அறிவு பரவலாக்குதல், கால மாற்றத்திற்கு ஏற்ப அறிவை புதுப்பித்தல், இரண்டிற்கும் கற்றறிந்த சான்றோர்கள் கருத்துக்களை தாங்கிய நூல்கள் வழி வகை செய்கின்றன. அது தவிர, சில நேரங்களில் பொது மக்களுக்குப் பொழுது போக்கும் நல்ல முறையாக நூல்களை படிப்பதும் வளர்ந்துள்ளது. ஆனால், பல நூல்களை வாங்கி, பயன்படுத்தி அறிவை வளர்த்துக்கொள்ள பணம் படைதவர்களாலேயே இயலாத அளவுக்கு நூல்களின் விலை இருக்கும்போது, சாதாரண ஏழை, எளிய மக்களுக்கு பல நூல்களை வாங்கிப் பயன்படுத்துவது என்பது கனவாகவே முடிந்து விடும். ஒரு விழிப்புற்ற சமுதாயத்தின் முன்னேற்ற வேகம் என்பது அந்த சமுதாயத்தின் வெற்றிக்கு வழிகோலாகும். இவற்றையெல்லாம் நன்கு உணர்ந்திருந்த காமராஜர் அரசு, தொடக்கக் கல்விக்கு அளித்த முன்னுரிமையை நூலக இயக்கத்திற்கும் அளித்தது.
தங்கள் தங்கள் ஊர்களில் நூலகம் அமைத்து செயல்பட, நூலகத்திற்கு இடம், கட்டிடம், நூல்கள், பொருட்கள், ஆகியவற்றை தருவதற்கு பொதுமக்கள் உற்சாப்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக, நாலகங்கள் இல்லாமல் இருந்த தமிழ்நாட்டில் 638 பொது நூலகங்களும், 12 மாவட்ட மைய நூலகங்களும் திறக்கப்பட்டன. இது தவிர நூல்களை நேரடியாக தரும் நோக்கில் 644 நூல் நிலையங்களும் செயற்பட்டன.
நூலக இயக்கத்தின் ஒரு பகுதியாக பெண்கள் குழந்தைகளிடம் படிக்கும் பழக்கத்தை வளர்ப்பதற்காக என்று சிறப்பு நூலகம் ஒன்று மேற்கு தாம்பரத்தில் திறக்கப்பட்டது. சென்னை, கோவை, தாராபுரம், உடுமலைப்பேட்டை பகுதிகளில் பெண் ஆசிரியர்கள் மூலகமாக நூல்களை வீட்டிலேயே பெண்களுக்கு அளித்து திரும்பப் பெறுதல் முறை திட்டம் செயல்படுத்தப்பட்டது.
சென்னை புதுப்பேட்டையில் பெண்களுக்கு என்று கிளை நூலகம் திறக்கப்பட்டது. இப்படி பல வழிகள் மூலமாக நூலக இயக்கம் காமராஜர் ஆட்சியில் சிறப்புற்றது.
No comments:
Post a Comment