Monday, 26 October 2015

ஒரு முகநூலனாக சுய பரிசோதனை! மூன்றாம் பாகம்....

முகநூலுக்கு வந்த முதலில் முகநூல் எனக்கு புது மனைவி போலத்தான் இருந்தது... உற்சாகம், பரவசம், ஆனந்தம், தினம் ஒரு ஆச்சர்யம், தினம் ஒரு புதுமை, தினம் ஒரு அறிமுகம் என ஆஹா ஆஹா ஆஹாஹாதான்.... அடேடே டேய் உன்னை பார்த்து எத்தனை வருடங்களாக ஆகிவிட்டது? எத்தனை பசங்கடா? எங்கே இருக்கிறாய்? என தோழர்களிடமும், ஏன்மா உன்னை கடைசியாய் கல்லூரி பிரிவு உபச்சார விழாவில் சந்தித்தது! உனக்கு அவ்வளவு பெரிய பசங்க இருக்காங்களா? உன் கணவர் என்ன செய்கிறார் என தோழிகளிடமும் ஒரே பரவசம் தான்! கையோடு பள்ளி நண்பர்கள் மற்றும் கல்லூரி நண்பர்கள் என தனித்தனியாக சந்திப்பை மதுரையில் ஏற்படுத்தினோம். மிக அருமையாக இருந்தது. நல்ல பொழுதுகளை மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்து அசை போட்டோம். பின்னர் அடுத்தே சூட்டோடு சூடாக குடும்ப சந்திப்புக்கும் ஏற்பாடு செய்தோம். மிக மிக பிரமாதமாக் இருந்தது. அனைவரது பிள்ளைகளும் ரசித்தனர். அவரவரது கணவர், மற்றும் மனைவிமார்களும் பரவசப்பட்டனர். பழைய புகைப்படங்களை பகிர்ந்து கொண்டோம். புதிய சந்திப்புகளின் போது எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்தோம்! நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது!

முதன் முதலில் ஒரு குண்டு விழுந்தது... ஒரு நெடுங்கால, பள்ளிகால நண்பர் கைபேசியில் அழைத்தார். "கும்ஸ்.... (இப்படித்தான் அவர் என்னை அழைப்பது!) என்னடா உன் ஃபேஸ்புக் பேஜ்ல ஒரே கலீஜா இருக்கு... பூரா அசிங்க அசிங்கமான படமா இருக்குடா...! யாரும் சொல்லலையா உனக்கு?" என்றார்! எனக்கு தூக்கி வாரி போட்டது! எனது நட்பு வட்டத்தில் அப்போது வேறு புது நண்பர்கள் யாரும் அறிமுகம் இல்லாத நேரம். ஆனால் எனது உடன் படித்த பள்ளி, கல்லூரி தோழிகள், என் சகோதரிகள் என பலர் என் நட்பு வட்டத்தில் இருந்தனர். யாரும் பார்த்து விட்டு என்னைப் பற்றி தவறாக எண்ணப் போவதில்லை. எல்லோருக்கும் என்னை சிறு வயதிலிருந்தே தெரியும்! ஆனால் ஒருவரது அந்தரங்கம் மாறுபட்டதாய் இருக்கலாம் என அவர்கள் கருதினால்??! அதுவும் உண்மைதானே! நாம் நமது வெளித்தோற்றத்தில் காண்பிப்பது எல்லாமே நமது நகல்தானே. உண்மை வேறாக அல்லவா இருக்கிறது! அப்போதெல்லாம் கைபேசியில் 2ஜி மட்டும்தான். 3ஜி அறிமுகம் இல்லாத காலகட்டம். அதனால் வேகமாக அலுவலகம் வந்து கணினியில் பார்த்த பொழுது, அவர் சொன்னது உண்மைதான் என தெரிந்தது. முதலில் கடவுச்சொல்லை (பாஸ்வோர்ட்) மாற்றினேன். பின்னர் சிலரிடம் கேட்ட பொழுது ஹாக் ஆகியிருக்கலாம் என கூறினர். ஆனால் எனக்கு நம்பிக்கையில்லை! எனக்கோ இது தெர்ந்தவர்கள் செய்த சதிவேலையாகத்தான் இருக்கும் என சந்தேகம்!

ஏனென்றால் அப்பொழுதெல்லாம் எனது முகநூல் பதிவுகள் ஹாக் செய்து பழிவாங்கும் அளவுக்கு தகுதி இல்லாதவை! (இப்பொழுதும் அப்படித்தான்! ஆனால் இதை விட அப்பொழுது ரொம்ப கேவலம்! வெறும் சுவருதான்!!) ரொம்ப யோசித்த பிறகுதான் தெரிந்தது, இதை செய்தவர் எனக்கு கைபேசியில் தகவல் குடுத்த அதே நல்ல மனிதர்தான் என்று! ஆம் அதற்கு முந்தைய நாள்தான் அவர் மற்றும் வேறு சில பள்ளி கால நண்பர்களுடன் இரவு உணவகம் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். ஏதோ ஒரு விடயத்துக்காக அவர் கேட்டதற்கிணங்க அவரது 2ஜி அலைபேசியில் முகநூலை இயக்கியவன், LOG OUT செய்யாமல் குடுத்திருக்கிறேன்! நெடுநாள் நண்பரல்லவா? அவரால் முடிந்த நல்ல காரியத்தை கமுக்கமாக செய்துவிட்டார். நான் வெளிப்படையாக கேட்ட பொழுது சிரித்து மழுப்பிக் கொண்டே மறுத்தார். ஒப்புக்கொள்ளவில்லையே தவிர உறுதியாக் மறுக்கவில்லை! எப்படி குற்றம் சாட்டுகிறாய் என்று கேள்வி மட்டுமே கேட்டார்?! அதே நண்பர் பின்னாளில் நான் முகநூலில் போடும் பதிவுகளில் எனக்கு பிடித்த நடிகைகளின் படங்களை பதிவதால் தனக்கு கவுரவ குறைச்சல் ஏற்படுவதாக் என்னை குற்றம் சாட்டினார்!! "தம்பி என் நட்பு வட்டத்தில் நம்முடன் படித்த தோழிகள் மட்டுமல்ல, எனது அக்கா, தங்கை, அண்ணி, சிற்றன்னை, பெரியம்மா என பெரும் பெண்கள் பட்டாளமே இருக்கிறது! நான் பகிரும் படங்கள் கண்டிப்பாக குறை கூறும் அளவுக்கு கிடையாது" என கூறினேன்! ஆனால் ஓரிரு நாட்களில் என்னை தனது நட்பு வட்டத்திலிருந்து நீக்கிக் கொண்டார்! இது வரை ஏன் என்று நானும் கேட்கவில்லை, அவரும் கூறவில்லை!

நமக்கு எப்போதுமே "ஐ டோன்ட் கேர் பாலிசிதான்!!" என்னை அறிந்தவர்கள் என்னுடன் இருந்தால் போதும்! நான் அப்படித்தான்!! பிறவியிலேயே எனது மேக் அப்படித்தான்....
மீண்டும் மற்றொரு பதிவில் வேறொரு சோதனையை பார்ப்போம்.....
(உங்களையும் சோதிக்காமல் விடப் போவதில்லை!!)

No comments: