Thursday 25 June 2015

இந்தியாவும், இந்திராவும், நெருக்கடி நிலையும்! (முதல் பாகம்)


எமர்ஜென்சி பின்னணி: 
1971 பொதுத்தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி வெற்றி பெற்றார். ஆனால், அவரை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்த ராஜ்நாராயண், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சட்ட விதிமுறைகளுக்கு விரோதமாக இந்திரா காந்தி செய்த பல்வேறு செயல்பாடுகளை விவரமாகத் தொகுத்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கை சாந்திபூஷண் நடத்தினார்
நான்கு ஆண்டுகள் நடைபெற்ற  வழக்கில், 1975 ஜூன் 12}ஆம் தேதியன்று, நீதிபதி ஜக் மோகன் லால் சின்ஹா, சட்டவிரோதமான செயல்பாடுகளை மேற்கொண்டதால் இந்திரா காந்தி பெற்ற தேர்தல் வெற்றி செல்லாது என்று தீர்ப்பளித்தார். அத்துடன் ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் அவர் நிற்கக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து இந்திரா பதவி விலக வலியுறுத்தி ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த தொடங்கின. இதனால் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து 1975 ஜூன் 25-26 நள்ளிரவில் நாடு முழுவதும் நெருக்கடி நிலையை அறிமுகப்படுத்தி  இந்திராகாந்தி உத்தரவிட்டார்.

எமர்ஜென்சிக்கு வழிவகுத்த தீரப்பு:
தீர்ப்பில் நீதிபதி கூறியிருந்ததாவது:_ "மத்திய அரசின் கெஜட் பதவி பெற்ற அதிகாரியான யஷ்பால் கபூரை, இந்திரா காந்தி தன் தேர்தல் வேலைகளுக்குப் பயன்படுத்தியிருக்கிறார். யஷ்பால் கபூர் முன்னதாகவே ராஜினாமா கடிதம் கொடுத்தபோதிலும் ஜனவரி 25_ந்தேதிதான் ஜனாதிபதியால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்தத் தேதி வரை இந்திரா காந்தியின் தேர்தல் பணிகளை யஷ்பால் கபூர் கவனித்தது சட்ட விரோதம். இந்திரா காந்தியின் தேர்தல் கூட்டங்களுக்கு உத்தரபிரதேச அரசு ஏற்பாடு செய்துள்ளது. போலீசாரும் பயன்படுத்தப் பட்டுள்ளனர். இத்தகைய முறைகேடுகள் நடந்துள்ளதால் இந்திரா காந்தி பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது. " இவ்வாறு தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டார்.
இந்திரா மனு தீர்ப்புக் கூறப்பட்ட அரை மணி நேரத்திற்கெல்லாம், "தீர்ப்பை நிறுத்தி வைக்கவேண்டும்" என்று கோரி இந்திரா காந்தி சார்பில் நீதிபதி சின்கா முன்னிலையில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை நீதிபதி ஏற்றுக் கொண்டு தீர்ப்பை அமுல் நடத்துவது இருபது நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் என்றும், இந்த இருபது நாட்களுக்குள் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்தார்.
தேர்தல் செல்லாது என்று ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளதால் இந்திரா காந்தி உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்று சர்வோதய தலைவர் ஜெயப்பிரகாசர், ஸ்தாபன காங்கிரஸ் தலைவரும் முன்னாள் துணைப்பிரதமருமான மொரார்ஜி தேசாய், சோசலிஸ்டு கட்சித் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் பலர் அறிக்கை விடுத்தனர்.
இந்திரா காந்தி மந்திரிசபையில் மூத்த மந்திரிகளாக இருந்த ஜெகஜீவன்ராம், சவான், உமாசங்கர், தீட்சித், பிரமானந்த ரெட்டி, சங்கர் தயாள் சர்மா, இ.காங்கிரஸ் கட்சித் தலைவர் பரூவா ஆகியோர், "அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் இந்திரா காந்தி அப்பீல் செய்ய இருக்கிறார். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புதான் இறுதியானது. இந்திரா காந்தி தலைமையில் நாங்கள் நம்பிக்கையும், விசுவாசமும் கொண்டிருக்கிறோம். நாட்டின் ஒற்றுமைக்கும், ஸ்திரத் தன்மைக்கும் அவர் தலைமை அவசியமானது" என்று அறிக்கை வெளியிட்டனர்.
அப்போதைய ஜனசங்கத் தலைவர் வாஜ்பாய், காஷ்மீரில் தங்கியிருந்த ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதுவைச் சந்தித்து, "கோர்ட்டு தீர்ப்புக்குத் தலைவணங்கி இந்திரா பதவி விலக வேண்டும்" என்று வற்புறுத்தினார். சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தும், தீர்ப்பை நிறுத்தி வைக்கக் கோரியும் இந்திரா காந்தி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை பிரபல வழக்கறிஞர் பல்கிவாலா தாக்கல் செய்தார். மனுவை ஜுன் 23_ந்தேதி நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் விசாரித்து, மறுநாள் தீர்ப்புக் கூறினார்.
தீர்ப்பு விவரம் வருமாறு:_ "அலகாபாத் ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள அப்பீல் மனு விசாரணைக்கு ஏற்கப்படுகிறது. இறுதித் தீர்ப்பு கூறப்படும் வரை அலகாபாத் கோர்ட்டு தீர்ப்பின் அமுலை சில நிபந்தனைகளுக்கு உள்பட்டு நிறுத்தி வைக்கிறோம். அதாவது, இந்திரா காந்தி பாராளுமன்ற உறுப்பினராகச் செயல்படலாம். அவர் பிரதமராக நீடிப்பதற்கு தடை ஏதும் இல்லை. ஆனால் பாராளுமன்றத்தில் சட்டங்கள் தீர்மானங்கள் மீது வாக்கெடுப்பு நடைபெறும் போது, ஓட்டுப்போட அவருக்கு உரிமை இல்லை." இவ்வாறு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்புக்கு நிபந்தனையுடன் கூடிய இடைக்காலத் தடையையே சுப்ரீம் கோர்ட்டு வழங்கியிருப்பதால், இந்திரா காந்தி ராஜினாமா செய்யவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் மீண்டும் வற்புறுத்தினார்கள்.

எமர்ஜென்சி வருது டும் டும் டும்:
இந்திரா காந்தி மத்திய மந்திரிகளையும், இ.காங்கிரசைச் சேர்ந்த முதல்_மந்திரிகளையும் அழைத்து ஆலோசனை நடத்தினார். 
"நீங்கள் ராஜினாமா செய்தால் இந்தியா முழுவதும் குழப்பங்கள் ஏற்படும். இந்திய ஒருமைப்பாட்டுக்கே ஆபத்து ஏற்படும். எனவே பொறுமையுடன் இருங்கள். நான் இந்திய அரசியல் சட்டத்தை ஆராய்ந்து அடுத்து என்ன செய்யலாம் என்று கூறுகிறேன்" என்று கூறினார் ரே. அவர் அரசியல் சட்டத்தில் நிபுணர். மீண்டும் அரசியல் சட்டத்தை நுட்பமாக ஆராய்ந்தார். பின்னர் இந்திரா காந்தியை சந்தித்து, "நீங்கள் பதவியில் நீடிக்கலாம் என்று கோர்ட்டு அறிவித்து இருக்கிறது. எனவே ராஜினாமா செய்ய அவசியம் இல்லை" என்று தெரிவித்தார். அப்போது, உளவுத்துறையிடம் இருந்து தனக்கு வந்துள்ள தகவல்களை அவரிடம் இந்திரா கொடுத்தார்.
இந்திரா காந்திக்கு எதிராக ராணுவத்தினரும், போலீசாரும் புரட்சி நடத்தவேண்டும் என்று ஜெயப்பிரகாஷ் நாராயண் பேசியுள்ளார் என்றும், இந்திரா காந்தியை வீட்டை விட்டு வெளியேற விடாதபடி "முற்றுகை போராட்டம்" நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. "நீங்கள் பதவி விலகினாலும் உங்கள் ஆதரவாளர்கள் கிளர்ச்சி செய்வார்கள். சும்மா இருந்தாலும் எதிர்க்கட்சிகள் கலவரம் செய்வார்கள். உள்நாட்டுக் கலவரம் ஏற்படாமல் தடுக்க இந்தியா முழுவதும் நெருக்கடி நிலை பிரகடனம் செய்வதுதான் ஒரே வழி" என்றார் ரே.
நீண்ட நேரம் இந்திரா காந்தி ஆலோசனை நடத்தினார்.இறுதியில், "ராஜினாமா செய்வதில்லை" என்று தீர்மானித்தார். (ஆனால் எதிர்க்கட்சித் தலைவர்கள், "இந்திரா காந்தியை பதவியை விட்டு விரட்டும் வரை ஓயப்போவதில்லை" என்று அறிவித்தனர். அவரை ராஜினாமா செய்யும்படி வற்புறுத்தி ஜுன் 29_ந்தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்தத் தீர்மானித்தனர். போராட்டத்தை நடத்துவதற்காக, மொரார்ஜி தேசாய் தலைமையில் போராட்டக்குழு அமைக்கப்பட்டது.)
பிறகு ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதுவை சந்தித்தார். உளவுத்துறையிடம் இருந்து வந்துள்ள தகவல்களை ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.
"உள்நாட்டுக் கலவரம் வெடிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே நெருக்கடி நிலை பிரகடனம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது" என்று கூறினார். ஜனாதிபதி சில விளக்கங்கள் கேட்டார். பிறகு, "நெருக்கடி நிலை பிரகடனத்தைத் தயாரித்து அனுப்புங்கள். கையெழுத்திடுகிறேன்" என்று தெரிவித்தார். இந்தக் கால கட்டத்தில் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தி அரசியலில் பங்கு கொண்டிருந்தார்.
தாயாருக்கு அவர் ஆலோசனைகள் கூறுவது வழக்கம். நெருக்கடி நிலைமை பிரகடனம் ஆகப்போகிறது என்று தெரிந்து கொண்டதும் அவர் தாயாரை சந்தித்தார். "நெருக்கடி நிலை கொண்டு வந்தால் மட்டும் போதாது. எதிர்க்கட்சி தலைவர்கள் வெளியே இருந்தால் முன்பைவிட அதிக தீவிரமாக கலவரத்தில் ஈடுபடுவார்கள். எனவே இரவோடு இரவாக அவர்களையெல்லாம் கைது செய்து சிறையில் அடைத்துவிடவேண்டும். நெருக்கடி நிலை'யில் எதிர்க்கட்சி தலைவர்களைக் காரணம் காட்டாமல் கைது செய்யலாம். அத்துடன் பத்திரிகைகளுக்கு தணிக்கை ("சென்சார்") முறையை கொண்டுவரவேண்டும்" என்றார்.
நீண்ட ஆலோசனைக்கு பிறகு தலைவர்களை கைது செய்யவும், பத்திரிகைத் தணிக்கைக்கும் சம்மதித்தார். 1975 ஜுலை 25_ந்தேதி நள்ளிரவுக்குப்பின் (26_ந்தேதி அதிகாலை) "நெருக்கடி நிலை" பிரகடனம் செய்யப்பட்டது. முதுபெரும் தலைவர் ஜெயப்பிரகாசரை, நள்ளிரவில் போலீசார் தட்டி எழுப்பி கைது செய்தனர். "விநாசகாலே விபரீத புத்தி" ("கெட்ட காலம் வந்துவிட்டால் விபரீத புத்திதான் வரும்") என்று கூறியபடி அவர் போலீசாருடன் சென்றார். மொரார்ஜி தேசாய், வாஜ்பாய், ஜார்ஜ் பெர்னாண்டஸ் உள்பட இந்தியா முழுவதும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டபோதே, பத்திரிகைத் தணிக்கையும் அமுலுக்கு வந்துவிட்டதால், தலைவர்கள் கைது பற்றிய விவரங்கள் பத்திரிகைகளில் இடம் பெறவில்லை. அதாவது பத்திரிகையில் அந்தச் செய்தியைப் பிரசுரிக்க தணிக்கை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
டெல்லியில் இருந்து வெளியாகும் பத்திரிகைகளில் நெருக்கடி நிலை பிரகடனம் பற்றியோ, தலைவர்கள் கைது பற்றியோ செய்தி இடம் பெறக்கூடாது என்று சஞ்சய் காந்தி நினைத்தார். அதற்காக அவர் ஒரு குறுக்கு வழியைக் கையாண்டார். பத்திரிகைகள் அச்சாகத் தொடங்குவதற்கு முன், பத்திரிகை ஆபீசுகளுக்கு மின்சார சப்ளை துண்டிக்கப்பட்டது. அதனால் டெல்லியில் அன்று காலை நாளிதழ்கள் வெளிவரவில்லை. ஜெனரேட்டர் வசதியுள்ள ஒரு சில பத்திரிகைகள் மட்டும் வெளிவந்தன. நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது மந்திரிகளுக்கு கூட தெரியாது! காலை 6 மணிக்கு மந்திரி சபை கூட்டம் இருப்பதாக காலை 5 மணிக்கு மந்திரிகளின் வீடுகளுக்கு போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி 6 மணிக்கு மந்திரிகள் கூடினார்கள். நெருக்கடி நிலை பிரகடனம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது பற்றி இந்திரா விளக்கினார்.
"நெருக்கடி நிலையை காலதாமதமின்றி உடனடியாக பிரகடனம் செய்யவேண்டியிருந்ததால், மந்திரிசபை கூட்டத்தை முன்னதாகக் கூட்டி ஒப்புதல் பெற முடியவில்லை" என்று கூறிய இந்திரா, நள்ளிரவில் தலைவர்கள் கைது செய்யப்பட்ட விவரத்தையும் தெரிவித்தார். சில மந்திரிகளுக்கு இது அதிர்ச்சி அளித்தது என்றாலும் தங்கள் கருத்தை வெளியிட தைரியம் இன்றி மவுனமாக இருந்தனர். பின்னர், நெருக்கடி நிலை பிரகடனத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துவிட்டதாக அறிவிப்பு வெளியானது.

மக்கள் நலனுக்கான எமெர்ஜென்சி!
நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்யப்பட்டது குறித்து, ரேடியோவில் இந்திரா காந்தி பேசினார். அவர் கூறியதாவது:-
"மக்கள் நலனுக்காக நான் சில முற்போக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியது முதலே, அதற்கெதிராக சதி உருவாகி வந்தது. ஜனநாயகம் செயல்படுவதைச் சீர்குலைக்க முயற்சி செய்யப்படுகிறது. கலகம் செய்யும்படி நமது ராணுவத்தையும், போலீசாரையும் தூண்டிவிடும் அளவுக்கு சில நபர்கள் சென்றுள்ளனர். நெருக்கடி நிலைப் பிரகடனம் சட்டத்தை மதிக்கும் பிரஜைகளின் உரிமைகளை எந்தவிதத்திலும் பாதிக்காது என்று உறுதியளிக்கிறேன். கூடிய விரைவில் நெருக்கடி நிலையை ரத்து செய்யும் அளவுக்கு உள்நாட்டு நிலைமையில் அபிவிருத்தி ஏற்படும் என்று நம்புகிறேன்." இவ்வாறு இந்திரா காந்தி கூறினார்

தொடரும்....

No comments: