Monday 26 January 2015

தியாகி சங்கரலிங்க நாடார் என்ற மறக்கப்பட்ட கண்டன் சங்கரலிங்கனார்

இன்று மறக்கப்பட்ட ஒரு மொழித்தியாகியின் பிறந்த நாள்

தியாகத்தின் சுருக்கம்
மெட்ராஸ் மாநிலத்துக்குத் 'தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற தீர்மானம் 1961-லேயே மதராஸ் சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. அதன் காரணமாக, அன்று காமராஜர் தலைமையில் இயங்கிய அரசு, அரசின் முக்கிய ஆவணங்கள் தமிழில் அளிக்கப்படும்போது 'தமிழ்நாடு அரசாங்கம்’ என்று குறிப்பிடப்படும் என்றும், ஆங்கில மொழியில் பயன்படுத்தும்போது 'மெட்ராஸ் ஸ்டேட்’ என்ற பெயரே தொடர்ந்து கையாளப்படும் என்றும் இரட்டை நிலையை அறிவித்தது.அதுவே தொடர்ந்து நடைமுறையிலும் இருந்தது.

 இந்த நிலையில்தான், சங்கரலிங்க நாடார் 'தமிழ்நாடு’ என்ற பெயர் சூட்டக் கோரி விருதுநகரில் உண்ணா​விரதம் தொடங்கினார்.'இப்படியான பெயர் மாற்றங்களால் ஒரு பயனும் இல்லை. மக்களின் உணர்ச்சியைத் தூண்டிவிடுகிற சமாசாரம் இது’ என்று, காமராஜர் கூறினார். தொடர் உண்ணாவிரதம் காரணமாக உடல் நலிந்து சங்கர​லிங்க நாடார் பரிதாபமாக இறந்துபோனார். அதை, அன்றைய காங்கிரஸ்காரர்கள் கேலி செய்து எழுதினார்கள்.இது மட்டுமின்றி, தமிழ்நாட்டுக்கு பெயர் மாற்றம் கொண்டுவரும் தீர்மானம் ராஜ்ய சபாவில் கொண்டுவரப்பட்டபோது, ஒரு தமிழ் உறுப்பினர் எழுந்து, தமிழ்நாடு என்று பெயரை மாற்றுவதால் என்ன ஆதாயம் என்று கோபத்துடன் கேட்டு இருக்​கிறார்.

''பாராளுமன்றத்தை ஏன் லோக்சபா என்கிறோம். அதில் நமக்கு என்ன ஆதாயம் கிடைத்து​விட்டது. பிரசிடென்டை, ராஷ்டிரபதி என்று அழைக்கிறோமே... அதில் என்ன ஆதாயம் கிடைத்து இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு, தமிழ்நாடு என்று பெயர் வைப்பது அதன் அடையாளத்தை குறிக்கும் செயல். பெயர் மாற்றத்தின் மூலம் உணர்வுபூர்வமான மனநிறைவு கிட்டும் என்பதுதான் உண்மையான ஆதாயம். ஒரு தொன்மையான பெயர் மீட்டு எடுக்கப்பட்டு, மக்கள் மனதில் பதியவைக்கப்படுவதுதான் ஆதாயம். பெயர் மாற்றம் என்ற ஒரு சிறிய சிரமத்தை மேற்கொள்வதற்கு இவ்வளவு சரியீடு போதாதா?'' என்று, பதில் அளித்த அண்ணா, தமிழ்நாட்டுக்கு 'சென்னை மாநிலம்’ என்ற பெயர்தான் இருக்கும் என்றால், கேரளத்துக்கு திருவனந்தபுரம், ஆந்திரத்துக்கு ஹைதராபாத், குஜராத்துக்கு ஆமதாபாத் என்றெல்லாம் பெயர் மாற்றம் செய்ய வேண்டியிருக்கும் என்று சொன்னபோதும், அவையில் பலத்த சிரிப்பலை ஏற்பட்டது.

 இறுதியில் அந்தத் தீர்மானத்தை காங்கிரஸ் உறுப்பினர்கள் தோற்​கடித்தார்கள்.சென்னை மாகானத்துக்கு 1967-ம் ஆண்டு அண்ணா முதல்அமைச்சர் ஆன பிறகே, ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலுமே ’தமிழ்நாடு’ என்ற பெயர் சூட்டப்பட்டது. ஆனால், தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் காரணமாக இருந்த சங்கரலிங்க நாடாரின் உயிர்த் தியாகம் இன்றுவரை முறையாக கௌரவிக்கப்படவே இல்லை.




 தியாகி சங்கரலிங்கனார்
தென்பாண்டியின் வணிகக்களமான விருதுநகரில் 1895 ஆம் ஆண்டு பெரிய கருப்பசாமி  - வள்ளியம்மை ஆசியோர்க்கு மகனாகப் பிறந்தார். சங்கரலிங்கனார் 1900இல் திருமால் நாடார் ஓலைப்பள்ளிலும், 1901 இல் சுவீடிஷ் மிஷன் ஞானமாணிக்கம் உபதேசியார் பள்ளிலும், 1902 இல் சச்திரிய வித்தியா கல்விச் சாலையிலும் பயின்றார். இவரது கல்வியானது எட்டாம் வகுப்புடன் முடிவடைந்தது. 1908 ஆம் ஆண்டு ஞானாதிநாத நாயனார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்தார். அப்போது பெருந்தலைவர் காமராசர் அதே பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் படித்தார்.
                சங்கரலிங்கனார் இளமையில் நாட்டு விடுதலையில் நாட்டமும், ஈடுபாடும் கொண்டவராக விளங்கினார். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியின் சுதந்திரப் போராட்ட உரையினைக் கேட்டு விடுதலை உணர்வு பெற்றார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் 1908 ஆம் ஆண்டு முதல் தன்னை இணைத்துக் கொண்டார்.
                விருதுநகரில் ‘பங்கஜ விலாச வித்தயாபிவர்த்திச் சங்கம்’ என்னும் அமைப்பை 1914 ஆம் ஆண்டு ஏற்படுத்தி, பெண் கல்வி மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு சுவாமி திருவாலவாயர் செயல்பட்டார். சங்கரலிங்கனார் அச்சங்கத்தின் செயலாளராகத் தொண்டாற்றினார்.
                சங்கரலிங்கனார் செந்தியம்மாள் என்பவரை 1915 ஆம் ஆண்டு வாழ்க்கைத் துணைவியாக ஏற்றார். தன் முதல் மகளுக்கு பங்கசம் என்று பெயர் சூட்டினார்.
                சங்கரலிங்கனார் ‘மாதர் கடமை’ என்னும் நூலை எழுதி 1920 ஆம் ஆண்டு வெளியிட்டார். நூல் வெளியீட்டைத் தொடர்ந்து சங்கரலிங்னாருக்கு மூதறிஞர் இராஜாஜியின் தொடர்பும் நட்பும் ஏற்பட்டது.
                அதே ஆண்டு திருநெல்வேலியில் நடைபெற்ற சென்னை மாகாண அரசியல் மாநாட்டில் கலந்து கொண்டார். அம்மாநாட்டில் இராஜாஜியை சந்தித்தது உரையாடினார்.
                அவரும் அவரது குடும்பத்தினரும் கதரே உடுத்துவதென 1922 ஆம் ஆண்டு முதல் முடிவு செய்தனர். கதர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு ‘விருதுநகர் கதர் வஸ்திராலயம்’ என்னும் கதர்க் கடையைத் திறந்தார். கதர் விற்பனையை அவர் அதிகமாகச் செய்ததைப் பாராட்டி 26.04.1926 இல் சுதேசமித்திரன் இதழ் ஒரு பாராட்டுச் செய்தி வெளியிட்டது. அப்போது சென்னை மாகாணத்தின் கதர் வாரியத் தலைவராக தந்தை பெரியாரும், செயலாளராக எஸ்.இராமநாதனும் தொண்டாற்றினர்! விருதுநகருக்கு தந்தை பெரியாரை 1924 ஆம் ஆண்டு அழைத்து, த.இரத்தினசாமி நாடார் நினைவு வாசக சாலை சார்பாக பொதுக் கூட்டம் நடத்தினார்.
                காந்தியடிகளை 16.02.1925 பம்பாயில் சந்தித்தார். அன்று முதல் நாள்தோறும் நூல் நூற்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ‘மகாத்மா காந்தி கதர் வஸ்திராலயா’ என்னும் கதர்க்கடையில் பணியாற்றினார். 1927 ஆம் ஆண்டு காந்தியடிகள் விருதுநகர் வருகை புரிந்த போது சிறப்பான ஏற்பாடுகளை சங்கரலிங்கனார் செய்தார். காந்திஜி தங்கிய கிராமத்திற்கு நகராட்சியின் ஒப்புதல் பெற்று ‘காந்தி தங்கல்’ என்று பெயர் சூட்டினார். காந்திஜி உப்புச் சத்தியாகிரகத்துக்காக 1930 ஆம் ஆண்டு தண்டியாத்திரை தொடங்கியபோது சங்கரலிங்கனார் மூன்று நாட்கள் காந்தியடிகளுடன் பயணம் மேற்கொண்டார்.
                காந்தியடிகளின் தலைமையில் 1930-31 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டக் காலத்தில், சங்கரலிங்கனார் சென்னை, திருச்செங்கோடு, ஈரோடு, காரைக்குடி ஆகிய நகரங்களுக்குச் சென்று தலைவர்களை சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு திரட்டினார். சங்கரலிங்கனார் கரூர், திருச்சி முகாம்களிலிருந்து சத்தியாக்கிரக இயக்கத்தை நடத்தினார்.
                திருச்சி சத்தியாக்கிரகப் போராட்ட வழக்கில் ஆறு மாத‌ங்கள் கடுங்காவல் தண்டனையும், கரூர் வழக்கில் ஆறு மாதங்கள் கடுங்காவல் தண்டனையும், ரூ.50 அபராதமும் விதிக்கப்பட்டது. திருச்சி மத்திய சிறைச்சாலையில் தண்டனையை அனுபவித்தார்.
                அவருக்குச் சொந்தமான இரண்டு வீடுகளையும், அவர் சேமித்து வைத்திருந்த ரூபாய் நான்காயிரத்தையும் விருதுநகர் சத்திரிய மகளிர் உயர்நிலைப்பள்ளிக்கு 1952 ஆம் ஆண்டு நன்கொடையாகக் கொடுத்தார். அந்தத் தொகையிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையைக் கொண்டு, பள்ளியில் பயிலும் ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவாக உப்பில்லாக் கஞ்சி ஊற்ற வேண்டும் என்ற ஒரு திட்டத்தை ஏற்படுத்தினார். பெருந்தலைவர் காமராசர் பின்னர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டத்திற்கு இது முன்னோடியானதாகும்!
                தியாகி சங்கரலிங்கனார் பழம்பெரும் காங்கிரஸ் தியாகி; நாட்டின் சுதந்தரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். நம் தாய்த் தமிழகத்துக்கு 'மதராஸ்' என்னும் பெயர் இருத்தல் கூடாது; ‘தமிழ்நாடு’ என்று பெயர் வைக்க வேண்டும் என உளமார விரும்பினார். தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கையை முன்னிட்டு 27.07.1956 ல் விருதுநகர் தேசபந்து திடலில் “உயிர் பெரிதன்று – மானமே பெரிது” என்ற இலட்சியப் பிடிப்புடன் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து உண்ணா நோன்பை மேற்கொண்டார்.
12 அம்சக் கோரிக்கைகள்:
1. மொழிவழி மாநிலம் அமைத்தல் வேண்டும்
2. சென்னை இராஜ்ஜியம் என்பதை மாற்றி ‘தமிழ்நாடு’ எனப் பெயரிடுதல் வேண்டும்.
3. இரயிலில் ஒரே வகுப்பில் அனைவரும் பயணம் செய்தல் வேண்டும்.
4. வெளிநாட்டு விருந்தினர்களுக்கு நடனம் முதலான ஆடம்பரங்களை விலக்கி, சைவ உணவு அளித்தல் வேண்டும்.
5. அரசுப் பணியில் உள்ளவர்கள் அனைவரும் கதர் அணிதல் வேண்டும்.
6. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து அரசியல் தலைவர்கள் சாதாரண மக்களைப் போல் வாழ்தல் வேண்டும்.
7. தேர்தல் முறையில் மாறுதல் செய்தல் வேண்டும்.
8. தொழிற் கல்வி அளிக்கப்பட வேண்டும்.
9. இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும்.
10. விவசாயிகளுக்கு 60 விழுக்காடு வரை விளைச்சலில் வாரம் அளித்தல் வேண்டும்.
11. மத்திய அரசு இந்தியை மட்டும் பயன்படுத்தக் கூடாது.
12. பொது இடங்களில் ஆபாசமாக நடந்து கொள்வதைத் தடுத்தல் வேண்டும். 
                உண்ணா நோன்பிருந்த சங்கரலிங்கனாரை அறிஞர் அண்ணா சந்தித்தார். அண்ணாவைக் கண்டவுடன் சங்கரலிங்கனாரின் உள்ளத்தில் புதுத்தெம்பு பிறந்தது. சங்கரலிங்கனார் அறிஞர் அண்ணா அவர்களிடம் மனம் திறந்து சில கருத்துக்களை வெளியிட்டார். “அண்ணா! நீங்களாவது என்னுடைய கோரிக்கைகளையும் தலையாய கோரிக்கையான ‘தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கையை’ நிறைவேற்றுங்கள்”, என்று கேட்டுக் கொண்டார்.
                அறிஞர் அண்ணா, சிலம்புச் செல்வர்.ம.பொ.சிவஞானம், காங்கிரஸ் தலைவர் கக்கன், கம்யூனிஸ்ட் தலைவர் ப.ஜீவானந்தம் போன்ற தலைவர்கள் உண்ணா நோன்பினைக் கைவிடுமாறு சங்கரலிங்கனாரிடம் கேட்டுக் கொண்டார்கள். ஆனால், இலட்சியப்பிடிப்புடன் சங்கரலிங்கனார் உண்ணா நோன்பைக் கைவிட மறுத்துவிட்டார்.
                உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த சங்கரலிங்கனாரின் உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. 10.10.1956 அன்று, காவல் துறையினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவச் சிகிச்சைக்கு சங்கரலிங்கனார் உடன்படவில்லை; 13.10.1956 அன்று சங்கரலிங்கனாரின் இன்னுயிர் உடலை விட்டுப் பிரிந்தது.
                சங்கரலிங்கனார் இறப்பதற்கு இரு தினங்களுக்கு முன் “நான் ஒரு வேளை இறக்க நேரிட்டால், என் உடலைத் தயவு செய்து காங்கிரஸ்காரர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். எனக்கு உறுதுணையாக இருந்த கம்யூனிஸ்டுகளிடம் ஒப்படையுங்கள்” என பத்திரிக்கை நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
                அவர் கூறியது போலவே இரு தினங்களில் இறந்தார். அவர் வேண்டுகோளின்படியே கம்யூனிஸ்ட் தலைவர்கள் கே.பி.ஜானகியம்மாள், கே.டி.கே தங்கமணி ஆகிய இருவரும் கையொப்பமிட்டு அன்னாரின் உடலைப் பெற்றனர்.
                இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள், கம்யூனிஸ்ட்டு கட்சித் தொண்டர்கள், விருதுநகர் நகரசபைத் தலைவர், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்துக் கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டு சங்கரலிங்கனாரின் ‘புகழ் உடலுக்கு’ இறுதி மரியாதை செலுத்தினர்.
                தியாகி சங்கரலிங்கனாரின் மறைவுச் செய்தி மாணவர்களை மீளாத் துயரில் ஆழ்த்தியது. சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் உண்ணா நோன்பு இருந்தனர். 76 நிமிடங்கள் கல்லூரி வளாகத்தில் மௌனம் அனுசரித்து அஞ்சலி செலுத்தினர்.
                சென்னை மாநகர அனைத்துக் கல்லூரி மாணவர்கள் 15.10.1956ல் வேலை நிறுத்தம் செய்து தியாகி சங்கரலிங்கனாருக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
                ஒரு மனிதனுடைய பிறப்பு எவ்வாறு அமைந்தது என்பது முக்கியமல்ல; அவருடைய இறப்பு எவ்வாறு அமைகிறது என்பதே ஒரு மனிதனை அடையாளம் காட்டுகிறது என்பதற்கு ஏற்ப அவருடைய சாவே, தொண்டன் சங்கரலிங்கத்தைத் ‘தியாகி சங்கரலிங்கனார்’ ஆக்கியது. துனிமனித ஒழுக்கமும் கொள்கைப் பிடிப்பும் உடைய எவரும் சாதனை மனிதராகத் திகழ முடியும் என்பதற்கு ஏற்ப அவருடைய சாவே, தொண்டன் சங்கரலிங்கத்தைத் ‘தியாகி சங்கரலிங்கனார்’ ஆக்கியது. தனிமனித ஒழுக்கமும் கொள்கைப் பிடிப்பும் உடைய எவரும் சாதனை மனிதராகத் திகழ முடியும் என்பதற்கு தியாகி சங்கரலிங்கனார் ஒரு சிறந்த எடுத்துக் காட்டாவார்.
                சென்னை மாநில சட்டமன்றத்தில் சென்னை இராஜ்ஜியத்துக்குத் தமிழ்நாடு என்னும் பெயர் மாற்ற மசோதா 24.11.1956 அன்று கொண்டு வரப்பட்டது. மசோதா விவாதத்தின்போது பேசிய நிதியமைச்சர் ஆர்.வெங்கடராமன்,
                “புதிய நாடு (மாநிலம்) அமைப்பது பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்கும்போது விவாதிக்கலாம் என்றும், சென்னை என்ற பெயர் உலகப் பிரசித்தி பெற்றதால், அப்பெயர் நிலைத்திருக்க வேண்டும்” என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுத் தீர்மானம் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் முதல் பாரதி பாடிய கவிதை இலக்கியம் வரை யாவிலும் ‘தமிழ்நாடு’ என்ற சொல் இடம் பெற்றுள்ளது என்பது அன்றைய ஆட்சியாளர்களுக்குத் தெரியவில்லை போலும்.
                ‘தமிழ்நாடு’ – எனப்பெயர் மாற்றுவதற்கு ஆதிக்க சக்திகள் மறுத்தன. அதனைக் கண்டித்து தந்தை பெரியார் விடுதலை இதழில் (10.11.1956) “தமிழ், தமிழ்நாடு என்கிற பெயர் கூட இந்நாட்டுக்கு, சமுதாயத்திற்க இருக்க இடமில்லாதபடி எதிரிகள் சூழ்ச்சி செய்து வெற்றி பெற்று விட்டார்கள் என்கிற நிலைமை ஏற்பட்டு விடுமானால் பிறகு என்னுடைய கழகத்தினுடைய, என்னைப் பின்பற்றும் நண்பர்களுடைய வாழ்வு வேறு எதற்காக இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை……. நமது மொழி எது? என்பதையே மறைத்து விடுவதென்றால், பிறகு தமிழன் எதற்காக உயிர் வாழ வேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை. ஆகவே இக்கேடு, முளையிலேயே கிள்ளியெறியும்படியான முயற்சியில் ஈடுபடும்படி அனைத்து தமிழர்களையும் உண்மையிலேயே வணங்கி வேண்டிக் கொள்கிறேன்”.
                அறிஞர் அண்ணா பாராளுமன்ற உறுப்பினரானபோது, சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்னும் பெயர் மாற்ற மசோதாவை 16.03.1962 நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தார். மத்திய அரசால் இம்மசோதா தள்ளுபடி செய்யப்பட்டது.
                தமிழ்நாடு பெயர் மாற்றச் சிறப்பு மாநாடு 25.12.1960 அன்று சிலம்புச் செல்வர் தலைமையில் கோகலே மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டில் பெயர் மாற்றப் போராட்டத்திற்கு அறிஞர்கள் முழுமையான ஆதரவை நல்கினார். மாணவர்களும், பொது மக்களும் பல்வேறு வகைப் போராட்டங்களில் கலந்துக் கொண்டு ஆயிரக்கணக்கில் சிறை புகுந்தனர்.
                அறிஞர் அண்ணா தமிழகத்தின் முதல்வரான பின்னர் 14.04.1967 தமிழ்ப் புத்தாண்டன்று, சித்திரை முதல் நாளில் சென்னைக் கோட்டை முகப்பிலே “தமிழக அரசு தலைமைச் செயலகம்” என்னும் ஒளிவீசும் தமிழ்ப் பெயர்ப் பலகையைத் திறந்து வைத்தார்.
                தமிழக சட்டமன்றத்தில் 18.07.1968 அன்று சென்னை மாநிலம் தமிழ்நாடு ஆகும் என்ற அரசியல் தீர்மானத்தை அறிஞர் அண்ணா முன் மொழிந்து பேசினார்.
                'இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இந்த மாநிலத்தின் பெயரைத் தமிழ்நாடு என்ற மாற்றியமைக்க வேண்டும் என்று இந்தியப் பேரரசை உறுதியாக கேட்டுக் கொள்வதுடன் அரசியல் சட்டத்தில் தேவையான திருத்தங்களைச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த அவை பரிந்துரை செய்கிறது’ –என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
                அறிஞர் அண்ணா, சட்டமன்றத் தலைவர் சி.பா.ஆதித்தனாரின் ஒப்புதல் பெற்று அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் அண்ணாவின் குரலைத் தொடாந்து “தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க!” என மும்முறை முழங்கினர். அறிஞர் அண்ணா “இத்தீர்மானம் ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பது தமிழர்க்கு – தமிழர் வரலாற்றுக்கு – தமிழ்நாட்டுக்கு -கிடைத்த பெரும் வெற்றியாகும். தமிழ்நாடு பெயர் மாற்றத்துக்காக உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனாருக்கு நினைவுச் சின்னம் எழுப்புவது போல் அவர் எண்ணம் ஈடேறிவிட்டது” என்று கூறினார்.
                நாடாளுமன்றத்தில் சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றுவதற்கான மசோதா 23.11.1968 அன்று நிறைவேறியது.
                சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றும் விழா 01.12.1968 அன்று ‘பாலர் (கலைவாணர்) அரங்கில்’-சிறப்பாக நடைபெற்றது. அதே நாளில் தமிழ்நாடு பெயர் மாற்ற விழா தமிழ்நாடெங்கும் கொண்டாடப்பட்டது.
                சங்கரலிங்கனார் உண்ணா நோன்பின் போது அறிஞர் அண்ணாவிடம் நேரில் கோரியபடி, அறிஞர் அண்ணா தமிழக முதலமைச்சரானவுடன் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் தமிழ்நாட்டுக்குச் சூட்டப்பட்டது.
                ‘தமிழ்நாடு’ – பெயர் மாற்றத்திற்காக, தமிழ் உணர்வுடன் தமிழக அரசு 76 நாட்கள் உண்ணா நோன்பிருந்து இன்னுயிர் ஈந்த தியாகி சங்கரலிங்கனாருக்கு விருதுநகரில் நினைவகம் அமைக்க வேண்டும். இதுவே தமிழக முதல்வருக்கு தமிழ் மக்கள் விடுக்கும் கோரிக்கையாகும்.

பணிகள் முடிந்து தயார் நிலையில் தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபம்
இவருக்கு விருதுநகரில் மணிமண்டபம் அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை கடந்த 2011-இல் சட்டப்பேரவையில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் க.பாண்டியராஜன், வே. பொன்னுப்பாண்டி ஆகியோர் வலியுறுத்தினர்.
அதையேற்று, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உடனே மணிமண்டம் அமைப்பதாக அறிவித்தார். அதையடுத்து, 2012ல் ரூ.76 லட்சம் ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டது.
விருதுநகர் கல்லூரி சாலையில் நகராட்சி பூங்கா அருகே இடம் ஒதுக்கி கட்டட பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த 8 மாதத்திற்கு முன்பு மணிமண்டப பணிகள் அனைத்தும் முடிந்தன. மணிமண்டபம் திறப்புக்கு தயாராக உள்ளது. அதனால், இதனை விரைவில் தொடங்கி வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.
இது குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கூறுகையில், தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டப பணிகள் முடிந்துள்ளன. தற்போது, வண்ண அலங்காரம் விளக்குகள் அமைப்பதற்காக மின்சார இணைப்புக்கான பணிகள் நடந்து வருகிறது. அரசிடம் இருந்து அறிவிப்பு வந்தவுடன் பொதுமக்கள் பார்வைக்காக மணிமண்டபம் திறக்கப்படும் என்றார்.

1 comment:

semmozhiththamizharam said...

சிறந்த பதிவு