காமராஜரின் இளம் வயதிலேயே அவரது தந்தை குமாரசாமி இறந்தார். மேலும் காமராஜரின் தாத்தாவும் தனது மகனைத் தொடர்ந்து இயற்கை எய்தினார். இதனால் வறுமை எனும் அரக்கனின் பிடியில் காமராஜரின் குடும்பம் தள்ளாடியது. வறுமையுடன் பள்ளி சென்றாலும் நாட்டு நடப்புகள் காமராஜரின் மனதை படிப்பில் ஈடுபாடு கொள்ளச் செய்யவில்லை. காங்கிரஸ் தொண்டர்களுடன் சேர்ந்து கொண்டு கூட்டங்களுக்குச் சென்று வரத் தொடங்கினார். இதனை அறிந்த அவரது மாமா கருப்பையா தனது அக்கா சிவகாமியிடமும் அம்மா பார்வதியிடமும் புகார் கூறினார்.
மேலும், “இவனை இப்படியே விட்டுவிட்டால் கெட்டுப் போய்விடுவான். அதனால் அவனைப் பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டு என்னுடைய ஜவுளிக்கடையில் வேலைபார்க்க அனுப்பி வை” என்று கூறினார். அதனைக் கேட்ட காமராஜரின் தாயார் தன் தம்பியின் கூற்றுப்படியே செய்தார். பள்ளிக்குச் செல்வதை விடுத்து காமராஜர் ஜவுளிக்கடைக்குச் சென்றார். ஏழ்மையின் காரணமாக தனது மாமா கூறிய வேலைகளைச் செய்து வந்தார் காமராஜர்.
ஒருநாள் அம்மன் கோவில் பொட்டலில் நடந்த டாக்டர் வரதராஜூலு அவர்களின் பேச்சைக் கேட்பதற்காகக் தனது மாமா இல்லாத நேரத்தில் கடையைப் பூட்டிக் கொண்டு வீட்டில் சாவியை ஆணியில் தொங்கவிட்டுவிட்டு நேராகக் கூட்டம் நடைபெறுமிடத்திற்குச் சென்றுவிட்டார் காமராஜர்.
இது இவரது மாமாவிற்குத் தெரியவரவே அவர் காமராசரைக் கண்டித்தார். அதோடு மட்டுமல்லாமல் அவரைத் திருவனந்தபுரத்திற்கு அனுப்பி வைத்தார். திருவனந்தபுரத்திலிருந்த காமராசரின் தாய் மாமாவான காசி காமராரைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்த போதிலும் தந்தைப் பெரியாரின் தலைமையில் நடைபெற்ற வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டார். மேலும் கேரளாவில் நடைபெற்ற அனைத்து போராட்டங்களிலும் காமராசர் கலந்து கொண்டார். காமராஜர் மனம் மாறிவிடுவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு அது ஏமாற்றத்தை அளிப்பதாகவே இருந்தது. இதனைக் கண்டு வருந்திய காமராஜரருடைய மாமா காசிஅவரை மீண்டும் விருதுநகருக்கே அனுப்பி வைத்தார்.
மீண்டும் விருதுநகருக்கு வந்த காமராஜரை அவரது மாமா கருப்பையா ஜவுளிக்கடை வியாபாரத்தைக் கவனிக்குமாறு கூறினார். ஆனால் காமராஜர் மறுத்துவிட்டார். காமராஜருடைய மறுப்பு அனைவருக்கும் மனக்கவலையை ஏற்படுத்தியது. பார்வதி பாட்டி நாள்தோறும் காமராஜரிடம், “இந்தப்போராட்டமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம். மற்றவர்கள் கூறும்படி நடந்து கொள்” என்று கூறிக்கொண்டே இருந்தார். இதனைப் பொறுக்க முடியாத காமராஜர்,
“பாட்டி நம்ம எண்ணெய்க் கடைக்காரர் வீட்டுச் சடைநாய் வெள்ளை வெளேர் என்று இருக்கிறது என்பதற்காக, அந்நாய் வீட்டுக்குள்ளே நொழைஞ்சா அதை வெரடடாம விட்டு விடுவிங்களா?”என்று கேட்டார்.
அதற்கு அவருடைய பாட்டி, “ அது எப்படி வெரட்டாம இருக்க முடியும்?” என்று கூற,
அதற்குக் காமராஜர், “அது மாதிரிதான் பாட்டி நம்ம நாட்டுக்குள்ளே நொழைஞ்ச வெள்ளைக் காரனுகளை வெரட்டணும்” என்றார். அவரது பாட்டியோ,
“அது உன்னால ஆகக் கூடிய காரியமா? ராசா!” என்று கேட்டார்.
அதனைக் கேட்ட காமராசர், “நான் மட்டுமில்ல பாட்டி இந்த நாட்டிலுள்ள அத்தனை இளைஞர்களும் சேர்ந்துதான் விரட்டப் போறோம்” என்று பதிலளித்து பாட்டியின் வாயடைத்துவிட்டார்.
எந்த நேரமும் நாட்டைப் பற்றியும் நாட்டுவிடுதலை பற்றியும் குறித்த சிந்தனையிலேயே காமராசர் மூழ்கி இருந்தார்.
No comments:
Post a Comment