Monday, 5 October 2015

சமூக சீரழிவிறகு வித்திட்ட இமயங்கள்...

நான்கைந்து தினங்களுக்கு முன் ஜெயா மேக்ஸ் தொலைக்காட்யில் இளையராஜா பாடல்கள் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது! பாலுமகேந்திரா அவர்களின் வண்ண பூக்கள் படத்திலிருந்தும், பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படத்திலிருந்தும் அடுத்தடுத்து பாடல்கள் ஒளிபரப்பப்பட்டன! யாதார்த்தம் என்ற பெயரிலும், சமூக விழிப்புணர்வு என்றும், தங்களை அறிவு ஜீவிகள் என்ற அளவிலும் சினிமாவை இவர்கள் எந்த அளவு சீரழித்திருக்கிறார்கள்? வண்ண வண்ண பூக்கள் பாடலில் விநோதினி ஆண்கள் அணியும் மேல்சட்டை அணிந்திருந்தார், கீழாடையே கிடையாது! சத்தியமாக இடுப்புக்கு கொஞ்சம் கீழே வரைதான் சட்டையே, அதற்கு கீழே ஒன்றுமில்லை! அடுத்து அலைகள் ஓய்வதில்லை பாடலில் கார்த்திக்கும், ராதாவும் பள்ளிப் பருவத்தில் காம ரசம் சொட்ட சொட்ட விரசமாக பாடிக் கொண்டிருந்தனர்!

யதார்த்தம் என்ற பெயரில் இவர்கள் படுக்கயறை காட்சிகளையும் காண்பித்து காசு பார்த்த புண்ணியவான்ளே! அந்த விசயத்தில் இவர்களின் முன்னோடி பாலசந்தர் அவர்கள்! அவரது பிரமிளா நடித்த அரங்கேற்றம் படம் நல்ல தியேட்டர்களில் சரிவர ஓடியதை விட பலான தியேட்டர்களிலேயே மிக அதிகமாக கல்லா கட்டியது!! தேசிய விருதகளை வென்ற மூன்றாம் பிறை படத்திலேயே யதார்த்தமான படுக்கயறை காட்சிகளை சிறப்பாக கொடுத்திருப்பார் பாலுமகேந்திரா! யாதா்த்தமென்ற பெயரில் விரச காட்சிகளை பதார்த்தமாக படைத்து சினிமாவை கெடுத்த புண்ணியவான்கள் இவர்கள் என்றால், பள்ளிககு செல்லும் பிள்ளைகளின் காதலே தெய்வீக காதல் என்ற கோட்பாட்டை கண்டுபிடித்து உலகிற்கு சொன்னவர் பாரதிராஜா!! அது வரை கல்லூரியில் சுற்றிக் கொண்டிருந்த காதலை யதார்த்தமாக பள்ளிக்கு கொண்டு வந்த புதுமை புரட்சி இயக்குனர் இவர்!

உண்மையிலேயே மெல்லிய உணர்வுகளை புகுத்தி விரசமோ கவர்ச்சியோ இல்லாமல் இவர்கள் காலத்திலேயே படமெடுத்து காட்டியர் திரு.மகேந்திரன் அவர்கள். முள்ளும் மலரும், ஜானி, உதிரிப்பூக்கள் என அவர் படமனைத்துமே பொக்கிஷங்கள். அவரை திரையுலகமும், ரசிகர்களும் புறக்கணித்து, இந்த புரட்டு புரட்சியாளர்களை இமயத்திற்கு கொண்டு வந்ததுதான் யதார்த்தத்தின் உச்சம். நீளப் படஙகள் அனுமதிக்கப் பட்டிருந்தால், இந்த இமயங்களின் யதார்த்தமும் அவையாகவே இருந்திருக்கம்!!! அது சரி, அவைதான் யதார்த்தமான குடும்பப் படமாக இருந்திருக்கும்!!!

No comments: