Friday 26 June 2015

இந்தியாவும், இந்திராவும், நெருக்கடி நிலையும்! (இரண்டாம் பாகம்)

இந்திரா காந்தி கொண்டு வந்த எமர்ஜென்சியின் மோசமான விளைவுகள் தென்னிந்தியாவில் அதிகமாக உணரப்படவில்லை. இந்திரா தேர்தலில் தோற்றதும்தான் விஷயம் எல்லாம் வெளியே வர ஆரம்பித்தது. அப்படி வந்தவற்றில் முக்கியமானது ராஜன் கொலை வழக்கு.

ராஜன் கேரள மாணவன். கம்யூனிஸ்ட் அனுதாபி. போலீஸ் ஸ்டேஷன் மேல் தாக்குதலில் ராஜன் என்ற பேருடைய ஒருவன் ஈடுபட்டான் என்று யாரோ இன்ஃபார்மர் போலீசுக்கு செய்தி கொடுத்திருக்கிறார். வேறு ஒரு கல்லூரி கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பி வந்து ஹாஸ்டல் வாசலில் இறங்கிய ராஜனைத் தூக்கிக் கொண்டு போய்விட்டார்கள். சித்திரவதை முகாமுக்குள் கொண்டு போகப்பட்ட ராஜனை அவன் நண்பர்கள், குடும்பத்தினர் யாரும் அதற்கப்புறம் பார்க்கவே இல்லை. ராஜன் கைதுக்கு ரெக்கார்டுகளே இல்லை போலத் தெரிகிறது.

ராஜனின் அப்பா ஈச்சர வாரியர் சாதாரண ஆள் இல்லை. அன்றைய முதல்வராக இருந்த அச்சுத மேனன் போலீசிடமிருந்து தப்பி ஒளிந்து கொண்டிருந்த காலத்தில் அவரை இவர், இவர் குடும்பத்தினர் பல நாட்கள் ஒளித்து வைத்திருந்திருக்கிறார்கள். வாரியர் ஒரு கல்லூரியில் பேராசிரியர். அன்றைக்கு எம்.பி., அமைச்சர் லெவலில் இருந்த பலரை அவருக்கே நேரடியாகத் தெரியும். வயலார் ரவி போன்றவர்கள் நெருங்கிய நண்பர்களாம். அன்றைய உள்துறை அமைச்சர் கருணாகரனின் நெருங்கிய நண்பர்களுக்கு இவர் நெருங்கிய நண்பர். நெருக்கடி நிலை காலம் முழுவதும் மனு மேல் மனு கொடுத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் கருணாகரன், அச்சுத மேனன் போன்றவர்கள் தன் உயிரை வாங்கும் எதிரியாக இவரைப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

நெருக்கடி நிலை முடிந்ததும் கோர்ட்டில் ஹேபியஸ் கார்பஸ் போடப்பட்டிருக்கிறது. அப்போது முதல்வராகிவிட்டிருந்த கருணாகரன் தனக்கு இப்படி ஒரு கைது நடந்ததே தெரியாது என்று சொல்லி இருக்கிறார். அது பொய் சாட்சி என்று தீர்ப்பாகி அவர் ராஜினாமா செய்ய வேண்டி இருந்தது. ராஜனை கைது செய்த ஜெயராம் படிக்கல் போன்ற அதிகாரிகளுக்கு முதலில் தண்டனை கிடைத்தாலும் (ஜஸ்ட் ஒரு வருஷம் சிறைத் தண்டனை) அது பின்னால் தள்ளுபடி ஆகிவிட்டிருக்கிறது. பின்னால் கருணாகரன் பல முறை முதல்வராகி சவுக்கியமாகத்தான் இருந்திருக்கிறார்.

தன் நினைவுகளை ஈச்சர வாரியர் எழுதி இருக்கிறார், குளச்சல் மு. யூசுஃப் மொழிபெயர்ப்பு. படைப்பு என்ற விதத்தில் ஒன்றும் பிரமாதம் இல்லை. ஆனால் உண்மை சம்பவத்தின் குரூரம் முகத்தில் அறைகிறது. இவ்வளவு தொடர்புகள் உள்ள ஒரு பெரிய மனிதருக்கே இந்த கதி என்றால் அரசு எந்திரம் ஒரு சாதாரணனுக்கு எதிராக செயல்பட்டால் என்னாகும் என்ற எண்ணம் முதுகெலும்பை உறைய வைக்கிறது.

இதில் மிகப்பெரிய கொடுமை, இந்த நிகழ்வை நியாயப்படுத்தி எடுக்கப்பட்டு, சக்கை போடு போட்ட திரைப்படங்கள்தான்! இந்த சம்பவத்தை மையமாக்கி ‘ஆவநாழி’ என்ற மலையாள படம் வெளிவந்தது. டி. தாமோதரன் எழுத ஐ.வி. சசி இயக்கிய படம். ஜெயராம் படிக்கலாக [இன்ஸ்பெக்டர் பல்ராம்]மம்மூட்டி நடித்திருந்தார். அது பெரும் வெற்றி பெற்று ஜெயராம் படிக்கலுக்கு மீண்டும் ஒரு சமூக இடத்தைப் பெற்றுத் தந்தது. அந்தப் படம் தமிழில் (சத்யராஜ்நடித்து) “கடமை கண்ணியம் கட்டுப்பாடு” என நடிகர் கமலஹாசனின் சொந்த தயாரிப்பில் வெளியிடப்பட்டது.

தொடரும்...

No comments: