Monday 22 June 2015

எனது பேருந்து பிரயாணங்கள் (ஆரம்பம்)!

அது என்னவோ தெரியவில்லை சிறு வயதிலிருந்து இன்று வரை எனக்கு தனியாக பிரயாணிப்பது என்றால் ரயில் பயணத்தை விட பேருந்து பயணத்தையே விரும்புவேன். குழந்தை பிராயத்தில் பயணித்த அனுபவங்கள் பெரிதாக நினைவில் இல்லை. ஆனால் எனது பள்ளிப் படிப்பின் ஆரம்பமே பள்ளிப் பேருந்தில்தான் தொடங்கியது. மதுரையில் 1976ல் தவிட்டு சந்தைக்கும்  தெற்குவாசலுக்கும் இடைப்பட்ட ஒரு திருப்பத்தில் (சரியாக இந்திராகாந்தி தாக்கப்பட்ட இடம்) அரசமரத்து நிழலில் பள்ளிப் பேருந்தின் நிறுத்தம் உண்டு. எதிர் சந்தில்தான் வீடு என்றாலும் பேருந்து வருவதற்கு அரை மணி நேரம் முன்பு அங்கு இருக்க வேண்டும் என்பது வீட்டு பெரயவர்களின் உத்தரவாக இருக்கும். இப்பொழுது போலெல்லாம் பெரியவர்கள் உத்தரவை அப்பொழுது உதாசீனப்படுத்தி விட முடியாது. பெரியவரகள் யாராது வந்து ஏற்றி விடுவார்கள்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் பள்ளி அரைநாள். வீட்டுக்கு வரும்பொழுதே துணிகள் எல்லாம் பிரயாணத்திறகு கட்டி வைக்கப்பட்டிருக்கும். விருதுநகர்தானே பாட்டி வீடு சனிக்கிழமை மதியானம் கிளம்பி போனால் அதிக பட்சம் ஒரு மணி நேரத்தில் விருதுநகர் போய் விடலாம்! மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து தான் அப்பொழுது அனைத்து பேருந்துகளும் கிளம்பும். அரசு பேருந்து என்றால் ஒரு மணி நேரம், தனியார் பேருந்து என்றால் முக்கால் மணி நேரம்! (இப்பொழுது தான் கொடுமைக்கென்று ஒன்றரை மணி நேரம் ஆக்குகிறார்கள்!) இரண்டாவது சனிக்கிழமை கண்டிப்பாக பள்ளி விடுமுறை என்பதால் வெள்ளி சாயந்திரமே கிளம்பி விடுவோம். ஞாயிறு இரவுதான் வீடு திரும்பல்! இது வாராவாரம் நடக்கும் கூத்து! அந்த சமயங்களில் சன்னல் இருக்கைக்கு அண்ணன் தம்பிகளுடன் சிறு யுத்தமே நடக்கும். சில நேரங்களில் சன்னல் இருக்கைகள் ரத்தக்காவு குடுத்த பின் தான் கிடைக்கும். பெரிய கொடுமை என்னவெனில் அவ்வளவு சிரமப்பட்டு சன்னல் இருக்கை வாங்கி பேருந்து கிளம்பிய சில நிமிடங்ளில் தூங்கி விடுவோம்!

ஐந்தாம் வகுப்பிலிருந்து பள்ளிப்பேருந்து வசதி வீட்டில் மறுக்கப்பட்டு மிதிவண்டி வாங்கி குடுக்கப் படட்து. ஆனால் வெளியூர் பேருந்துகளில் செல்லும் போதெல்லாம் சன்னல் இருக்கை தகராறு தொடர்ந்து கொண்டு தானிருந்தன! ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின் ஒபபந்தங்கள் போடப்படும். அதாவது போகும்போது பாதி தூரம் எனக்கு மீதி தூரம் உனக்கு என்று! அதன் பிறகு +1 முடிக்கும் வரை பள்ளிக்கு சைக்கிள் பயணம்தான். +2 சென்ற பிறகு மோட்டார்சைக்கிள் வாங்கிக் குடுத்தார்கள். (ஒரு பெரிய போராட்டததிற்கு பின்னர்!) சில மாதங்கள் அதில் சென்றது பெருமையாக இருந்ததென்றாலும் நகரப் பேருந்துகளில் வந்த உடன் படித்த மாணவர்கள் அதில் பயணம் செய்யும் பிற பள்ளி மாணவிகளைப் பற்றி பேசுவதைக் கேட்ட பொழுது " ஆகா குமரா மிக அருமையான அனுபவங்களை இழந்து கொண்டிருக்கிறாயடா" என இளமனது அடித்துக் கொண்டது! மறுபடி சிறு போராட்டத்திற்கு பின் புது வண்டியை வீட்டில் நிறுததி விட்டு தினம் நகரப் பேருந்து  பிரயாணம்.

தினம் திருவிழாவாக கொண்டாடிய பேருந்து அனுபவங்கள் அவை! சரியாக சொல்வதென்றால் 1991-92 காலக்கட்டம். அண்ணா நகர் டெர்மிணல்சிலிருந்து கிருத்துவ மிஷன் மருத்துவமனை வரை. மதுரையின் பிரபல பெண்கள் காண்வென்டான புனித ஜோசப் பள்ளியின் பேருந்து நிறுத்தமும் எங்கள் பள்ளி பேருந்து நிறுத்தமும் ஒன்றாக இருந்தது சத்தியமாக எங்கள் தவறில்லை! தினம் தினம் தினம் தீபாவளி என்று பாடாத குறைதான். பெண்களிடம்எல்லை மீறியதில்லை ஆனால் அவரகள் ரசிக்கும் விதத்தில் சேட்டடைகள் கண்டிப்பாக செய்திருக்கிறோம்! மனதில் பட்டாம்பூச்சிகள் பறந்த பேருந்துக் காலங்கள் அவை! வீடு இருந்தது அண்ணா நகராக இருந்தாலும் பள்ளி முடிந்தபின் கே.கே நகர், தபால் தந்தி நகர், மகாத்மா காந்தி நகர் என்று தினமும் ஒவ்வொரு பெண் பிள்ளைகளை பாதுகாப்பாக வீட்டில் விட்டு வரவேண்டிய தலையாய கடமை எங்களுக்கு இருந்தது! எல்லாருடைய பெயர், பிறந்த தேதி சாதகங்கள், மனப்பாடமாய் மனதில் இருந்தன!! 1990கள் வரை 25 பைசாவில் இருந்த குறைந்தபட்ச பேருந்து கட்டணங்கள் இன்று 5 அல்லது 6 ரூபாய் ஆகி விட்டன! தனியார் நகரப் பேருந்து வசதி உள்ள ஊர்களி்ல் மட்டும் 3 ரூபாய் கட்டண வசதி உள்ளது!

அதன் பிறகு கல்லூரி காலம் மூன்று வருடங்கள் வேறு வழியில்லாமல் மோட்டார் சைக்கிளில் கடந்தது! படிப்பு முடிந்த பின் திருப்பூரில் வேலை மூன்று வருடங்கள் ரயில் பயணங்களிலும், மோட்டார் சைக்கிளிலும் கடந்தன. அதன் பிறகு 1997ல் மறுபடியும் மதுரையில் குடும்பத் தொழில். அப்பொழுதெல்லாம் வாரத்தில் நான்கு நாட்கள் வெளியூர் வசூலுக்கு அனுப்பி விடுவாா்கள். அதற்கு பெயர் லையணுக்கு செல்வதென்று சொல்வார்கள். பழங்காநத்தம், ஆரப்பாளையம், அண்ணா பஸ்நிலையம் என மூன்று பேருந்து நிலையஙகள் மதுரையில் அப்பொழுது. பெரும்பாலும் தினம் ஒரு பேருந்து நிலையத்தில் பேருந்து ஏற வேண்டியிருக்கும். அப்பொழுது காலையிலேயே மனதில் அழுத்தம் ஏறியிருக்கும் முதல் நாள் இரவே வீட்டில் பெரியவர்கள் சொல்லி விடுவார்கள் இவ்வளவு வசூல் ஆகியிருக்க வேண்டுமெனறும், இவ்வளவு ஆர்டர் பெற்றிருக்க வேண்டுமென்றும். போட்டி வியாபாரிகளும் சில நேரம் நம்முடன் பயணிப்பார்கள். சிரித்து பேசி டீ, காபி, வடை, சில நேரம் பிரியாணி கூட வாங்கி கொடுத்து நமது வாடிக்கையாளர்களைப் பற்றிய ரகசியங்கள், அவர்களுக்கு நாம் போடும் விலை போன்ற விசயங்களை நம் வாயிலிருந்து கறந்து விடுவார்கள் அண்ணாச்சிகள்! உளறிக் கொட்டிவிட்டு கடையில் பெரியவர்களிடம் வாங்கிக் கட்டிக் கொளவதுமுன்டு!

தொழில் அனுபவங்கள் எப்படி இருந்தாலும் பேருந்தில் வழக்கமாக வரும் கல்லூரிப் பெண்களைப் பார்த்த உடன் மனதுக்குள் வெள்ளை தேவதைகள் இறக்கை கட்டி பறப்பதை தவிர்க்க முடியாது. மதுரையிலிருந்து கிளம்பும் போது ஒவ்வொரு திசையில் பிரயாணிக்கும் போதும் ஒவ்வொரு கலரில் தேவதைகள் மனதில் நாட்டியமாடும். பின்னர் முக்கியமாக சிவகாசி வசூல் முடித்து ஸ்ரீவில்லிபத்தூருக்கு மாலையில் பேருந்து ஏறுவது, திருச்சி வசூல் முடித்து மாலையில் திண்டுக்கல் பேருந்து ஏறுவது, உடுமலை வசூல் முடித்து பொளளாச்சி, பொள்ளாச்சி முடித்து பாலக்காடு என எல்லாமே மாலையில் கல்லூரி விடும் நேரங்கள் தான்! அது ஒரு சேரனின் "ஆட்டோகிராஃப்" காலம் என்றுதான் சொல்ல வேண்டும்!

இன்றும் பேருந்தில் பிரயாணித்துக் கொண்டுதானிருக்கிறேன் ஆனால் பழைய அளவுக்கு சுவாரஸயங்கள் இல்லை. காரணம் பல! முதல் விசயம் குடும்பஸ்த்தனாகிப் போனது! பிறகு சாலையோரப் புளிய மரங்கள் அகற்றப்பட்டது! பிறகு அவசர மனிதர்கள். முனபெல்லாம் பேருந்தில் சுவாரசியமாக மக்கள் பேசுவார்கள். நாம் பேசும் கருத்து அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் மறுத்துப் பேசுவார்களேயன்றி கோபப்படமாட்டார்கள். இன்று பக்கத்து இருக்கை மனிதர்களிடம் பேசவே பயமாய் இருக்கிறது. இருக்கையை பகிர்ந்து கொள்ளவே மக்களுக்கு விருப்பமில்லை தற்பொழுது! உடம்பை விறைப்பாக வைத்துக் கொண்டு அமர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் இடத்திலும் சேர்த்து நாம் அமர்ந்து விடுவோமாம். நிறைய பேர் அருகில் இருப்பவரிடம் பேசுவதற்கு கவுரம் பாா்க்கிறார்கள். சிலர் இவர் பேசுவாரோ மாட்டாரோ என சந்தேக்த்தில் பேசாமல் இருந்து விடுகின்றனர். அதையும் மீறி பேசினால் சினிமா, விளையாட்டு, சாமி, சொந்த ஊர், நாட்டு நடப்பு என எதைப் பற்றி பேசினாலும் சன்டை வந்துவிடுகிறது.

பல நாட்களுக்கு பின்னர் சமீபத்தில் மதுரையிலிருந்து கமுதிக்கு பயணிக்கும் வாய்ப்பு கிட்டியது. மானாமதுரை மட்டும் வித்தியாசமாக புதுமையாக இருந்தது. அபிராமத்திலிருந்து கமுதி வரை பேருந்து பயணமும், பயணிகளும் பழைய மாதிரியே இருந்தனர். மகிழ்ச்சியாக இருந்தது. சாலையோர புளிய மரங்களை எண்ணுவதும், பறவைகளை வேடிக்கை பார்ப்பதும், குளம் குட்டைகளை பார்ப்பதும், காட்டு வேலை நடப்பதை பார்ப்பதும் தான் பேருந்து பிரயாணத்தின் சுவாரசியங்கள். தற்பொழுது பொட்டல் காடுகளில் நிறைந்து கிடக்கும் பாலிதீன் பைகளையும், சீமைக் கருவேலைகளும் தான் உள்ளன. முன்னர் எல்லாம் நாட்டுக் கருவேல மரங்கள் குடை போல் அழகாக காட்சி அளிக்கும். பிரயாணத்தின் போது நல்ல நிழல், குளிர்ந்த காற்று தரும். இப்போதுதான் இவைகளை எல்லாம் பார்க்க முடியவில்லையே! பிளாட் போட்டவர்களின் விளம்பரங்களும், பிளாட் போட்ட கல்லும்தான் உள்ளன! பிரயாணிகளைப் போலவே பஸ் ஊழியர்களும் அவசர கதியாகிப் போயினர். மரியாதையான பேச்சு மட்டுமல்ல, கணிவான பேச்சு கூட கிடையாது. பயணிகளை இலவசமாக பயணிப்பவர்கள் போலவே நடத்த ஆரம்பித்து விட்டனர்.

முன்னரெல்லாம் பேருந்துகளில் பெண்களுக்கு பாதுகாப்பும், மரியாதையும் இருந்தன. இப்பொழுதெல்லாம் பெண்களுக்கு பேருந்து பிரயாணம் என்பது சிம்ம சொப்பனமாகவே உள்ளது! இருப்பினும் இன்றளவும் பேருந்துகளையும், பிரயாணிகளையும், சாலைகளையும் ரசித்துக் கொண்டுதானிருக்கிறேன். முன்பு போல் பட்டாம் பூச்சிகள் பறப்பதில்லை, தேவதைகள் நடனமாடுவதில்லை, சிறு குழந்தைகளையும், பள்ளிச் சிறார்களின் குறும்புப் பேச்சுகளையும், கல்லூரி மாணவ, மாணவிகளின் இளமைப் பேச்சுகளையும் ரசித்துக் கொண்டுதானிருக்கிறேன். விற்பனைப் பிரதிநிதிகளின் புலம்பல்கள், கணவர்களின் பெறுமல்கள் என இப்பொழுதும் பேருந்து பிரயாணங்கள் எனக்கு சவராசியமாகத்தான் போய்க் கொண்டிருக்கி்ன்றன. கைபேசி உரையாடல்களை கேட்டுக் கொண்டு வந்தாலே கலகலப்பாக இருக்கத்தான் செய்யும்.

ஆனால் பேருந்து பயணங்கள் எப்பொழுதுமே எனக்கு இப்படி கலகலப்பாக இருந்ததில்லை! நான் பார்த்திருக்கும் பல கோர விபத்துக்கள் இன்று வரை என் மனதை விட்டு அகன்றதில்லை. இரண்டு முறை பர்சை பறி குடுத்திருக்கிறேன். பல முறை சன்டை போட்டிக்கிறேன். பெண்களிடம் கேலமாக நடந்து கொள்ளும் ஆண்களையும் பார்த்திருக்கிறேன், ஆண்களிடம் தவறாக நடக்கும் பெண்களையும் பார்த்திருக்கிறேன். வசூலுக்கு போகும்போது வழக்கமாக ஒரே பேருந்தில் ஏறக்கூடாதென்பது வீட்டு பெரியவர்கள் போட்ட முதல் சட்டம். மீறியதால் பண்த்தை பறி கொடுக்கவேண்டிய சூழலுக்கு ஆளானதும் உண்டு! பிறிதொரு சமயம் வயதான பெண்மணியிடம் தங்கச் சங்கிலியை பறித்து ஓட முயன்றவரை பிடித்ததால் தோளில் கத்தி வெட்டுப் பட்ட தழும்பும் உண்டு!

முன்னால் பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் சுடப்பட்டது தெரியாமல் விருதுநகரில் இருந்து பேருந்து ஏறி திருமங்கலம் கடந்து இறக்கி விடப்பட்டு ரயில் பாதையோடு மதுரைக்கு வீடு வரை நடந்தது ஒரு அனுபவம்! கமுதியில் கடைசி பேருந்தை தவற விட்டு பணப் பையுடன் மாட்டு வண்டியில் மானாமதுரை வரை பிரயாணம் செய்தது! பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் தீபாவளி சமயத்தில் பேருந்து கிடைக்காமல் உறங்கியது! அதே போல் கண்ணனூரில் ஒரு முறை! மனிதனின் உண்மை முகத்தை பேருந்தில் அவன் தனியாக பிரயாணிக்கும் போது கண்டுவிடலாம் என்பது என் அபிப்பிராயம்! பலதரப்பட்ட தொழிலாளிகள், கூலி வேலைக்கு செல்லும் சிறுவர்கள், திருவிழாவிற்கு பலூன் விற்க செல்பவர், முறுக்கு விற்பவர், வடை விற்கும் மூதாட்டி என பலரின் கதையை கேட்கும் அனுபவமும் எனக்கு கிடைத்திருக்கின்றன!

சபலமில்லாத மனிதர்களே உலகில் இல்லை என்பதே பேருந்து பிரயாணங்களில் நான் கண்டது. சிலருக்கு பெண் சபலம், சிலருக்கு மண், சிலருக்கு பண சபலம், சிலருக்கு உணவில் சபலம்! தின் பண்டங்களை கூட வீட்டுக்கு தெரியாமல் வாங்கி அவசர அவசரமாக பேருந்தில் முழுங்குபவர்களையும் கண்ட பாக்கியம் உண்டு. பேருந்து பயணத்தின் மிகப் பெரிய இம்சை தூங்கி தோளில் விழுபவர்களும், குறட்டை விடுபவர்களும் தான். ஆனால் சொன்னால் நம்ப மாட்டீர்கள் தமிழகத்ததை போல் மூலை முடுக்குக்கெல்லாம் பேருந்து வசதி வேறு மாநிலங்களில் கிடையாது. வேறு மாநிலங்களில் போல் நமக்கு ரயில் வசதி கிடையாது. இனி அடிக்கடி பேருந்து பிரயாணங்களில் சந்திப்போம் மக்களே!!

No comments: