Tuesday 10 February 2015

தமிழர் தேசம் - அச்சம் தவிர்

தமிழர்களின் முக்கிய நூலாக உள்ள புறநானூறு என்பது பெறும் படைப்பல்ல. நம்மவரின் வீர வாழ்வின் சுவடுகள். இதில் ஆண் பெண் என்ற வேறுபாடுகள் இல்லை. “நடந்த போரில் புறமுதுகிட்டு இறந்து விட்டான் என்ற செய்தியைக் கேட்ட தாய் தன்னுடைய பால் கொடுத்த மார்பை அறுக்கத் துணிந்தாள்.” “நேற்றைய போரில் தந்தை இறந்தார். இன்றைய போரில் யானையை நேருக்கு நேர் நின்று வென்றிட முயற்சிக்கும் போது கணவன் இறந்தான். நாளை நடக்கும் போருக்காக மகனை அலங்கரிக்கும் தாய்"



“பெரிய நகரத்தை பரிசாகக் கொடுக்க முன்வருபவர் மன்னராக இருந்தாலும் அவர் தன்னம்பிக்கை இல்லாத ஆணாக இருந்தால் தம் பெண்ணுக்கு மனம் செய்விக்கத் தந்தை மறுப்பார்” மேலே சொன்னது சில உதாரணங்கள் மட்டுமே. வீர வாழ்வியல் பெற்ற தமிழினம் இன்று வீரம் என்ற வார்த்தையைச் சொறிந்து கொள்ள உதவுவதாக மாற்றிக்கொண்டதை என்னவென்று சொல்வீர்கள்? ஆமாம். கடமையுடன் கூடிய தன்னம்பிக்கை, போர்க்குணம் என்பது அழிப்பதற்கு அல்ல. ஆளுமையை நிலைநாட்ட. காதல், வாழ்க்கை என்ற பாகுபாடு இல்லாமல் என்றும் நீக்கமற நிறைந்திருந்த வீரஞ்செறிந்த வாழ்க்கையிது,



கால மாற்றத்திலும் தமிழர்களிடமிருந்த போர்க்குணம், வீரம் மெதுவாக மறையத் தொடங்கியது. போர்க்குணமின்றிக் கோழை சமூகமாக வாழ்ந்து வந்த காரணத்தால் வந்த படையெடுப்பாளர்கள் அத்தனை பேரும் மிக எளிதில் நம்மை அவர்களின் ஆளுமைக்குள் கொண்டு வந்தனர். 16 ஆம் நூற்றாண்டுக்கு பின்னால் இந்தியாவிற்குள் வந்த ஆங்கிலேயர்கள் கூடத் தொடக்கத்தில் சீக்கியர்கள் வாழ்ந்த பகுதிகளில் உள்ள இடங்களை எளிதாக கைப்பற்ற முடியவில்லை. ஒவ்வொரு இடங்களிலும் அதிகமான போராட்டம், உயிர் இழப்புக்குப் பின்னால் தான் அந்தந்த பகுதிகளைக் கைப்பற்ற முடிந்தது. ஆனால் தமிழர்கள் வாழ்ந்த பகுதியில் எந்த சிரமும் இன்றி இங்குள்ள மொத்த பகுதிகளையும் கைப்பற்றினர்.




பின்வரும் கணக்குகளை வைத்து பார்க்கும் போது உலக இனத்திலேயே இத்தனை ஆண்டுக் காலம் இத்தனை பேர்களுக்கு அடிமையாய் வேறு எவரும் வாழ்ந்து இருக்க முடியுமா? என்று ஆச்சரியமாய் உள்ளது. 
களப்பிரர் (கிபி 200 முதல் 500),
 பல்லவர் (கிபி 500 முதல் 800),
 மராட்டியர், தெலுங்கு நாயக்கர் (கிபி 1200 முதல் 1600)
 போர்ச்சுகீசியர், பிரஞ்சுகாரர்கள், ஆங்கிலேயர்கள் போன்றவர்களின் கீழ் 1947 வரைக்கும்.



 2000 ஆண்டுகள் அடிமை தமிழனாகவே வாழ்ந்த வாழ்வியலின் எச்சமும் சொச்சமுமாக இன்று நாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். இன்று வரையிலும் தமிழனுக்கு மற்றவர்களுக்கு அடிமையாய் இருப்பதில் ஒரு சுகம். அடிமையாக மாற விரும்பாதவர்களையும் மாற்றி விடுவதில் நம்மவர்கள் மிகுந்த அக்கறை உள்ளவர்கள். காரணம் அதற்கு “சமூகப் பாதுகாப்பு” என்ற வசதியான குறீயீட்டுப் பெயரும் உண்டு. கிழக்கிந்திய கம்பெனி நிறுவனத்தில் கேயன் (1650.1700) என்பவர் கவர்னராக இருந்தார். இவரே முதன் முதலாகத் தமிழக வரலாற்றில் கிழக்கிந்திய தீவுகளுக்கு கரும்பு, ரப்பர், இலவங்கத் தோட்டம் அமைக்கத் தமிழர்களைக் கொண்டு சென்றவர்.



 ஆமாம் அழைத்துச் செல்லவில்லை. ஆடு, மாடுகளைப் போலக் கொண்டு சென்றார். வெள்ளையர்களுக்குச் செல்வங்களை வாரி வழங்கிய பீஜீத்தீவின் கரும்புத் தோட்டங்களிலும், தென் ஆப்ரிக்காவின் வைரச் சுரங்களிலும், இலங்கையின் தேயிலை தோட்டங்களிலும், மலேசியாவின் ரப்பர் தோட்டங்களிலும் கூலியாகக் கொண்டு போய் நிரப்பினார். ஆனால் தமிழனின் தொடக்க வாழ்வியலில் தமிழன் என்பவன் கூலி என்ற இழி நிலையில் வாழ்ந்ததாகச் சான்று ஏதும் இல்லை.




ஆளுமைப்பண்புடன் கூடிய வீரம். அத்தனையிலும் சிறப்பு. இது தான் தொடக்கத் தமிழன். ஆனால் இன்று? 2000 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த தமிழனத்தின் பண்புகள் என்பது அறிவு, ஒழுக்கம், அஞ்சாமை, உதவும் மனப்பான்மை இவற்றுடன் தன்னம்பிக்கை இப்படித்தான் ஒவ்வொரு தமிழனும் வாழ்ந்தான். பல சான்றுகள்உள்ளது. தமிழன் அடிமைப்படாத மூவேந்தர் அரசாண்ட காலத்தில் போராட்டக்குணம் அதிகமாக இருந்தது. எந்த நிலையிலும் கீழ்நிலையில் வாழ வேண்டிய அவசியம் இல்லாமல் தான் வாழ்ந்தார்கள்.



 வடநாட்டில் ஆட்சி புரிந்து கொண்டிருந்த மன்னர்களான கனக, விசயர் என்பவர்கள், இங்குள்ள தமிழ் மன்னர்களான மூவேந்தர்களை அங்கு நடந்த ஒரு விழாவில் மிக இழிவாகப் பேசிய செய்தி மூவேந்தர்களை வந்தடைந்தது. மூவேந்தர்களின் சார்பாகச் சேரன் செங்குட்டுவன் படையெடுத்துச் சென்று, வென்று, இமயத்தில் கல்லெடுத்து, கங்கையில் குளிப்பாட்டி, அதில் கண்ணகிக்கு சிலை எடுக்க அந்த மன்னர்களின் தலையில் சுமக்க வைத்து அழைத்து வந்தான்.



ஆனால் காலம் மாற மாற வானம் பொய்யா நிலம் போலத் தமிழர்களின் வாழ்க்கையும் நிர்கதிக்கு உள்ளானது. தொடர்ந்து வந்த படையெடுப்புகளும், கலப்பினமும், மாறிய கொள்கைகளும், செய்யாத முன்னேற்பாடுகளும், ஒவ்வொரு சமயத்தில் உருவான குழப்பான சூழ்நிலையையும், தமிழ்ர்களின் வாழ்க்கை நிலையை மாற்றியது. வாழ்வியல் தடங்களையும் மாற்றியது. இயற்கை மற்றும் செயற்கையில் உருவாக்கப்பட்ட பஞ்சத்தால் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வறுமை எட்டிப்பார்க்க அதுவே தமிழனை தன்னம்பிக்கை இழக்க வைத்தது. இதுவே இனி நாம் பிழைத்தால் போதும் என்று இருக்கும் இடங்களை விட்டு பல்வேறு நாடுகளுக்கு பயணப்பட வைத்தது.

கரு மூலம்: தமிழர் தேசம்
ஆசிரியர்: ஜோதிஜி

No comments: