Thursday 30 April 2015

தமிழனின் ஒரே ஒரு தலைக்கிரீடம்

இந்திய அரசியலில்
தமிழனின் ஒரே ஒரு
தலைக்கிரீடம்!
கருப்பு மனிதன்
ஆனால்
வெள்ளை மனம்!
கதர்ச் சட்டை அணிந்து வந்த
கங்கை நதி!
செங்கோட்டை வரை பாய்ந்த
திருநெல்வேலி தீ!
ஆறடி உயர
மெழுகுவர்த்தி!
பாமரன்தான்
ஆனால் இந்தப் பாமரனின்
ஆட்காட்டி விரலுக்குள்
பிரதமர்களை உருவாக்கும்
பிரவாகம் இருந்தது.!
படிக்காதவர் தான்!
ஆனால் இந்தப் பட்டமில்லாதவரின்
அகத்துக்குள் இருந்தது
ஒரு பல்கலைக் கழகத்தின்
அறிவு!
இந்த நூற்றாண்டில்
சராசரி மனிதனாலும்
சந்திக்க முடிந்த
ஒரே ஒரு முதலமைச்சர்!
இந்திய அரசியல் கப்பல்
கரை தெரியாமல்
கதிகலங்கிய போது
தமிழகத்தில் தோன்றிய
கதர்ச்சட்டை
கலங்கரை விளக்கம்!
காமராஜர்!
கடவுளுக்காக வாதம் நடந்த
காலகட்டத்தில்
மக்களுக்காக வாதம் செய்த
முதல் வக்கீல்!
முதலாளிகளுக்கு பாதுகாப்புத் தந்த
காவல் துறை மத்தியில்
பாமரர்களுக்கு பாதுகாப்பளித்த
முதல் போலீஸ்!
ஓட்டு வேட்டைக்காக
உழைத்த
அரசியல் வாதிகளுக்கு மத்தியில்
மக்களின்
ஓட்டு வீடுகளுக்காக உழைத்த
முதல் அரசியல்வாதி!
மூன்று வேட்டி சட்டை
முன்னூறு ரூபாய் ரொக்கத்தோடும்
வாழ்ந்து முடித்து விட்ட
முதல் ஏழை!
எப்படி ஆள வேண்டும்?
எப்படி வாழ வேண்டும்?
என்பதற்கு உதாரணமாய் இருந்த
முதல் தலைவன்!

கவிதை - திருவேங்கடம் முனுசாமி

No comments: