Friday 26 December 2014

பெருந்தலைவர்-மக்கள் தலைவர்

மக்கள் தங்கள் மனங்களில் பத்திரப்படுத்திக் கொண்ட மகத்தான மக்கள் தலைவர் காமராஜர்.

இந்தியாவில் இன்று வரை உள்ள எண்ணற்ற அரசியல்வாதிகளுள் மண்ணில் எந்த மூலையிலும் ‘பத்திரம்’ பதியாத அரசியல்வாதியாக காமராஜர் வாழ்ந்ததால்தான், மக்கள் அவரைத் தங்கள் மனங்களில் பத்திரப்படுத்திக் கொண்டார்கள்.

யாருக்கு எது தேவை என்று தேடித் தேடி ஒசையின்றி உதவி செய்யும் உத்தமர் காமராஜர்.




மக்களுக்காகவே கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்த பொதுவுடமைவாதி, மானுடம் பாட வந்த உயர்மானுடன் ஜீவா மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்ந்துவந்தார்.

அப்போது முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் ஜீவாவுக்கு உதவ நினைத்தார். அதையும் துணைவியாருக்கு அரசுப் பணி அளித்தார். இதன் மூலம் ஜீவாவின் மீது கர்ம வீரருக்கு இருந்த மரியாதையையும் பொதுவுடமை மீது தலைவர் வைத்திருந்த மதிப்பையும் உணரலாம்.

மக்களின் அன்றாடப் பிரச்சனைகளோடு, மக்கள் தலைவர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும் பெருந்தலைவர் ஈடுபட்டார் என்பதை அதுபோல் பல நிகழ்ச்சிகள் மூலம் அறியலாம்.

மீண்டும் ஜீவா அவர்களின் இறுதிக் காலத்தில் அரசு சார்பில் அவருக்கு வீடு தருகிறோம் என்றபோதும் அதை ஜீவா மறுத்துவிட்டார். இது ஜீவாவின் பெருமையை உணர்த்துகிறது. மக்கள் தொண்டர்கள் மகிழ்வோடு வாழ வேண்டும் என நினைத்த மக்கள் தலைவரின் செயல் மறத்தற்குரியதல்ல.

அரசு ஊழியர்களின் பணி ஓய்வுக்குப் பின் அளப்பரிய சோகம் வரவேற்பதை அறிந்து செயல்பட்டவர் பெருந்தலைவர். பணி ஓய்வுக்குப்பின் மனைவியும் காப்பாற்ற மாட்டாள் மகனும் காப்பாற்ற மாட்டாள் என்பதால் காமராஜர் பென்சன் காப்பாற்றுமென்று ஓய்வூதியத் (பென்சன்) திட்டத்தைக் கொண்டு வந்தார்.

பிறந்த குழந்தைகளுக்குப் பராமரிப்பு அதிகம். பிறந்து அவதிப்படாமல் இருக்கக் குடும்பக் கட்டுப்பாடு, வளரும் போது அவர்களுக்கு இலவசக் கல்வி, மதிய உணவு, மனம் கோணாது ஏற்றத்தாழ்வு தெரியாமல் வாழ பள்ளிச் சீருடை, கலைக்கல்வி, பின் தொழிற்கல்வி, கற்க முடியாதவர்க்கு சுய தொழில் கடன்கள், சுற்றுப்புறச் சுகாதாரத் திட்டங்கள், பாதுகாத்த குடிநீர் வசதி, சாலைகள், சீரான போக்குவரத்து வசதிகள் என்று எண்ணற்ற வழிகளில் எண்ணி மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்த்தால்தான் மக்கள் தலைவர் என மக்களால் பாராட்டப்படுகிறார்.

மக்ககள்மீது காமராஜர் வைத்திருந்த பற்றைப் போலவே மக்களும் காமராஜர்மீது பற்றும் பாசமும் வைத்திருந்தார்கள்.

அவர் இறந்து போனார் என்ற செய்தியைக் கூறிய வானொலிப் பெட்டியையே உடைத்தெறிந்த தொண்டர்கள் ஏராளம்.

காமராஜரின் மரண ஊர்வலத்தன்று சென்னை மாநகரமே அழுதது எனலாம். எங்கும் சோகமயமாய் மக்கள் சுகமிழந்து நின்றார்கள்.காமராஜர் உடல் ஊர்வலமாய் வரும் வீதியெங்கும் மக்கள் கூட்டம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று கூட்டம் அலை மோதுயது.

தடுப்புச் சுவர்களைக் கடக்கத் துடித்தார்கள் தொண்டர்கள். அந்த கூட்டத்துக்குள் ஒரு தன் கைக்குழைந்தையுடன் கண்ணீர் மல்கக் காத்து நிற்கிறார்.
கூட்டம் அங்கும் இங்கும் நெரிக்கிறது. அந்த தாய் நெரிசலில் சிக்கித் தவிக்கிறாள். அதைப் பார்த்துவிட்டக் காவலர் ஒருவர் கருணையோடு, ''ஏம்மா இந்தக் கைக் குழந்தையோடு இங்கே வந்தாய்? போம்மா! இப்படியே கூட்டத்துக்குள்ள நின்னா குழந்தை செத்துவிடும் என்று அதட்டினார்.

அதற்கு அந்த தாய் சொன்னாள், ''ஐயா இந்தக் குழந்தை செத்தா பெத்துக்கிடலாம். இப்ப காமராசனை பார்க்காமல் விட்டா நாளை நான் பார்க்க முடியுமாய்யா?''

மக்கள் அந்த அளவு தலைவரிடம் ஈடுபாடு உடையவர்களாக இருந்தார்கள்.

வீட்டை மறந்து நாட்டை நினைத்ததால் நாட்டுமக்களால் இன்னும் மறக்கப்படாத தலைவராக வாழ்கிறார் காமராஜர். தனக்கென ஒரு தனி வாழ்வை அமைக்க ஆசைப்படாமல் தனித்தனி குடும்பங்கள் எல்லாம் எல்லாமும் பெற ஆசைப்பட்டார்.

மணமுடித்தால் மனையாள் சுகம் தேடி மக்கள் சுகம் மறந்து போகும் என்று மணமுடிக்காமலே வாழ்ந்ததால்தான் இன்னும் மக்கள் தலைவராக மணம் வீசுகிறார்.

இறக்கும் முன் கூறிய இறுதி வார்த்தை, ' விளக்கை அணைத்து விடு' பெரியோர்களின் இறுதி வார்த்தைகளில் பொருள் இருக்கும் என்பார்கள். ஆம் அடுத்தவர்க்காகவே ஒளி விட்ட கடைசி அரசியல் விள்க்குதானே அவர்.

எனவே,
அவரது வாழ்க்கை சுயநல அரசியல் நடத்தும் அரசியல்வாதிகள் அவசிய பாடமாகும்.

No comments: