Tuesday, 20 October 2015

ஒரு முகநூலனாக சுய பரிசோதனை!

என்னடா நீ என்ன பெரிய அறிஞனா, சமூக சிந்தனையாளனா, இல்லை போராளியா சுய பரிசோதனை செய்து கொள்ள, என திட்ட ஆரம்பித்து விடாதீர்கள்! எனக்கும் என்னை திரும்பி பார்க்க வேன்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டதால் நிகழும் விபரீதமிது! வேறு வழியில்லை என் நட்பு வட்டத்திலிருப்பவர்கள் அனுபத்தே தீரவேண்டும்!! முகநூல் என்னை என்னவாக்கியிருக்கிறது, முகநூல் மூலமாக நான் மற்றவர்களை எந்த அளவிற்கு துன்பத்தில் ஆழ்த்தியிருக்கிறேன் என்பது குறித்த ஆய்வு இது!

 2010ல் முதன்முதலில் முகநூலுக்கு நான் வந்த பொழுது தொடர்பற்று போயிருந்த என் பள்ளி, கல்லுரி நண்பர்களை ஒருங்கிணைக்கலாமே என்ற எண்ணத்துடன் தான் வந்தேன். அதில் கிட்ட தட்ட நானும் என் நன்பர்களும் வெற்றி பெற்றுவிட்டோம். பின்னர் உறவினர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள ஆரம்பித்தேன். பின்பு வெளிநாடு வாழ் நன்பர்கள், உறவினர்கள் என நட்பு வட்டம் விரிய ஆரம்பித்தது. அதுவரை முகநூலையும் தொழிலையும் பிரித்து வைத்திருந்த காலக்கட்டத்தில் 2012ல் தொழில் ரீதியான நண்பர்களும் தொடர்பில் இணைய ஆரம்பித்தார்கள் (இப்போது முடிந்த வரை தொழில் ரீதியான நண்பர்களை இணைப்பதில்லை!). பின்னர் இவர்கள் மூலமாகவே மனமொத்த முகமறியா நண்பர்கள் இணைய ஆரம்பித்தார்கள்.

2013 வாக்கில் என் சமுதாயம் சம்பந்தமான தேடல்களை தொடங்கினேன்.... அது என் முகநூலிலும் சரி... என் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி... ஒரு திருப்புமுனையாகவே அமைந்தது. நான் படித்த மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி ஆகியவை என் சமுதாய பள்ளி என்பதால், என்னை அறியாமலேயே என் சமுதாயம் சார்ந்த சிந்தனை எனக்குள் இருந்தது. மதுரையில் என் கல்லூரி காலகட்டத்தில் என் சமுதாயம் சார்ந்த இளம் தலைவர் மீது இருந்த ஈர்ப்பு காரணமாக சமுதாய பணிகளில் ஈடுபட்டிருந்த காரணமாகவும் இருக்கலாம்! முகநூலின் சமுதாய குழுக்களில் இணைய ஆரம்பித்த பிறகு என் நட்பு வட்டம் விரிய ஆரம்பித்தது. இணைந்த நன்பர்கள் அனைவரும் மிகவும் அருமையான நண்பர்களே. புதிய தொடர்புகள் மனதளவில் நல்ல மாற்றத்தை குடுத்தன. கொஞ்சம் கொஞ்சமாக 2014 வருட முடிவுக்குள் பல நல்ல சகோதரர்களையும், நல்ல சகோதரிகளையும் அடையாளம் கண்டு கொண்டேன். பலரை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் ஏற்பட்டது. நண்பர்கள் பலர் நல்ல உறவுகளாக மாறிய அருமையான காலக்ட்டம் அது.

பின்னர் தமிழார்வலர்கள், மொழி ஆய்வர்கள், சமூக சிந்தனையாளர்கள் என பல அறிஞர்களது நட்பு கிடைக்க ஆரம்பித்த பின் எனது சமூகம் மற்றும் சமுதாயம் குறித்த சிந்தனைகளும் மாறத் தொடங்கின. என்னை நானே ஆய்வுக்கு உட்படுத்த தொடங்கிய காலக்கட்டம் இது. அது வரை தற்குறி போல் பதிவு போட்டுக் கொண்டிருந்த நான் சிறிது மாற ஆரம்பித்தேன். எனக்கு பெருந்தலைவர் மீதுள்ள பக்தி காரணமாக அவர் குறித்தும், என் சிறு வயது அனுபவங்கள், என் ஊர் பற்றிய தகவல்கள் போன்றவற்றையும் பதிவிட ஆரம்பித்தேன். அதற்கு முன்னரே என் ஒன்று விட்ட அண்ண்ன் ஒருவர் எங்கள் பங்காளிகள் வட்டத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் கற்றவர்கள் மூலமாக எங்கள் மூதாதையர் மற்றும் குலதெய்வ வரலாறுகளை ஆய்வு செய்து புத்தகமாக வெளியிட்டிருந்தார். அதையும் எனக்கு ஓரு உந்துதல் என கூறலாம். பெருந்தலைவர், ஈழத்தமிழர்கள், தமிழர்கள், தமிழ், என் சமுதாயம், சமூகம் என என் களம் விரிவடைந்தது. 

நான் போட்ட பதிவுகள் அனைத்துமே என் சுயமாய் திரட்டியவை என கூறி தம்பட்டம் அடித்துக் கொண்டால் நான் மனிதனே அல்ல! என் செவியும், கண்ணும் எப்போதும் திறந்தே இருக்கும். அவை எனக்கு அளித்த தீனியை நான் இங்கே பகிர்ந்தேன். எனக்கு வாய் கொஞ்சம் நீளம் தான் ஆனால் அதை விட என் கேட்கும் சக்தி கொஞ்சம் அதிகம் என்பேன்.

நாளை மீண்டும் சுய பரிசோதனை தொடரும்......

No comments: