Friday 6 February 2015

பெருந்தலைவர்-பிச்சை எடுத்தாவது பகலுணவு போடுவேன் (பகுதி-1)

இது கொஞ்சம் சுவாரஸ்யம் இல்லாத நெடும் பதிவுதான். ஆனால் பெருந்தலைவரை பற்றி சிலர் போடும் அவதூறு பதிவுகளை பார்க்கும் போது இந்த பதிவு அவசியம் என படுகிறது. மாணவர்களை பள்ளிக்கு இழுத்து கல்வி அறிவை நாடு முழுக்க பரவ விட எங்கள் குலக்கொழுந்து பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. இன்று இலவசங்களை அள்ளித்தெளிக்க கடன் வாங்குவது போலோ, மத்திய அரசு நிதி உதவி பெற மத்திய அரசின் நிதி நிலைமையோஅவ்வளவு எளிதாக இல்லை அந்த காலத்தில். ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு அந்த கர்ம வீரர் பட்ட பாடுகள் கொடுமையானவை என்பதை இப்பதிவு விளக்கும்.



குறிப்பு: இதில் சொல்லப் பட்டுள்ள தகவல்கள் முன்னாள் பொதுக் கல்வி இயக்குனராகப் பணிபுரிந்த டாக்டர் நெ.து சுந்தரவடிவேலு அவர்களின் "நினைவலைகள்" என்ற நூலின் அடிப்படையில் அமைந்தது.இந்த நூலைப் படிக்கப் படிக்க பிரமிப்பு ஏற்பட்டது. பள்ளியில் இவரது கட்டுரையை பாடமாக படித்த நினவு இருக்கிறது என்றாலும் இந்த நூலைப் படிக்கும்போது அவர்  மீது தனி மரியாதை உண்டானது. கல்வித் துறைக்கும் மாணவர்க்கும் ஆசிரியர்களுக்கும் சுயநலமின்றி எப்பேர்ப்பட்ட காரியங்கள் எல்லாம் சாதித்திருக்கிறார் என்பதை அறியும்போது வியப்பு ஏற்பட்டது. இவரைப் பற்றி ஒரு தனி கட்டுரை எழுத வேண்டும் எனது விருப்பம். இவரது நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

  1957 இல்அப்போதைய கல்வி நிலையை ஆராயவும் தொடக்கக் கல்வியை மேம்படுத்தவும் உருவாக்கப் பட்டது தொடக்கக் கல்விக் குழு . தொடக்கக் கல்வியை  அரசுடையமாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியது இக் குழு.   இதன் உறுப்பினர்களில் ஒருவரான அப்போதைய பொதுக் கல்வி இயக்குனர் நெ.து சுந்தர வடிவேலு அவர்கள் இதை ஏற்கவில்லை. எனினும் இது தனியார் பள்ளி நடத்துபவர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியது. தங்களை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கத்தில் தனியார் பள்ளி நிர்வாகிகள் அனைவரும் இனைந்து ஒரு  மாநாடு நடத்தினர் . அந்த மாநாட்டை தொடங்கி வைக்க முதலமைச்சர் காமராசர் அழைக்கப் பட்டார். 

அவ்விழா மேடையில் அமர்ந்திருந்தபோது நெ.து.சுந்தரவடிவேலு விடம்  பேச்சுக் கொடுத்தார்  காமராசர்.
அப்போது மாநகராட்சிப் பள்ளிகளில் மதிய உணவு  போடப்பட்டு வந்தது. அதை மனதில் கொண்டு கல்வி இயக்குனர்  நெ.து அவர்களிடம், "முன்பு நீங்கள் சென்னை மாநராட்சியில் பணியாற்றிய போது மதிய உணவு போட்டார்களே அதனால் பலன் இருந்ததா?" என்று கேட்டார்
"பள்ளிகளில் மதிய உணவுபோட்டதால் மாணவர் வருகை அதிகரித்தது ஐயா!" பதில் அளித்தார் நெ.து.சு 
"எப்படி சொல்கிறீர்கள்"
திங்கள் முதல் வெள்ளி வரை மதிய உணவு போடுகிறார்கள். சனிக்கிழமை அரை நாள் என்பதால் உணவு போடுவதில்லை அன்றைக்கு வருகை பாதிக்கும் குறைந்து விடும்"

"செலவு எவ்வளவு ஆனது?"

"சாப்பாடு ஒன்றுக்கு ஒன்றை அணா செலவானது"

"இது சரியான கணக்குதானா. ஒன்றரை அணா என்பதற்கு அடிப்படை உண்டா? எப்படி சரிபார்த்தீர்கள்" என்றார் சிக்கனத்துக்குப் பெயர்போன காமராசர்."

இதை எதிர்பார்த்திருந்த நெ.து.சு.அவர்கள் "சென்ற சில ஆண்டுகளாக படி அரிசி பத்தணா விற்கிறது ஒரு படி அரிசி சமைத்தால் அந்த வயதுப் பிள்ளைகள் பத்து பேர் வயிராற உண்ணலாம் .ஒருவருக்கு செலவு 1 அணா இதர பொருட்களுக்கு  அரையணா செலவாகும். இது சரிதானா என்பதை இராமகிருஷ்ணா லஞ்ச் ஹோம் முதலாளியும் அபோது மாநகராட்சி உறுப்பினருமான ராமநாத ஐயரிடம் விசாரித்து உறுதி செய்து கொண்டேன்" என்றார்.

அரசு பணம்தானே என்று நினைக்காமல் எவ்வளவு யோசித்து செயல் பட்டிருக்கிறார்கள் அதிகாரிகள்!

மேலும் கேள்விகள் எழுப்பிக் கொண்டிருந்தார் கர்ம வீரர் "மாநகராட்சியில் எத்தனை பேருக்கு மதிய உணவு போட்டீர்கள்?. மாகாணம் முழுவதும் போட்டால் எத்தனை பேருக்கு தேவைப்படும் "
"சென்னையில் 15 சதவீதம் பேருக்குத்தான் போட முடிந்தது. இருபது விழுக்காடாக அதிகரித்தால் ஏழை மாணவர்களுக்கு சோறுபோட முடியும் என்று தெரிவித்தார்"

உடனே காமராஜர் " நகரத்தில் 30 விழுக்காடு என்றால் கிராமத்தில் இதைவிட அதிகமாக இருக்குமல்லவா? மூன்றில் ஒரு பங்கு இருந்தால்தால் நிறைவாக இருக்கும், அப்படி எனில் எத்தனை நாளைக்கு போட வேண்டி இருக்கும்" 
  அவரது சிந்தனை எப்படியாவது இத்திட்டத்தை செயல் படுத்திவிட வேண்டும் என்ற நிலையில் பயணித்தது. அதற்காக உடனே மனதில் நினைத்ததை ஆணையாக்கி விடவில்லை . அதில் உள்ள நன்மை தீமைகளை ஆராய்ந்து உறுதிப் படுத்திக் கொண்ட பின்னதான் செயல்படவேண்டும் எண்ணம் உடையவராக இருந்தார் .அதனால் தன் ஐயங்களை தெளிவு படுத்தும் வண்ணம் நெ.து.சு அவர்களை கேள்வி மேல் கேள்விகளாக கேட்டுக் கொண்டிருந்தார்

நெ.து.சு "ஐயா! ஆண்டுக்கு 210 நாட்களுக்கு போட வேண்டும். தொடக்கப் பள்ளிகளில் பதினாறு இலட்சம் பேர் படிக்கிறார்கள். அவர்களில் ஐந்து இலட்சம் பேர்களுக்கு உணவு கொடுக்க குறைந்த பட்சம் ஒரு கோடி செலவாகும் " என்று அப்போதே கணக்கிட்டு சொன்னார் இயக்குனர். இன்னும் சில ஆண்டுகளில் அந்த செலவு இரண்டு மூண்டு மடங்காக உயர்ந்து விடும் என்பதையும் குறிப்பிடத் தவறவில்லை.
இதை மனதில் இருத்திக் கொண்ட காமராசர் மாநாட்டில் பேசினார். தொடக்கக் கல்வி நாட்டுடைமை ஆக்கப் பட மாட்டாது என்ற உறுதி அளித்துவிட்டு தொண்டு மனப்பான்மையுடன் கல்வியை வளர்க்க கேட்டுக் கொண்டு தொடர்ந்தார்
  "நமது உடனடி வேலை ஒவ்வொரு ஊரிலும் தொடக்கப் பள்ளிதொடங்குதலே ஆகும். ஆனால் பள்ளி இருக்கிற ஊர்களில் கூட எல்லாக் குழந்தைகளும் பள்ளிக்கு போவது இல்லை. ஏழைப் பையன்களுக்கும் பெண்களும் வயிற்றுப்பாடு பெரும்பாடாக இருக்கிறது. ஒருவேளை கஞ்சி கிடைத்தாலும் போதுமென்று ஆடு மாடு மேய்க்கப் போய் தங்கள் எதிர்காலத்தைப் பாழாக்கிக் கொள்கிறார்கள் அப்படிப் பட்டவர்களை பள்ளிக்கூடங்களுக்கு வரும்படி செய்வது முக்கியம்
"அதற்கு ஏற்ற வழி மாநகராட்சிப் பள்ளிகளில் போடுவது போல மதியம் பள்ளிகளிலேயே உணவு போடுவதே அதற்கு எவ்வளவு செலவாகும் என்று இப்போது இயக்குனருடன் கணக்கு போட்டுப் பார்த்தேன். தொடக்கத்தில் ஒரு கோடி இன்னும் சில ஆண்டுகளில் செலவு  பல மடங்காகிவிடும். பரவாயில்லை. நம் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு இது பெரிய பணம் அல்ல . தேவைப்பட்டால் அதற்காக தனிவரிகூடப் போடலாம் . இருக்கிற வரியிலோ புது வரியிலோ படிப்பவர்களுக்கு இலவச உணவு கிடைக்க ஏற்பாடு செய்வோம்.இதற்கு எல்லோரும் ஒத்துழைக்கும்படி விடுகிறேன்." என்ற காமராசர் இயக்குனர் பக்கம் திரும்பி இதற்கான திட்டம் ஒன்றை உடனடியாக தீட்டிக்கொண்டு வந்து என்னிடம் சொல்லுங்கள் என்று கட்டளையிட்டார்.

 கல்விக்காக செலவிடுவதையும் வரி போடுவதையும் அனைவருக்கும் கல்வி என்பதை பலரும் விரும்பவில்லை.சென்னையில் இருந்து வெளியான ஆங்கில நாளிதழ் இதை குறை கூறி  தலையங்கம் எழுதியதாம்.

அப்படி என்ன எழுதியது"

                                                  (  நாளையும்   தொடரும்)

No comments: