Tuesday 23 September 2014

நம் மண்ணின் தெய்வங்கள்


நம் மண்ணின் தெய்வங்கள் 
**********************************
பொதுவாக ஆரியர்களின் தெய்வங்களை தவிர்த்து மற்ற அனைத்தையும் சிறு தெய்வங்கள் என்று குறிப்பிடுகின்றார்கள். தமிழில் செய்யப்படுகின்ற பூஜைகளும், தமிழரின் பண்பாட்டை உணர்த்தும் சடங்களும் இதில் மிகச்சிறப்பு.

சிறு தெய்வங்கள் குடும்ப தெய்வம், குலதெய்வம், ஊர் தெய்வம் என்று மூவகையினதாகக் காணப்படுகின்றன.

குடும்ப தெய்வம்
**********************
குடும்ப தெய்வம் என்பது ஒரு குறிப்பிட்ட குடும்பத்திற்குரிய தெய்வம் ஆகும். இது பெரும்பாலும் குடும்பத்தில் கன்னிப் பெண்ணாக இறந்து போனவர்களே தெய்வமாகப் போற்றி வணங்கப்படுகின்றனர். குடும்பத்தின் நன்மைக்காக தற்கொலை செய்தோ, கொலை செய்யப்பட்டோ இறந்து போனவர்களை நினைவில் வைத்துக் கொள்ள இந்த குடும்ப தெய்வ முறை காணப்படுகின்றது.

தெய்வமாக மாறியவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளையோ செய்தோ, பொங்கல் வைத்தோ குடும்ப தெய்வத்திற்கு பூஜை செய்யப்படுகிறது. குடும்பத்தின் தலைவரே பூஜையை செய்கிறார். வீட்டில் நடக்கின்ற நல்ல காரியங்களுக்கு குடும்ப தெய்வத்திடம் அனுமதி வாங்கிய பின்னரே செயலில் ஈடுபடுகின்றனர். சில வசதி படைத்தவர்கள் சாமி வீடு என சிறு குடிசையை கட்டி அதிலும் இந்த தெய்வத்தை வைத்து வணங்குகின்றனர்.

குடும்பத்தில் யாராவது நோய்வாய்ப்பட்டாலோ, வீட்டில் சண்டை சச்சரவு போன்ற குழப்பங்கள் அடிக்கடி நிகழ்ந்தாலோ குடும்ப தெய்வத்திற்குப் பூசை செய்வர். மந்திர தந்திரங்கள் இல்லாது, முழு நம்பிக்கையுடன் மட்டுமே பூஜை நிகழ்த்தப்படுகிறது. வருடத்திற்கு ஒரு முறை குடும்பத்தில் இருக்கும் எல்லோரும் சேர்ந்து பொங்கல் வைத்து பூஜை செய்கின்றனர்.

குலதெய்வம்
*******************
குலதெய்வம் என்பது ஒரு குலத்தினரால் வழிபடப்படும் தெய்வம் ஆகும். தங்களுடைய குலம் தழைப்பதற்காக உதவியவர்களையும், குலம் காப்பதற்காக உயிர்த்தியாகம் செய்தவர்களையும் குலதெய்வங்களாக வணங்குகின்றார்கள். பல்வேறு சாதிகளுக்கு பொதுவான குலதெய்வங்கள் காணப்படுகின்றன. கருப்பு, ஐயனார், மதுரை வீரன், பெரியசாமி போன்ற தெய்வங்களை பல்வேறு சாதியை சார்ந்த மக்கள் குலதெய்வங்களாக வழிபடுகின்றனர்.

திருவிழா நாட்களிலும், குல தெய்வ சிறப்பு பூஜைகளும் ஒன்றாக இணைந்து செயல்படுகின்றார்கள். இவர்களுக்கு கோவில் பங்காளிகள் என்று சிறப்பு பெயர் கிராமத்தி்ல் நிலவுகிறது. குலதெய்வங்கள் தான் தம்மைக் காப்பதாக ஒவ்வொரு குலத்தவரும் நம்புகின்றனர்.

அவர்தம் குடும்பத்தில் நடைபெறும் பிறந்த நாள் விழா, காதணி விழா, பூப்புனித நீராட்டு விழா, திருமண விழா போன்ற விசேச நாட்களில் குலதெய்வத்திற்கு முதல் அழைப்பிதல் வைக்கும் பழக்கம் இருக்கிறது. திருமண நிச்சயம் குலதெய்வத்தின் முன்பு நடக்கும் வழக்கமும் சில இடங்களில் இருக்கிறது. வருடத்திற்கு ஒரு முறை சுற்றமும், கோவில் பங்காளிகளும் ஒன்றாக இணைந்து ஆட்டு கெட வெட்டி பொங்கல் வைத்து விழாவை போல சிறப்பாக வழிபாடு செய்கின்றார்கள்.

“குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறவாதே…”

“குலதெய்வத்தைக் கும்பிட்டு கும்மியடி…”

என்ற முதுமொழிகள் குலதெய்வ வழிபாட்டின் சிறப்புகளைக் குறிப்பிடுகின்றன.

ஊர் தெய்வம்
******************
மூன்றாவதாக ஊர் தெய்வம் என்பது அந்த ஊரில் வாழும் மக்கள் அனைவராலும் வணங்கப்படும் பொது தெய்வமாகும். ஊர் மக்களின் நன்மைக்காக உயிர்த்தியாகம் செய்த மனிதர்களின் நினைவாக எழுந்ததே இந்த வழிபாடு. சில ஊர்களில் பெரும்பான்மையோராக வாழும் இனத்தவரின் குலதெய்வமே ஊர்த்தெய்வமாக விளங்குதலும் உண்டு. சிற்ப்பு பூஜை முறைகளுடன், ஊர் நியமித்த பூசாரியே பூஜை செய்கின்றார்.

கோடாங்கி ஒரு வகையில் பூசாரி என்பர்.ஒரு தெய்வ ஆகர்ஷனம் உடையவர் என்பர். குறி சொல்லுதல் அவர்களது இயல்பு. அவர்கள் கையில் உடுக்கு(கோடாங்கி) இருக்கும்.

பெண் தெய்வ வழிபாடு
*****************************
சிறு தெய்வ வழிபாட்டில் பெண் தெய்வ வழிபாடே மிகுதியாகக் காணப்படுகின்றது. பண்டைத் தமிழரிடையேயும் கொற்றவை, காளி, இசக்கி என்ற பெண் தெய்வ வழிபாடுகள் காணப்படுகின்றன. பாலை நிலத் தெய்வமாகவும் வெற்றி தரும் தெய்வமாகவும் கொற்றவை குறிக்கப்படுவதனைச் சங்க இலக்கியங்களில் காண முடிகிறது. போர்களத்தில் பிணங்களைத் தின்னும் பேய்கணங்களின் தலைவியாகக் காளி குறிக்கப்படுகின்றாள்.

தொடக்கம்
***************
சிறு தெய்வங்கள் மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவு செய்வனவாக பாதுகாவல் தருவனவாக மக்களால் பெரிதும் நம்பப்பட்டு வருகின்றன. சிறு தெய்வங்களில் கருப்பசாமி, சுடலைமாடன், பெரியசாமி போன்ற ஆண் தெய்வங்களும் மக்களால் வணங்கப்படுகின்றன.

நாட்டுப்புற மக்கள் சிறு தெய்வங்களை மட்டுமின்றி பெருந்தெய்வங்களையும் வழிபடுகின்றனர். ஆயினும் நாட்டுப்புற மக்களிடையே சிறு தெய்வங்களே ஒன்றிக் காணப்படும் சக்தியாக விளங்குகிறது. மக்கள் தாம் வழிபடும் சிறு தெய்வங்களின் தெய்வ நிலைக்குட்பட்ட பூசாரி, அருள் வந்தோரின் குறி கூறுவதன் மூலமாக தங்கள் வாழ்க்கைச் சிக்கல்கள், தமது விருப்பங்கள் நிறைவேறும் நிலை.

நிறைவேற்றப்பட வேண்டிய வேண்டுதல்கள் ஆகியவற்றை அறிந்து கொள்வதால் சிறு தெய்வங்கள் மீது மிகுந்த பற்றுடையவர்களாகின்றனர். தென் மாவட்டங்களில் சிறு தெய்வங்களில் பெண் தெய்வ வழிபாடுகளாக முத்தாரம்மன், மாரியம்மன், இசக்கியம்மன் வழிபாடுகள் காணப்படுகின்றன. சிறுதெய்வங்கள் ஊர் மக்களைக் காக்க இரவு வலம் வருவதாகவும், அதற்கான பிரத்தியோக வாகனமாக குதிரை இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இது மதம் சம்பந்தப்பட்டது அல்ல!! இது ஒரு விழிப்புணர்வு முயற்சியே!!

No comments: