இன்று எதற்கெடுத்தாலும் இளைய தலைமுறையை சினிமாகாரங்களுக்கு காவடி தூக்குகிறார்கள், நடிகர்களை துதிபாடுகிறார்கள், இளையதலைமுறை சீரழிந்து விட்டது என நொந்து கொள்கிறோம். ஆனால் இதை தொடங்கி வைத்தது. முந்தைய தலைமுறையான நாம் என்பதை இலகுவாக மறந்து (மறைத்து) விடுகிறோம்!! விசய்-அசீத், தனுசு-சிம்பு என நடிகர்களுக்குள் போட்டி இருக்கிறதோ இல்லையோ, ரசிகர்களுக்குள் அடாவடி நடக்கிறது. பாலாபிசேகம், தீபாராதனை எல்லாம் கடந்து இந்த கணினி யுகத்தில் டிவிட்டர், முகநூல் என ஆராதனைகள் தொடர்கின்றன. இதில் சில நடிகர்களின் படங்கள் வெளிவர தாமதமான போது தற்கொலைகளும் நடந்தன. இது மிகவும் அதிர்ச்சிகரமான சம்பவமே. இளைய தலைமுறையை விட்டி விட்டு , எங்கள் தலைமுறையையும் பார்க்கும் முன்னர், எங்களுக்கு முந்தைய தலைமுறையையும் பார்த்துவிடுவோம்....
எங்கள் தலைமுறை என்பது ரசினி-கமல் காலம் என்பது! அப்போ எங்களுக்கு முந்தைய தலைமுறை என்றால் என்ன என்பது உங்களுக்கு புரிந்திருக்கும்! ஆம் எம்.சி.ஆர்-சிவாசி காலகட்டமே அது. நடிகரை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தி அழகு பார்த்த அந்த தலைமுறைதான் இன்று இளைய தலைமுறையை குறை கூறிக்கொண்டிருக்கிறது எந்த வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல். இன்றைய ஆட்சியாளர்களும் அவர்கள் கால கட்டத்தில் அவர்களால் ஆதாரிக்கப்பட்டவர்கள் தான். அவர்கள் காலத்துக்கு முன்னரே பாகவதர், பி.யு.சின்னப்பா போன்றர்கள் மிகவும் ஆதாரிக்கப்பட்ட நடிகர்களாக இருந்தாலும், அவர்களுக்கு தங்கள் புகழை சரியான வகையில் பயன்படுத்தி தங்களை அரசியலில் பெரிய அளவிலோ, ரசிகர்கள் மத்தியில் பொய் முகம் ஏற்படுத்தி 60,70 வயது வரையில் கதாநாயகர்களாகவே நடிக்கவோ அவர்களுக்கு திறமை பத்தவில்லை அல்லது அன்றைய ரசிகர்களின் ரசிப்பு தன்மை போதவில்லை எனவும் கூறலாம்!! அதற்கு பின்பு எம்.சி.ஆர் மற்றும் சிவாசி கணேசன் அவர்கள் காலக்கட்டத்திலேயே தங்கள் சம்பாத்தியத்தை சரியான வகையில் மேலும் பெருக்க அரசியலும், அதிகாரமும் வகை செய்யும் என்பதை கண்டறிந்தார்கள். 60 வயது கிழவர்கள் 20 வயது குமரியுடன் கல்லூரி புத்தகத்தை தூக்கி வைத்துக் கொண்டு கதாநாயகன் கதாநாயகியாக வலம் வர ஆரம்பித்து, அதற்கு ரசிகமணிகளின் ஆதரவு கிடைத்ததும் இந்த முந்தைய தலைமுறையில்தான்!! அந்த கொடுமையான கூத்து (60 வயது கிழவனுக்கு 20 வயது குமரி!) இன்று வரை கூச்ச நாச்சமில்லாமல் தொடர்கிறது!
இவர்கள் காலகட்டத்திலேயே நடிகர்களுக்கு ரசிகர்களால் சாதி சாயம் பூசும் கொடுமையும் அரங்கேறியது! தன் சாதிக்காரர் என்பதால் கண்ணை மூடிக்கொண்டு அவர்கள் படங்களை பார்க்கும் கொடுமையும் ஆரம்பித்தது. எம்.சி.ஆர் அவர்களை மதுரையில் நேரில் பார்க்கும் வாய்ப்பு (கும்பலில் பார்க்கும் வாய்ப்பு மட்டுமே, சந்திக்கும் வாய்ப்பு அல்ல!) கிடைத்த போதெல்லாம் பெண்கள் மத்தியில் அவர் எவ்வளவு பிரபலமானவர் என்பது தெளிவாகியது! அவர் வேட்டி சிறிது விலகினால் கூட அவர் கணுக்கால் சிகப்பை பார்த்தாலே போதும் எனக் கூறி காத்திருந்த தமிழச்சிகளையும் கண்டிருக்கிறேன். சினிமாக்காரர்களை மிக சிறப்பாக பயன்படுத்தக்கூடிய திரையுலகை சேர்ந்த கட்சித்தலைவர் ஒருவரே திராவிட சாயத்துடனும், சாதீய ஒழிப்பு கோசத்துடனும் வந்து அன்றைய இளைய தலைமுறையை சினிமா மோகத்தில் சீரழித்தார். இன்றும் அவர் அதை மிகச் சிறப்பாக செய்து நல்லபடியாக உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதே இறைய இளைய தலைமுறையின் சாபம்! இவர்களுக்கு பின்னர் எங்கள் தலைமுறையும் வந்து தீபாராதானை பாலபிசேகம், திரையரங்கத்தில் கத்தி குத்து, பால் காவடி, பறவை காவடி, வெறும் கையில் சூடம் கொளுத்துவது என தொடர்ந்தோம். பிரபல நடிகர்களின் படத் துவக்கத்திற்கு முதல் நாள் இரவே திரையரங்கத்தின் வாசலில் காத்துக்கிடப்பது, தனி மனித ஆராதனை, அவரை போல் புகைபிடிப்பது, படுத்துக்கொண்டு மோட்டார் வாகனம் ஓட்டுவது என எல்லாம் நாங்கள் துவங்கி வைத்ததே...
கூத்தாடிகளை வைத்து கூத்தடிக்கும் எல்லா கூத்துக்களையும் நாம் துவக்கி வைத்துவிட்டு, இன்றைய இளைஞர்களை ஏதோ அவர்கள் தானாக சிரழிந்தது போலவும், அவர்களே சமூகத்தை சீரழித்தது போலவும் சாடுவது என்ன முறை?? நியாயப்படி பார்த்தால் அவர்களை சீரழித்ததில் நம் பங்கிற்கு நாம் தான் அவர்களிடம் மண்னிப்பு கோர வேண்டும். வேன்டுமானால் இளைய தலைமுறைக்கு ஒரு வேண்டுகோள் வைக்கலாம்.
"மக்களே நாங்கள் தான் எங்கள் காலத்தில் இந்த கூத்தாடிகளின் பின்னால் சென்று நாங்களும் கெட்டு, தமிழ் சமுதாயத்தையும் கெடுத்தோம். எங்களை பார்த்து நீங்களும் கெடாமல், நாங்கள் கெடுத்தது போல் சமுதாயத்தையும் அடுத்த தலைமுறையையும் கெடுக்காமல் நீங்களாவது உங்கள் காலத்தில் திருந்துங்கள்!"
நன்றி!!!!
No comments:
Post a Comment