Thursday, 15 October 2015

பனைவெல்லம், கருப்புகட்டி, கருப்பட்டி, உடன்குடி.... (பகுதி-2)

சென்ற பகுதியில் உடன்குடி என்னும் ஊரை பற்றியும், பனை மரத்தினை பற்றியும், கள் பற்றியும் மிக விரிவாக பார்த்து இருந்தோம், இந்த பகுதியில் அதை எப்படி கருப்பட்டி ஆக்குகின்றனர் என்று பார்ப்போம். கருப்பட்டி தயாரிப்பவர்கள் இன்று கிராமத்தில்தான் இருக்கின்றார்கள் என்று நமக்கு தெரியும், ஆனால் அந்த கிராமத்திலேயே மிக மிக தொலைவில்தான் இது செய்யப்படுகிறது என்றால் அது எப்படிப்பட்ட முள் காடாக இருக்க வேண்டும் என்று நினைத்து பாருங்கள்..... 


நாம் பெரிய குடங்களில் மட்டுமே பதநீரை பார்த்து இருப்போம், பொதுவாக கிராமத்திலும் நகரத்தில் எப்போதாவதும் பதநீர் பதநீர் என்று கூவிக்கொண்டு வருபவர்களை காணும்போது பதநீர் என்பது இவ்வளவுதான் என்று தோன்றும், ஆனால் கருப்பட்டி செய்யுமிடத்தில் பதநீரை தொட்டி தொட்டியாக காணலாம். ஒரு பனை மரத்தில் நாள் ஒன்றுக்கு 6 லிட்டர் வரை பதநீர் கிடைக்கும். 18 லிட்டர் பனை பதநீரை காய்ச்சினால் தான் 10 கிலோ கருப்பட்டி வெல்லம் கிடைக்கும். அதிகாலையிலேயே மரத்தில் ஏறி பதநீரை சட்டி சட்டியாக இறக்கி அதை கொண்டு வந்து இங்கு கொடுத்து காசு வாங்கி கொள்கின்றனர். பதநீரை காய்ச்சும் அந்த அடுப்பு என்பது மிகவும் வித்யாசயமாக இருக்கும், நின்று கொண்டு காய்ச்சும் வண்ணம் இந்த அடுப்பு தரையில் இருந்து பள்ளம் தோண்டி வைத்து இருப்பர், அதனில் இருந்து ஒரு சுரங்கம் போன்று அமைத்து தூரத்தில் முடியும், அங்கு இருந்துதான் விறகும், தேங்காய் மட்டைகளும், பனைமர இலைகளும் கொண்டு நெருப்பு மூட்டுவார்கள். பதநீரை ஒரு சிறிய டம்பளரில் மட்டுமே குடித்து பழகிய நமக்கு அங்கு குடம் குடமாய் அள்ளி ஒரு பெரிய வாணலியில் ஊற்றுவது கண்டால் ஆச்சர்யமாகவே இருக்கும்!


ஒரு பெரிய கரண்டி கொண்டு அந்த வாணலியில் கிண்ட, அந்த பதநீர் பிரவுன் நிறமாக மாறி பின்னர் கெட்டியாக ஆக ஆரம்பிக்கும். அதை சரியான பதம் பார்த்து ஒரு கட்டத்தில் தீயை அணைப்பாரகள். பி்ன்னர் தரையில் தண்ணீர் தெளித்து, அதன் மீது இப்போது ஒரு பருத்தி சேலையினை தண்ணீரில் பிழிந்து விரிப்பார்கள். பின்னர் வரிசையாக கொட்டாங்குச்சியை அடுக்கி வைப்பார்கள். இப்போது ஒரு சிறிய ஜக்கில் சிறிது ஆறி இருந்த காய்ச்சிய பதநீரை எடுத்து வந்து இந்த கொட்டாங்குச்சிகளில் ஊற்றுவார்கள். கொஞ்சம் கூட கூடுதல் குறைச்சல் இல்லாமல் ஒரே அளவில் அந்த கொட்டாங்குச்சிகளில் ஊற்ற வேண்டும்! இப்படி ஊற்றப்பட்ட பதநீரை சுமார் மூன்று மணி நேரம் வரை காய வைத்து, அந்த கொட்டாங்குச்சியை எடுத்து டக்கென்று தட்டினால் கருப்பட்டி ரெடி !!


புகையிலையை பதப்படுத்தி காய வைக்க பனைக் கருப்பட்டி அவசியம். மேலும் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்து தயாரிப்புக்காக அதிகளவில் கருப்பட்டி அனுப்பப்படுகிறது. இவ்வளவு சிரமம் கொண்டு கருப்பட்டியின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்ளுவோமே...


கருப்பட்டியில் சுண்ணாம்பைக் கலந்து சாப்பிட்டால் உடல் சுத்தம் அடையும்.கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும். மேனி பளபளப்பு பெறும். கரும்பு சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டியைப் பயன்படுத்தினால் பற்களும், எலும்புகளும் உறுதியாகும்.குழந்தைகள் முதல் பெரியவர் வரை இதைச் சாப்பிடலாம். நமக்குத் தேவையான கால்சியம் இதில் கிடைக்கிறது. சுக்கு கருப்பட்டி பெண்களின் கர்ப்பப்பைக்கு மிகவும் ஏற்றது. சுக்கு, மிளகு கலந்து கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும். 


அடுத்த முறை உடன்குடி வழியாக சென்றால் இந்த ஊரின் சிறப்புமிக்க கருப்பட்டியை வாங்கி வாருங்கள், அப்படியே இந்த ஊரின் ஸ்பெஷல் கருப்பட்டி காபியையும் குடித்து வாருங்கள் !!

No comments: