Tuesday 23 December 2014

நேர்மை, எளிமை, ஏழ்மை, தூய்மை-கக்கன்

கக்கனும், காமராஜரும் ஏழையாக வந்தார்கள். ஏழையாகவே இருந்தார்கள். ஏழையாகவே இறந்தார்கள். பதவியையும், அதிகாரத்தையும் தம் சுயநலத்துக்காக பயன்படுத்தாமல் மக்களுக்காகவே வாழ்ந்த பிழைக்க தெரியாதவர்கள் இவர்கள். ராமர் , மகாவீரர், புத்தர், ஏசுநாதர், நபிகள் நாயகம் போன்ற மகான்களை நம் கண் முன் நிஜமாக நிறுத்தி வாழ்ந்து காட்டிய மகான்கள் இவர்கள். இதிகாசங்களை மத நூல்களையும் படிப்பதை விட இவர்கள் வாழ்ந்து காட்டிய வாழ்க்கையை இளைஞர்களும் இளைஞிகளும் படித்தால் போதும்  நாடும் ,அரசியலும் முன்னுக்கு வந்துவிடும். கக்கன் அவர்களின் நினைவு நாள் பதிவு இது!

25-01-1970 ஆனந்த விகடனில் வெளிவந்த, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வந்த கட்டுரை. கக்கன் மற்றும் காமராஜ் அவர்களின் முதல் சந்திப்பு பற்றியது, கக்கன் அவர்களால் எழுதப்பட்டது.
நன்றி : ஆனந்த விகடன்.



”மதுரையில் ராணி மங்கம்மாள் சத்திரத்தின் முன்பாகத்தான் நான் முதன்முதலில் பெரியவரைப் பார்த்தேன்.
திரு.வெங்கடாசலபதி என்பவரைப் பார்ப்பதற்காக, நானும் எனது நண்பரும் அந்தப் பக்கமாக நடந்து போய்க்கொண்டு இருந்தபோது, எதிரில் சற்றுத் தள்ளி, பெரியவரும் அவரோடு இரண்டு மூன்று பேரும் வந்துகொண்டு இருந்தார்கள்.
”இவர்தான் காமராஜ்” என்று கூறினார் என் நண்பர். காங்கிரஸ் ஊழியர்கள் எல்லாம், பெரியவரைப்பற்றி மிகவும் உணர்ச்சிவயப்பட்டு புகழ்ந்து பேசுவார்கள். ஊழியர்களுக்கு எல்லாம் அவர் ஒரு முன் மாதிரியாக இருப்பதாகச் சொல்வார்கள். ஆகையால், அவரைச் சந்தித்துப் பேச வேண்டும் என்ற ஆசையோடு இருந்தேன். ஆனால், அதற்கு வாய்ப்பு கிட்டாமல் இருந்தது.
இப்போது பெரியவரே எதிரில் நடந்து வந்துகொண்டு இருக்கிறார். அவரிடம் வலியச் சென்று பேச எனக்குத் தயக்கமாக இருந்தது. மேலும் அவரோ, தன் சகாக்களுடன் எதையோ, தீவிரமாக விவாதித்துக்கொண்டு வந்தார். ‘அறிமுகத்துக்கு இது ஏற்ற தருணம் அல்ல’ என்று எண்ணி, பெரியவரை வைத்த கண் வாங்காமல் பார்த்த படியே நடந்து சென்றுவிட்டேன்.
இது நடந்தபோது எனக்கு 27 வயது இருக்கும். 1936 என்று நினைக்கிறேன்… மதுரையில், சேவாலயம் ஹாஸ்டலில் அப்போது நான் வார்டனாக இருக்கி றேன். ஹரிஜன மாணவர்களுக்காக, ஹரிஜன சேவா சங்கம் இந்த ஹாஸ்டலை நடத்தி வருகிறது.
பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே நான் காங்கிரஸ் கட்சியில் நாலணா மெம்பர். ஆனால், கட்சி வேலைகளில் ஈடுபட்டது இல்லை. எஸ்.எஸ்.எல்.சி. வரைக்கும் படித்தேன். இங்கிலீஷில் ஒரே ஒரு மார்க் குறைந்ததால், ஃபெயில் ஆகிவிட்டேன். மேற்கொண்டு படிக்க வசதி இல்லாததால், இந்த ஹாஸ்டலுக்கு வார்டனாக வந்து சேர்ந்தேன்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு, மேலூரில் இருந்த ஹாஸ்டலை பார்த்துக்கொள்ளச் சொல்லி என்னை அனுப்பினார்கள். அங்கே ஹாஸ்டல் வார்டனாக இருந்துகொண்டு, கட்சி வேலைகளிலும் ஈடுபட்டேன். அந்த தாலுக்கா காங்கிரஸ் கமிட்டிக்கு நான்தான் தலைவர்.
படிப்படியாக எனது கட்சி வேலைகள் அதிகரித்தன. பெரியவரும் அரசியலில் மிகவும் தீவிரமாக இருந்தார். என்னைப்பற்றி அவரிடம் பலரும் கூறிஇருக்கிறார்கள். இருப்பினும், பெரியவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டாமலேயே இருந்தது.
1942 போராட்டத்தில் கலந்துகொண்டு, சிறைக்குப் போய், ஒன்றரை வருஷம் ஜெயில்வாசம் முடித்துவிட்டு, மறுபடியும் மேலூருக்கு வந்து ஹாஸ்டல் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்.
இந்தச் சமயத்தில்தான் பெரியவருக்கும் – உயர்திரு ராஜாஜி அவர்களுக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருந்தன. பெரியவரோ ஊழியர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற ஊழியராக இருந்தார்.
காங்கிரஸ் கட்சியில் நானும் ஓர் ஊழியன். அதனால், ஓர் ஊழியரின் ஆதரவு, மற்றோர் ஊழியருக்குத்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு அசைக்க முடியாமல் ஏற்பட்டுவிட்டது.
1945-ல் திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் ஊழியர் மகாநாடு நடந்தது. அந்தச் சமயத்தில்எல்லாம் நான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மெம்பராகிவிட்டேன். அந்த மகாநாட்டில்தான், நான் முதன்முதலில் பெரியவரைச் சந்தித்துப் பேசினேன். நண்பர் ஒருவர் என்னை பெரியவருக்கு அறிமுகப்படுத்திவைத்தார்.
‘உங்களைப்பற்றி நிறையக் கேள்விப்பட்டு இருக்கிறேன்!’ என்றார் பெரியவர்.
‘உங்களை நெடு நாட்களாகவே சந்தித்துப் பேச வேண்டும் என்ற ஆவல். இப்போதுதான் வாய்ப்பு கிட்டியது!’ என்று கூறிய நான், ‘என்னுடைய ஆதரவு உங்களைப்போன்ற ஊழியர்களுக்குத்தான் கிடைக்கும்!’ என்றேன்.
‘ஊழியர்களுக்கும் தலைவர்களுக்கும் இடையில் வேற்றுமை பாராட்டிப் பேச வேண்டாம். நியாய உணர்ச்சியுடன் கட்சிக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு, உறுதியுடன் பணிபுரியுங்கள்!’ என்று பெரியவர் ரத்தினச் சுருக்கமாகக் கூறினார்.
அந்த வார்த்தைகள் இன்னும் என் மனத்தில் பசுமையாக இருக்கின்றன. காரசாரமான விவாதங்களுக்கு மத்தியிலும் அவர் பொறுமையோடும் – நிதானத்தோடும் நடந்துகொண்டது இப்போதும்கூட என் மனக் கண்களில் தெளிவாகத் தெரிகிறது.
இதெல்லாம் நடந்து இன்று ஏறக்குறைய 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. முதல் சந்திப்பில் பெரியவர் எனக்கு ஓர் ஊழியராகத்தான் தோன்றினார். ஆனால், இன்று பாரதம் போற்றும் உயர்ந்த தலைவர்களில் ஒருவராக நான் அவரை மதித்துப் போற்றுகிறேன். ஆனால் பெரியவரோ, அன்றும் சரி – இன்றும் சரி, என்னைத் தமது சகாவாகவே நினைத்துக்கொண்டு இருக்கிறார்.
எங்களிடையே ஏற்பட்ட முதல் சந்திப்பு, சாதாரணமானதாக இருந்தாலும், எங்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பாசமும், மன நெருக்கமும் அசாதாரணமானதாகும். இனி, எத்தனை பிறவி எடுத்தாலும் இது தொடர்ந்து வர வேண்டும் என்றுதான் நான் பிரார்த்திக்கிறேன்!”




சுதந்திர போராட்டம்
காந்தி 1934-ல் மதுரை வந்தபோது அவருக்குத் தொண்டாற்றும் வாய்ப்பு கக்கனுக்கு வந்து சேர்ந்தது. காங்கிரஸ் நடத்திய போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்ற கக்கன் 1942 ஆகஸ்ட் புரட்சியின் போது மேலூர் காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டார். அவர் மனைவி முன்னிலையில் 5 நாட்கள் கசையடி கொடுத்து சக தோழர்களை காட்டிக் கொடுக்கச் சொன்ன போது கடைசி வரை அடி வாங்கினாரே தவிர, காட்டிக் கொடுக்கவில்லை. சுயநினைவு இழந்தவரை குதிரை வண்டியில் பாதம் வைக்கும் இடத்தில் கிடத்தி, தலையும் கால்களும் தொங்கிய நிலையில் இழுத்துச் சென்றனர்.

தமிழக அரசியல்தமிழகத்தில் 10 ஆண்டுகள் தொடர்ந்து அமைச்சராக இருந்த கக்கன் பொதுப்பணி, உள்துறை, விவசாயம், உணவு, மதுவிலக்கு, அரசின நலம், அறநிலையத்துறை போன்ற பல்வேறு இலாக்காக்களை நிர்வாகித்தார்.கக்கன் அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன. மதுரை வேளாண்மைக் கல்லூரியைக் கொண்டு வந்தார். விவசாயிகளுக்குத் தேவைக்கேற்ப உரம் கிடைக்க வழிவகை செய்தது, கூட்டுறவு விற்பனைக் கூடங்களைத் தொடங்கி வைத்தது, தாழ்த்தப் பட்டோர் நலத்துறையின் கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்தது, தாழ்த்தப் பட்டோருக்கென வீட்டு வசதி வாரியம் அமைத்துச் செயல்படுத்தியது, காவல்துறையில் காவலர்கள் எண்ணிக்கையை அதிகப் படுத்தியது, லஞ்ச ஒழிப்புத் துறையைத் தொடங்கியது என ஏராளமான அரசு பணிகள் உயர் திரு க்க்கன் அவர்களே ஆரம்பிக்கபட்டது.அவர் அமைச்சர் பொறுப்பிலிருந்த போதும் அவரது துணைவியார் ஆசிரியைப் பணி செய்தே குடும்பத்தைக் கவனித்தார். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்திலும் அவரது தந்தையார், தான் செய்து வந்த வருவாய்த்துறை ஊர்ப்புற உதவியாளர் பணியைச் செய்தே வாழ்க்கை நடத்தினார்.அமைச்சராக இருந்த போது மதுரை வந்த போது அரசு விடுதியில் வேறு நபர் இரவில் தங்கி இருக்கிறார். அவரை வெளியேற்றலாமா? என்கிறார்கள். வேண்டாம் எனத் தடுத்து விடுகிறார். தனியார் விடுதியில் அறை எடுக்கலாமா? என்கிறார்கள். வேண்டாம் என்று சொல்லி விட்டு, ரயில்வே காலனியில் தனது உறவினரின் சிறிய வீட்டில் போய் தங்குகிறார். பத்தாண்டுகள் மிக முக்கியத் துறைகளின் அமைச்சராக இருந்த கக்கன் 1967 - தேர்தலில் தோற்ற பின்பு சொந்தக் கூரை கூட இல்லாத பரம ஏழையாகப் பேருந்தில் நின்றபடி பயணித்தார்.

அதிகாரத்திலும் எளிமைகக்கன் நாடாளுமன்ற உறுப்பினாராக இருந்த போதும், தன் மனைவி சொர்ணம் தொடக்கப்பள்ளி ஆசிரியையாகத் தொடர்ந்து பணியாற்றுவதையே விரும்பினார். வலிமை மிக்க, அமைச்சராக அவர் வலம் வந்தபோது தன் மகள் கஸ்தூரிபாயை மாநகராட்சிப் பள்ளியில் தான் படிக்கச் செய்தார். தன் தம்பி விஸ்வநாதனுக்கு தாழ்த்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் லயோலா கல்லூரிக்கு அருகில் ஒரு கிரவுண்ட் மனையை ஒதுக்கீடு செய்து அரசாணையை அளித்த செய்தியறிந்த கக்கன், அந்த ஆணையை வாங்கிக் கிழித்தெறிந்தார். 
விடுதலைப் போராட்டத் தியாகத்துக்காக அவருக்குத் தனியாமங்கலம் என்ற கிராமத்தில் தரப்பட்ட நிலத்தை, வினோபாவின் நிலக்கொடை இயக்கத்தில் ஒப்படைத்தார். முடக்கு நோயால் பாதிக்கப்பட்டவர் கோட்டக்கல் சித்த மருத்துவமனையில் சேர்க்கப்படார். மருத்துவமனையில் பணம் செலுத்த முடியாத நிலையில் நோய் தீராமலே அங்கிருந்து விடை பெற்றார். 

ஏழ்மையிலும் நேர்மை
மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சாதாரண வகுப்பில் அவர் சிகிச்சை பெற்றபோது, மதுரை முத்துவை நலம் விசாரிக்க வந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., காளிமுத்துவின் மூலம் செய்தியறிந்து கக்கனைபோய்ப் பார்த்தவர் அதிர்ந்து போனார். உடம்பில் ஒரு துண்டு மட்டும் போர்த்திக் கொண்டு, முக்கால் நிர்வாண நிலையில் இருந்த கக்கனைக் கண்டு கலங்கி நின்ற எம்.ஜி.ஆர். சிறப்பு வார்டுக்கு மாற்ற உத்தரவிட்டபோது, ‘ வேண்டாம் என்று மறுத்து விட்டார். ‘உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும் என்று கேட்ட எம்.ஜி.ஆரிடம், ‘நீங்கள் பார்க்க வந்ததே மகிழ்ச்சி என்று கைகூப்பினார் கக்கன்.கடைசிக் காலத்தில், வறுமையில் வாடியது கண்டு, திரு.பழ நெடுமாறன், மதுரையில் நிதி திரட்டி வந்த நிதியை நிலையான வைப்புத் தொகையில் போட்டு வட்டியில் வாழ்க்கை நடத்துங்கள் என்று யோசனை சொல்கிறார்கள். மறுத்து விட்டு முன்பு தேர்தலின் போது நாவினிப்பட்டி மைனர் தந்த பணம் 11000 திருப்பித் கொடுக்கிறார். அவர் நான் கேட்கவில்லை, கடனாக தரவில்லை என மறுத்து போதும் அந்த பணத்தை திருப்பித் தந்து விடுகிறார்.
டிவிஎஸ் நிறுவனத்தில் தங்கியதற்காக ரூ.1,800 கட்டுகிறார். அவர்கள் கேட்கவில்லையே ஏன் ? செலுத்த வேண்டும் என்கின்றனர். நான் என்றாவது திருப்பித் தருவேன் என்ற நம்பிக்கையில் தான் அவர்கள் கேட்கவில்லை என கூறி பணத்தை திருப்பி கொடுத்தார் . இப்படிப்பட்ட ஒரு அமைச்சரை உலகின் எந்த நாட்டிலும் பார்க்க முடியாது.
இறுதிவரை ஏழ்மையிலேயே வாடிய கக்கன் நோய்வாய்ப்பட்ட போது, உயர் ரக சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வசதியின்றி சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். நினைவிழந்த நிலையில் இரு மாதங்கள் இருந்த அவர், 1981 டிசம்பர் 23-ஆம் நாள் உலக வாழ்வை நீத்தார்.எளிமையின் வடிவமாக நேர்மையின் விளக்கமாக நம்மிடையே வாழ்ந்து மறைந்த கக்கன் உடல் கண்ணம்மாபேட்டையில் டிசம்பர் 24, 1981 அன்று எரியூட்டப்பட்டது.

No comments: