Sunday 31 May 2015

பெருந்தலைவர் - அரசியல் ஆசான்



                                        
யா பெருந்தலைவர் அவர்கள் எக்காலத்திலும் சாதி மதம் பார்த்து இயங்கியவர் இல்லை. கடமையே கண்ணென வாழ்ந்தவருக்கு சாதி மதங்கள் கண்ணுக்கு தெரியவில்லை! அதனால் தான் அவர் கர்ம வீரர். இதற்கு சாட்சி அவரது விருதுநகர் தோல்வி.

                                      பெருந்தலைவருக்கு எதிராக அணி திரண்ட பணக்காரர்களில் விருதுநகரை சேர்ந்த பணக்கார நாடார் வியாபாரிகள் அதிகம். இதன் காரணமாக ஐயா தோற்ற பின் சில வருடங்கள் விருதுநகரிலிருந்து வேம்பார் போன்ற தென் மாவட்ட ஊர்களுக்கு குல தெய்வம் கும்பிட சென்றவர்கள் அந்த ஊர் நாடார் பெருமக்களால் தடுத்து திருப்பி அனுப்பப் பட்ட கதைகளும் உண்டு. காமராஜர் மீது இன்றும் விருதுநகர் மக்களை விட அதன் தென் மாவட்ட மக்களுக்கு பாசம் அதிகம். அதே போல் ஐயாவை எதிர்த்து அரசியல் செய்தவர்களிலும் சி.பா.ஆதித்தனார், ம.பொ.சி. வி.வி.எஸ் போன்ற நாடார்களும் உண்டு. இது குறித்து ஐயாவே மேடையில் பேசியதாக நவசக்தி 13-7-1968ல் வந்த மேடைப் பேச்சின் சாராம்சம். கண்டிப்பாக இது யார் மனதையும் புண்படுத்த அல்ல! ஐயாவின் பெருமையை உலகறிய செய்யவே!

                                      அய்யா காமராஜரின் ஒரு மேடைப்பேச்சில் - நவசக்தி 13.7.68
" ஏழைகள் மானம் மரியாதையுடன் வாழ்வதைப் பணத் திமிங்கிலங்கள் விரும்பவில்லை. எழைகள் என்றும் அடிமைகளாகவே தான் இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றார்கள். ஏழை மக்கள் இந்தப் பணக்காரர்களை பற்றிக் கவலைப்படக்கூடாது.
நம்மைச் சாதிச் சண்டையில் திருப்பி விடுகிறார்கள். என் ஜாதிக்காரர்களுக்கு மந்திரி பதவி வேண்டும் என்க்றார்கள். யார் மந்திரியாக இருப்பது பிரச்சனையல்ல. மக்களுக்கு யார் நன்மைகள் செய்கிறார்கள் என்பதுதான் பிரச்சனை.

                                        நான் கூடப் பத்து ஆண்டுகளாகப் பெரிய மந்திரியாக இருந்தேன். நான் மந்திரியாக இருந்தேன் என்பதற்காக நாடார்களெல்லாம் "நாடார் மந்திரியாக இருக்கிறார், நாங்கள் எல்லாம் உழைக்க மாட்டோம், உட்கார்ந்து கொண்டே சாப்பிடுவோம் என்று சொன்னால் முடியுமா என்ன"?
நான் மந்திரியாக் இருந்தேன், எனக்கு அரசாங்கத்தில் வீடும், காரும் கொடுத்தார்கள். இதனால் மற்ற நாடார்களுக்கு என்ன லாபம்? ஆகையால் ஜாதியை சொல்லி ஏமாற்றுகிறவர்களிடம் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், பலியாகி விடக்கூடாது.

                                         நான் தேர்தலில் தோல்வி அடைந்தவன், ஏன் மீண்டும் மக்களை சந்திக்கிறேன்? யார் தயவும் எனக்குத் தேவையில்லை. நான் மக்கள் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன். இதனால்தான் பண
க்காரர்கள் என்னைத் தோற்கடித்தார்கள்.

                                        நான் இனித் தூங்கப் போவதில்லை. மக்கள் இப்போது விழித்துக் கொண்டார்கள். நான் எத்தனை தடவை தேர்தலில் தோல்வி அடைந்தாலும் மக்களை சந்திக்க தவறமாட்டேன். வெற்றி, தோல்வியைக் கண்டு கவலைப்படாதவன் நான்."

- நவசக்தி 13.7.68
                                       வெற்றியையும் தோல்வியையும் ஒன்றாகவே கருதிய மாபெரும் அரசியல் துறவி ஐயா அவர்கள். மாபெரும் துறவிகளுக்கு கூட சித்தமாகாத சித்து இது. இவர் குறித்த பாடங்களை தமிழக அரசு கூட தனது பாடத் திட்டங்களில் வைக்காதது நம் துரதிருஷ்டமே!!

No comments: