பாரத அரசியலில் தமக்கென ஒருதனிச் சிறப்பைப்பெற்றுத் திகழ்ந்தவர் பெருந்தலைவர் அவர்கள். விடுதலைப் போராட்ட காலத்தில் மட்டுமின்றி பிற்காலத்தில் சுதந்திர பாரதத்தில் பெருந்தேசியத் தலைவர்களாக திகழ்ந்தோரில் பெரும்பான்மையினர் பெரிய படிப்பாளிகள், பட்டம் பெற்றவர்கள், புகழ் பெற்ற வழுக்குரைஞர்களாக இருந்தார்கள்.
தலைவர் காமராஜர் அவர்களோ மிகச் சாமானிய கல்வியறிவு பெற்ற ஒரு கிராமத்துச் சிறுவராக அரசியலில் அடிமட்டத் தொண்டராகப் பிரவேசித்து பாரதத்தின் பெருந்தலைவர்களில் ஒருவராக உயர்ந்து மக்களுக்கு வழி காட்டியவர்.
தமிழகத்தின் முதலமைச்சராகவும் இருந்து மிகத்திறமையாக பாரதத்தின் பிற மாநிலங்கள் வியந்து போற்றும் அளவுக்கு நல்லாட்சி நடத்தியவர்.
காமராஜர் அவர்களின் தோற்றமே எளியதோர் உழைப்பாளி போன்று காணப்படும். அவருடைய பேச்சிலே வார்த்தை ஜாலங்களோ, அடுக்குமொழி போன்ற அழகு அம்சங்களோ இருக்காது. ஒரு நாட்டுப்புறத்து விவசாயி போன்று மிகமிக எளிமையாக உரையாடுவது அவருடைய இயல்பாக இருந்தது.
பாரத அரசியலில் இப்படி ஒரு சாமானியர் தேசப் பெருந்தலைவர்களில் ஒருவராகப் பெருஞ்சிறப்பு பெற்ற வகையில் பாரதத்துக்கே இவர் தனி வழி காட்டியவராக இருந்தார் என்றே கூறவேண்டும்.
எளிமையாலே உள்ளங்களை கொள்ளை கொண்ட கருப்புத் தங்கம் அவர்.
No comments:
Post a Comment