Tuesday 14 October 2014

அப்போ காமராஜர், கக்கன் , செக்கிழுத்த செம்மல் , திருப்பூர் குமரன் எல்லாம் யார்?? வில்லன்களா??

வண்டியின் முன் பக்கத்தின் நடிகரின் படம், பின் பக்கமும் அதே நடிகரின் படம். கழுத்தில் பிளேடு வடிவத்தில் டாலருடன் கூடிய செயின். அதே போல் கையில் வித்தியாசமான காப்பு. விரல்களில் ஏதோ கவசம் போல் அணிந்திருந்தான். இப்படி தோற்றத்துடன் கூடிய ஒரு பையன்தான் என் ஸ்கூட்டரில் வந்து முட்டினான் இன்று. இது போன்ற பையன்கள் பெட்டி கடைகளிலும் டீ கடைகளிலும் சிகரெட் குடிப்பதை பார்க்கும் போது மனது லேசாக வலிக்கும், இந்த பாவத்தில் நமக்கும் பங்கு இருக்கிறது என்று!! சிகரட் குடிப்பது ஆண்மை என்பது போல் ஒரு மாயத்த் தோற்றம் உருவானது என் தலைமுறையில் தான். சினிமாக்களில் சிகரட்டை தூக்கி போட்டு பிடிப்பது ஸ்டைல் என்றும் அதுதான் ஆண்மை என்றும் நம்ப ஆரம்பித்தது எங்கள் காலகட்டத்தில்தான். இன்று அது மிகவும் புறையோடி போயிருப்பது நன்கு தெரிகிறது! சண்டித்தனம் செய்பவனும் சல்லித்தனம் செய்பவனும்தான் வெள்ளை உள்ளம் படைத்தவன் என்பது போலவும், அவன்தான் உதவும் மனப்பான்மை உள்ளவன் எனவும் சினிமாக்களில் பிரச்சாரம் செய்யப்படுகிறது!

இதை விட கொடுமை இவர்களை மட்டுமே இளவயது பெண்கள் துரத்தி துரத்தி காதலிப்பது போல் காட்டுவது! காலரிலிரிலருந்து வாயாலேயே சிகரட்டை உருவி வெல்டிங் மெஷினில் பற்ற வைப்பது வரை தமிழ் திரைத்துரை முன்னேறியிருக்கிறது! இப்பேற்பட்ட காநாயகனிடம் தன் காதலை நிரூபிக்க கல்யாணத்திற்கு முன் கற்பை இழக்க தயாராகிறால் கதாநாயகி. தலையில்தான் அடித்துக் கொள்ள வேண்டும்!! அப்பறம் பணக்கார படித்த பெண்ணை காதலிப்பதறகாகவே அடாதடி செய்யும் பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும் கதாநாயகன். இவருக்கு இந்த படம் முழுக்க இது ஒன்னுதான் வேலையே!! அதே போல் பீரும் சிகரட்டும் அடிக்கும் கதாநாயகனால் மட்டுமே ஒரே நேரத்தில் பத்து இருபது பேரை அடிக்க முடியும். இது போல் படமெடுக்கும் பண்ணாடைகள்தான் டாஸ்மாக்கிற்க்கு இலவச விளம்பரம் குடுக்கின்றன!! நாய் பெல்டை கழுத்தில் மாட்டி திரியும் லட்சியவாதியாய் கதாநாயகன் கொண்ட படம்!

இந்த கதாநாயகன்களை வெட்கம் மானம் சூடு சொரனை இல்லாமல் துரத்தி துரத்தி காதலிக்கும் பெண்கள் எல்லோருமே படித்த பணக்கார செக்க செவேலென்ற பெண்களாய் இருப்பார்கள். ஆக இந்த பண்ணாடைகள் சொல்ல வருவது படிக்காமல் தற்குறியாய் சண்டித்தனம் செய்பவர்கள்தான் இந்த உலகத்தை ரட்சிக்க வந்த மனிதருள் மாணிக்கங்கள், இவர்களை மட்டும்தான் பெண்கள் அதுவும் பணககார படித்த சிகப்பு பெண்கள் விரும்புவார்கள். இவர்கள் குறியும் "சி" சென்டரகள்தான்! அப்போ காமராஜர், கக்கன் ,செக்கிழுத்த செம்மல், திருப்பூர் குமரன் எல்லாம் யார்?? வில்லன்களா??

இந்த படங்கள் எல்லாம பெண் பிள்ளைகளை கெடுப்பதை விட ஆண் பிள்ளகளை கெடுப்பதே அதிகம்! எஸ்.பி.முத்துராமன், எஸ்.ஏ.சந்திரசேகர் வரிசையில் இப்போது பேரரசு! இவர்கள் முக்கியமானவர்கள், இவர்களைபோல் பலர். சிகரட்டை தூக்கி போட்டு வாயில் கவ்விய போதே நாங்கள் வாயில் சூடு போட்டு அனுப்பியிருந்தால், இன்று இவ்வளவு பாதகம் ஏற்ப்பட்டிருக்காது!!!

No comments: