Tuesday, 20 October 2015

ஆறுமுகநேரி தாலுகா தந்தை தங்கவேல் நாடார்

தகவல்கள் திரட்டி அளித்த: காமராஜர் இரத்ததான கழகத்திற்கு என் மனமார்ந்த நன்றி.

இவர் தென்காசி ஆண்ட ஸ்ரீவல்லபமாற நாடான்
குடும்பத்தைச்சேர்ந்தவர்.
இவர்கள் குடும்பத்திற்கென்று ஸ்ரீவல்லபமாறன் மற்றும் உடையார் கதைப்பாடல் சுவடிகள் உள்ளன.


இரா.தவசிமுத்து நாடாரின் மகனாக தியாகி த.தங்கவேல் நாடார் 1903 இல் பிறந்தார். ஆறுமுகநேரி இந்து நடுநிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்புவரை பயின்ற இவர் இளமையில் கொழும்பில் இருந்த போது தென்னந் தோட்டத்தில் பணிபுரிந்த “வாடி“ எனப்பட்ட தொழிலாளர்களுக்காகத் தொழிற்சங்கம் அமைத்து தலைவரானார்.

ஆந்திரா ,சென்னை போன்ற பெரு நகரங்களில் வணிகம் செய்தார். பின்பு பிறந்த ஊருக்குத் திரும்பி வந்து நகை செய்துவிற்கும் ”காசுக் கடை” நடத்தி வந்தார். அந்நேரம் 1941-42 நகர காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக்கப்பட்டார். சுதந்திரப் போராட்டக் காலத்தில் மணம் ஆகி குழந்தைகளுடன் இருந்தவர். பிற போராட்ட வீரர்கள் அனைவரும் இவரைவிட மிக வயது குறைந்தவர்களாக இருந்தனர். எனவே சுதந்திரப் போராட்ட காலத்தில் வீரர்களுக்கு ஆலோசனை கூறுபவராகவும் பொருளுதவி செய்பவராகவும் இருந்தார்.

குலசேகரப்பட்டினம் லோன் துரை தாக்குதலின் போது தூக்கு மேடை இராஜகோபாலன் அவர்கள் வைத்திருந்த ரிவால்வர் இவர் வீட்டிலிருந்து பரிசோதித்து கொண்டு செல்லப்பட்டதாகும்.

சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதால் 3 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். நாடு விடுதலை ஆன பின்னரே விடுதலை செய்யப்பட்டார்.

உப்பு சத்தியாகிரகம், மெஞ்ஞானபுரம் தபால் அலுவலகத்தை தீவைத்து கொழுத்திய வழக்கு ஆகியவற்றில் பாதுகாப்பு கைதியாக திருச்செந்தூர்,
ஸ்ரீவைகுண்டம், கொக்கிரக்குளம் சிறைகளிலும், தஞ்சாவூர் கேம்ப் ஜெயில் மற்றும் வேலூர் சிறையிலும் தண்டணை அனுபவித்தார். அச்சமயம் பெருந்தலைவர் காமராஜரோடு சிறையிலிருந்தவர்களில் இவரும் ஒருவர்.

ஆறுமுகநேரியின் வளர்ச்சிகாக அனைத்துப் பணிகளிலும் தலைவர்களோடு தலைவராக இருந்து செயல்பட்டார். கா.ஆ.மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைபள்ளி, அரசு மருத்துவமனை ஆகியவை ஆறுமுகநேரியில் உருவாகப் பாடுபட்டவர்.

சுதந்திரப் போராட்டத்தால் தன்னுடைய வசதியான வாழ்க்கை, தொழில், ஆகியவற்றை இழந்தவர். ஆறுமுகநேரி தாலுகாவில் முதலாவதாக அனைத்து கிராமங்களுக்கும் சென்று காங்கிரஸ் கட்சியை அமைத்துத் தொண்டாற்றியதால்”தாலுகாவின் தந்தை” என்றும் சுருக்கமாக ”தானாத்தானா” என்றும் அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டார்.




ஆத்தூர் சோமநாதசுவாமி கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்ட தங்கவேல் நாடார் 17.10.1983 இல் காலமானார் .


இவர் வகித்த பொதுநலப் பொறுப்புகளுள் சில-

கிராம காங்கிரஸ் தலைவர் .
20 வருடக் காலம் தாலுகா காங்கிரஸ் கமிட்டித் தலைவர்.
தாலுகா விவசாயிகள் சங்கத் தலைவர்.
தாலுகா மகாத்மா நூற்பு இயக்கத் தலைவர் .
தாலுகா பூமிதான இயக்கம் முதல் தலைவர்.
காங்கிரஸ் தொழிற்சங்கம் டிசிடபுள்யூ தலைவர்.
திருச்செந்தூர் தாலுகா சுதந்திரப் போராட்டத் தியாகிகள் சங்கத் தலைவர்.
தாலுகா அரிசன சேவாச் சங்கம் செயலாளர் .


No comments: