Tuesday 21 July 2015

பெருந்தலைவரும்-சிறை வாழ்க்கையும்

இன்றைய அரசியல்வாதிகள் தாங்கள் செய்யும் தவறுக்காக சிறைக்கு செல்ல வேண்டி இருந்தால், ஆஸ்பத்திரியில் போய் படுத்து கொள்கிறார்கள். ஆனால் காமராஜர் நாட்டு நன்மைக்காக குடும்ப பாச உணர்வுகளை விலக்கி வைத்தவர். உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, கர்நாடக மாநிலம் பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார். இதை அறிந்த காமராஜரின் பாட்டி பார்வதியம்மாள் படுத்த படுக்கையாகி விட்டார். காமராஜர் வந்து பார்த்தால் தான் உயிர் பிழைப்பார் என்ற நிலை ஏற்பட்டது. காமராஜரும் பாட்டியின் மேல் அளவு கடந்த அன்பை வைத்திருந்தார்.

இதனால் காமராஜரை பரோலில் கொண்டு வர அவரது அரசியல் குருநாதர் சத்திய மூர்த்தி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. பாட்டியின் உடல் நிலை பற்றி கூறி பரோலில் வெளிவருமாறு அவரை சிறையில் சந்தித்த தாய்மாமா கேட்டுக் கொண்டார். ஆனால் தண்டனை முடியும் வரை சிறையை விட்டு வெளியே வர மாட்டேன் என்று நெஞ்சுரத்துடன் கூறி விட்டார்.

இப்படிபட்ட பெருந்தலைவரை இனி எங்கு காண முடியும்?. தனது வாழ்நாளில் நாட்டு விடுதலைக்காகவும், மக்களுக்காகவும் போராடி வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஏறத்தாழ 8½ ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்து இருக்கிறார். அப்போது சிறைக் கொடுமைகளை அவரே சொல்லியிருக்கிறார். சிறையில் வெப்பத்தின் கொடுமை தாங்காமல் நாளெல்லாம் தண்ணீர் தொட்டியில் நின்றதை அவர் குறிப்பிடும்போது நமது கண்கள் குளமாகிவிடுகின்றன. இதேபோல் ஒரு பெருந்தலைவர் இனி பிறப்பாரா?.

பெருந்தலைவரின் வாழ்க்கை வரலாற்றை படிக்க வேண்டும் என்றால் வாழ்நாள் முழுவதும் போதாது. இது தான் பெருந்தலைவர் பிறப்பின் பெருமை. எளிமை, நியாயம், நேர்மை, வீரம், விவேகம் என்று அவரது குணநலன்களை அடுக்கி கொண்டே செல்லலாம். எல்லாவற்றுக்கும் மேலாக தன்னலம் அற்றவர். இத்தனை நற்குணங்களை கொண்ட பெருந்தலைவர் படித்தது 6–வது வகுப்பு மட்டுமே. ஆனால் அவரை பற்றி இன்று உலகமே படித்து கொண்டு இருக்கிறது.

No comments: