Sunday 5 April 2015

பெருந்தலைவர் - நாட்டுக்காக பாசம் துறந்த மகான்

இதைப்படிப்பவர்களுக்கு சற்று மணம் கணக்கவேண்டும் .....அந்த தலைவன் வாழ்ந்த மண்ணில் தானே நாமும் வாழ்கிறோம் . காமராஜர் தன் தாயார் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார் என்பது நமக்கு தெரிந்ததே, ஆனால் அவருக்கு இருந்த மனப்பக்குவமும் மனவுறுதியும் அசாத்தியமானது.

பெருந்தலைவர் சிறுவனாக இருந்த போதே அவரது தந்தை குமாரசாமி நாடார் காலமாகி விட்டார். எனவே தாயார் சிவகாமி அம்மையார்தான் காமராசரையும் அவர் தங்கையையும் வளர்த்தார்.

சிவகாமி அம்மையார் விருது நகரில் குடியிருந்தார். காமராசர் சென்னையில் வாடகை வீட்டில் குடியிருந்தார். முதல்-அமைச்ச ராகஇருந்தபோதுதாயாருக்கு மாதம் ரூ. 150 மட்டும் மணியார்டர் மூலம் அனுப்பி வைப்பார்.

காமராசர் விருதுநகருக்கு போகும் போதெல்லாம் தாயாரைச் சென்று சந்திப்பதில்லை. பயணிகள் விடுதி (டிராவலர்ஸ் பங்களா)யில் தங்கிக் கொள்வார். மதுரையைக் கடந்து விருதுநகர் வழியாக காரில் நெல்லை நாகர்கோவில் போக நேரிடும் போதும் காமராசர் விருதுநகரில் தன் வீட்டுக்குச் சென்றதில்லை.

விருதுநகர் வழியாக ஒருமுறை பிரதமர் ஜவஹர்லால் திறந்த காரில் சென்றார். சாலையின் இருபுறமும் மக்கள் வெள்ளம்! அப்போது கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம் நேருவின் அருகே சென்று அதோ கூட்டத்தில் நிற்கிறாரே அவர் தான் சிவகாமி அம்மையார் என்று சொல்ல, நேரு காரை விட்டு இறங்கி சிவகாமி அம்மையாரிடம் சென்று நலம் விசாரித்தார்.

காமராசர் 9 ஆண்டுகள் முதல்-அமைச் சராக இருந்தபோது ஒரே ஒருமுறைதான் அவரது தாயார் சென்னைக்கு மகன் வீட்டிற்குச் சென்றார். திருப்பதிக்கு போய் சாமி கும்பிடணும் என்று தாயார் சொல்ல, போயிட்டு வாங்க என்று சொல்லிவிட்டு காமராசர் கோட்டைக்குச் சென்று விட்டார்.

காமராசரின் நேர்முக உதவியாளர் ஒரு தொழில் அதிபரின் காரில் சிவகாமி அம்மையாரைத் திருப்பதிக்கு அனுப்பி வைத்தார். அந்த விஷயம் தெரிய வந்த போது காமராசர் கோபப்பட்டு உதவியாளரைக் கடிந்து கொண்டார்.

கோபிச்செட்டிபாளையத்தில் காங்கிரஸ் மாதர் மாநாடு ஒன்று நடந்தது. இந்திராகாந்தி (அப்போது பிரதமராக அவர் இல்லை)யும் கலந்து கொண்டார். காமராசருக்குச் தெரியாமல் கோபி காங்கிரஸ் தலைவர்கள் சிவகாமி அம்மையாரையும் அழைத்து வந்திருந்தனர். தட்டுத் தடுமாறி அவர் மேடையில் ஏறும்போதுதான் தாயாரை காமராசர் கவனித்தார்.

தனது நேர்முக உதவியாளரை அழைத்த காமராசர் ``இவங்க எங்கே இங்கு வந்தாங்கன்னேன். விழா முடிஞ்சதும் நல்லபடியா அனுப்பி வைங்கன்னேன்' என்று கூறினார். தாயார் அருகே செல்லவும், இல்லை. பேசவும் இல்லை.

ஒருமுறை முதல்-அமைச்சர் காமராசர் ரெயிலில் பகல் வேளையில் திருநெல்வேலிக்குப் பயணமானார். விருதுநகர் ரெயில் நிலையத்தில் வண்டி நின்றபோது நிறைய பிரமுகர்கள் காமராசரை சந்தித்தனர்.

காமராசரோ வண்டியில் இருந்து இறங்கவே இல்லை. ரயில் பெட்டியின் வாசலில் நின்று அவர்களின் வரவேற்பைப் பெற்றுக் கொண்டார்.

வண்டி நகரும் முன் ஒரு தொண்டர் காமராசரிடம் ஐயா அதோ அம்மா நிக்காங்க என்று காட்ட காமராசர் ஏறிட்டுப் பார்த்தார். கூட்டத்துக்கு அப்பால் அவரது தாயார் நின்று கொண்டு மகனைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார்.

வண்டி நகரத் தொடங்கியது காமராசர் ரெயில் பெட்டியின் வாசலில் நின்று கொண்டிருந்தார். பெட்டியின் வாசல் அவரது தாயாருக்கு நேர் எதிரே வந்த போது, ``சௌக்கியமா அம்மா'' என்று காமராசர் கேட்டார்.

தாயாரின் முகம் மேலும் மலர்ந்தது. வண்டி மேலும் நகர்ந்தது. தனது தாயார் தன்னைக் காணவேண்டும் என்பதற்காக தனது முழு உருவமும் வெளியே தெரியும்படி காமராசர் ரெயில் பெட்டி வாசலில் நின்று கொண்டே இருந்தார்.
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருக்க ரெயில் தெற்கு நோக்கி வேகம் எடுத்தது.

முதல்-அமைச்சர் பதவியை விட்டு விலகி, அகில இந்திய காங்கிரஸ் தலைவராகி, 1967 தேர்தலில் காமராசர் விருதுநகரிலேயே தோற்கடிக்கப்பட்டார்.

அதன்பின் நாகர்கோவில் பாராளுமன்ற உறுப்பினரானார். அப்போது சென்னையில் இருந்த காமராசருக்கு, சிவகாமி அம்மையாருக்கு உடல் நலமில்லை என்று சேதி சொன்னார்கள்.

உடனே புறப்பட்டு விருதுநகர் வந்தார். (அப்போது மதுரை நெடுமாறன் பெருந் தலைவருடன் வந்தார்) தாயாரைக் கண்டார். மகனைக் கண்டவுடன் அந்த தாயின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.எனவே காமராசர் சென்னைக்குத் திரும்ப முடிவு செய்தார்.

தாயாரிடம் சொன்னார். போயிட்டு வாப்பா. ஆனால் நம் வீட்டில் சாப்பிட்டு விட்டுப்போ என்றார், அந்த தாயார் படுக்கையில் படுத்தபடி.

சரி சொன்ன காமராசர் அன்று தன் வீட்டில் சாப்பிட்டார். தாயாருக்கு அது பரம திருப்தி. தாயிடம் விடை பெற்ற பின் சென்னைக்கு புறப்பட்டார். உடன் பயணம் செய்த நெடுமாறன் "நீங்கள் வீட்டில் சாப்பிட்டு எவ்வளவு காலம் ஆயிற்று?'' என்று கேட்டார்.

சற்றே கண்ணை மூடிக்கணக்கு போட்ட காமராசர் நான் என் வீட்டில் சாப்பிட்டு 25 வருஷமாவது இருக்கும் என்றார்.

அவர் தாயார் இறந்த அந்த துக்கமான நிகழ்வை கூட அவர் பக்குவமாகவே கையாண்டார், எந்த நிலையிலும் அவர் உணர்ச்சிவசப்படவில்லை. 

அன்னை சிவகாமி அம்மாள் உடல்நலம் குன்றி இருந்தபோது காமராஜர் விருநகரில் தன் தாயாரோடு கூடவே இருந்து கவலையோடு அன்னையை பார்த்துக்கொண்டு இருந்தாராம், பின்பு டெல்லியில் இருந்து அவசர அழைப்பு வர , அன்னையரை பிரிய மனம் இன்றி டெல்லி பயணம் மேற்கொண்டாராம், இதுவே அவர் அன்னையாரை கடைசியாக பார்த்தது. 

அன்னையார் மறைந்த செய்தி கேட்டு விருதுநகர் வந்த காமராஜர் , தன் அன்னையார் அருகிலேயே அமர்ந்து இருந்தாராம். அச்சமயம் அவர் மிக பெரிய தேசிய தலைவராக இருந்த போதிலும் அவர் அன்னையாரின் இறுதிச்சடங்கை சாதரண முறையிலே ஆர்பாட்டமில்லாமல் நடத்தினார்.

No comments: