Thursday 25 December 2014

திரு.சூ.ஆ.முத்து நாடார்

சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து தம் சமூகத்துக்குச் சேவையாற்றி அம்மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் அளவிற்கு உயர்ந்தவராக திரு.சூ.ஆ.முத்து நாடார் அவர்கள் திகழ்கின்றார். 



1919ம் ஆண்டு இவர் தொடக்கிய ஒரு பத்திரிக்கை நாடார்கள் சமூகத்துக்கு மாத்திரமல்லாமல் சுதந்திர எண்ணத்தை விரிவாக்கச் செயலாற்றியதில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் திகழ்ந்தது. நாடார்
 குல மித்திரன் எனப் பெயரிட்டு இந்தப் பத்திரிக்கையின் முழு பொறுப்பையும் எடுத்துச் செயல்பட்டு வந்தார் இவர்.அருப்புக்கோட்டையிலிருந்து தாமே ஆசிரியராகவும் திரு.சொக்கலிங்கபாண்டியன் என்பவரை உதவி ஆசிரியராகவும் கொண்டு பணியாற்றினார்.

இந்த மாதாந்திர வெளியீடாக வந்த நாடார் குல மித்திரன் 1919 தொடங்கி 1931ம் ஆண்டு வரை 12 ஆண்டுகள் தொடர்ந்து வெளி வந்தது. அரசியல் கொள்கைகளோடு நாடார் சமூகத்து மக்களின் மேம்பாட்டிற்காகப் பல சிந்தனைகளை வித்திட்ட ஒரு சஞ்சிகையாகவும் இது திகழ்ந்தது.

மார்க்சிய பெரியாரியப் பொதுவுடமைக் கட்சியின் வே.ஆணைமுத்து அவர்கள் சூ.ஆ.முத்துநாடார் நூற்றாண்டு விழா மலரில் இப்படிக் குறிப்பிடுகின்றார்.
...அன்று நாடார் குல மக்கள் ஈ.வெ.இராமசாமியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டனர்.

அருப்புக்கோட்டையை அடுத்த பாலையம்பட்டியில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநாடு 31.10.1922 இல் நடைபெற்றது. அம் மாநாட்டின் தலைவர் ஈ.வெ.இராமசாமி. அவர் அன்று தமிழ்நாடு காங்கிரஸ் காரியக் கமிட்டியின் செயலாளர். அருப்புக்கோட்டை பால்ய நாடார்கள் சிலர் அன்று மாலையே அங்கு அவரைப் பேட்டி கண்டு அடுக்கடுக்காக 15 வினாக்களை ஈ.வெ.ராவிடம் விடுத்தனர்.

அத்தனை வினாக்களையும் உள்வாங்கி ஒரு சொற்பொழிவு போன்று ஈ.வெ.ரா. அளித்த விளக்கமான விடை முழுதும் நாடார் குல மித்திரன் ஏட்டில் வெளிவந்தது.

ஈ.வெ.ரா அப் பேட்டியின் போது அளித்த விடை அன்றைய இழிந்த சமுதாய அமைப்பை அப்படியே படம் பிடித்துக் காட்டியது. அதனை அடியோடு மாற்றிட அவர் உறுதி பூண்டதை வெளிப்படுத்தியது.

ஈ.வெ.ராவின் சிந்தனைகள் பதிவு செய்யப்பட்டு மற்றவர்களுக்கு இன்று வரையில் ஆய்வுகளுக்குக் கிடைப்பனவற்றுள் இதுவே முதலாவது ஆவணம் ஆகும். பெரியாரின் சிந்தனைகள் தொகுப்பு வரலாற்றில் இது முதன்மை வாய்ந்த ஆவணம் ஆகும். இந்தப் பதிவை முதன் முதலாகச் செய்தவர் அருப்புக்கோட்டை சூ.ஆ.முத்து நாடார் அவர்களே ஆவார். பெரியாருக்கென்று ஒரு சொந்த ஏடு குடி அரசு 2.5.1925 இல் தான் தொடங்கப்பட்டது. ஆனால் 1922 அக்டோபர் பதிவு நமக்கு நாடார் குல மித்திரன் ஏட்டில் கிடைக்கின்றது...

பக்தராகவும், தேசியவாதியாகவும் தம்மை வெளிப்படுத்திக் கொண்டார் சூ.ஆ.முத்து நாடார் அவர்கள்.
மகாத்மா காந்தி அவர்கள் தன் சுயசரிதையை அரிஜன் பத்திரிக்கையில் ஆங்கிலத்தில் வெளியிட்டு வந்ததை மொழி பெயர்த்து முத்து நாடார் தமிழில் சத்திய சோதனை என்று தலைப்பிட்டு வெளியிட்டார். இது மக்களின் சிந்தனையில் அழியா இடத்தைப் பிடித்தது.

இலங்கை பர்மா போன்ற நாடுகளுக்கும் பயணம் செய்து அங்கெல்லாம் நாடார் குல மக்களின் வளர்ச்சியில் பங்காற்றினார்.

பக்திப் பாடல்கள், அம்மானை பாடல்கள் சுயமரியாதைத் தாலாட்டு பாடல்களை எழுதி தாமே வெளியிட்டு சுதந்திர சிந்தனைக் கொள்கைப் பிரச்சாரகராகத் திகழ்ந்தார்.

இது மட்டுமல்லாமல் பலகலைத் திறன்களும் கொண்டிருந்தார். நாடகம் எழுதுதல், மற்போர் செய்தல், சிலம்பம் ஆடுதல், இசை நிகழ்ச்சி நடத்துதல் என தன் திறமையைப் பண்முகப்படுத்தியிருந்தார். வயலின் ஆர்மோணியம் மிருதங்கம் போன்ற இசைக்கருவிகளை மீட்டும் திறனும் பெற்றிருந்தார்.

பொதுப்பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். அருப்புக் கோட்டை மாதர் முன்னேற்றச் சங்கத்தினருக்கு உரிய முத்து நாடார் ஹால் இவரது நன்கொடைக்கு இன்றும் சான்று பகர்ந்து நிற்கின்றது.

நாடார் குல மக்களின் நலன்கருதி அமைக்கப்பட்ட சென்னை அருப்புக்கோட்டை நாடார் லாட்ஜ் வாங்கப்பட இவர் ஆற்றிய பங்களிப்பு முதன்மையானது.

No comments: