Sunday 1 February 2015

பெருந்தலைவர்-பெருந்தன்மை

1952 ஆம் ஆண்டின் சென்னை மாகாண அரசின் வருமானம் 45 கோடி ரூபாய் மட்டும் தான். திரு.சி.சுப்பிரமணியம் அன்றைய நிதியமைச்சராக இருந்தார். அவர் அந்த ஆண்டில் தாக்கல் செய்த பட்ஜெட் தொகை ரூ.99 கோடி. அப்போதைய சென்னை ராஜ்ஜியத்தில் மலை நாட்டு நீர்வளம் இருந்தும் ஆங்கிலேய அரசு நாட்டின் மின் உற்பத்தியில் அக்கறை காட்டவில்லை. 

பைகாரா, பாபநாசம் என்ற இரண்டு நீர்வழி மின்னுற்பத்தி நிலையங்கள் மட்டுமே செயல்பட்டு வந்தன. அந்நிலையில் நீலகிரி மலை மீது திட்டமிட்ட குந்தா மின் திட்டம் நிறைவேற்றப்படுமானால் நாட்டின் மின் பற்றாக்குறை நீங்கும் என அரசின் மின்பொறி வல்லுநர்கள் திட்டம் தந்தனர். 

அதற்கு தேவையான தொகையோ முப்பது கோடி ரூபாய். ஆனாலும் நிதியமைச்சர் மலைக்கவில்லை. முதல்வர் ராஜாஜியின் அனுமதியோடு அன்றைய நடுவண் அரசின் நிதியமைச்சர் திரு.சி.டி. தேஷ்முக்கின் உதவியை நாடினார். சி.டி.தேஷ்முக்கின் முயற்சிக்கு கனடா நாடு நேசக்கரம் நீட்டியது. சுமார் மூன்று மில்லியன் டாலர்கள் தர முன் வந்தது. 




குந்தா திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு சேவைகள் தொடங்கி விட்டன. அதே நேரம் நாட்டில் அரசியல் நிகழ்ச்சிகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. சென்னை மாகாண முதல்வராக இருந்த ராஜாஜி பதவி விலக காமராசர் முதல்வரானார். முத்திய அமைச்சரவையின் பொறுப்பில் இருந்த தேஷ்முக் பதவி விலகி விட்டார். 

அந்த சூழலில் குந்தா திட்டம் வளர்ந்து முற்றுப்பெற்று விட்டது. இப்போது அதை யார் திறந்து வைப்பதுப என்ற கேள்வி எழுந்தது. நாட்டின் முதல்வர் காமராசர். திட்டத்துக்கு உதவியவர் எந்த பதவியிலும் இல்லாத தேஷ்முக். வேறு யாராக இருந்தாலும் அந்த பெருமை பதவியில் இருக்கும் தனக்கே கிடைக்க வேண்டும் என்று விரும்புவார்கள். 

ஆனால் காமராசரோ தேஷ்முக் பதவியில் இல்லாவிட்டாலும் அவரே திறக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். சம்மதிக்க மறுத்த தேஷ் முக்கையும், சி.எஸ்.மூலம் சம்மதிக்க வைத்து பின் 1956ஆம் ஆண்டு அவரே திறந்தார். இப்படி தகுதியுடையோர்களுக்கே முதல் மரியாதை கிடைக்க வேண்டும் என்பதை மதித்து பின்பற்றும் உயர்ந்த குணமுடையவர் காமராசர்.

No comments: