Thursday 12 February 2015

பாரம்பரிய நெல் வகைளும் -அதன் சிறப்புகளும்

ஆயிரமாயிரம்  புதிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்து  கொண்டிருந்தாலும், இயற்கையை அவற்றால் வெல்ல முடியாது என்பதற்கு தற்போது புழக்கத்தில் உள்ள ஒட்டு நெல் இரகங்களை உதாரணமாகக் கூறலாம்.  பெரும்பாலான ஒட்டு ரக நெல் வகைகள்  நமது மண்ணுக்கும், சூழலுக்கும் ஏற்றதாக இல்லை. “குறைந்த நாட்களில் அதிக விளைச்சல்” என்ற  நோக்கத்தில் கொண்டுவரப்பட்டவைதான் இந்த குட்டை ரக நெல்கள். ஆனால் பாரம்பரிய நெல் ரகங்கள், மாட்டுக்கு வைக்கோல், மண்ணுக்குத் தழைச்சத்து, விவசாயிக்கு நெல் ஆகிவற்றை  உள்ளடக்கியதாக இருந்தன.


மேலும், மண்வளம், பூச்சி வளம், நீர் வளம், நம் உடல் வளம் ஆகியவற்றை காக்கும் வலிமையுடையது. சுமார் 160  பாரம்பரிய நெல் ரகங்கள்  அனைத்தும் பசுமைப் புரட்சியால் மறக்கடிக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டன. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளும், தொண்டு நிறுவனங்களும் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வாரின் வழிகாட்டுதலுடன்  பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில்,  புதுக்கோட்டை மாவட்ட இயற்கை விவசாயிகளால் 24 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.

புதுக்கோட்டையில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியிலும் திரட்சியாக விளைந் துள்ள பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றான கருடன் சம்பா சனிக்கிழமை அறுவடை செய்யப்பட்டது. இது ஏக்கருக்கு 3,150 கிலோ விளைச்சலை தந்து விவசாயிகளை வியப்பில் ஆழ்த்தியது.
நபார்டு வங்கியின் புதுமைப் பண்ணைத் திட்டத்தின்கீழ் புதுக் கோட்டை ரோஸ் தொண்டு நிறுவனத்தினர் விவசாயிகள் மூலம் உடல் மற்றும் சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத, நோய் எதிர்ப்புசக்தி மிகுந்த, அதேசமயம் அரிதாகிக் கொண்டிருக்கும் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு வருகின்றனர்.




தங்கச்சம்பா, சொர்ண முசிறி…
இத்திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் மாப்பிள்ளைச் சம்பா, கருடன் சம்பா, பனங்காட்டு குடவாழை, பூங்கார், சிவப்புக் கவுணி, கருங் குறுவை, கருத்தக் கார், சண்டி கார், குறுவைக் களஞ்சியம், தங்கச்சம்பா, தூயமல்லி, இலுப்பைப்பூ சம்பா, மிளகி, மஞ்சள் பொன்னி, கைவிரைச் சம்பா, செம்புளிச் சம்பா, கிச்சடி சம்பா, சொர்ண முசிறி, கருப்புக் கவுணி, அறுபதாம் குறுவை, சம்பா மோசனம், கந்தசாளா, சீரகச் சம்பா, காட்டுயானம், சிவப்புக் குருவிக்கார் உள்ளிட்ட நெல் ரகங்கள் பயிரிடப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை மாவட்டம் மருதாந்தளையில் இயற்கை விவசாயி கணேசன் கடந்த 2013 ஆண்டு செப்.16-ம் தேதி சாகுபடி மேற்கொண்ட கருடன் சம்பா நெல் கடந்த 2014ம் ஆண்டு பிப்.8-ம் தேதி சனிக்கிழமை அறுவடை செய்யப்பட்டது.


வியப்பு ஏற்படுத்திய விளைச்சல்
“கருடன் சம்பா சாகுபடி செய்த கணேசனின் வயலில் ஏக்கருக்கு 3,150 கிலோ நெல்லும், 6,300 கிலோ வைக் கோலும் கிடைத்துள்ளன. தற்போது பயிரிடப்படும் சி.ஆர்., கல்சர் போன்ற ரகங்கள் ஏக்கருக்கு 1,800 கிலோ முதல் 2,000 கிலோ வரை நெல் விளைச்சலைத் தரும் நிலையில், கருடன் சம்பா தந்துள்ள விளைச்சல் 40 விழுக்காடு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வறட்சியைத் தாங்கி வளர்ந்து இத்தகைய விளைச்சலைக் கொடுத் திருப்பது வியப்பாக உள்ளது” என்றார் நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி அலுவலர் சோமசுந்தரம்.
இது குறித்து ரோஸ் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஆதப்பன் கூறியது: “பாரம்பரிய நெல் மற்றும் சிறு தானியங்களை முன்னோர்கள் பயன்படுத்தியதால் நோயின்றி நீண்ட நாள் வாழ்ந்தனர். அதன்பிறகு வேளாண் துறையில் ஏற்பட்ட மாற்றம் நோயின் தாக்கத்தை அதிகரிக்கச் செய் துள்ளது. எனவே, வறட்சியைத் தாங்கி யும் எதிர்கால தலைமுறையினர் நோயின்றி வாழும் சூழலையும் உருவாக்கக்கூடிய பாரம்பரிய சாகுபடி முறைக்கு விவசாயிகள் மாற வேண்டும்.


மீட்கப்பட்டுள்ள பாரம்பரிய நெல் ரகங்கள்:(வயது நாள்கள் அடைப்புக்குள்):


பூங்கார்    -(100 - 105), மாப்பிள்ளைச் சம்பா-(165 - 170 ), கருடன் சம்பா-(170 - 180),சிவப்பு கவுனி-(135 - 140),     பனங்காட்டு குடவாழை-(135 - 145 ), கருத்தக்கார்-(105 - 110), சண்டிகார்-(155 - 165), கருங்குறுவை-(120 -125), குருவைக்களஞ்சியம்-(140 - 145), தூயமல்லி-(135 - 140),தங்கச்சம்பா-(160 - 165),நீலச்சம்பா-(175 - 180),செம்புளிச்சம்பா-(135 - 140),கிச்சடிச்சம்பா-(135 - 140), இலுப்பைப்பூ சம்பா-(135 - 140),அறுபதாம் குறுவை-( 80 - 90), சீரகச்சம்பா-(125 - 130), காட்டுயானம்-(180 - 185), சொர்ணமுசிறி-(140 - 145) சிவப்பு குருவிக்கார்-(120 - 125),கருப்புக்கவுனி-(140 - 150), மிளகி-(120 - 130),சம்பாமோசனம்-(160 - 165), கைவிரச்சம்பா-(160 - 165) ஆகிய ரகங்கள் அடங்கும்.
பாரம்பரிய நெல் ரகங்களில் உள்ள மருத்துவ குணங்கள்:
அனைத்து ரகங்களுமே எளிதில் ஜீரணமாகக்கூடியது, மலச்சிக்கலை நீக்கும், நரம்புகளை பலப்படுத்தும் தன்மை கொண்டது.




பூங்கார்:   உடம்பில் சுரக்கும் கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது. கர்பிணிப் பெண்களுக்குப் பத்தியக் கஞ்சி வைத்துக் கொடுத்தால் சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கும், துத்தநாக சத்து உள்ளது.

மாப்பிள்ளைச்சம்பா: நேரடி விதைப்பிற்கும் ஏற்றது, சத்துள்ள இந்த நீராகாரத்தை சாப்பிட்டால் இளவட்டக் கல்லைக் தலைக்கு மேல் சுலபமாகத் தூக்க முடியும். நரம்புகளை வலுப்படுத்தும், ஆண்மைத்தன்மையை அதிகரிக்கும்

சிவப்பு கவுணி: இதயத்தை பலப்படுத்தும், பல் அலகுகளை பலப்படுத்தும், இரத்த ஓட்டத்தை சீர்ப்படுத்தும், மூட்டு வலியை நிவர்த்தி செய்யும்.

குடவாழை: குடலை வாழ வைப்பதால் இப்பெயர் வந்தது. சர்க்கரை நோய் வராமல் தடுக்கும், அஜீரண கோளாறை குணப்படுத்தும்.    நீர்ப்பிடிப்பு பகுதிக்கு மிகவும் ஏற்றது.

கருங்குறுவை: ரண குஷ்டத்தையும் சிற்சில விஷத்தையும் நீக்கும்.போக சக்தியையும் தரும், இது இந்தியன் வயாகரா என்று அழைக்கப்படுகிறது.

கருத்தக்கார்: வெண்குஷ்டத்தை போக்கும் காடி தயாரிப்பதற்கு பயன்படுகிறது. பாதரசத்தை முறித்து மருந்து செய்வதற்கு பயன்படுகிறது.

சண்டிகார்: தீராத நோய்களை தீர்க்க வல்லது, உடல் வலிமையை கொடுக்கும், முறுக்கேற்றும்
நரம்புகளை பலப்படுத்தும்.  போன்ற பல்வேறு வகையான மருத்துவ குணங்களை உள்ளடங்கியுள்ளன.

இதையறிந்திருந்த நம் முன்னோர்கள் நோய் எதிர்ப்பு சக்தி மிக்க, வறட்சியையும், வௌ்ளத்தையும் தாங்கி வளரக்கூடிய பல்வேறு வகையான பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு நோயற்ற வாழ்க்கையை ருசித்து  வந்தனர்.  ஒரு சில விவசாயிகளிடம் இருந்த இந்தப் பாரம்பரிய நெல் ரகங்களை தேடிப் பிடித்து அதை புதுக்கோட்டையில் சாகுபடி செய்து அதை தமிழகம் முழுதும் பரவச் செய்யும் வேலையை இயற்கை விவசாயிகளும், தொண்டு நிறுவனங்களும் செய்து வருகின்றனர். பாரம்பரிய நெல் விதைகள் தேவைப்படும் விவசாயிகள் 98420 93143 -ல் தொடர்பு கொள்ளலாம்


 நம் முன்னோர்கள் சாகுபடி செய்த பாரம்பரியமிக்க நெல் ரகங்கள் படிப்படியாக மறையத் தொடங்கியதால்,ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளில் வளரும் உணவு தானியங்களால், மண் வளம் பாதிக்கப்பட்டு விளை நிலங்கள் பாலைவனங்களாக மாறிவிட்டன, இதை உண்பவர்களும் விதவிதமான நோய்களுடன் உலவி வருகின்றனர். இச்சூழலில் நாம் தற்போது பயன்படுத்திவரும் அரிசி ரகங்களை விட பல மடங்கு புரதச்சத்து, நார்ச்சத்து  பாரம்பரிய நெல் ரகங்களில் உள்ளன. 

No comments: