்றும் பாசமும் வைத்திருந்தார்கள்.

அவர் இறந்து போனார் என்ற செய்தியைக் கூறிய வானொலிப் பெட்டியையே உடைத்தெறிந்த தொண்டர்கள் ஏராளம்.

காமராஜரின் மரண ஊர்வலத்தன்று சென்னை மாநகரமே அழுதது எனலாம். எங்கும் சோகமயமாய் மக்கள் சுகமிழந்து நின்றார்கள்.காமராஜர் உடல் ஊர்வலமாய் வரும் வீதியெங்கும் மக்கள் கூட்டம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று கூட்டம் அலை மோதுயது.

தடுப்புச் சுவர்களைக் கடக்கத் துடித்தார்கள் தொண்டர்கள். அந்த கூட்டத்துக்குள் ஒரு தன் கைக்குழைந்தையுடன் கண்ணீர் மல்கக் காத்து நிற்கிறார்.
கூட்டம் அங்கும் இங்கும் நெரிக்கிறது. அந்த தாய் நெரிசலில் சிக்கித் தவிக்கிறாள். அதைப் பார்த்துவிட்டக் காவலர் ஒருவர் கருணையோடு, ''ஏம்மா இந்தக் கைக் குழந்தையோடு இங்கே வந்தாய்? போம்மா! இப்படியே கூட்டத்துக்குள்ள நின்னா குழந்தை செத்துவிடும் என்று அதட்டினார்.

அதற்கு அந்த தாய் சொன்னாள், ''ஐயா இந்தக் குழந்தை செத்தா பெத்துக்கிடலாம். இப்ப காமராசனை பார்க்காமல் விட்டா நாளை நான் பார்க்க முடியுமாய்யா?''

மக்கள் அந்த அளவு தலைவரிடம் ஈடுபாடு உடையவர்களாக இருந்தார்கள்.

வீட்டை மறந்து நாட்டை நினைத்ததால் நாட்டுமக்களால் இன்னும் மறக்கப்படாத தலைவராக வாழ்கிறார் காமராஜர். தனக்கென ஒரு தனி வாழ்வை அமைக்க ஆசைப்படாமல் தனித்தனி குடும்பங்கள் எல்லாம் எல்லாமும் பெற ஆசைப்பட்டார்.

மணமுடித்தால் மனையாள் சுகம் தேடி மக்கள் சுகம் மறந்து போகும் என்று மணமுடிக்காமலே வாழ்ந்ததால்தான் இன்னும் மக்கள் தலைவராக மணம் வீசுகிறார்.

இறக்கும் முன் கூறிய இறுதி வார்த்தை, ' விளக்கை அணைத்து விடு' பெரியோர்களின் இறுதி வார்த்தைகளில் பொருள் இருக்கும் என்பார்கள். ஆம் அடுத்தவர்க்காகவே ஒளி விட்ட கடைசி அரசியல் விள்க்குதானே அவர்.

எனவே,
அவரது வாழ்க்கை சுயநல அரசியல் நடத்தும் அரசியல்வாதிகள் அவசிய பாடமாகும்.

பெருந்தலைவர்-தீண்டாமைக்கு எதிராக இளம் வயதிலேயே குரல்...

காமராஜரின் இளம் வயது நண்பர் குமரன். இவர் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர்.
ஒரு தடவை குமரன் மாரியம்மன் கோவிலுக்கு தீச்சட்டி எடுத்து வந்தார். அவரை சாதியை சொல்லி கோவிலுக்குள் விட மறுத்தனர். இதை கண்டு கோபம் அடைந்த காமராஜர், குமரனை இழுத்துக்கொண்டு கோவிலுக்குள் சென்றார்.



ஓடோடி வந்த ஞானம்பிள்ளை என்பவர் காமராஜரின் கையை எட்டிப் பிடித்தார். "இதென்ன தம்பி வம்பு! இது ஊர்க்கட்டுப்பாடு ஆச்சே அவங்களுக்குத்தான் தனி இடம் ஒதுங்கி இருக்கே...'' என்றார்.
அவரைத் திரும்பிப் பார்த்த காமராஜ், என்னங்க அய்யா? நீங்கக் கூட இப்படிச் சொல்றீங்க.. காந்திஜி தீண்டாமையை அடியோடு ஒழிக்கணும்னு சொல்லியிருக்கார்னு நீங்கதானே சொன்னீங்க.
இப்ப இவங்களைக் கோவிலுக்குள் போகக் கூடாதுன்னு சொல்றது எந்த வகையில் நியாயம்? ஆவாரங்காட்டுப் பொட்டல் நிலத்தை தாழ்த்தப்பட்ட தெருக்காரர்கள் ஏர்கட்டி உழுத போதுதானே இந்த அம்மன் சிலை கிடைத்தது? மாமா கூடச் சொல்லி இருக்காறே இந்த அம்மன் கிட்டப் போய் இவங்களை நேர்த்திக் கடன் செய்யக் கூடாது என்றால், அது எப்படி நியாயமாகும்?'' என்று கூறினார் காமராஜர்.
"நீ சொல்றது சரிதான் தம்பி. அவங்களுக்கும் உரிமை உண்டு. அந்த உரிமை அவங்களுக்குக் கிடைச்சாகணும். ஆனால் ஊர்க்காரர்கள் மனம் மாறணுமே அதுக்குள்ளே இப்படி அவசரப்படலாமாப ஊர்க்கட்டுப்பாட்டை நாட்டாமை வீட்டுப் பிள்ளையே மீறலாமா? வேண்டாம் தம்பி! சொல்றதைக் கேளு'' என்றார் ஞானம்பிள்ளை.
ஆனால் காமராஜர் மனம் தளரவில்லை. ஞானம் பிள்ளையைக் கனிவோடு பார்த்து, "என்னை மன்னிச்சிடுங்க அய்யா! நியாயம்னா அது உடனே கிடைக்கணும். ஊர்க்காரங்க மனம் மாறுகிற வரைக்கும் அநியாயம் தொடர்ந்து நடக்கக் கூடாது'' என்றார்.
காமராஜர் குமரனை இழுத்துச் சென்று எல்லோரையும் போலத் தீச்சட்டியையும் காணிக்கையையும் செலுத்தச் செய்தார்.

நெப்போலியன் போணபர்ட் - அசாத்திய துணிச்சல்

தன் அசாத்திய துணிச்சலால் ஐரோப்பிய கண்டத்தில் தன் பேரரசை நிறுவிய மாவீரன் நெப்போலியன் பயம் என்றால் என்னவென்றே தெரியாதவர். அதற்கு அவருடைய சிறு வயதில் நடந்த ஒரு சம்பவத்தையே உதாரணமாகக் கூறலாம்.




நெப்போலியன் பிரான்சில் உள்ள ராணுவப் பள்ளியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தார். அப்போது விடுதியில் தங்கியிருந்த சக மாணவனின் அழகிய பை ஒன்று காணாமல் போய்விட்டது. உயர் அதிகாரியிடம் அந்த மாணவன் புகார் தெரிவித்தான்.

“ யார் மீதாவது உனக்குச் சந்தேகம் இருக்கிறதா?” என்று அதிகாரி கேட்டார்.

“ஆமாம், எனக்கு நெப்போலியன் மீதுதான் சந்தேகம்” என்றான் அந்த மாணவன்.

உடனே நெப்போலியனை அந்த அதிகாரி தன் அறைக்கு அழைத்தார். உள்ளே நுழைந்த நெப்போலியனிடம் கேள்வி எதுவும் கேட்குமுன்பே, கண்மண் தெரியாமல் அடித்தார்.

“ஏன் திருடினாய்... இனி செய்வாயா?” எனக் கேட்டு நல்ல உதை, அடி. அத்தனையையும் வாங்கிக் கொண்டு அமைதியாக இருந்தார் நெப்போலியன்.

சில நாட்கள் கழிந்தன. புகார் கொடுத்த சக மாணவன் அந்த அதிகாரியிடம் ஓடி வந்தான்.

“ஐயா, என் பொருளைத் திருடியது நெப்போலியன் அல்ல. இன்னொருவன். என்னை மன்னியுங்கள்” என்றான்.

அதிகாரிக்கு வியப்பு. நெப்போலியனை அழைத்தார்.

“ நீ என்ன முட்டாளா? அந்த அடி அடித்தேனே! உண்மையைச் சொல்ல வேண்டியதுதானே” என்று கேட்டார்.

நெப்போலியன் அமைதியாக இப்படிக் கூறினார்...

“ஐயா! நீங்கள் என்னை அடிக்கும் முன்பு கேட்டிருந்தால் சொல்லியிருப்பேன். அடித்துக்கொண்டே கேட்டீர்கள். அப்போது நான் இல்லை என்று சொன்னால், அடிக்குப் பயந்து கொண்டு நான் சொல்வதாக நீங்கள் நினைத்திருப்பீர்கள். நான் பயந்ததாக யாரும் நினைக்கக் கூடாது. அதைவிட அடி வாங்குவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை!” என்றார்.

ஆச்சர்யமாக நெப்போலியனைப் பார்த்தார் அதிகாரி. 

Thursday 25 December 2014

தொழில்-தொழிலதிபர்-தொழிலாளி

விருதுநகரில் முன்பெல்லாம் ஒரு பழக்கம் உண்டு. ஆண் பிள்ளைகள் படிப்பை முடித்துவிட்டு வந்தவுடன் பஜாரில் ஏதாவது ஒரு கடையில் சம்பளத்துக்கு சேர்த்துவிட்டு விடுவார்கள். இத்தனைக்கும் அந்த பையனின் தகப்பனாருக்கு சொந்தமாக கமிசன் மண்டியோ, கடையோ இல்லை கம்பெணியோ இருக்க கூடும். பையன் படிப்பை முடித்தவுடன் நேரடியாக தங்கள் நிறுவனத்தில் பதவி குடுக்காமல் அடுத்த கடைகளில் சம்பளத்திற்கு விட்டு விடுவார்கள். இது தொழில் பழகுவதற்காக மட்டும் இல்லை, நேரம் தவறாமை, ஒழுக்கம், பணிவு, பணியாளர்களின் கஷ்ட நஷ்டங்கள் போன்ற விசயங்களை கற்றுக்கொள்ளத்தான். அந்த பையன் குறந்த பட்சம் ஓராண்டிலிருந்து ஈராண்டு வரை சம்பளத்திற்கு வேலை பார்த்து விட்டு தன் நிறுவனத்திற்கு வருவான். அவன் வரும் பொழுது தான் முதலாளி என்ற என்னமே அவன் மனதை விட்டு அகன்று இருக்கும். 20 வருடத்திற்கு முன் ஏர்னாடிக்ஸ் படித்து விட்டு இது போல் சம்பளத்திற்கு வேலை பார்த்துவிட்டு நிறுவனத்திற்கு வந்தவர்கள் எல்லாம் விருதுநகரில் எனக்கு தெரியும். ஆனால் இன்று விருதுநகரிலேயே இந்த வழக்கம் வழக்கொழிந்து விட்டது. 



தொழில் என்பது தனி மனித சாதனையோ இல்லை தோல்வியோ அல்ல. கண்டிப்பாக அது கூட்டு முயற்சியாகத்தான் இருக்க வேண்டும். கூட்டு முயற்சிக்கு பணியாளர்கள் அவசியம் இல்லை நமக்கு சரக்கு அனுப்புபவராகவும் இருக்கலாம், நம்மிடம் கொள்முதல் செய்பவராகவும் இருக்கலாம். நமது நிறுவனத்திற்கு நாம் தான் முதலாளி என்ற எண்ணம் இல்லாமல் நமக்கு சரக்கு அனுப்புபவரும், நம்மிடம் கொள்முதல் செய்பவரும் நம் முதலாளிகள் என்ற எண்ணம் வேண்டும். அவர்களது பணத்தை மட்டுமல்ல அவர்களது நேரத்தையும் நாம் மதிக்க வேண்டும். நம்மிடம் பணிபுரிபவர்களையும் நமது சக ஊழியராக கருத வேண்டுமே ஒழிய நம் அடிமைகள் அல்ல என்ற எண்ணம் வேண்டும். இன்று பல முதலாளிகள் தொழிலாளர்களின் சொந்த பிரச்சினைகளை கண்டு கொள்வதில்லை, சம்பளம் தருவதுடன் தங்கள் கடமை முடிந்து விட்டதாகவே கருதுகின்றனர். பணியாளர்கள் சொந்த பிரச்சினையை வைத்துக் கொண்டு நம் நிறுவனத்தின் நிம்மதியாக மட்டுமல்ல சிறப்பாகவும் வேலை பார்க்கமுடியாது. அவர்கள் உடல் இங்கு வெலை செய்து கொண்டிருந்தாலும் மனம் அவர் பிரச்சினையை சுற்றியே ஓடி கொண்டிருக்கும். அப்புறம் எப்படி அவரிடம் சிறப்பான அல்லது கவணத்துடன் கூடிய உழைப்பை எதிர்பார்க்க முடியும்? தொழிலாளர்களிடமோ, பணியாளர்களிடமோ பேசி பிரச்சினைகளுக்கு தீர்வு தர முயல்பவரே சிறந்த தொழில்முனைவராக இருக்க முடியும்!




இன்று உள்ள பொருளாதார சூழ்நிலையில் வாக்கு தவறாமல் செயல்படுவது கடினமாகவே உள்ளது! குறித்த நேரத்தில் பணமோ இல்லை சரக்கோ தொழில் செய்பவர்களால் குடுக்க முடியவில்லை. இதற்கு நம்மவர்கள் இப்போது வைத்துள்ள தீர்வு என்ன தெரியுமா மொபைல சுவிட்ச் ஆப் செய்வது அல்லது போனை எடுக்காமல் விடுவது! இது நம் நாணயத்தையே கேள்விக்குறி ஆக்கவிடும் செயல். நாம் அவரை ஏமாற்றப் போவதில்லை நமக்கு பன வருமிடத்தில் தாமதம் ஆகியிருக்கலாம் அல்லது நமக்கு சரக்கு அனுப்புபவர் தாமதம் செய்திருக்கலாம். எவ்வளவு தாமதம் ஆனாலும் போனுக்கு பதில் அளித்து பொறுமையாக பதில் கூறி அவரின் திட்டுக்களை பெற்றுக் கொள்வதே தொழில்செய்பவருக்கு நல்லது! இதனால் வரும் நன்மைகள் ஒன்று நம் மேல் அவருக்கு இருந்த ஆத்திரம் தீர்ந்துவிடும், இரண்டு நம் நாணயம் கெடாது, மூன்று அவரே நமக்கு உதவ முனையக் கூடும்! ஒருத்த்ருக்கு நாம் கண்டிப்பாக பணத்தி குடுக்க வேண்டும் என்று முனையும்போதே நாம் சம்பாதிக்க தொடங்கி விடுவோம். சரக்கு வாங்குபவரோ இல்லை சரக்கு குடுத்தவரோ அழைக்கும் போது கன்டிப்பாக பதில் அளியுங்கள்.

இன்று தொழில் செய்பவருக்கும் சரி பணியில் இருப்பவருக்கும் சரி.... பிரைவசி நேரம் என்ற ஒன்று இல்லாமல் ஆக்கிவிட்டது செல்போன். முன்பெல்லாம் ஒருவரை தொடர்பு கொள்ள லேன்ட் லைன் போன் மட்டுமே உண்டு. அதுவும் அவரது அலுவலக தொடர்பு மட்டுமே தொழில் தொடர்பில் இருப்பவருக்கு தெரியும் எனும்போது அவரை அலுவலக நேரங்களில் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும். ஆனால் செல் போனும், லேப் டாப்பும் இப்போது நாம காலைக் கடன் கழிக்க போகும் போதே நம் பணி நேரத்தை தொடக்கி வைத்து விடுகிறது. ஆனால் ஒரு முதலாளியும் சரி, நிர்வாக பொறுப்பில் உள்ள பணியாளரும் சரி தனக்கு கீழ் உள்ளவரோ அல்லது சப்ளையரோ அல்லது நமக்கு பனம் தர வேண்டியவரோ அவரது பிரவசியை நாம் மதித்தே ஆகவேண்டும். அவர்களது பணி நேரம் அல்லாத நேரங்களில் அவரை அழைப்பதை கூடுமான வரை தவிர்ப்பதே சிறப்பு. கண்டிப்பாக அழைத்தே தீரவேண்டும் என்ற காட்டாயம் இல்லாத சூழலில் அவரை பணியில் இல்லாத நேரங்களில் கண்டிப்பாக அழைக்க கூடாது.

இன்று உள்ள பொருளாதார சூழ்நிலை முன்பு போல இல்லை. குறைந்த லாபத்தில் நிறைந்த செலவுகளுடன் தொழிலை சந்தித்து வருகிறீர்கள் தொழில் அதிபர்களே. ஆகவே முடிந்த வரை தேவை இல்லாத செலவுகளை குறையுங்கள். அதற்காக பணியாளர்களுக்கு செய்யும் அவசிய செலவுகளில் கை வைத்து விடாதீர்கள். முடிந்த வரை அலுவலகத்தில் உங்கள் செலவுளை குறையுங்கள்! வீட்டில் உங்கள் வசதியை சவுகரியமாக பார்த்துக் கொள்ளுங்கள் ஆனால் அலுவலகமோ தொழிர்க்கூடமோ அங்கு பணியாளர்களின் சவுகரியத்திற்கு ஏற்றார் போல் இடத்தை அமைத்துக் கொள்ளுங்கள். அலுவலகத்தில் முதலாளிகளின் டாம்பீக செலவுகளை கண்டிப்பாக குறைத்துக் கொள்ளலாம்! முடிந்த வரை பஸ்சிலோ அல்லது டிரைனிலோ செல்லக் கூடிய இடங்களுக்கு காரில் செல்வதை தவிர்க்கலாம்!

அதே போல் கல்லா பெட்டியில் உள்ள பணமோ அல்லது பாங்க் பாலன்ஸோ நமது காசு இல்லை என்ற என்ணம் வேண்டும். அதில் உள்ள லாபத்தொகை மட்டுமே நம்மை சார்ந்தது. அதிலும் பணியாள்ர்களுக்கும் நிறுவன செலவுகளுக்கும் பங்கு இருகின்றது என்பதை மறந்து விடக்கூடாது. கல்லா பெட்டியிலும், பாங்க்கிலும் உள்ள தொகையை வைத்து உங்கள் இருப்பை தீர்மானிக்காதீர்கள். அது உங்கள் பணம் அல்ல!!

நேர்மையாக சிறப்பாக வள்மாக தொழில் செய்ய வாழ்த்துவது
-உங்கள் Kumaran NB Tholandi
நன்றி

பெருந்தலைவர்-கர்ம வீரர்-கடமை வீரர்

1955ம் வருடம் டிசம்பர் மாதம் காமராஜ் முதல்வராய் இருந்த காலம் தென் மாவட்டங்களில் திடீரென்று புயலும் பேய் மழையும் தாக்கின. வானம் பார்த்த சீமை எனப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கால் பலர் வீடிழந்தனர். தங்கள் உடமைகளை எல்லாம் இழந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தேவையில் துடித்தனர். அப்போது முதல்வர் காமராஜ் பாதிக்கபட்ட பகுதிகளை பார்வையிடவும்,பாதிக்கபட்டவர்களுக்கு ஆறுதல் கூறவும் வந்தார். ஒரு கிராமத்தை முற்றிலும் நீர் சூழ்ந்து கொண்டது, வெளி தொடர்பே அற்றுப்போனது. உணவுக்கு கூட வழியில்லாமல் மக்கள் பட்டினியால் தவித்தனர். அதைக் கேள்விபட்ட காமராஜ், அவர்களுக்கு நிவாரணம் வழங்க அதிகாரிகளோடு புறப்பட்டார்.


ஆனால் ஊசாலிடிக் கொண்டிருந்த பாலமும் உடைந்து போனது. அதிகாரிகள் காமரஜிடம் "அய்யா இதற்கு மேல் கார் செல்லாது, அந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளை நாங்கள் சில பேர் கவனித்துக் கொள்கிறோம். நீங்கள் வேறு இடத்துக்கு செல்லுங்கள்" என்றார்கள். ஆனால் காமராஜ் "அதிகாரிகளே எல்லாத்தையும் கவனிக்கச் சொல்லி கோட்டையிலிருந்தே நான் உத்தரவு போடலாமே. மக்கள் கஷ்டத்தை நான் நேரடியாப் பாக்கணும். தேவையான நிவாரணத்துக்கு உடனே ஏற்பாடு செய்யனும். அவங்களுக்கு ஆறுதல் சொல்லணும். அதனால்தான் நானே வந்தேன்" என்று சொலியபடியே வேட்டியை மடித்துக் கட்டி கொண்டு தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு தண்ணீரில் இறங்கிவிட்டார். சாரக் கயிரை பிடித்துக் கொண்டு மார்பளவு நீரில் கால்வாயைக் கடந்து மறு கரைக்கு சென்றார். முதல்வரே தணணீரில் இறங்கி விட்டதால், அதிகாரிகளும் வேறு வழியின்றி அவரைப் பின் தொடர வேண்டியதாயிற்று. மறுநாளும் காமராஜ் திட்டமிட்டபடியே செயல்பட்டுக் கொண்டிருந்தார்.

பெருந்தலைவரின் இந்த சேவையைப் பாராட்டி அண்ணா திராவிட நாடு இதழில் ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

"சேரிகள் பாட்டாளிகளின் குடிசைக்கள், உழவர் உழன்று கிடக்கும் குச்சுகள். இவை யாவும் நாசமாகிவிட்டன. வீடில்லை, வயலில்லை, உள்ளத்தில் திகைப்பின்றி வேறில்லை. ஆனால் தம்பி, நமது முதலமைச்சர் காமராசர் அந்த மக்கள் மத்தியில் இருக்கிறார். பெருநாசத்ததுக்கு ஆளான மக்களின் கண்ணீரைத் துடைத்திடும் காரியத்தில் தீவிரமாக் ஈடுபட்டிருக்கிறார் என்பதை என்னும் போது இதோ எமக்கு ஆறுதல் அளிக்க எமது முதலமைச்சர் வந்துள்ளார். எமது கண்ணீரை காணுகிறார். தமது கண்ணீரை சிந்துகிறார். ஆறுதலை அள்ளித் தருகிறார். கோட்டையிலே அமர்ந்து கொண்டு உத்தரவுகள் போடும் முதலமைச்சர் அல்ல இவர். மக்களை நேரில் சந்திக்கும் தலைவர் என்று மக்கள் வாழ்த்துகின்றனர். தம்பி! சொல்லித்தானே ஆக வேண்டும் முதலமைச்சர் காமராசரின் பொறுப்புணர்ச்சி கண்டு நாம் பெருமைப்படுகிறோம்."