Sunday 23 August 2015

யதார்த்தம் மீறாத பெருந்தலைவரின் நகைச்சுவை!

கூட்டத்தைச் சிரிக்க வைக்க காமராஜர் எப்போதும் முயன்றதில்லை. அதுவும் கீழ்த்தரமான கேலி, கிண்டல் என எதிலும் ஈடுபடாததால்தான் இன்று ஈடு இணையற்ற தலைவராகத் திகழ்கிறார்.

அதற்காக நகைச்சுவை உணர்வே இல்லாதவர் என்று நம்பிவிட வேண்டாம். நாட்டு எண்ணமும் நாடு பற்றிய சிந்தனையுமாகவே இருந்ததால், கூட்டத்தை நகைச்சுவையால் ருசிப்படுத்த வேண்டும் என்ற நாட்டமே இல்லாமல் இருந்தார் எனலாம்.

ஆனாலும் அவரது பேச்சில் இழையோடும் நகைச்சுவை அவரைப் போலவே காலங்கடந்து வாழும் வயது பெற்றவை எனலாம். அவரது நகைச்சுவை சிந்தனை முடிச்சாக இருக்கும்.

சொல்லும்போது சிரிக்க வைத்துச் சொல்லி முடிந்ததும் சிந்திக்க வைக்கும் செய்திகள் அதற்குள் அடங்கியிருக்கும்.

ஒரு முறை காமராஜர் அவர்கள் ஒரு கிராமத்துக்குச் சென்றிருந்தார். அப்போது அந்தக் கிராமத் தலைவர்கள் பெருந்தலைவரைச் சந்திக்க வந்திருந்தனர். வந்தவர்கள் அவரிடம் ‘ ஐயா எங்களுக்குச் சுடுகாட்டுக்குச் செல்லப் பாதை அமைத்துத் தரவேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்கள்.

உடனே தலைவர் சிரித்துக் கொண்டே ” நான் வாழ்பவனுக்குப் பாதை தேடுகிறேன். நீங்கள் செத்தவனுக்குப் பாதை கேட்கிறீர்களே?” என்றார். அனைவரும் சிரித்துவிட்டார்கள்.

சாதாரண நகைச்சுவை என்றால் சிரித்துவிடுவார்கள். இதை அவ்வாறு விட்டுவிட முடியுமா?

ஒரு அரசியல்வாதி என்றால், அவன் வாழ்பவனுக்கு வழி தேடுபவனாக இருக்க வேண்டும் என்பதை எவ்வளவு எளிமையாக உணர்த்திவிட்டார்.

உள்ளத்தில் இல்லாதது உதட்டில் உலா வராது. தலைவரின் சிந்தனையெல்லாம் வாழும் மனிதனுக்கு வாழும் வழிதேடும் ‘சிந்தனை’ என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.

அது ஒரு தேர்தல் காலம். நாடெல்லாம் அரசியல் கூட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களும் கொள்கை விளக்கக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மேடைதோறும் வாக்குறுதிகளை வாரி வாரி வழங்கிக் கொண்டிருந்தனர்.

காங்கிரஸ் மேடைகளிலும் சின்னச் சின்ன பிரச்சார வெடிகள் சில நேரம் வாக்குறுதிகளை வெடித்து மேடையை சிவகாசியாக்கிவிடும்.

ஒருமுறை தலைவர் மேடையில் இருக்கும்போதே ஒருவர், ”காங்கிரஸ் ஆட்சிக்கு வருமானால் உழுபவனுக்கு நிலம் சொந்தமாகும்” என்று பேசினார்.

இப்போது பெருந்தலைவர் பேச வருகிறார். பேச்சின் தொடக்கமே உழுபவனுக்கு நிலம் சொந்தமாகனும்னு நீங்க கேட்கறீங்க. சரி. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அப்படியே தந்துவிடுவதா வச்சிக்குவோம். அப்புறம் அறுக்கிறவன் அறுக்கிறவனுக்கு நெல் சொந்தம் என்பான். அப்புறம் அதை அரைக்கிறவன், அரைக்கிறவனுக்கு அரிசி சொந்தம் என்பான்?”

கூட்டம் பலமாகச் சிரித்தது. நடக்காததை நாடக வசனமாக நாவினிக்கப் பேசுவதை நம்பக் கூடாது என்றும், பேசுகிறவர்களும் சிந்திக்க வேண்டும், பேச்சைக் கேட்கிறவர்களும் சிந்திக்க வேண்டும் என்பதை யதார்தமான நகைச்சுவைக்குள் ஏற்றிப் பேசும் கலை காமராஜர் அவர்களுக்கு மட்டுமே கைவந்த கலையாகும்.

கேட்பவன் சிந்திக்க தொடங்கிவிட்டால் பேசுபவனும் சிந்தித்துப் பேசத்தொடங்கிவிடுவான்.

எனவே வாக்காளர்களை நோக்கி வாயினிக்க வாக்குறுதிகளை வாரி வீசும் அரசியல்வாதிகள் எப்படியாவது படிக்க வேண்டிய பாடம் இதுவாகும்.

No comments: