Monday 29 June 2015

இந்தியாவும், இந்திராவும், நெருக்கடி நிலையும்! (நான்காம் பாகம்)


அறுபதுகோடி வயிறு நிறைந்திட இருபதம்சத் திட்டம் வந்ததம்மா என்ற பாட்டு ஊரெங்கும் ஒலித்துக் கொண்டிருக்க, எளிய மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகளும் ஒடுக்குமுறைகளும் கொஞ்சநஞ்சமா? துர்க்மான் கேட் போன்ற பகுதிகளில் இஸ்லாமியர் மீது நடந்த தாக்குதல்களை மறக்க முடியுமா? இறை நம்பிக்கையின் காரணமாக இஸ்லாமியர் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள மறுக்கின்றனர் என்று இந்துத்துவவாதிகள் சொல்கிற அதே பொய்யை சொல்லிக் கொண்டு, திருமணமாகாத இஸ்லாமிய இளைஞர்களையும் தூக்கிப்போய் இனவிருத்தி நரம்பை அறுத்துவீசிய கொடுமையும் நடந்தது. இது சஞ்சய் காந்தியின் கன்ணசைவிலேயே நடந்தது.

அரசியல் சட்டம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள அனைத்து உரிமைகளும் ரத்து செய்யப்பட்டன. உயிர் வாழ்தலும் கூட அரசின் கருணையின்பாற்பட்டதாய் மாற்றப்பட்டிருந்தது. ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்யும் உரிமையும் மறுக்கப்பட்டது. பேச்சைக் குறைப்பீர் உழைப்பை பெருக்குவீர் எனச் சொல்லி உழைக்கும் மக்களின் எல்லா கோரிக்கைகளும் பின்தள்ளப்பட்டன. தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகள் யாவும் மறுக்கப்பட்டன. அமெரிக்க விமான நிலையத்தில் அண்டர்வேருடன் நிற்க வைக்கப்பட்டபோதும் அவமானப்படாத அளவுக்கு தோல் தடித்துப்போன இன்றைய ஜார்ஜ் பெர்னாண்டஸ் ரோஷத்தோடும் போர்க்குணத்தோடும் வாழ்ந்த காலம் அது. ரயில்வே தொழிலாளர்களின் ஆற்றல்மிக்கத் தலைவராய் அப்போதிருந்த அவரை கேட்டுப் பாருங்கள், தொழிலாளிகள் மீது நடந்த ஒடுக்குமுறைகளின் வன்மையை அவர் கூறக்கூடும்.

 இந்த கும்பலின் அட்டூழியங்களுக்கு எதிரான தலைவர்களையும் அமைப்புகளையும் கண்காணிக்கவும் உளவுசொல்லவும் பணிக்கப்பட்டிருந்த உளவுத்துறை, அந்த வேலையையும் செய்யாமல் சஞ்சய்காந்தியின் பைஜாமாவுக்கு நாடா கோர்த்துக் கொண்டிருந்த விசயத்தை நாடறியும். மாருதி கார் ஊழல் மன்னன் என்று வர்ணிக்கப்பட்ட அந்த சஞ்சய் காந்தியின் விரலசைப்புக்கு பணிந்து போகுமளவுக்கு உளவுத்துறை துணிச்சலற்றுக் கிடந்தது. அவசரநிலை எதிர்ப்பாளர்களில் ஒரு பிரிவினர், உயிர்ச்சேதம் விளைவிக்காத டம்மி குண்டுகளை ரயில்பாதைகளின் நெடுகவும் வெடிக்க வைத்து அரசை எச்சரித்தார்கள். இந்த தொடர் குண்டுவெடிப்பில் ஒன்றைக்கூட, அப்போது மிகவும் சிறப்பாக செயல்பட்டதாக தாங்கள் பாராட்டும் உளவுத்துறை கண்டுபிடிக்கவில்லை தெரியுமா? குண்டுசத்தம் கேட்டபின் குறட்டையிலிருந்து விழித்துக்கொண்ட அந்த உளவுத்துறை பரோடா டைனமைட் வழக்கு என்ற ஒன்றை நடத்தியது. அதிலும் இன்னார்தான் குற்றவாளி என்று நிரூபிக்கவில்லை.

உளவுத்துறையால் இந்திய மக்களுக்கு விளைந்த நன்மை என்று ஏதேனும் இருக்குமானால், அது, சட்டத்தையெல்லாம் வளைத்து ஐந்தாண்டுக்கொருமுறை தேர்தல் என்பதை ஆறாண்டுகாலமாக மாற்றிக்கொண்ட இந்திராவிடம் தவறான அறிக்கை கொடுத்து அவரை ஓராண்டுக்கு முன்பாகவே தேர்தலை நடத்தத் தூண்டியதுதான். இப்போது தேர்தல் நடத்தினால் ஜெயித்துவிடுவீர்கள் என்று இந்த உளவுத்துறை கொடுத்த அறிக்கையை நம்பித்தான் எமர்ஜென்சியை விலக்கிக்கொண்டு இந்திரா தேர்தலை நடத்தி மண்ணைக் கவ்வினார் என்பதையாவது தாங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். கருணாநிதி மீதான தனிப்பட்ட விரோதகுரோதங்களுக்காக எம்.ஜி.ஆர். எமர்ஜென்சியை ஆதரித்த தவறைச் செய்தார். எமர்ஜென்சியைக் கொண்டுவந்ததற்காக இந்திய மக்கள் தனக்கு வழங்கிய தண்டனையை வேறுவழியில்லாமல் ஒப்புக்கொண்டார் இந்திரா.

No comments: